“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 17 செப்டம்பர், 2011

அற்புதங்கள் நடத்தும் அரசு மருத்துவமனை



ஸ்டான்லி மருத்துவமனை

கல்லீரல் அறுவைச் சிகிச்சைப் பிரிவின்
அமைதியான மக்கள் சேவை.


மூளைச்சாவு ஏற்பட்ட ஆந்திர வாலிபர் காடி தமோதியின் கல்லீரல் அகற்றப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை எடுத்து செல்லப்பட்டது. அங்கு உயிருக்கு போராடிய, சென்னை மாதவரத்தை சேர்ந்த விஜயராகவன் (50) என்ற கார்பென்டருக்கு பொருத்தப்பட்டது. ஸ்டான்லி மருத்துவமனை கல்லீரல், குடல் சார்ந்த அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சுரேந்திரன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் இந்த ஆபரேஷனை 10 மணி நேரம் மேற்கொண்டனர்.

இது போன்ற செய்திகள் அவ்வப்போது தினசரிகளில் இடம்பெறுகிறன. ஸ்டான்லி மருத்துவ மனை அரசு மருத்துவ மனை. இங்கு இது போன்ற அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறதா என்று பலர் புருவம் உயர்த்துவதைப் பார்க்க முடிகிறது. ஆம் ஸ்டான்லி மருத்துவமனையில் தான் இது போன்ற அறுவைச் சிகிச்சைகள் மட்டுமல்ல அரசு மருத்துவமனை வரலாற்றில் கண்டறியாத பல அற்புதங்களும் நடைபெறுகின்றன. அதுவும் எப்போதாவது அல்ல அவ்வப்போது நடைபெறுகிறன. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு (GASTRO SURGICAL WARD) என்றால் ஸ்டான்லிதான் என்ற அளவுக்கு அதன் பணி சிறப்பாக இருக்கிறது.  இது எப்படி ஒரு அரசு மருத்துவ மனையில் சாத்தியமானது? நிச்சயமாக இது அங்கு பணி புரிபவர்களால் மட்டுமே என்றால் மிகையாகாது.

பொதுவாக நடுத்தர வர்க்கத்தினரும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற மக்களுமே குடல் பாதிப்பு நோயால் அல்லல் படுகின்றனர். பசி பட்டினி இது ஒரு புறம் குடி மறுபுறம் என்று இரு முக்கியமான காரணிகள் செயல்படுகின்றன. இவ்விரு வகையிலும் குடல் நோய் பெரும்பாலும் ஏழை எளிய மக்களுக்கே வருகிறது என்பதில் ஐயமே இல்லை. ஈரல் அழற்சி (hepatitis) ஈரல் புற்றுநோய் (liver cancer) ஈரல் கரணைநோய் (liver cirrhosis) அல்லது ஈரல் முழுதும் பழுதடைதல் (acute liver failure) ஆகிய நோய்கள் குடல் சம்பந்தமானவை. இவை முற்றிய நிலைக்கு மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்கிறது  (liver transplant). குடலை ஒருவர் உடலில் இருந்து மற்றவர் உடலுக்கு மாற்றினால் கொடுத்தவர் என்ன செய்வார். இதுவும் கிட்னி போல இரண்டு உள்ளதா என்று கேள்விகள் நம்மில் பலருக்கு எழுகிறது. இது வளரும் தன்மை உடையது. கல்லீரலைக் கொடையாகக் கொடுத்தவருக்கு இரண்டு அல்லது  மூன்று வாரங்களில் மீண்டும் இயல்பான நிலைக்கு வளர்ச்சி அடைந்து விடுகிறது.

கண்மாற்று, சிறுநீரக மாற்று, இதயமாற்று, தோல்மாற்று, போல குடல் மாற்று அறுவை சிகிச்சையும் இக்காலத்தில் பெருகி வருகிறது. பசித்தோர்க்கு தம் உணவினைப் பகுத்துக் கொடுத்த மக்களினம் அவ்வுணவை செரிக்க வைக்கும் உடலுறுப்பான கல்லீரலையும் தானமாகக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. கொடுப்போர் கொடுத்தாலும் வாங்குவோர் வாங்க நினைத்தாலும் மனித உடல் என்ன ஆட்டோவா? ஸ்பேர் பார்ட்ஸை அங்கே வாங்கி இங்கே பொருத்தி வண்டியை ஓட விட. தானே வாங்கி பொருத்திக்கொள்ள இயலாது.

தேர்ந்த மருத்துவர்கள், சிறந்த மருத்துவ மனை, தரமான மருத்துவ உபகரணங்கள், அன்பான செவிலியர், அற்பணிப்பான பிற ஊழியர்கள், அறுவைக்கு முன்னும் பின்னும் நோயாளிக்குத் தேவையான சுகாதார வளையம் இவ்வனைத்தும் நிறைந்திருந்தால் மட்டுமே குடல் மாற்றும் பணியின் முழுமையான பயனை ஒரு நோயாளி அடைய முடியும்.

இத்தகு பலவகை வளையங்களை ஸ்டான்லி மருத்துவ மனையின் கல்லீரல் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் காணமுடிகிறது. மருத்துவர் முதல் கடைநிலை ஊழியர்களான ஹவுஸ் கீப்பிங் ஊழியர்கள் வரை தங்களுக்கே உரித்தான அற்பணிப்புடன் பணியாற்றுவதைப் பார்க்கும் போது இவர்கள் எல்லாரும் அரசு ஊழியர்கள்தானா என்று நம்மை வியக்க வைக்கிறது. இது ஒரு புறம் இருக்க...

