“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு
தெரிந்துகொள்ளலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தெரிந்துகொள்ளலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 நவம்பர், 2013

கதிரவன் கைதொழும் அனந்தபத்மனாபன்


“கெடும் இடராயவெல்லாம் கேசவா வென்னும்-நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடையரவின் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடைவயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே”
          என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு இந்துக்கள் வழிபடும் திருத்தலமாகும். திவ்யதேசம் என்று அழைக்கப் பெற்ற திருமாலின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று.
திவாகர முனி என்பவர் துளுநாட்டுச் சன்னியாசி. துளு என்பது கேரளாவின் ஒரு பகுதியே. இவர் சீராப்தி நாதனைக் (பாற்கடல் வண்ணனை) காணவேண்டுமென்று ஆதர்த்த தேசத்தில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தார். தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு 2 வயது குழந்தையாக இவர்முன் தோன்றினார். இக்குழவியின் அழகில் பேராவல் கொண்ட திவாகர முனிவர் தன்னுடனேயே தங்கியிருக்குமாறு அக்குழந்தையை வேண்டினார். அதற்கு அக்குழந்தை தனக்கு எவ்விதத் துன்பமும் நேராமல் காத்து வந்தால்தான் உடன் இருப்பதாகவும் தனக்குச் சிறு துன்பம் நேர்ந்தாலும் விலகி விடுவதாகத் தெரிவிக்கவே குழந்தையின் கட்டளைக்கு முனிவரும் ஒப்புக் கொண்டார். அவ்விதமே அவருடன் வளர்ந்துவரும் ஒரு நாளில் முனிவர் பூஜையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அங்கிருந்த சாளக்கிராமம் ஒன்றை அக்குழந்தை எடுத்துக் கடிக்கவே முனிவர் வெகுண்டு கண்டிக்க அக்குழந்தை ஓட அவரும் பின் தொடர என்னைக்காண வேண்டுமானால் அனந்தன் காட்டுக்கு வர வேண்டுமெனக் கூறி அக்குழந்தை மறைந்துவிட்டது. தன் தவறை உணர்ந்த முனிவர் அலைந்து திரிந்து அனந்தன் காட்டைக் தேடிக் கண்டு பிடித்தார்.
          அங்கு அனந்தன் என்னும் பாம்பின் மீது சயனத்தில் இருக்கும் பகவானைக் கண்டார். அப்போது அவர் உண்ணிக் கண்ணனாக (சின்னக் கண்ணனாக) இருக்கவில்லை. அவரது உருவம் மிகப்பெரியதாகக் காணப்பட்டது. அவர் அத்தனை பெரிய உருவம் எடுத்ததால், முனிவரால் விஷ்ணுவைச் சரியாக தரிசனம் செய்ய இயலவில்லை. அவரை வலம் வரவும் முடியவில்லை.  ஆகையால் இறைவனிடம் தமது கையில் இருக்கும் தண்டத்தின் மூன்று மடங்கு அளவில் சுருங்கி காட்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டார். இறைவனும், அவர் வேண்டிக்கொண்டது போலவே காட்சி அளித்தார்.
          பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்டி   பாம்பின் மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு. "பத்மநாப சுவாமி' என்ற திருநாமமும் சூட்டப்பட்டது.
          அனந்த சயனான பத்மநாபனை மூன்று வாயில்கள் வழியாகவே வழிபட வேண்டும். முதல் வாயிலில் பரம சிவனையும்  இரண்டாம் வாயிலில் திருமாலில் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மனையும் மூன்றாவது வாயிலில் விஷ்ணுவின் பாதங்களையும் கண்டு வணங்குமாறு இக்கோயில் அமைப்பு இருக்கிறது.
          சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது.
          1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு சரணாகதியடைந்தார் என்று வரலாறு கூறுகிறது.
          திருவாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவான மார்த்தாண்ட வர்மன் இந்தக் கோவிலை 1729 ல் கடைசியாக புதுப்பித்தாகவும் அச்சமயத்தில்தான் அதுவரை இருந்த இலுப்பை மரத்தாலான மூல மூர்த்தி, சாளக்கிராமத்தினாலும் "கடுசர்க்கரா" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது அனந்த சயன மூர்த்தியாக புதுப்பித்து பிரதிஷ்டை செய்யப் பட்டதாகவும் தல வரலாறு கூறுகின்றது.
          சென்ற ஆண்டு உச்ச நீதி மன்றம் வரை சென்றது இதன் 6 இரகசிய அறைகள் அவற்றினுள் பாதுகாக்கப் பட்ட விலையுயர்ந்த இரத்தினம், தங்கம் பற்றிய விவகாரங்கள். 300 தங்கக் குடங்கள், 2000 வைர நகைகள் இருக்கிறது என்றெல்லாம் ஊடகங்கள் காட்டிய காட்சிகள் இன்றும் கண்களில் விரிகின்றன.
          ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து அறுநூற்று ஐம்பத்தாறு தங்கத்தாலான ஆபரணங்கள் கணக்கெடுக்கப்பட்டன.  ஒவ்வொரு ஆபரணத்திலும் குறைந்தது 75 முதல் 300 வரையான வைர கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தங்க சங்கிலியின் பதக்கத்தில் மட்டும் 997 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தங்கச்சங்கிலிகளில் உள்ள டாலர்களில் 100-க்கும் மேற்பட்ட வைர கற்கள் உள்ளன.  19.50 லட்சம் தங்க நாணயங்கள் உள்ளன. இவற்றின் எடை 700 கிலோ. ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய நாடுகளின் நாணயங்களும் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்களும்  இக்கோயிலில் உள்ளன என்ற அறிக்கைகளெல்லாம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டன.
கட்டடக் கலையில் சிறந்து விளங்கும் இக்கோயில் கோபுரம் 100 அடி உயரமும் ஏழு மாடங்களும் கொண்டதாகும். எண்பது அடி உயரமான கொடிக்கம்பம் காணப்படுகிறது.
இப்போது கண்டறியப் பட்டுள்ள இக்கோயில் கோபுரத்தின் சிறப்பானது, சூரியன் இக்கோபுரத்தின் நடு மாடத்தின் வழியாக  உதித்து வெளிவருவது போல அமைத்துள்ளது. இரவும் பகலும் சம நேரமுடைய பருவ காலத்தில் (equinox) இக்கோபுர வாயில்கள் வழியாக சூரியக் கதிர்கள் உட்புகுந்து வெளிவருவது போல் அமைந்துள்ள இத்தகு சிறப்பான கட்டடக் கலை வேறு எக்கோயிலிலும் காண இயலாத ஒன்று.
இரவும் பகலும் சம நேரமாக இருக்கும் பருவகாலம் ஆண்டிற்கு இரு முறை வரும். அதாவது வசந்த காலம், இலையுதிர் காலம் (spring and autumn) என்று அழைக்கப் பெறும் பருவ காலங்களில் இது வருகிறது. மார்ச் மாதத்தில் 20 அல்லது 21 ஆம் தேதியிலும் செப்டம்பர் மாதத்தில் 22 அல்லது 23 ஆம் தேதியிலும் இந்தச் சம நேர பருவ காலம் வரும்.
நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் செம்பாதியாகிய 12 மணி நேரம் பகலும் மற்ற பாதியாகிய 12 மணிநேரம் இரவுமாக இருக்கும் பருவ காலத்தை equinox என்று ஆங்கிலத்தில் கூறுவர். தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றும் பூமியின் சுழல் அச்சு சூரியனை நோக்கி சரிவாகச் சாயும் ஒரு புள்ளியில் இந்தக் கோயில் கோபுர மாடங்களின் வாயில்களில் சூரிய ஒளி பாய்ந்து வெளிவருவது போல அமைத்துள்ள இக்கோயில் கட்டிடக் கலை வியக்கத் தக்க பெருமையுடையது. இப்படி மாடங்களின் உட்புகுந்து வரும் சூரியன் சற்றும் வெளியில் சிதறாமல் அல்லது சாயாமல் மிகத் துல்லியமாகக் கோபுர வாயிலில் வருவது என்பதுதான் கட்டடக் கலைஞர்கள் எல்லோருக்கும் வியப்பாக உள்ளது.
“பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
பாரத நாடு..
ஞானத்தி லேபர மோனத்திலே – உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே – உயர்
நோக்கத்திலே உயர் நாடு”

என்று பாரதி பெருமைப் பட்டது இதனாலன்றோ…!

