“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வெள்ளி, 18 நவம்பர், 2016

நக்கீரருக்கு இணையான புகழைப் பெற்று சிறக்கட்டும்



முனைவர். ப. பானுமதி (ஆதிரா முல்லை)
பேராசிரியர்/எழுத்தாளர்
வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி
சென்னை 102
9941298850





நக்கீரருக்கு இணையான புகழைப் பெற்று சிறக்கட்டும்

தமிழ் மொழியை, தமிழர்களின் பண்பாட்டை, இலக்கியத்தை, கலைகளைத் தலைமுறை தோறும் காத்து வருவதில் இலங்கை எப்போதும் முதலிடம் வகிக்கிறது. அருட்தந்தை தனிநாயக அடிகளார் தொடங்கி  அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி, காந்தளகம் மறவன்புலவு சச்சிதானந்தம்  என்று  வரிசை வரிசையாகத் தமிழ் போற்றும் சான்றோர்கள் இலங்கை மண்ணில் தவழ்ந்து தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்தவர்கள். சேர்த்துக் கொண்டிருப்பவர்கள். அம்மண்ணிலிருந்து கவிதையாக முளைத்துள்ள புதிய வித்து நக்கீரன் மகள்.
சங்க கால நக்கீரரும் சைவ இலக்கியத்தை யாத்த நக்கீரரும் ஒருவரா? வெவ்வேறானவர்களா? அவருக்கு மக்கள் இருந்தனரா? இல்லையா? என்றெல்லாம் ஆய்வுகள் இன்னும் நடந்து ;கொண்டிருக்க ஈழத்தில் உதித்த இந்த நக்கீரர் மகள் தமிழ் உலகத்துக்கும் அவர் விட்டுச் சென்ற இலக்கியப் பணிக்கும் ஒரு வரமாக இருக்கலாமோ? இருந்தாலும் இருக்கலாம். ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவனேசுவரி நக்கீரர் மகள் என்று தம்மை அடையாளப் படுத்திக் கொண்டு கவிதைகள் புனைந்து வருகிறார். தமிழ், ஆங்கிலம், டச்சு என்று பன்மொழி வித்தகரான இவர் டென்மார்க்கில் பணி புரிந்து வருகின்றார். பணிக்காலம் போக மீதக் காலத்தைக் கவிதைக்கும் தமிழுக்கும் செலவிடுகிறார்.
தாய்மண்ணைப் பாடாத தமிழ்க் கவிதை மனம் ஏது? ஈழத் தமிழச்சியான இவரது விழிகளில் வெண்மணற் கடலோரம் வெள்ளிநிலா விளக்கேற்றும் ஈழத்தின் பேரழகு படுகிறது. கற்பனையைத் தருகிறது; கவிதைகளாய் ஒளிர்கிறது.  தாம் பிறந்த மண்ணான ஈழத்தின் பேரழகை எழுத்தில் வடித்து காணாத கண்களுக்கு அதன் வனப்பைக் காட்டுகிறது  ஒரு கவிதை.
ஈழத்தை விட்டுப் புலம் பெயர்ந்து காசு மரமாகி, தம் கனவுகளை வேரில் புதைத்துக் கொண்டு காயாகக் கனியாக காசுகளை உறவுகளுக்கு உண்ணக் கொடுத்து விட்டு பட்ட மரங்களாய்  நிற்கும் ஈழத்து இளைஞர்களின் வறட்சியைக் காட்டுகிறது ஒரு கவிதை. கவிதையின் தலைப்போ காசு மரம். அதில் வரும் இவ்வரிகளோ பாச மரம்.
“கன்னத்து முடிகள்
நரையேறி அவன் வயதை
நாலு பேருக்குப் பறை சாற்ற
மூன்று வேலை செய்து முப்பது இலட்சங்கள்
முன்னாடி கரை சேர்ந்தவருக்குக் கொடுத்து விட்டு
இன்னும் ஓடி ஓடி உழைக்கிறான்
இனி கரை சேரும் சோதரிக்காய்”
இப்படிப் பட்ட இளைஞர்களைப் பட்ட மரங்களாக்கிப் பயன் கொள்ளும் மனிதர்களை,
“பணம் என்ற பழம் பிடுங்க
உடன்பிறந்தவளின் மகளுக்குத்
தண்ணீர் வார்ப்பாம்
ஊரெல்லாம் சொல்லி கொண்டாட்டமாம்”
என்று வசை பாடும் எனதருமைச் சகோதரியின் இக்கவிதை ஒரு சரியான ஏசுமரம்.
காரசாரமாகக் கவிதை எழுதும் இவர்தம் ‘அற்றைத்திங்கள்’ என்னும் இக்கவிதை நூலின் முதல் கவிதை “நிறைமகளே’. அற்றைத் திங்களில் சற்றும் இல்லாது இற்றைக் திங்களில் உருவாகி வரும் வன்புணர்வு கலாச்சாரத்தை மறைமுகமாகச் சாடும் இக்கவிதை, வன்புணர்ந்தவனைக் “கறை படிந்தவன்” என்று சாடியும், சாடும் அப்போதே வன்புணர்வுக்குள்ளான பெண்ணை வார்த்தை விரல்களால் வருடியும் கொடுக்கிறது. ஆம் முறை கெட்டுக் காமப்பசிக்குப் பெண்ணை ஆளாக்கும் காமுகன்கள் முன்னால் பெண் கறைமகள் அல்லள். நிறை மகள் என்று கவிஞர் கூறுவது இப்போது பெண்கள் சமூகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கறையும் உனக்கில்லை
குறையும் உனக்கில்லை
நீ நாணிக் குனிந்திடத் தேவையில்லை
முறைகெட்ட மாந்தர் முன்னால்
நிறை மகளே நீ நிமிர்ந்திடு”