அரசு மருத்துவமனை என்றால் பொந்தும் பிளவும் உடைந்தும் உடயாத கட்டிடங்கள், சாயம் போன சுவர்கள், வெற்றிலைப்பாக்குக் கறைகள், பொட்டலங்களாகச் சிதறிய இட்லி. தோசை, சட்னி, சாம்பார்,  தரையிலும் படுக்கையிலுமாக பிதுங்கி வழிந்து கொண்டிருக்கும் நோயாளிகள் என்று ஒரு மண்ணுலக நரகமே நம் கண் முன் வருவது. ஆனால் ஸ்டான்லி மருத்துவ மனையின் குடல் மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு இந்தக் காட்சிக்கு நேர்மாறாக விண்ணுலக சொர்க்கமே தரையிறங்கி வந்தாற் போல காட்சி அளிக்கின்றது. தனியார் மருத்துவ மனையை மிஞ்சும் சுகாதாரம் இங்கு கடைபிடிக்கப்படுகிறது.

அதனால்தான் இந்தியாவிலேயே முதன் முதலில் ISO தரச்சான்றிதழ் பெற்ற சிகிச்சைப் பிரிவு என்ற பெருமையை ஸ்டான்லி மருத்துவமனை கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைப் பிரிவான இது பெற்றுள்ளது.

இதை ஏன் கூறவேண்டும் என்றால் இம்மருத்துவ மனையின் இப்பிரிவுக்கு மட்டும் அதாவது கல்லீரல் நோய் சிகிச்சைப் பிரிவுக்கு மட்டும், சிகிச்சை பெற நாளொன்றுக்கு புற நோயாளிகளாக குறைந்தது 450 (நானூற்று ஐம்பது) பேர் வந்து சிகிச்சை பெற்று திரும்புகின்றனர். இதில் 6%(ஆறு சதவீதம்) பேர் D C L D (decomposed liver disease) என்றழைக்கப்படும் கல்லீரல் முற்றிலும் அழுகிய அல்லது சிதைந்த நிலையில் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பது சுலபமல்ல என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் ஒரு நோயாளி அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதற்குள் அவருக்கு இரத்தப் பரிசோதனை மட்டுமே 1800 (ஆயிரத்து எண்ணூறு) முறை செய்ய வேண்டியுள்ளது.

இந்த அறுவை சிகிச்சை ஏன் இவ்வளவு முக்கியமாகப் பேச வேண்டியுள்ளது. ஆம் பிற அறுவைச் சிகிச்சைகளைச் சற்றேறக்குறைய குறித்த காலத்தில் முடித்து விடலாம். ஆனால் குடல் மாற்று எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது மருத்துவர்களுக்கே தெரியாது. மேலே குறிப்பிட்டது போல குறைந்தது பத்து மணி நேரம் முதல் இருபத்து நான்கு மணி நேரம் கூட ஆகலாம். பலமணிநேரம் மருத்துவர்கள் குழு பணியாற்ற வேண்டியுள்ளது.

மருத்துவர்கள் உள்ள நேரம் மட்டுமன்றி செவிலியர்கள் இரவு பகல் பாராது உடன் இருந்து கண்காணிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் அங்கு வரும் நோயாளிகள் டிரிப்ஸ் தீர்ந்து இரத்தம் பாட்டிலுக்குச் செல்வதைக் கூட சொல்லத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பணி புரியும் செவிலியர்களில் 40% சதவீதமே அரசால் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்கள். ஏனைய 60% வெளியில் இருந்து ஊதியத்திற்குப் பணி புரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பும் அரவணைப்புமான இவர்களின் பணியே நோயாளிக்கு அறுவைக்கு முன்னும் பின்னும் அதிக அளவில் தேவையாகிறது.

அறுவைச் சிகிச்சைக் உபகரணங்கள் முழுமையான தர உத்தரவாதத்துடன் இருப்பது மற்றொரு சிறப்பு.

கண்களுக்கும் தெரியாத பாக்டீரியாக்களில் இருந்து இந்நோயாளிகளைக் காத்தல் என்பது மிகவும் கடினம். மருத்துவ மனையின் சுகாதாரம் எனும் போது அதன் பெரும் பானமையான பொறுப்பும் கடை நிலை ஊழியர்களைச் சார்ந்து விடுகிறது. இங்கு இவர்களின் பணி தனியார் மருத்துவ மனைகளிலும் காணக் கிடைக்காத அளவில் மாசு இல்லாது எங்கும் பளீர்தான். இவர்கள் அனைவரும் அரசு ஊழியர்களே. இருந்தாலும் அற்பணிப்பு ஊழியர்களாக இருக்கின்றனர் என்பது இத்துறையின் சிறப்பு என்று கூறலாம். இப்படி இன்னும் கூறிக்கொண்டே போகலாம்... ஆக மருத்துவர்கள், அரசு, அரசு சாராத மருத்துவமனை ஊழியர்களால் ஸ்டான்லி மருத்துவ மனையின் இப்பிரிவு சாதனை படைத்து வருகிறது என்று ஆணித்தரமாகக் கூறலாம்.

இவர்கள் இம்மாபெரும் சாதனையை எப்படி ஆற்றி வருகின்றனர்? சாதாரனமாக இந்த அறுவை சிகிச்சைக்கு பிற மருத்துவ மனைகளில் 50,000 செலவாகக் கூடிய மாற்று அறுவை சிகிச்சையை இவர்கள் செலவே இன்றி ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்கின்றனர். சிகிச்சைக்கு வேண்டிய வசதிகளை எவ்வாறு எதிர் கொள்கின்றனர் என்பது ஒரு பெரிய அதிசயமாக உள்ளது.

இப்பிரிவு 1999 ல் தொடங்கியது. 2009 ல் முதல் முதலில் ஃபாத்திமா என்ற பெண்மணிக்கு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்தது. சிகிச்சைக்குத் தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ள இவ்வளவு காலம் தேவைப்பட்டுள்ளது. இது வரை 29 மாற்று அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு அதில் 75% வெற்றிகரமாக முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்பிரிவில் பொது இலவசப் படுக்கைகள் 80 உள்ளன. 20 படுக்கைகள் பகிர்வு அடிப்படையில் உள்ளன. இதற்கு ரூபாய் 5000/- மருத்துவ மனைக்குக் கொடுத்தால் போதுமானது. இது படுக்கைக்கு மட்டும் அல்ல. ரூபாய் 50,000 செலவு ஆகும் மருத்துவம் முழுமைக்கும். சற்று வசதியான நோயாளிகளுக்கென பதினைந்து தனிப் படுக்கை அறைகள் உள்ளன. இவர்கள் ரூபாய் 5000/- த்துடன் முடிந்த சிறு தொகையைக் கூடுதலாகக் கட்டி இவ்வசதியை அனுபவிக்கலாம். இவர்களிடம் வாங்கும் இத்தொகையைக் கொண்டு அடிப்படை வசதியே இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளிக்கின்றனர். இத்தொகையும் இவர்கள் மருத்துவ மனையிலோ அல்லது மருத்துவர்களிடமோ செலுத்துவது இல்லை. மக்கள் மனதில் ஐயம் எழாமல் இருக்கும் வகையில் வங்கியில் செலுத்தி பற்றுச்சீட்டுப் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது.

இந்த பகிர்வு அடிப்படை 20 படுக்கைகள் மூலமாக இப்பிரிவுக்குக் கிடைக்கும் இலாபம் ரூபாய். 1,28,000/- இதனைப் பரிவுடன் ஏழைகளுக்குப் பயன் படுத்துகிறது இப்பிரிவு. இந்த அறுவைச் சிகிச்சைக்கான தொகை (சர்ஜரி பேக்கேஜ்) என்பது பிற மருத்து மனைகளில் ரூ. 6,000/-  இங்கு ஏழைகளிடம் இவர்கள் வசூலிப்பது ரூ. 350/-. இத்தொகைக்குள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முடித்துக்கொண்டு வீடு திரும்பலாம்.

இத்தகு சாதனையின் அடித்தளத்தில் அனைத்திற்கும் காரணமாக அமைதியாகப் பணியாற்றி வருபவர் இத்துறையின் தலைவர் டாக்டர் சுரேந்திரன். பல அரிய திட்டங்களைக் கண்ணும் கருத்துமாக வகுத்தது மட்டுமல்லாமல் எப்போதும் இன்னும் என்ன என்ன முன்னேற்றம் எவ்வகையில் செய்யலாம் என்று மருத்துவர்களிடமும் சமுதாயத்தில் உயர்மட்ட மக்களிடமும் ஆலோசனை நடத்துவது, அவர்களின் கொடையையும் பெற்று மருத்துவ மனைச் செல்வினங்களுக்குப் பயன் படுத்துவது ஆகியவையே இப்பிரிவின் தலைவர் டாக்டர். ஆர், சுரேந்திரன் அவர்களின் அன்றாட பணியாக உள்ளது. தற்போது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே மாற்று அறுவைக்கு கல்லீரல் கிடைக்காத நிலையில் ஸ்டெம் செல்களின் மூலம் கல்லிரல் உற்பத்தி செய்யும் ஆராய்ச்சியும் டாக்டர் ஆர். சுரேந்திரன் அவர்களால் மேற்கொள்ளப்பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2005ல் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா ஆட்சியின் போது  இத்துறை மேம்பாட்டுக்காக ரூபாய் 5 கோடி ஒதுக்கி இத்துறையை மேலும் வளர்ச்சி அடைய வழி வகுத்தார். இன்னும் அரசின் உதவி கிடைக்கப்பெற்றால் இத்துறை உலக அளவில் முதன்மையானதாக விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை எனலாம். 


 நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.

சனி, 10 செப்டம்பர், 2011

பூப்பு..பூப்பு..

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgNcxOj52VzuSJgdU2MY2JIM7BGeBDPJdzUWtrIR_Aihf2IKoCh8FKrhv7maUjTMmDXYl8hExPfFCZNA4QliNIS5ahrNeY_iUXY5LMVeqF_vNPoAssBKJQiBoLY2l7zMrsb6MipPl97g/s1600/bridal-hand-mehndi-design5.jpg
காலம் கெட்டுத்தான் போயிருக்கு. கலிகாலம்னு சொல்றது இதைதானா? பத்து வயசுதான் அதுக்குள்ள இது நடந்து இருக்கு!!! என்னத்த சொல்ல? புலம்பல் ஒலி பரவலாகக் கேட்டுக்கொண்டு இருக்கிறது. உண்மைதான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே பூப்பு அடைந்த செய்தியும் கிடைத்து உள்ளது. என்ன செய்வது? சமைஞ்சிட்டா, பெரிய மனுஷி ஆயிட்டா, வயசுக்கு வந்துட்டா, என்று பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த பூப்பின் வயது என்பது வயது 12 முதல் 16 என்றுதான் மருத்துவ நூல்கள் கூறுகின்றன. ஆனால் சராசரியாகவும் நலமான பூப்பாகவும் கொள்ள வேண்டிய பூப்பின் வயது 12 முதல் 16 என்பதாம்.  
 மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப உணவுத் தேவை ஏற்படுகின்றது. உணவுப்  பற்றாக்குறையைச் சரி செய்ய இயற்கையை மீறி பல்வேறு முறையில் உணவு உற்பத்தி செய்யப்படுகின்றன. அதிக உற்பத்திக்கு முக்கியமாகப் பயன் படுவது ஈஸ்ட்ரோஜன். உணவுப்பொருள்களில் உள்ள ஈஸ்ட்ரோஜென் உடலின் தேவையைவிட அதிகரிக்கும் போது இந்த உரிய வயதுக்கு முன்பே பூப்பு அடைந்துவிடும் வைபவம் நடந்து விடுகிறது. ஏற்கனவே வறுமை. அதில் இந்த பூப்பு. வெந்த புண்ணில் தேளும் கொட்டியது போலத்தான். பின் என்ன? கவிஞர் வைரமுத்து கூறுவது போன்று ஏண்டியம்மா குத்தவச்சே என்று பூப்பு நீராட்டு விழாவை நம் மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளாத குறையாகக் கொண்டாடி விடுகின்றனர்.

அதிலும் மாமிச உணவு உண்பவர்களுக்கு இந்நிகழ்வு இன்னும் வெகு விரைவில் என்கிறது ஆய்வு அறிக்கைகள்.. காரணம் கறிக்காகவே வளர்க்கப்படுகிற கோழிகளுக்கு ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஊசி போடப்படுகிறது. இது ஏன் என்பது அனைவரும் அறிந்ததே. இன்று எதிலும் கொழு கொழுதான் தேவை. கோழிக்கும் தேவை இக்கோழிகளைச் சாப்பிடுபவர்களுக்குப் பல நோய்கள் ஏற்படுவதாக அறிக்கைகள் வெளியாகிக் கொண்டே உள்ளன. 
பெண்ணுக்குள் இருக்கும் இரண்டு அடிப்படை ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜென், புரொஜெஸ்டிரான். இவை இரண்டும் பெண்ணின் சினைப்பையில் உருவாகின்றன. குறைவாக அட்ரினல் சுரப்பியிலும் உருவாகிறது. கோழிகளின் அதிக வளர்ச்சிக்காகக் கொடுக்கப்படும் ஈஸ்ட்ரோஜென் இளம்பெண்களின் உடல் எடையைக்கூட்டி முன்பருவ பூப்புக்குக் காரணமாவதுடன், பொதுவாகப் பெண்களுக்கு கர்ப்பபை புற்று நோய், எடை கூடுதல், மார்பக வீக்க நோய் போன்றவையுடன் வரைவில் பூப்பு எய்துதலும் ஏற்படுகின்றன. 
இதனால் இதனால் ஆண்களுக்கு ஒன்றும் இல்லையா என்று கேட்காதீர்கள். ஆண்களுக்குப் பெண் தன்மை ஏற்படுகிறதாம்!! ஆண்களுக்கு குறிப்பாகச் சிறுவர்களுக்கு ஆண்குறி வளர்ச்சியின்மை ஏற்படுகினறதாம்.

பூப்பு விரைவில் எய்துவதற்குக் குழந்தை வயிற்றில் இருக்கும் போது அதன் தாயார் டாக்சிக் அமிலம் அடங்கிய மருந்துகளை உட்கொள்வது ஒரு முக்கிய காரணமாக சொல்லபடுகிறது.

பெண் குழந்தைகள் விரைவில் பூப்பு எய்துவதற்கு பெற்றோர்களின் கருத்து வேறுபாடுகளும், அடிக்கடி இல்லத்தில் நடைபெறும் வாக்குவாதங்கள், சண்டைகள் முதலியவையும் காரணமாகின்றன. அத்துடன் விவாகரத்து ஆன இணையரின் குழந்தைகள் விரைவில் பூப்பு எய்துவதாக உளவியல் ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.


மனப்பதற்றத்தை ஏற்படுத்தும் எச்சூழலும் விரைவில் பூப்பு எயத காரணமாக அமையும். விரைவு பூப்பின் முக்கிய காரணங்களில் தொலைக்காட்சியின் பங்கு அதி முக்கியமானது என்பது அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. அதிலும் அடுத்த நாள் வரும் வரை என்ன ஆகுமோ பதற்றத்துடன் இருக்கத் தூண்டும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆற்று இச்சேவையை ஒருவரும் மறுக்க முடியாது.


      பூப்பு என்றவுடன் இந்நிகழ்வு பெண்களுக்கு மட்டும் உரியதா? பூப்பு ஆண்களுக்கும் உண்டா என்ற வினா எழுகிறது. ஆண்களுக்கும் பூப்பு உண்டு. சிறுவர்கள் உடல், மனம் இரண்டும் முதிர்ச்சியை எட்டிப்பிடிக்கும் இப்பருவத்தை குமரப்பருவம் என்பர். அதாவது குழந்தைப்பருவத்திற்கும் முதிர்ந்த பருவத்திற்கும் இடையேயான ஒரு சிக்கலான இவ்வருவத்தைக் குமரபருவம் என்பர். 

      அண்டச்சுரப்பிகள் இரண்டு பெண்ணின் உடலுக்கும், விந்துச் சுரப்பிகள் இரண்டு ஆணின் உடலுக்கும் சொந்தமானவை. இவையே இருபாலரிடமும் இனப்பெருக்கத்திற்கு உதவுபவை. இவற்றை இனப்பெருக்கச் சுரப்பிகள் என்பர். இது தவிர பிட்யூட்டரி சுரப்பி. இதுதான் இனப்பெருக்கத்துக்குத் தூண்டுவது. இனப்பெருக்கச் சுரப்பிகள் வேலை செய்யும் போது சுரக்கின்ற சுரப்பே ஆணுக்கு மீசை அரும்புதல், உடலளவிலும் பல மாறுதல்களை ஏற்படுத்துகின்றன.  இக்காலமே இரு பாலருக்கும் பூப்புக் காலமாகக் கருதப்படுகின்றது. 

   அருந்தா என்ற இனக்குழு (மலைச்சாதி) வாழ்க்கையில் ஆணுக்கான பூப்பு சடங்கு கொண்டாடப்பட்டதாக அறிய முடிகிறது. அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண் மகன் வயதுக்கு வந்துவிட்டதை அறிவிக்கும் சடங்காக இதனைக் கொண்டாடினராம். இச்சடங்கை அக்குழுவின் முதியவர் ஒருவர் நடத்துவாராம். முதியவர் தன் தலையால் சிறுவனின் தலையில் இரத்தம் வரும் வரை பலமாக மோதுவாராம். பிறகு அச்சிறுவனை எறும்புகள் நிறைந்த குழிக்குள் தள்ளி சில நாட்கள் இருக்கச் செய்வார்களாம். இச்சடங்கினை மறுபிறப்பு என்றும் கூறுவார்களாம். (நன்றி கவிஞர் கனிமொழி). இச்சடங்கின் முதன்மையான அம்சம் என்பது அந்த ஆணிடம் வீரத்தையும் வலி பொறுக்கும் தன்மையையும் ஏற்படுத்துவதாம். வீர் யுகத்தில் போருக்கு ஆணை ஆயத்தபடுத்துவதே இச்சடங்கின் முக்கிய நோக்கமாக இருந்திருத்தல் கூடும்.

மேலை நாட்டு இனக்குழுவில் ஆண் பூப்படைதலை பிணை அறுத்தல்” க்யா மோட்டு டி செலி-டு ஸ்னாப் தி டீ (Kia mottu te sele – to snap the tie) என்றும் பெண் பூப்படைதலை பாவாடை அணிதலாகவும் (Hakatiti – titi skirt) கொண்டாடியதாகத் தெரிய வருகிறது. (நன்றி கவிஞர் கனிமொழி)

   ரஷ்யாவில் பெண் பூப்பு அடைந்தவுடன் அவள் தாய் ஓங்கி ஒரு அரை கன்னத்தில் விடுவாளாம். அரையில் சிவக்கும் கன்னம் ஒரு நற்சகுணத்தின் அடையாளமாம். (என்ன சகுணமோ தெரியவில்லை, ஏண்டியம்மா குத்த வச்ச கதையாக இருக்குமோ!!)

நேபாளத்தில் பூப்பு அடைந்த பெண்ணை ஒரு இருட்டறையில் வைத்துப் பூட்டி விடுவார்களாம். உதிரப்போக்கு நாட்கள் முடிந்த பின்பு சூரியனுக்கும் அவளுக்கும் திருமணச்சடங்கு நட்த்துவார்களாம். (கேள்விதான் சரியாகத் தெரியாது)

ஆப்பிரிக்க சுளு இனத்தில் பூப்பு அடைந்த பெண்கள் தோழிகளுடன் சென்று நீராடி வந்த பின்பு அவள் உடலில் சிவப்பு நிற களிமண்ணைப் பூசுவார்களாம்.

இந்திய இனத்தில் ஒரு சாரார் ஒரு பெண் பூப்பு அடைந்து விட்டாளா எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு குழூஉக்குறியாக வினவ எள்ளு போட்டாச்சா? என்பர். மற்றொரு சாரர் புட்டு போட்டாச்சா? என்பர். இவற்றைக் குழூஉக்குறி என்பர். இந்த எள்ளு, புட்டு இரண்டும் பூப்பின்போது பூப்படைந்த பெண்ணுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கும் வழக்கம் உள்ளதாம். இது போன்றே ஜப்பானில் ஒரு இனத்தாரிடம் சிவந்த அரிசியும் பீன்ஸும் கொடுக்கும் வழக்கம் உள்ளதாம். 

அதெல்லாம் சரி. பண்டைய காலத்தில் எத்தனை வயதில் பூப்பு எய்தினார்கள் என்ற அடுத்த வினா எழுகிறதே நம் மனத்தில்? பழைய காலத்தில் எத்தனை வயதில் பூப்பு அடைந்தார்கள் என்பதற்குத் தெளிவான சான்றுகள் கிடைக்கவில்லை. ஒரே ஒரு சங்கப் பாடலில் பெயர்க்குறிப்பிடப்படாத ஒரு சிற்றரசனின் மகளின் பூப்பு பற்றி குறிப்பு உள்ளது. பூப்பு விழா கொண்டாடிய அன்றைய வழக்கத்தை அறிய முடிகிறது எனினும் பூப்பான பெண்ணின் வயது தெரியவில்லை.

பாரி பறம்பின் பனிச்சுனை போல
காண்டற் கரியளாகி மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவோடு மண்ணிய
துகில்விரி கடுப்ப நுடங்கி தண்ணென
அகில் ஆர் நறும்புகை சென்றடங்கிய
கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
மனைச் செறிந்தனளே வாணுதல்

இச்சங்கப் பாடல் வழி பூப்பு அடைந்த பெண்ணை அயலார் காண முடியாதவாறு மனைக்குள் வைத்தனர் என்பது தெரிகிறது. இன்றும் மாமனைத்தவிர அப்பெண்ணை மற்ற ஆண்கள் பார்க்க்கூடாது என்று மாமன் ஓலைக்குடிசைக் கட்டுவதும் அதற்கு உரிமைப்போர் நடப்பதும் எண்ணற்ற திரைப்படங்கள் வழி நமக்கு கிடைக்கும் பூப்பு பற்றிய செய்திகள்.

சங்க காலப் பாவலர்கள் கவி எழுதுவதை நோக்க வியப்பே எஞ்சுகிறது. பார்ப்பதற்கு அருமையான, பரம்பு மலையின் சுனை பொல என்று பூப்பு அடைந்த பெண்ணை உவமிப்பது எண்ணி எண்ணி வியத்தற்குரியது.  

பூப்பு அடைந்த பெண்ணை அயலார் காண இயலாது மனைக்குள் வைத்தனர் என்பதும், அம்மனையுள்ளும் தூய்மை, வெண்மை, குளிர்ச்சியான அகில் மணம் கமழும் விரிப்பில் அமர்த்தப்பட்டதும் அறியலாகிறது. இதில் அக்காலத்தில் பேணப்பட்ட சுகாதாரம் நன்கு விளங்குகிறது. பூப்பு நாட்களில் அதிமுக்கியமானது சுகாதாரமானச் சுற்றுச் சூழலே என்பதை அறிந்த நம் முன்னோர் எவ்விதத்தில் உடலியல், அறிவியல் அறிவில் குறைந்தவர்கள்? உளவியல் கூறுகளும் அவர்களிடம் நிரம்பியே இருந்துள்ளன என்பதற்கும் இப்பாடல் சான்றாகின்றது.

இது அந்நாளைய பூப்பு விழாவை ஒட்டிய சடங்குகள் எனலாம். பூப்பு அடைந்தவுடன் சிறுமியாக இருந்த அப்பெண்ணிடம் பெண்மை நிரம்பி வழிந்தது என்று சுட்டும் பாடலடிகளால் பூப்பு என்பது பெண்களுக்கு உடலளவிலும் மனத்தளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற உளவியல் உண்மை இப்பாடலால் பெறப்படுகின்றது. இதனை நோக்கும் போது அக்காலத்து மக்களிடம் நிலவிய உளவியல் அறிவு நம்மை வியக்க வைக்கிறது. 

                                 பூ(ப்பு) இன்னும் மலரும்....


நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் 


செவ்வாய், 6 செப்டம்பர், 2011

“மருத்துவ சேவை என்பது தாய்மை உணர்வு



மனம் திறக்கிறார்... திருமதி. பாரதி ரெட்டி

மேலாண்மை இயக்குநர்.. விஜயா ஹெல்த் செண்டர்.

சென்னையிலேயே மிகப்பிரபலமான மருத்துவமனை. பரம ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை நம்பி வரும் வரும் ஒரே மருத்துவ மனை விஜயா. இன்னும் கூறப்போனால் வடபழனி என்றால் முருகன் கோவிலுக்கு அடுத்து  எவருக்கும் பளிச்சென்று நினைவுக்கு வருவது விஜயா ஹெல்த் செண்டர்தான். இவ்வளவு பெரிய, அனைத்து வசதிகளும் நிறைந்த, அழகிய ஒரு ஆலயமாகத் திகழும் மருத்துவமனையின் இயக்குநராக இருக்கிறீர்கள். அதுமட்டுமன்று மருத்துவ கூடடாண்மை பொறுப்பில் (Medical corporate) புகழ் பெற்றுத் திகழும் பெண்கள் மிகச்சிலர். அதில் தாங்கள் முக்கியமானவராகத் திகழ்கின்றீர்கள்.

இந்த இலக்கை நீங்கள் எப்படி எட்டினீர்கள்?
தாங்கள் கூறுவது உண்மைதான் சென்னையில் முதன்மையான ஹெல்த் செண்டராக இது திகழ்கிறது என்பதில் நான் பெருமை கொள்கின்றேன். இந்த மருத்துவமனை என் தாத்தா திரு பி. நாகிரெட்டி அவர்களால் 1972ல் விஜயா மருத்துவ மனையாக தொடங்கப்பெற்றது. 1987ல் விஜயா ஹெல்த் செண்டராக விரிவடைந்தது. 1996ல் விஜயா ஹார்ட் ஃபெளண்டேஷனாக பொலிவு பெற்றது. 1999ல் விஜயா இன்ஸ்டிடியூட் ஆஃப் ட்ராமா அன் ஆர்த்தோபெடிக்ஸாக மலர்ந்தது. இன்று சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இரண்டாயிரம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். ஆண்டுக்கு சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட புற நோயாளிகளும் இருபதாயிரம் உள் நோயாளிகளும் சிகிச்சை பெரும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

தனி ஒருவரால் எந்த நிறுவனமும் சிறப்படைந்து விடாது. இந்த அளவு விஜயா ஹெல்த் செண்டர் சிறப்படைய காரணம் இங்கு பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியவர்கள்தான். இவர்களைப் பணியாற்றுபவர்கள் என்று கூறவது பொருந்தாது. இங்கு சேவை புரிபவர்கள் என்றுதான் கூறவேண்டும். இங்கு எவரும் சம்பளத்திற்கு வேலைக்கு வருகின்றோம் என்ற எண்ணத்துடன் எவரும் வருவதில்லை. நீங்கள் கூறியது போல மக்கள் தெண்டே மகேசன் தொண்டு என்பதை அறிந்து ஒரு ஆலயத்திற்கு வரும் பக்தியோடு வந்து மக்கள் சேவை ஆற்றுகின்றனர். அனைவரும் இணைந்த கரங்களாய் செயல்பட்டதன் விடையே எங்கள் மருத்துவமனை சென்னையின் நம்பர் ஒன் மருத்துவ மனை என்று பெயர் எடுத்துள்ளது.
மருத்துவத் தொண்டு செய்ய வேண்டும் என்னும் எண்ணம் தங்களுக்கு எதனால் வந்தது?
நான் ஒரு மருத்துவராக வேண்டும் என்று கனவு கண்டேன். அது ஏனோ பலிக்காமல் போனது. என் கல்லூரிப் படிப்பை டெல்லி பல்கலைக் கழகத்தில் முடித்தேன். பிறகு சென்னை வந்தேன். மருத்துவ மனையின் பொறுப்புகள் எனக்காகக் காத்திருந்தது போல இருந்தது. உடனே அவற்றைக் கையில் எடுத்துக்கொண்டேன். என் கண்கள் மருத்துவ மனையை எப்படி முன்னேற்றுவது? மக்களின் நல்லாதரவைப் எப்படிப் பெறுவது? பணத்தை எப்படி சம்பாதிப்பது என்றெல்லாம் கனவு காணவில்லை. அதே சமயம் எப்படி மக்களுக்குத் தொண்டாற்றுவது? மருத்துவத்தை ஏழைகளின் இதயத்தை எட்டச் செய்வது எப்படி? என்றே கனவு கண்டு கொண்டிருந்தேன். கண்ணில் தெரிந்த காட்சிகள் என் கைவசப்பட்டன விரைவில் என்றே கூறுவேன்.

தேசிய அளவிலான அங்கீகாரம் (N A B H Accredited) உங்கள் மருத்துவ மனைக்குக் கிட்டியுள்ளதே. அதற்காகப் பிரத்தியேகமாக முயற்சிகள் மேற்கொண்டீர்களா?

     நிச்சயமாக. இந்த அங்கீகாரம் உலக சுகாதார தரநிர்ணய குழுவால் (International Society for Quality in Healthcare (ISQua) அளிக்கப்படுகிறது. உலக அளவில் பனிரெண்டு நாடுகளில் மட்டுமே இந்த அங்கீகாரம் பெற்ற மருத்துவ மனைகள் உள்ளன. சென்னையில் ஓரிரு மருத்துவ மனைகளுக்கே இந்த அங்கீகாரம் கிட்டியுள்ளது. அதில் எங்கள் மருத்துவ மனையும் ஒன்று. இந்த அங்கீகாரம் பெற சற்று சிரமப்பட வேண்டி இருந்தது. இந்த அங்கீகாரத்திற்குப் பல கட்ட ஆய்வுகள் நடக்கும். பல்வேறு மருத்துவ பிரிவுகள், தகுதி வாய்ந்த மருத்துவர்கள், நவீன மருத்துவக் கருவிகள், அறைகள் முதல் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து வகை வசதிகள் இவை  அனைத்தும் உள்ளனவா என்று பல முறை சோதித்த பின்னரே அங்கீகாரம் வழங்குவர். இங்கு மீண்டும் இம்மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நான் கூறியே ஆகவேண்டும். அனைவரின் ஒத்துழைப்பின் மூலமே இந்த அங்கீகாரம் எங்கள் மருத்துவ மனைக்குக் கிட்டியது.

சிறு மருத்து மனையைப் பராமரிப்பதே கடினம். இவ்வளவு பெரிய மருத்துவ மனை. இங்கு மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் என்னும் மூன்று நிலையில் உள்ள மக்களைத் தாங்கள் நிர்வகிக்க வேண்டும். இதனை எப்படி கையாளுகின்றீர்கள்?
இந்த வினாவுக்கு விடை கூறுவது மிக எளிமை. அவரவர்களின் பிரச்சனை வரும்போது அவரவர்கள் நிலையில் இருந்து பார்க்க வேண்டும். அப்போது சரியான புரிதலுடன் அவர்களை அன்புடன் நடத்த முடியும். மருத்துவர்களும் எல்லா வகை உணர்வுகளும் நிறைந்த மனிதர்கள் என்று எண்ணுவேன். நோயாளிகள் பாவம். சுமக்க முடியாத வேதனையையும் எக்கச்சக்க நம்பிக்கையையும் சுமந்து வருகின்றார்கள் என்று எண்ணிப்பார்ப்பேன். ஊழியர்கள் இம்மருத்துவ மனையின் உயிர்நாடிகள் என்று எண்ணுவேன். நம்பிக்கையின் பலன் அன்பு அன்பின் பலன் சேவை. சேவையின் பலன் அமைதி”  என்று அன்னை தெரசா கூறுவார். அந்த அன்பு சேவை என்னும் இரண்டின் அடித்தளத்தில் அமையும் நிர்வாகம் அழகாகவே இருக்கும் என்பது என் நம்பிக்கை.

உங்கள் மருத்துவ மனையின் மருத்துவர்களுக்கு அல்லது மருத்துவர்கள் மூல்லம் நோயாளிகளுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
நோயாளிகள் உள்ளே நுழையும் போது என்ன ஆகுமோ என்னும் அச்சத்துடன் வருவார்கள். வந்தபின்பு தம் நோயை அகற்றி ஆறுதலும் தேறுதலும் மட்டும் அவர்கள் உணர வேண்டும். அதாவது விஜயா ஹெல்த் செண்டர் என்றாலே A word of comfort என்பதை எந்த வித நோயாளிகளாக இருந்தாலும் மருத்துவ மனையின் எல்லா இடங்களிலும் அவர்கள் உணர வேண்டும். இது ஏதோ பலகையில் எழுதி மாட்டி வைப்பது அல்ல. பஜனை செய்கிற வாயை விட பணிவிடை செய்கிற கை உயர்ந்தது என்பார் சாரதா தேவி. அதே போல நோயாளிகளிடம் மருத்துவர் முதல் கடைநிலை ஊழியர் வரை காட்டும் அன்பு, அரவணைப்பு, நேசிப்பு, பணிவிடை ஆகியவற்றின் வழி இதனை உணரச்செய்வது.
மற்றொரு முக்கியமான வினா. உங்கள் மருத்துவமனை பணியாளர்களுக்குச் சலுகைகள் மட்டுமல்லாமல் பணியாளர்களாலேயே பாராட்டுப்பெறும் அளவுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து..
இதுவும் ஒரு எளிய தத்துவமே. உரிமைகள் தாராளமாக வழங்கப்படும்போது நம் கடமைகள் முழு மனதுடன் நிறைவேற்றப்படும். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே. என்பதைச் சிறிது மாற்றி பலனை முதலிலே கொடுத்து விட்டால் கடமை தானாக நிறைவேறும் என்பது என் தத்துவம். கடைபிடித்தேன். என் மருத்துவ மனை பணியாளர்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் எவ்விதத்திலும் எட்டாமல் போய்விடக்கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாகவே இருக்கிறேன்.
இன்னும் நீங்கள் அடைய வேண்டிய இலட்சியம் அல்லது எதிர்காலத் திட்டம் என்ன?
     சென்னை முழுவதிலும்  விஜயா லேப் கிளைகள் தொடங்க திட்டமிட்டுள்ளேன். அகில உலக மெடிகல் டூரிசம் நடத்தி வெளிநாட்டு உயர் மருத்துவர்களை இங்கு வரவழைத்து கருத்தரங்குகள் நடத்த வேண்டும் என்பது அடுத்த திட்டம். நோயாளிகள் என்ற அளவிலும் வெளிநாட்டவர்க்கு சலுகை கொடுத்து இந்தியாவில் மருத்துவத்துறை தங்கள் நாட்டைவிட சிறப்பாக விளங்குகிறது என்பதைக் காட்டவேண்டும். இப்படி பல...

உங்கள் மருத்துவ மனைக்கு ஆந்திராவில் இருந்து வந்து சிகிச்சை பெற்று திரும்புவோரின் எண்ணிக்கை அதிகம். இதற்கு ஏதாவது சிறப்புக் காரணம் உண்டா?
உண்மைதான். ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்து சிகிச்சை பெறுபவர்கள் இங்கு அதிகம். இது எனக்கும் புரியாத ஆச்சரியமான புதிராக இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் ஒரு சிற்றூர் எங்கள் ஊர். ஆனால் அதற்கும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை. நாங்கள் அவர்களுக்கென்று தனியாக எதுவும் செய்வதில்லை. மற்ற நோயாளிகளுக்கு மருத்துவம் வழங்குவது போலவே அவர்களுக்கு மருத்துவம் வழங்குகிறோம். இருந்தாலும் இது எப்படி என்று தெரியவில்லை. ஒன்று மனதில் தோன்றுகிறது. அதிகமான நோயாளிகள் அங்கிருந்து வந்து எங்கள் மருத்துவ மனையைப் பெருமை படுத்துவதாகவே நான் உணர்கிறேன்.

நிறைவாக.. ஒரு புறம் சமூக சேவை. மறுபுறம் மருத்துவ தொண்டு, இன்னொரு புறம் திரைப்படம் என்று எல்லா துறைகளிலும் நீங்கள் உங்கள் கால்தடங்களைப் பதித்துள்ளது குறித்து....
என் தந்தையார் திரு நாகிரெட்டி திரைத்துறையில் அழுத்தமாகக் கால்தடம் பதித்தவர் என்பது தமிழகம் அறிந்தது. அவர் வழியில் நானும்... ஒரு படத்தைத் தயாரித்துப் பார்க்கலாமே என்று தோன்றியது. தனுஷ் கதாநாயகராக நடித்த வேங்கை என்னும் திரைப்படத்தைத் தயாரித்தேன். அதுவும் வெற்றிப்பாதையிலேயே என் பயனத்தைச் செலுத்தியது. கலைத்துறையிலும் ஏதேனும் சாதனை செய்ய ஆசை. எல்லாம் ஒரு நம்பிக்கையில் எடுத்த வைத்த அடிதான். நன்மையாகவே முடிந்தது. இப்பயணமும் மக்கள் ஆதரவில் இனியும் இனிதாகத் தொடரும் என்றே நினைக்கிறேன். 

நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.