திங்கள், 12 நவம்பர், 2012

கலர் பார்க்கும் பெண்கள்

                             
                                       
                            
கலர் கலர் என்ன கலர்?” என்ற விளையாட்டு பெரும்பாலும் பெண்களால்தான் விளையாடப்படும் விளையாட்டு. கலர் பார்ப்பதில் பேதைப் பருவம் (குழந்தைப் பருவம்) முதல் பேரிளம் பெண் பருவம் வரை இல்லை இல்லை முதுமைப் பருவம் கலர் விஷயத்தில் ஆண்களை விட பெண்களே துள்ளியமான திறமை உடையவர்களாக உள்ளனர் என்கிறது ஆய்வறிக்கைகள். தவறாக நினைக்காதீர்கள். நான் சொல்வது அந்தக் கலர் விஷயம் இல்லை. இது ஆடைகள் தேர்ந்தெடுக்கும் கலர் விஷயம்.
"எனக்கு மயிலிறகு பச்சை கலரில் தான் சுடிதார் வேண்டும்"

"உனக்கு கொஞ்சம் கூட கலர் சென்ஸே இல்லை.
இது Baby Pink.. இது Onion pink. எப்படி ரெண்டுக்கும் மேட்ச் ஆகும்?"

"நல்லா தான் இருக்கு.. ஆனா, இதுவே கொஞ்சம் கொஞ்சம்
டார்க் மஞ்சளா இருந்தா நல்லா இருந்திருக்கும்"

என்று கணவன் வாங்கி வந்த ஆடைகளைப் பற்றி அடிக்கும் கமெண்டில் ஆயுசுக்கும் இவளுக்குப் புடவையே வாங்கித்தரக்கூடாது என்று முடிவெடுக்கும் கணவன்மார்கள் ஒருபுறம், பாவப்பட்டவர்கள் புடவைக்கடையில் வேலை பார்க்கும் ஆண்கள். ஹேங்கர் முழுவதும் சேலைகள் நிரப்பிரிகைகள் காட்டிக்கொண்டு தொங்கும். அவற்றை ஒவ்வொன்றாக ஒரு மூன்றரை மணி நேரம் நோட்டம் விட்ட பின்பு புடவைகள் அடுக்கியிருக்கும் அலமாரி பிரிவுக்கு வருவார்கள். அப்போதே கிளி ஆரம்பித்து விடும் அந்த பிரிவு பொறுப்பு விற்பனையாளருக்கு. அவர்தான் இந்தம்மாவை மூன்றரை மணி நேரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாரே. ஒரு மணிநேரம் தேடி சளைத்தபின் இவங்க கருத்துகள் ஆரம்பமாகும்.

இந்தப் புடவையில் இருக்கிற இந்த லைட் ஆரஞ்ச் கலர் பார்டர்
அந்தப் புடைவையில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அதுமாதிரி ஆர்டர் பண்ணி தர முடியுமா

இந்த லைட் கிரீன் பேக்ரவுண்ட்ல அந்த கருப்பு பூக்கள்
வந்திருந்தால் எப்படி இருக்கும்?
அடுத்த முறை வந்தால் அப்படிக் கிடைக்குமா

என்று கருத்து கூறிக் கேட்கும் பெண்களால் வேலையை விட்டு ஓடிடலாமா என்று விற்பனையாளர்களும் முடிவெடுக்கிற அளவுக்குப் போய்விடுகிறது இந்தக் கலர் காம்பினேஷன் விஷயம்.

ஆனால் ஆண்களுக்கு இந்தப் பிரச்சனையே எழுவதில்லை. ஆம் மனைவிமார்களோ அம்மாவோ காதலியோ எதை வாங்கிக் கொடுத்தாலும் மாட்டிக்கொண்டு கிளம்பி விடுகின்றனர் தெருவில் கலர் பார்க்க. வண்ணங்கள் தொடர்புடைய துறைகளில் (ஜவுளி, ஓவியம்) வேலை செய்யும் ஆண்களைத் தவிர பெரும்பாலான ஆண்களுக்கு வண்ணங்களின் பட்டியல் மிக குறைவு தான் என்கிறது ஆய்வறிக்கை. ஆண்கள் கலர் ரசனையே இல்லாதவர்களாக இருப்பதற்கும் இதுவே காரணமாம். இதனாலேயே, பலர் தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் துணி எடுக்கும் போது அல்லல்படுகிறார்கள்!

வண்ணங்களைப் பற்றி ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள திறனைப் பற்றி ஆய்வு செய்த நிபுணர்கள் வண்ணங்களை ஆண்களும், பெண்களும் எப்படி பார்க்கிறார்கள் என்று ஒரு படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.



   ஆண்கள் அதிகபட்சமாக ஏழு வண்ணங்களை மட்டுமே பயன்படுத்து கின்றனர். பெண்களோ சற்றேறக்குறைய முப்பது வண்ணங்களைப் பயன்படுத்து கின்றனராம்.

சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களை மட்டுமே கண்களால் காண முடிகிறது. அவற்றின் கலவையே பிற நிறங்களாக மனிதர்களுக்குத் தெரிகிறன. அனைத்து நிறங்களும் சேர்ந்த நிறம் வெள்ளையாகும், எதுவும் இல்லாதது கருப்பாகவும் இருக்கும். ஆனால், நிறங்களைப் பிரித்தறிவதில் பெண்களுக்கு மட்டும் எப்படி இத்தனை திறன் இருக்கிறது? இதற்குக் காரணம் மரபுணுக்களின் வேலையே என்றும் கூறுகின்றனர்.

மனிதர்களைப் பாலின் அடிப்படியில் வேறுபடுத்திக் காட்டுவது நமது செல்களில் உள்ள மரபணுக்கள் (chromosome). பெண்களுக்கு இரண்டு வகை மரபுத்திரிகளும், ஆண்களுக்கு 1 வகையும், 1 Yவகை மரபுத்திரியும் இருக்கும். நிறங்களைப் பிரித்தறிய உதவும் மரபணு வகை மரபுத்திரியில் இருக்கிறது.

பெண்களுக்கு இரண்டு மரபுத்திரிகள் இருப்பதால் தான், அவர்களால் மிகவும் நுணுக்கமாக நிறங்களைப் பிரித்தறிய முடிகிறது என்கிறது ஆய்வறிக்கை. 

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவிப்பெணி வளர்த்திடும் ஈசன்
என்று பாரதி கூறுவது போல
பெண்ணுக்கு வண்ணத்தைக் கண்டறியும் திறனையும் வைத்தான்

இறைவன். பெண்களுக்கு ஆண்டவன் கொடுத்துள்ள நுட்பங்களில் இந்த நுட்பம் விந்தையானது. ஆனால் கணவன்மார்களை நினைத்துப் பார்க்கையில் சற்று ஆபத்தானது என்று தோன்றுகிறது.  அது கிடக்கட்டும். இன்னொரு சுவாரசியமான தகவல். கலர்பிளைண்டு (COLOR BLIND) எனப்படும் நிறக்குருடு நோய் பெண்களிடம் அதிகம் காணப்படாத்தற்குக் காரணமும் இதனால்தானாம். பாதிக்கப்பட்ட Xமரபுத்திரியினை உடைய ஆண்கள் நிறக்குருடு நோய்க்கு ஆட்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட மரபுத்திரியினை உடைய பெண்களோ, மற்றொரு மரபுத்திரியினைக் கொண்டு சமாளித்துக் கொள்கிறார்கள். இரண்டு மரபுத்திரிகளும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு.

என்னதான் கலர் பார்ப்பது ஆண்களுக்கே உரிய தனித்திறன் என்று நாம் பதிவு செய்து கொடுத்திருந்தாலும் (அது வேறு கலர்), கலர் பார்ப்பதில் தனித்திறன் பெண்களின் கண்களூக்கே! பெண்களே ஜமாய்ங்க!




(இக்கட்டுரை குமுதம் ஹெல்த் இதழில் இடம்பெற்ற என் கட்டுரை. நன்றி குமுதம் குழுமம்.)




சனி, 1 செப்டம்பர், 2012

ஒரு மாணவிக்கு வந்த சோதனை



பிளேட்லெட்ஸ் /த்ரோம்போசைட்ஸ்

எம்.பி.. படித்துக் கொண்டிருக்கும் நல்ல திடகாத்திரமான பெண் தான் அவள். அவள் பி.. முடித்து நான்கு ஆண்டுகள் ஒரு நல்ல நிறுவனத்தில் பணி புரிந்து விட்டு இப்போது எம்.பி.. முழுநேரப் படிப்பாகச் சேர்ந்தாள். ஹாஸ்டல் கல்லூரி எல்லாமே அவளது மனம் போலவே. நல்ல உணவு, நல்ல அறை, .சி. என எல்லா வசதிகளும் மிக மிக நன்றாகவே அமைந்திருந்தது. சும்மாவா காஸ்ட்லி கல்லூரி ஆச்சே. ஒராண்டுக்கே 18 இலகரங்களை அல்லவா அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்.

            கல்லூரிக்குச் சென்றவள் ஒரு மாதம் கூட முடியவில்லை. அடிக்கடி காய்ச்சல் என்று சொல்லி வீட்டுக்கு வர ஆரம்பித்தாள். அவள் அப்படியெல்லாம் கல்லூரிக்கு லீவ் போடும் பொறுப்பற்ற பெண்ணும் அல்லள். மருந்து சாப்பிட்டு ஒரு நாள் நன்றாக இருப்பாள். மீண்டும் காய்ச்சல் வயிற்று வலி, குமட்டல் என்று வந்து விடுவாள். பிறகென்ன நம் மருத்துவர்களுக்கு கையில் சீட்டும் பேனாவும் உள்ளதே. கையில் கிடைத்த டெஸ்டையெல்லாம் எடுக்கச் சொல்லி எழுதிக் கொடுத்து விட்டார்கள். இவளும் சிரித்துக்கொண்டே காலேஜ்ல டெஸ்ட் எழுத முடியல. இங்கயாவது எழுதறேன் என்று ஒவ்வொரு லெபாரட்டரியாகச் சென்று இரத்தம் கொடுப்பதும் ரிசல்ட் பார்ப்பதும் என்று தொடர்ந்தாள். பல ஆய்வுகளுக்குப் பின் இரத்தத்தில்உறை அணுக்கள்என்று சொல்லப்படும் பிளேட்லெட்ஸ் (platelets) குறைவாக உள்ளது என்னும் ரிசல்ட்டை ஒரு வழியாகக் கண்டு பிடித்தனர்.

            நாம் இரத்த சோகை அல்லது அனிமிக் என்று ஒரு காலத்தில் சொன்ன கதையோடு நின்று விட்டோம். இப்போது என்னென்னவோ கூறுகிறார்களே. தெரிந்து கொள்ள வேண்டாமா?

            பிளேட்லெட்ஸ் எனப்படும் உறை அணுக்கள் என்றால் என்னமனித உடலுக்குத் தேவையான அளவு எவ்வளவு? அளவு குறைந்தால் அதைக் கூட்ட அல்லது சரிகட்ட என்ன செய்ய வேண்டும்? போன்றவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளலாமா?

              பிளாசுமா என்ற திரவத்தில் இரத்த சிவப்பு உயிரணுக்கள், வெள்ளை அணுக்கள்,  இரத்த உறை அணுக்கள் போன்றவை தொங்கு நிலையில் காணப்படும் திசுக்கள். இந்த திசுக்களுக்கு இரத்தம் பிராண வாயுவையும் ஊட்டப் பொருட்களையும் கொண்டு செல்கிறது. இந்த திசுக்களில் இருக்கும் கழிவுப் பொருட்களையும் இரத்தமே அகற்றி எடுத்துச் செல்கிறது.

            இதில் இரத்த சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் பற்றி ஒரளவு அறிவோம். ஆனால் இந்த இரத்த உறை அணுக்கள் பற்றி பலருக்கும் அவ்வளவாகத் தெரியாது.

            பிளேட்லெட்ஸ் (Platlets) அல்லது த்ரோம்போசைட்ஸ் (Thrombocytes) என்பதை தமிழில் இரத்த உறை அணுக்கள்  என்பார்கள். இவை மிக நுண்ணிய அளவினவை. வெவ்வேறு வடிவம் கொண்டவை. 5 முதல் 9 நாட்கள் வரை உயிர் வாழும் தன்மையைக் கொண்டவை. இவை இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் சுற்றி வருகின்றன. இவை இரத்தத்தை உறைய வைப்பதிலும் நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக இரத்தத்தில் பிளேட்லெட்ஸ் குறைவாக இருந்தால் இரத்தப் போக்கு அதிகமாக இருக்கும். பிளேட்லெட்ஸ் அதிகமாக இருந்தால் இரத்தம் உறைவதால் பல நேரங்களில் இரத்த ஓட்டம் தடைபடுதல், இரத்தக் குழாய் அடைப்பு, அதனால் மாரடைப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே இரத்த உறை அணுக்கள் சீராக  இருத்தல் அவசியம்.

             
இரத்த உறை அணுக்களின் அளவும் தேவையும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால் சாராசரியாக ஒரு மிலி லிட்டர் இரத்தத்தில் சுமார் 150 முதல் 400 மில்லியன் வரை உறை அணுக்கள் இருக்கும் அல்லது இருக்கலாம்.

            கருவுற்ற பெண்களுக்குச் சற்று குறைவாகக் காணப்படும்நூறு கருவுற்ற பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தினால் அதில் 8 பெண்களுக்கு ஒரு மில்லி லிட்டர் இரத்தத்தில் 100 முதல் 150 மில்லியன் உறை அணுக்கள்தான் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். கர்ப்பக் காலத்தில் இரத்தப் பிளாஸ்மா சற்று நீர்மமாக ஆகி விடுகிறது. இதன் காரணமாக உறை அணுக்களின் அடர்த்தியும் குறைந்து விடுகிறது. ஆனாலும் இவை ஒரு பெரிய பிரச்சனையாக இருக்காது. அவர்கள் சாதாரணமாகவே செயல்படுவார்கள். இதைவிடவும் குறைவாக பிளேட்லெட்ஸ் காணப்படுமாயின் சற்று கவனம் கொள்ள வேண்டும். கருவுற்ற பெண்களின் பிளேட்லெட்ஸ் டெஸ்டில் மருத்துவர்கள் அதிக கவனம் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இரத்தம் உறையும் தன்மையை அது பாதிக்கும்.

            குறைவான பிளேட்லெட்ஸ் உள்ளது என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம். அதிலும் பிளேட்லெட்ஸின் அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதால் எந்த அளவு குறைவு எந்த அளவு கூடுதல் என்பதை மருத்துவர்களாலும் கண்டறிய முடியாது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு அளவு இருக்கும். எனவே கருவுற்றவுடன் ஒரு சில முறைகளாவது இரத்தப் பரிசோதனை செய்து  முன்னர் எந்த அளவு இருந்தது என்பதை அறிந்து கொள்ளவேண்டும். அதன் வேறுபாட்டின் மூலமே குறைவு அல்லது கூடுதல் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

            சாதாரணமாக பிளேட்லெட்ஸ் குறைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. டைஃபாய்டு, மலேரியா, டெங்கு போன்ற வைரஸ்களால் குறைவது உண்டு. சில நேரங்களில் கருவுறுதலுமே இதற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. மேலும்  pre-eclampsia என்று சொல்லக்கூடிய ஒரு நோயும் காரணமாக அமைந்து விடுகிறது.       
    
            ப்ரி எக்ளம்ஸியா என்னும் இந்நோய் கருவுற்ற பெண்களுக்கு, அல்லது கருவில் இருக்கும் குழந்தைக்கு உண்டாகக் கூடிய நோய். பொதுவாக ஒருவருக்கு இருப்பின் கருவுற்று இருக்கும் போது அது  தாய் சேய் இருவரையும் பாதிப்பது தானே சகஜம். ஆகையால் இருவருக்கும் தோன்றுவதும் உண்டு. இந்நோய் பல கண்டறிய முடியாத பல நோய்களுக்குக் காரணமாக அமையும். உதாரணமாக இரத்த அழுத்தம், சிறுநீரில் உப்பு அதிகரித்தல் (proteinuria) முதலிய பல நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.  
          
            பிளேட்லெட்ஸ் குறைவதால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்? அல்லது அதன் அறிகுறிகள் என்ன என்பதையும் பார்த்து விடுவோமா?

            தலைவலி, அடிக்கடி காய்ச்சல், குமட்டல், மேல்வயிற்று வலி ஆகியவை ஏற்படும். இவற்றை பிளேட்லெட்ஸ் குறைந்ததற்கான அடையாளமாகவும் கொள்ளலாம்.

            சரி அடையாளம் கண்டாகிவிட்டது. இரத்த உறை அணு குறைவைச் சரிப்படுத்த வேண்டுமே. இது வரை பிளேட்லெட்ஸின் தன்மை, பயன் முதலியவற்றைத் தெரிந்து கொண்டோம்.

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
 வாய்நாடி வாய்ப்பச் செயல்

என்பார் திருவள்ளுவர். எந்த நோயையும் தீர்க்க இயலாது. அதன் தன்மையைத் தணிக்க இயலும் என்பதே அவரது கருத்து. அதே போல இங்கும் பிளேட்லெட்ஸை அதிகரிக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டும்.

            1. குறைவாகவும் சத்தற்ற உணவாலும் பிளேட்லெட்ஸ் குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சிறிதளவே பிளேட்லெட்ஸ் குறைவாக இருப்பின் நல்ல சத்தான பலதரப்பட்ட உணவின் மூலம் பிளேட்லெட்ஸை அதிகரிக்கலாம்.

            2. மலேரியா, டைஃபாய்டு, டெங்கு போன்ற வைரஸ்களால் பிளேட்லெட்ஸ் குறைந்திருந்தால் முதலில் அந்த வைரசுகளைக் கட்டுப் படுத்துவதால் பிளேட்லெட்ஸை அதிகரிக்கச் செய்யலாம்.

            3. அதிக அளவு என்றால், எந்த வைரசால் பிளேட்லெட்ஸ் குறைந்திருக்கிறது என்பதும் எல்லா ஆய்வும் செய்தும் சில சமயங்களில் அறிய முடியாமல் போகிறது.

மேற்கூறிய பெண்ணுக்கு எல்லா டெஸ்டும் எடுத்தும் என்ன வைரஸ் என்று அடையாளம் காண இயலவில்லை. இறுதியில் மருத்துவர்கள் அனானமஸ் (Ananamous) வைரஸ் என்று கூறி முடித்து விட்டார்கள்.

            இது போன்ற நேரங்களில், இரத்த வங்கிகள் போலவே பிளேட்லெட்ஸ் வங்கிகள் உள்ளன. அங்கிருந்து பிளேட்லெட்ஸ் பெற்று இரத்தம் ஏற்றுவது போலவே இதனையும் ஏற்றுவதே உடனடியாகச் செய்ய வேண்டியது.

ஆக எல்லாவற்றுக்கும் தீர்வு உள்ளது. எனவே அஞ்ச வேண்டிய நிலைமை இப்போதெல்லாம் இல்லை என்றே கூறலாம். ஆனால் நோய் இன்னது என்று சரியாகக் கண்டு பிடித்து நோய்க்கான தீர்வை மேற்கொள்ள வேண்டும் என்பதே நாம் இப்போது அறிந்து கொள்ள வேண்டியது. சரி அடுத்த இன்னொரு புதிய செய்தியோடு ஓடி வரேன்…………… அதுவரை… டா…. டா….



(இந்தக் கட்டுரை செப்டம்பர் 1 - 15 நாளிட்ட குமுதம் ஹெல்த் இதழில் சிறந்த மருத்துவக் கட்டுரையாகத் தேர்வாகிப் பரிசு பெற்றுள்ளது. நன்றி குமுதம் குழுமம்)