என்று எழுதிய கவிஞரின் விரல்களுக்கு ஒரு பெண்ணியவாதியின் முத்தங்களைப் பரிசாக்குகிறேன்.
தாய்மை, பெண்ணுக்குப் பலம். அதுவே அவள் இன்றும் போற்றப் பட காரணம். உலகைப் படைக்கும் மிகப் பெரிய வரத்தைக் கையில் வைத்துக் கொண்டு தள்ளாடும் இனமும் பெண்ணினம், தன் பலம் எந்து பலகீனம் எது என்று அறியாது அல்லாடும் பேதைப் பெண்களுக்கு, “மனிதம் உயிர்ப்பது பெண்ணால்” என்று எடுத்துக்காட்டி,
“புனிதமான வனிதையே
விடியலை யாரிடமும் கேட்காதே
கொடியவைக் கொளுத்திவிடு
கடிதெனத் துயரைத் துரத்திவிடு
உனக்குள் மடமை அகற்று
உலகின் சீதனம் நீ
உன்னை ஏளனம் செய்யும்
அந்தப் பாதக மனிதர் முன்னால்
சாதனையால் சரித்திரம் படைத்து விடு”
என்று புதிய ஆத்திச்சூடியைப் பாடி சாதனைக்கு வழி காட்டும் பாரதி மகளாகத் திகழ்கிறார் இந்த நக்கீரன்மகள்.
காற்றடி பெண்ணே நீ காற்றின்றி யார் வாழ்வார்?
ஒளியூட்டும் உதயனடி நீ; உன் ஒளி படாதார் எவருமில்லை
கார்மேகமடி நீ காரிகையே பால் பொழிவாய் மாந்தர்க்கு
கயல் விழியாளே உன் விழியில்
கருணை மட்டுமல்ல கனலும் கொதிக்கும்”
என்று உலகை ஆக்கவும் காக்கவும் செய்யும் ஐம்பூதங்களாய் பெண்ணைப் போற்றிப் பாடிய புதுயுகக் கவி இவர்.
 “கண்ணா கருமை நிறக் கண்ணா, உனைக் காணாத கண் இல்லையே
எனைக் கண்டாலும் பொறுப்பார் இல்லை”
என்று கவியரசர் கண்ணதாசனைப் பாட வைத்தது நிறம். காந்தியைத் தொடர் வண்டியிலிருந்து இறக்கி விட்டது நிறம். 27 ஆண்டுகள் மண்டேலாவைச் சிறையில் இருக்க வைத்தது நிறம். நிறபேதமும் இனபேதமும் இப்போதும் மறையவில்லை. எப்போதும் மறையாது. “உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்று வள்ளுவனைப் பாட வைத்ததைப் போல மறையாத இப்பேதங்கள் இக்கவிஞரையும்
“கருப்பு என்றே வெறுப்பாய்ப் பார்க்கிறாய்
குள்ளம் என்று குத்திப் பேசுகிறாய்
மாற்றுத் திறனாளியை முற்பிறப்பின் பயன் என்கிறாய்
பாலினப் பிறழ்வு கண்டு பரிகசிக்கிறாய்
உன்னைப் போல் ஈனப் பிறவி உலகில் இல்லை”
என்று வருந்திப் பாட வைத்துள்ளது.
“நடக்க முடியாத
என் உண்டியை நிரப்பாது
என்னைக் கடந்து போய்
கோவில் உண்டியலை நிரப்புகிறார்களே
என்னை விட ஊனமுற்றவனோ கடவுள்”
என்னும் இக்கவிதையுள் சம்மணமிட்டு அமர்ந்திருப்பவர் மாற்றுத்திறனாளி மட்டுமல்ல. வெண் தாடி வேந்தரும் வள்ளலாரும்,. நடமாடவும் இயலாத கடவுள்களாக இருக்கின்ற மாற்றுத்திறனாளர்களுக்கு உதவாமல் படமாடும் கோயில் கடவுளுக்கு உதவும் பதர்களான பக்தர்களைச் சாட்டையால் விளாசுகிறது இக்கவிதை.

