“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

ஊர் வம்பு….. அந்தக்காலம் உலக வம்பு டிவிட்டர் காலம்


         ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருச்சாளி(பெருமானாக்கறது) அவ்வளவு சுலபமா? என்பது தெரியவில்லை. அது பேனா பெருச்சாளியா என்பது தெரியவில்லை. இரண்டும் சொல்கிறார்கள்.  இரண்டுமே சுலபமாக இருந்ததால் தான் இந்த சொலவடை இன்னும் தமிழர்களிடம் உலவிக்கொண்டு இருக்கிறது.

“வாயைக் கொடுத்து வம்புல மாட்டிக்கிட்டா” என்றும் கிராமப்புறங்களில் அடிக்கடி சொல்வது உண்டு. குறிப்பாகப் பெண்கள் ஆற்றங்கரைக்கோ குளத்தங் கரைக்கோ கோயிலுக்கோ போகும் போது அக்கம் பக்கத்து வீட்டு சமாசாரங்களை எல்லாம் மாவாக்கி, மசாலா சேர்த்து தங்கள் வாய் வாணலியில் போட்டு வடை சுட்டு விடுவார்கள். அவர்கள் வீடு வந்து சேருவதற்கு முன்பு அந்த வடைப்பொட்டலம் பார்சலில் பேசப்பட்டவரின் வீடு வந்து சேர்ந்து விடும். அது வீச்சறுவா, வெட்டு, குத்து என்று விசுவ ரூபம் எடுத்து எமலோகம், ஜெயில் என்று எங்கெங்கோ சென்ற கதையெல்லாம் உண்டு. 

     இது போல சமாசாரங்கள் இப்பொழுதோ அப்பொழுதோ நடந்து கொண்டு இருப்பது இல்லை. எல்லாக் காலத்திலும் இருந்துள்ளது. கேட்டால் வியப்பாக இருக்கும். சங்க காலத்தில் இந்த வம்புக்கு அம்பல், அலர் என்றெல்லாம் பெயரே வைத்துள்ளனர். இலக்கியங்களில் பழி பேசுதல், நாவீழ்தல், வாய்ப்பதர், தூறுதூவுதல், வலது பேசுதல், சின்னமொழி பேசுதல் முதலிய சற்றேரக்குறைய 20 பெயர்கள் கானப்பெறுகின்றன. ஆனால் சங்க காலத்தில் பேசிய வம்பைக் காதலோடு தொடர்பு படுத்தி இலக்கியங்கள் வடித்து விட்டனர். இதனால் அக்காலத்தில் காதலைப் பற்றிதான் அதிகமாக வம்பு பேசுவார்கள் என்பது புரிகிறது. அதாவது இக்கால இளைஞர்கள் மொழியில் சொன்னால் சிறுசுகள் கடலைப் போடுவதைப் பற்றி பெருசுங்க சுந்தர காண்டம் வாசிப்பார்கள்.     

     சாடை மாடையாக இருக்கும் போது இந்த ஊர்வம்பை ‘அம்பல்’ என்று கூறினார்கள். ‘அம்பல்’ என்றால் மொட்டு என்று பொருள். அதுவே பெரிதாக ஊர் முழுக்கப் பேசப்படும் போது ‘அலர்’ என்று கூறினார்கள். ‘அலர்’ என்றால் மலர்.      இவையல்லாம் ஒருவரோடு ஒருவர் முகம் பார்த்து நேரடியாக அடித்த அரட்டைகள், லூட்டிகள். அதுவும் தெரிந்தவர்களிடம் மட்டும். அதாவது இப்போதெல்லாம் தெரிந்தவர்களுடனோ முகம் பார்த்தோ அரட்டைகளெல்லாம் அடிப்பது இல்லை. அதில் தம் ரகசியம் வெளிப்பட்டு விடும் என்பதால் முகமறியாதவர்களிடம் ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு என்று அரட்டை நாகரிகம் உலகளாவிய அளவில் பரவியுள்ளது.      