“தேடாத உறவெல்லாம் தேடியே வரும்
தேடிய உறவெல்லாம் ஓடியே போகும்”
என்று நிலையில்லாது உருண்டோடும் பணத்தினால் ஏற்படும் விந்தைகளைப் பாடும் இந்த வித்தகக்கவி,
“பயணத்தின் அனுபவத்தைப் பகிர்ந்தவர் யாருமில்லை
பயணத்தை நினைத்து மகிழ்ந்தவரும் யாருமில்லை
எல்லோருக்கும் ஒருநாள் வாய்த்திடும் இப்பயணம்”
என்று மனிதனால் திட்டமிட முடியாத நீண்ட முடிவில்லாத நெடிய பயணத்தையும் பாடி, கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்று பாடிய பழைய தத்துவக் கவிஞராகக் காட்சி அளிக்கிறார்.
“முரணில் பொதியின் முதற்புத்தேன் வாழி
பரண கவிலரும் வாழி அரணிய
அநந்த வேட்கையான் வேட்கோக் குயக்கொண்டான்
அநந்தஞ் சேர்க கவா”
என்று கவி பாடி அன்று வடமொழி உயர்ந்தது என்று கூறிய குயக்கொண்டான் என்பானை மாளவும், பின்னர்
”ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் சீரிய
அந்தன் பொதியின் அகத்தியனார் ஆணையினாற்
செந்தமிழே தீர்க கவா”
என்று பாடி அவனை உயிர் மீளவும் செய்தார் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர். நக்கீரர். இன்று ஆங்கிலக் கலாச்சாரம். அந்நியக் கலாச்சாரத்தின் கைதிகளாய் கட்டுண்டு கிடக்கும் சமுதாயத்தில் மொழி மட்டும் கை வீசியா நடக்கும். தாய்மொழியை மறந்து கிடக்கும் மண்பதையைக் கண்டு,
“குமரியில் பிறந்தோம்
குவலயத்தையே ஆண்டோம்
வீரச் சமர் புரிந்தோமாம்
எம் சந்ததிக்கு எதைக் கொடுத்தோம்
எமக்கான மொழியையும் இழந்து
அகதியாய் அநாதையாய்
எம் அடையாளம் தொலைத்தவராய்
நாளை
தமிழை மறந்தவராய் நாங்கள்?”

என்று மாளவும் மீளவும் செய்ய இயலாமல் மொழிப்பற்றால் அங்கலாய்க்கிறார் நக்கீரன் மகள்.  
“மண்ணைப் பண்படுத்த கலப்பை, மனிதனைப் பண்படுத்த கல்வி” என்று கல்வியைப் பாடும் இக்கவிஞரின்  பா வரிகள் அன்னையை, தந்தையை, உழைப்பை, பாசப் பிணைப்பை, அகிம்சையை, மனித நேயத்தை, மலரை, கடலை, காதலை, சமுதாயத்தை என்று பல்துறையிலும் விரிகிறது.

தன் எச்சில் கொண்டு தான் வாழ வலை பின்னிடும் சிலந்தியைப் போல் தன் உள்ளுணர்வின் உந்துதலால் தமிழ் பாட தொடங்கியிருக்கும் இக்கவி மாக்கவி ஆகட்டும். புதிய கவிதை உலகைப் படைக்கட்டும். மண்ணில் சிறக்கட்டும் என்று உரிமையோடு உச்சி முகர்ந்து உரக்க வாழ்த்துகிறேன்!.
கடைச்சங்கத்தின் தலைமைப் புலவராக வீற்றிருந்து தமிழுக்குத் தகைமை சேர்த்த நக்கீரருக்கு இணையான புகழை நக்கீரன் மகளும் பெற்றுச் சிறக்க வாழ்த்துகிறேன்!


2 கருத்துகள்:

  1. உறவுகள் போற்றுவதும் பெண்மையை உயர்த்துவதும் இன்றைய தேவை. வாழ்க நக்கீரன் மகளும் கவிதை மகளும்

    பதிலளிநீக்கு
  2. உறவுகள் போற்றுவதும் பெண்மையை உயர்த்துவதும் இன்றைய தேவை. வாழ்க நக்கீரன் மகளும் கவிதை மகளும்

    பதிலளிநீக்கு