     முதலில் குறுஞ்செய்தி (S.M.S)என்று அலைபேசியில் (மொபைல் போனில்) இந்த அரட்டைக் கலாச்சாரம் ஆரம்பித்தது. இளைஞர்கள் கை விரல்கள் வேகமாக வேலை செய்வதைப் பார்க்க வேண்டுமென்றால் குறுந்தகவல் டைப் செய்யும் போதுதான் பார்க்க வேண்டும். கிட்டத் தட்ட பில்லி சூனியம் வைக்கப் பட்டவர்களின் வித்தியாச செய்லபாடுகள் போல இருக்கும் இவர்களின் விரல் செயல்பாடுகள். அந்த வேகத்தை வேறு எதிலும் பார்க்கவே முடியாது. இரவு பனிரெண்டு மணி ஆகியும் போர்வைக்குள் இரண்டு விரல்கள் மட்டும் அசைந்து கொண்டிருக்கும் காதலிகள் மொபைல் போனின் காதலிகளாக இருந்தனர். இதில் ஒரு குறை கண்டம் விட்டு கண்டம் அனுப்ப அதிகச் செலவு. எல்லா மொபைல் நிறுவனங்களும் ஃப்ரீ எஸ்.எம்.எஸ். வசதியை உள்ளூர் சேவை வரையில் நிறுத்திக்கொண்டது.  
    

      அதனால் இந்த அரட்டைப் பரிமாற்றம் மெல்ல மின்னஞ்சலில் பயணித்தது. கூகுல், இண்டெர்நெட் எக்ஸ்ஃபோரர் முதலிய அனைத்து சமூகச் சேவைத் தளங்கள் வழியாக ‘சாட்’ என்னும் உரையாடலாக உருமாறியது. பின்னர் அதுவே வீடியோ சாட் என்று முகம் பார்த்து பேசும் அளவுக்கும் போனது.      

     இதன் அபார வளர்ச்சி  தசாவதாரத்தில் முகப்புத்தகம் என்னும் தன் மூன்றாவது அவதாரத்தை எடுத்தது. முகப்புத்தகம் எனப்படும் FACEBOOK பற்றி முந்தய இதழில் தெளிவாக்கப் பட்டது. இதன் ஐந்தாவது அவதாரம் டிவிட்டர். டிவிட்டர் என்றவுடனே ஒரு பெரிய வம்பில் சிக்கி சின்னாபின்னமாகி அல்லாடிக்கொண்டு இருக்கும் திரைப்படப் பாடகி சின்மையி விவகாரம் நினைவு வந்திருக்குமே. அதே டிவிட்டர்தான்.

       டிவிட்டரில் அவர் என்ன பேசினார் என்பதும் அவரது டிவிட்டர் நண்பர்கள் என்ன பேசினார்கள் என்பதும் அனைவரும் அறிந்தது. இப்பொழுது நாம் சொல்ல வருவது அவர் பேசிய மேட்டரோ அல்லது அவரால் கொடுக்கப்பட்ட புகாரோ அல்லது அதனடிப்படையில் கைதானவர்களைப் பற்றியோ அல்லது அவர்கள் செய்த தவறோ பற்றி அல்ல. அவர் எதைப் பயன் படுத்தி இப்படி அல்லலில் தாமும் மாட்டி மற்றவர்களையும் மாட்டி விட்டார் என்பதைப் பற்றி. சில நாள்களுக்கு முன்பு கைப்பேசியில் குறுஞ்செய்திகளுக்கு ஒரு கடினமான கட்டுப்பாடு விதித்திருந்தது, ஐந்து குறுஞ்செய்திகளுக்கு மேல் அனுப்ப முடியாமல் துடித்த விரல்கள் சும்மா இருக்க முடியாமல் பழக்க தோஷத்தில் அதற்குப் பதிலாகப் பூ கட்டச் சென்றதாகத் தகவல்கள். 


      ஃபேஸ் புக் போலவே டிவிட்டரும் விரல்களால் வம்பளப்பதுதான். ஃபேஸ் புக்கில் நான்கு மணி நேரம் ஓடும் நம்ம பழைய திறைப்படம் போல எத்தனை ரில் வேண்டுமானாலும் ஓட்டலாம். டிவிட்டரில் அப்படி முடியாது. அது இரண்டு முதல் ஐந்து நிமிடமே ஓடும் குறும்படம் போல. டிவிட்டரில் 140 எழுத்துகள் வரை மட்டுமே எழுத முடியும். அதிகமாக எழுதினால் அதனால் ஜீரணிக்க முடியாது. அதனால் அந்த வம்புகளை அது ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் இதனை கைப்பேசிக்கு அனுப்பும் குருஞ்செய்தி சேவையாக வடிவமைத்தனர். தன் பக்கத்தில் தங்களைப் பற்றிய உலகமகா செய்திகளை 140 எழுத்துகளில் எழுதி உலகத்திற்கும் காட்டலாம். விருப்பமில்லை என்றால் உலகளாவிய தன் நண்பர்களுக்கு மட்டும் காட்டலாம். இதனை கட்டுப்படுத்துவது பயணாளியின் கையில்தான் உள்ளது.

     நமக்கோ நாட்டுக்கோ தேவையற்ற உப்பு சப்பில்லாத விஷயங்களை நகைச்சுவையாகப் பேசி சிரிக்க வைப்பதையே குரிக்கோளாகக் கொண்டு பேசுபவர்கள் உலகத்துக்குக் காட்டலாம். சமுதாயம், அரசியல் முதலிய முக்கிய விஷயங்களைப் பற்றி விவாதங்கள்,கருத்துக்களம் நடத்துபவர்கள் கட்டுப்பாடுடனே இருப்பார்கள். இவர்கள் மேற்கூறியவர்களைப் போல அஞ்சா நெஞ்சர்களாய் இருக்க முடியாது. பொதுவாக இதுபோன்ற வீரகள் முகப்புத்தகத்தைப் பயன்படுத்துவது போல அதிகம் டிவிட்டரைப் பயன்படுத்துவது இல்லை.டிவிட்டர் இணையதளம் கூறும் கணக்குப் படி அதில் கணக்கு வைத்துள்ள பயணாளர்களில் 40 சதவீத பயணாளர் மட்டுமே தொடர்ந்து அதனைப் பயன் படுத்துகின்றனர் என்கின்றது. 

     தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னணி பின்னணி திரைப்பட நடிகர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், அரசியல் தலைவர்கள், கட்சிகள், கட்சித் தொண்டர்கள், சமூக நல ஆர்வலர்கள் என்று எழுத்தாளர்கள் தவிர அனைத்துத் துறையினரும் பயன் படுத்துகின்றனர். காரணம் 140 எழுத்துகளுக்குள் என்று கட்டுப் பாடுக்குள் எப்படி என்று நினைத்திருக்கலாம்.பிரபல முன்னணிகளும் பின்னணிகளும், அன்றைய அவர்களின் அலுவல்களை இதில் பதிவு செய்து ஒரு விளம்பரம் கொடுத்துக் கொள்வார்கள். இன்று இந்தப் படப்பிடிப்பில் இருக்கிறேன். இன்று இந்தப் படம் பூசை. வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடக்கிறது, இன்று இந்தப் பாடல் பாடினேன். இந்தப் பாடல் வெளியீட்டு விழா, எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்று கூறுவார்கள். ஆய்ரக்கணக்கானோர் அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வார்கள். எல்லாம் நூற்று நாற்பதுக்குள்.

      இப்படி பிரபலங்களுக்கு ரசிகர்களை விரிவாக்கம் செய்து தருவது டிவிட்டர் சேவை. ஒரு பிரபலம் நம்முடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார் என்பது ரசிகர்களுக்கு புல்லரிக்கச் செய்யும் மகிழ்ச்சி. பத்திரைகைகளில் மட்டும் படித்து ரசித்துக் கொண்டிருந்த பிரபலங்களின் இன்ப துன்பங்களில் பங்கு பெறுவது என்பது யாருக்கு வாய்க்கும். டிவிட்டரில், முகப்புத்தகத்தில் கணக்கு வைத்திருப்பவருக்கு வாய்க்கும்.  இந்த டிவிட்டர் செய்துள்ள சில சுவையான பரிமாற்றங்கள் பற்றியும் டிவிட்டரின் சேவை பற்றியும் அடுத்த இதழில் பார்க்கலாம்.


(இக்கட்டுரை இம்மாத சோழநாடு கூட்டமைப்பு மாத இதழில் இடம்பெற்றது) 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக