“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு
குழந்தை வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தை வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 ஆகஸ்ட், 2013

ஒன்று கூடு.... பள்ளு பாடு..… ஆனந்தக் கூத்தாடு.


“ஆடுவோமே பள்ளு பாடுவோமே – ஆனந்த
சுதந்திரம் அடைந்து விட்டோமென்று”
என்று சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே துள்ளிக் குதித்தான் ஒரு இந்தியன். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆகஸ்டு, ஜனவரி மாதங்கள் வந்தால் சுதந்திர நன்னாளும் குடியரசு நன்னாளும் நினைவுக்குள் குதியாட்டம் போடும். எவ்வளவோ அடிபட்டு, உதைப்பட்டு, அல்லல் பட்டு, துன்பப் பட்டு, சிரமப்பட்டு, உயிரையும் தியாகம் செய்து வாங்கியது இந்தச் சுதந்திரம்.
நம்மை நாமே ஆண்டுகொண்டால் வளர்ச்சிப் பாதையில் பிற நாடுகளுடன் போட்டிப் போடலாம் என்பதால் சுதந்திரம் பெற்ற தாய்த்திருநாடு குடியரசு நாடாக உருமாறியது. ஆனால் அன்னிய நாகரிகம் குடியேறி இருக்கும் இக்காலத்தில் இந்த நாட்கள் இன்றைய சமுதாயத்தினரிடம் நினைவில் இருக்கிறதா என்று வினா எழுப்பினால் இல்லை என்றே அழுத்தமாகக் கூற வேண்டியுள்ளது.
பொங்கல் திருநாளன்று ஒரு தொலைக்காட்சி ஊடகம் தகவல் தொழில் நுட்ப அலுவலகம் ஒன்றில் பணிபுரிவர்களிடம், அதாவது பொறியியல் பட்டப் படிப்புப் படித்தவர்களிடம், “பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்?” என்று வினா எழுப்பியது. அதற்கு ஒரு இளைஞர் “எனக்கு அதெல்லாம் தெரியாது. விடுமுறை கிடைக்கிறது. அதனால் கொண்டாடுகிறேன்” என்று மூன்று முறை ஒரே பதிலைத் திரும்பத் திரும்பச் சொன்னார். ஒரு தமிழனாகத் தமிழர்த் திருநாளைப் பற்றித் தெரியாமல் இருக்கின்றோமே என்னும் வெட்க உணர்வு சிறிதும் அந்த இளைஞரிடம் தென்படவில்லை. அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. அதைவிட அதைத் தெரிந்து கொண்டால் ஒரு இன்கிரிமெண்டா (சம்பள உயர்வா) கிடைக்கப் போகிறது என்பது போல ஒரு ஏளனம் அவரது குரலில் தொணித்தது. அதனால் என்ன? விழா கொண்டாடுகின்றனர் வெகு மகிழ்ச்சியாக.
“பஞ்சம் பஞ்சமென்று பரிதவிப்பார் அதன்
காரணம் யாதெனும் அறிவுமிலார்”
என்று பாரதியார் சொன்னது போல விழாக்களைக் கொண்டாடுகின்றனர். விடுமுறையைக் கழிக்கின்றனர். ஆனால் அதன் நோக்கமோ காரணமோ இளைய சமுதாயத்திற்குத் தெரியவில்லை. அதை முறையாகத் தெரிய வைக்காதது அல்லது கொண்டு சேர்க்காதது யார் குற்றம்? வீட்டில் விமர்சையாகக் கொண்டாடும் பொங்கல் விழாவுக்கே இந்நிலை என்றால் நாட்டில் கொண்டாடும் சுதந்திர தின விழாவும் குடியரசு தின விழாவும் அவர்கள் மனத்தில் எந்த இடத்தைப் பெற்றிருக்கும்?
மெல்ல மெல்ல மறைந்து கொண்டு வரும் இந்தியக் கலாச்சாரத்தை மீட்க, அதே வேளையில் வெகு வேகமாக விஷ விருட்சமாக வளர்ந்து கொண்டு வரும் அன்னியக் கலாச்சாரத்தைப் போக்க என்ன செய்யப் போகிறோம் என்ற பெரிய வினா நம் கண் முன் விரிந்து கிடக்கிறது.
இளைய சமுதாயம் அடுத்தடுத்து கோலாகலம், கொண்டாட்டம், ஆடல் பாடல், ஆரவாரம் என்று மகிழ்வாக இருக்கிறது. செப்டம்பரில் தீபாவளி வரும் என்று சொல்லும் இளைய சமுதாயத்திற்கு அதற்கு முந்தைய மாதம் ஆகஸ்டில் சுதந்திர தினம் வரும் என்னும் நினைவு இருப்பதில்லை. பிப்ரவரியில் காதலர் தினம் என்று மனத்தில் அழுத்தமாக பதிந்த அளவுக்கு அதற்கு முந்தைய மாதமான ஜனவரியில் குடியரசு தினம் என்று ஒன்று இருப்பது எந்த இளைஞனுக்கும் லேசாகக் கூட நினைவில் பதியவில்லை.
எந்த மாணவனாலும் மறக்க முடியாத விழாவாக, அங்கு இங்கு எனாதபடி எங்கும் ஒளிமயமாய் சில மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஆயத்தம் ஆகத் தொடங்கி விடுகின்றது, எங்கோ இருந்து தமிழகத்தில் கால்கொண்ட காதலர் தினத் திருவிழா. இங்கு காதலர் தினத்தைக் கொண்டாடுவது தவறு என்று கூறுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. தெரிந்திருக்க வேண்டிய நம் வரலாறு தெரியவில்லையே என்னும் அங்கலாய்ப்பே.
சுதந்திர தினத்தன்று நாம் இந்தியர் என்று பெருமிதமாகச் சட்டையில் குத்திக் கொள்ள ஒரு தேசியக் கொடிக்கு எங்கெங்கோ அலைய வேண்டியுள்ளது. காதலர் தினம் வர மாதங்கள் சில இருக்கும்போதே மழைக்காலக் காளான்களாகப் பரிசுகளும் வாழ்த்து அட்டைகளும் முளைத்து விடுகின்றன. இதில் விந்தை என்னவென்றால் வாலிபத்தின் வாசலில் நிற்பவர் மட்டுமல்ல. வயோதிகத்தைக் கடந்தோரும் காதலர் தினம் கொண்டாடுவோரில் இடம் பெறுவதுதான். இப்போதெல்லாம் இரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளின் கருத்திலும் கலந்திருப்பது காதலர்தினம். அதே போல எண்பது வயதைத் தொட்ட இரண்டாம் குழந்தைப் பருவத்தில் இருப்போரும் காதலர்தினம் கொண்டாடுகின்றனர். காதலர் தினத்தன்று அனைவரும் ஒருவருக்கு ஒருவர் காதலர்தின வாழ்த்துப் பகிர்ந்து கொள்வது மரபாகிப் போனது. பெற்றோரையும், கல்வி புகட்டும் ஆசிரியர்களையும் தாத்தா பாட்டியையும் பார்த்து ‘ஹாப்பி வாலைண்டைன்ஸ் டே’ என்று வாழ்த்தும் கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சர்வோதயா நாள் என்று ஒன்று இருந்தது. ஜனவரி 30 ஆம் நாள் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அது தற்போதைய குழந்தைகள் மட்டுமல்ல; பெற்றோர்கள் முதியவர்கள் என்று எவருக்குமே நினைவில் இல்லை. மகாத்மா காந்தியின் நினைவு நாள் சர்வோதயா நாளாக அனுஷ்டிக்கப் பட்டது. பள்ளிகளில் காலை 11 மணிக்கு ஒரு மணி அடிப்பார்கள். 11.02 மீண்டும் ஒர் மணி அடிப்பார்கள். அந்த இரண்டு நிமிடங்கள் பல இன்னல்களையும் தாங்கி அகிம்சை வழியில் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த மகாத்மா காந்திக்கு மெளன அஞ்சலி செலுத்துகிற வழக்கம் இருந்தது. இவ்வழக்கம் எங்கு போனது? எப்போது நின்று போனது? யாரால் நின்று போனது என்று தெரியவில்லை.
சுந்தந்திர நாளிலும் குடியரசு நாளிலும் கல்விச்சாலைகளில் வண்ண வண்ண கொடிகள் கட்டி, காலையில் அனைவரும் ஒன்று கூடி தேசியக் கொடியை உயர்ந்த கம்பத்தில் பறக்க விட்டு, தேசபக்தி பாடல்களைப் பாடியும், சுதந்திரம் பெற்றுத் தந்த முன்னோர்களின் நினைவைப் போற்றும் வண்ணமாக பேசியும், நடித்தும்,ஆடியும் விழாவைக் கொண்டாடினர். இப்போது இதற்கெல்லாம் ஒருவருக்கும் நேரமில்லை. ஏதோ கடமைக்கு என்று கொடியேற்றப்படுகிறது. இந்த இரு விழாவுக்கும் பெரும்பான்மையான ஆங்கில வழிப் பள்ளிகள் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுப்பு அறிவித்து விடுகின்றன. ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழைந்தகளாவது இனிப்புக் (சாக்லேட்டு)காகவாவது வருவார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கோ குடியரசு விழாவைப் போலவே சாக்லேட்டும் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை. எண்ணி நான்கு மாணவர்களோ அல்லது அவர்களும் இல்லாமலோ ஆசிரியர்கள் மட்டிலுமே என்று கொடியேற்றுத் திருவிழா பள்ளிகளில் சுருக்கமாக முடிந்து விடுகின்றது.
சில கல்விச் சாலைகளில் முதல் நாள் மாலையே காமா சாமாவென்று கொடியேற்று விழா இனிப்புடனோ இனிப்பின்றியோ அரைமணி நேர விழாவாக நடந்தேறுகின்றது. ஆசிரியர்கள் இந்த ஒரு மணி நேரத்திற்காகப் பள்ளிக்குச் செல்ல வேண்டுமே என்னும் புலம்பல்களுடன் வருவதும் வேண்டா வெறுப்பாக விழாவைக் கொண்டாடுவதும் வழக்கம் ஆகிப் போனது என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆசிரியர்கள் கண்டிப்பாக வருகை தர வேண்டும் என்பது கல்வி நிறுவங்களின் கட்டளையாக இருப்பதால் அவர்கள் வருகின்றனர். இல்லாவிட்டால் ஆசிரியர்களும் வரமாட்டார்கள் என்பது நிதர்சனம்.
கல்லூரிகளில் கேட்கவே தேவையில்லை. விடுதி இருப்பின் விடுதி மாணவர்கள் நான்கைந்து பேரைக் கொண்டு விடுதிக் காப்பாளர் கொடியேற்றி விடுவார். இல்லாவிட்டால் பத்து மாணவர்களுடன் பத்து நிமிட நிகழ்ச்சியாகக் கொடியேற்று விழா முடிவடைந்து விடுகின்றது.
புற்றீசல் போல முளைத்துள்ள அத்தனை தொலைக்காட்சிகளும், பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள், தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் என்று ஒரு மாதத்திற்கு முன்னரே போட்டி போட்டுக் கொண்டு ப்ரமோ (நிகழ்ச்சிகள் பற்றிய முன்னோட்ட விளம்பரங்கள்) போட்டுக் காட்டுகின்றன. இது போல சுதந்திர தின நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் அவற்றில் இடம் பிடிப்பது இல்லை. தொடர்ந்து மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டிய சுதந்திர நாள், குடியரசு நாள் முதலிய தேசியத் திருநாள்களைக் கொண்டாடுவதை, அவை பற்றிய செய்திகளை வழங்குவதை அத்தனை தொலைக்காட்சிகளும் முற்றிலுமாக ஒதுக்கி விட்டன.
ஒரு சில தொலைக்காட்சிகள் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினக் கொண்டாட்டங்களை ஒளிப்பரப்புகின்றன என்றால் அவை ஆளும் அரசியல் கட்சிகளாக இருக்கும். இந்தத் தொலைக்காட்சிகள் கொடியேற்றுவதுடன் ஒரு சில நலத்திட்ட உதவிகள் வழங்குவதை காட்சியாக்கித் தம் கட்சிக்கு விளம்பரம் தேடிக் கொள்வது என்ற அளவில் நிறுத்திக் கொள்கின்றன. அரசு விடுமுறையை இன்பமாகக் கழிக்க நினைக்கும் இளைஞர்களுக்குச் சுவையான நிகழ்ச்சிகளைக் கொடுக்க வேண்டி முன்னணி நடிகர், நடிகையின் பேட்டியைப் போட்டு தம் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வதில் குறியாக உள்ளன அத்தனை தொலைக்காட்சிகளும். சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததில் அந்த நடிகர் அல்லது நடிகைகளின் பங்கு என்ன என்று தொலைக்காட்சிகள் சிந்திப்பதே இல்லை.
அரசு தொலைக்காட்சி மட்டும் தொடர்ந்து ஆண்டுதோறும் இது போன்ற தேசிய விழாக்களின் நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒளிபரப்புகிறது. ஆனால் அந்தத் தொலைக்காட்சியை இளைய சமுதாயம் ஒதுக்கி ஆண்டுகள் பல ஆயின.
“ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
வானையளப் போம்கடல் மீனையளப்போம்
சந்திரமண் டலத்தியல் கண்டுதெளி வோம்” 
என்று எண்ணற்ற கனவுகளைக் கண்டு மறைந்தனர் அரும்பாடு பட்டுச் சுதந்திரம் வாங்கித் தந்தத் தியாகிகள். அவர்களை, அவர்களின் தியாகத்தை, அவர்களின் கனவை நினைவு கூர்வது தலையாய கடமை. அது மட்டுமல்ல.
ஒவ்வொரு துறையிலும் நாடு சுதந்திரத்திற்கு முன்பு எப்படி இருந்தது. இப்போது என்ன நிலையில் இருக்கிறது? துறைகள் தோறும் அடைந்துள்ள உச்சம் என்ன?, இந்த உச்சம் எப்படி சாத்தியமானது என்று கூறும் விதமான நிகழ்ச்சிகளையாவது ஒளிபரப்ப வேண்டும். அந்தத் தார்மிகக் கடமைகள் ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் உள்ளது.
அதே போன்று இக்கடமை தொலைக்காட்சிகளைக் காட்டிலும் சற்று கூடுதலாகக் கல்விச்சாலைகளுக்கு உள்ளது. இன்று கல்விச்சாலைகளின் நிலை எப்படி உள்ளது? புத்தகக் கல்வியே மதிப்பெண்ணுக்காக மட்டும் என்னும் வித்தகக் கல்வியாகிப் போனது. இந்நிலையில் இக்காலத்தில் இது போன்ற வாழ்க்கைக் கல்விகளையும் நாட்டுக்காக வாழ்ந்தோரைப் பற்றியும் கற்றுக்கொடுப்பதை வணிக நிறுவனங்களாக மாறிப் போன கல்வி நிலையங்கள் விரும்புவதில்லை.
“விளையும் பயிர் முளையிலே’ என்பார்கள். சின்னக் குழந்தைகளாக இருக்கும் போது குழந்தைகள் விழாக்களை விரும்பிப் பார்ப்பார்கள். விரும்பிப் பார்க்கும் இவ்விழாக்கள் குழந்தைகளின் மனத்தின் ஆழத்தில் பதிந்துவிடும். இது போன்ற விழாக்களைப் பாலர் பள்ளி முதல் கல்லூரி வரை உள்ள கல்வி நிறுவனங்கள் விமர்சையாகக் கொண்டாடுதல் வேண்டும். அப்படிக் கொண்டாடும் போதுதான் குழந்தைகளின் மனத்தில் நாட்டுப் பற்று சிறிதாவது முளைக்கும்..

(இக்கட்டுரை வல்லமை மின்னிதழ், சோழநாடு மாத இதழ் இரண்டிலும் வெளியானது)



வியாழன், 4 ஜூலை, 2013

ஆடித் திரிதல் கண்டால்.....

துள்ளித் திரியும் பருவத்திலே…. 




குழந்தைகள் பால் வேறுபாடு, இன வேறுபாடு இல்லாமல் தெருவில் ஓடி ஆடிக்கொண்டு இருக்கும் போது பார்க்கும் நடுத்தர வயதுள்ள எவருக்கும் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

“மகிழ்ச்சியா துள்ளிக்கிட்டு இருந்தோம்; கவலைன்னா என்னன்னு தெரியாம திரிஞ்சோம்; ஏன் தான் பெரியவங்களா ஆனோமோ தெரியல? இளமைப் பருவத்திலேயே இருந்திருக்கக் கூடாதா?” என்று ஏங்காதவர்கள் இருக்க முடியுமா? புலம்பாதவர்கள்தான் இருக்க முடியுமா?

இளமைப் பருவம் இனிக்கும் பருவம். அந்தப் பருவம் மட்டுமல்ல. அந்தப் பருவத்து நினைவுகளுக்கும் இனிமை இருக்கும்.. வயது கூடக் கூட வாழ்க்கையில் கசப்புச் சுவை கூடிக்கொண்டே போகின்றது. ஆனால் இளமைப் பருவத்து நினைவுகளை அசை போடும் போது மட்டும் வயது கூடக் கூட இனிப்புச் சுவையும் கூடிக்கொண்டே போகின்றது. குழந்தைப் பருவத்தில் குறும்புத்தனங்கள் செய்த எவரும் இதனை மறுக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு பெரியவருக்குள்ளும் ஒரு குழந்தை உலவிக் கொண்டிருக்கும் என்பார்கள். பத்துக் குழந்தைகள் உலாவிக் கொண்டு இருக்கும் பெரிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம்கூட நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

அதே போல ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு பெரியவர் உலவிக்கொண்டு இருப்பாரோ என்னும் வினா இக்காலத்துக் குழந்தைகளைக் காணும் போது எழுகிறது. அதிலும் சின்னத்திரைகள் நடத்தும் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் குழந்தைகளுக்குள் பல பெரிய மனிதர்கள் உலவிக் கொண்டு இருப்பார்களோ? என்னும் ஐயம் பலருக்கும் எழுகிறது.

திருஞான சம்பந்தர்கூட உமையம்மையின் ஞானப்பால் அருந்திய பின் தான் “தோடுடைய செவியன்” என்று பாடத் தொடங்கினார். குமர குருபரர் மீனாட்சியம்மை நாவில் வேலால் எழுதியதால்தான் கவி பாடினார். கவி காளிதாஸ் காளியின் அருள் பெற்றதால்தான் கவிதை படைத்தார். ஆனால் இந்தச் சின்னத்திரைக் குழந்தைகள் மட்டும் எப்படி? தங்கள் பெற்றோரின் நாவுக்குப் பயந்தே ஒரு வேளை ஞானம் பெற்றுவிட்டனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சின்னத்திரை போட்டிகளுக்கும் சின்னக் குழந்தைகளின் பெற்றோர்க்கும் இடையேயான அரசியல் ஒரு புரியாத புதிராக உள்ளது. எப்படி எப்படியோ தூண்டில் போட்டு இழுத்து விடுகின்றன பெற்றோர்களைச் சின்னத்திரைகள். விளைவு பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளைச் சுமக்கும் சுமைதாங்கிகள் ஆகி விடுகின்றன குழந்தைகள்.

பத்து, பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுக் காய்ச்சல் ஒரு புறம் என்றால் மறுபுறம் சுமார் ஐம்பது அறுபது விழுக்காட்டினர் சின்னத்திரைக் காய்ச்சலில் சிக்கித் தவிக்கின்றனர். சின்னத்திரையைப் பார்த்தது ரசித்ததெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் சின்னத்திரைப் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசு பெற்றே ஆகவேண்டும் என்று நினைக்கின்றனர்.

அதற்கான அழைப்புகளும் சின்னத்திரையில் கவர்ச்சிகரமாக மின்னலிடுகின்றன. பெற்றோர்க்கோ ஒரு புறம் மகனோ மகளோ புகழ் ஏணியில் பயணிக்கத் தொடங்குகிறார். மற்றொரு புறம் ஒவ்வொரு போட்டியும் கோடிகள்,, வீடு, வாகனங்கள் என்று சொத்துகளைச் சேர்த்துக் கொடுக்கின்றன. பிறிதொரு புறம் எதிர் காலத்தில் குழந்தைகள் அத்துறையில் ஒளிர வாய்ப்பாக அமைந்து விடுகிறது. விடுவார்களா பெற்றோர்கள். தங்களுக்கு கிட்டாத வாய்ப்பு தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்கிறதே. தங்கள் கனவை நிறைவேற்றவே தங்களால் பெற்று வளர்க்கப் பட்ட அடிமைகளாகப் பார்க்கின்றனர் குழந்தைகளை.

பாவம் அந்தச் சின்னஞ்சிறு மொட்டுகள். பெற்றோரின் கனவுகளைத் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு தங்கள் இளமையையும் குறும்புகளையும் அறவே மறந்து, போட்டிக்காகக் கடுமையாக உழைத்து ஓரு பக்கமாக வளர்ச்சி அடையும் இக்காலக் குழந்தைகளைப் பார்க்கும் போது வியப்பு ஏற்படுவதில்லை. பரிதாபமே மிஞ்சுகிறது. இதனை வளர்ச்சி என்று எப்படி கூறமுடியும். வீக்கம் என்று வேண்டுமானால் கூற முடியும். வளரும் குழந்தைகளின் உடல் மன வளர்ச்சியை மெல்ல மெல்ல அரித்துக் கொண்டிருக்கும் கரையான்களாக மாறிக்கொண்டு இருக்கின்றன சின்னத்திரைப் போட்டி நிகழ்ச்சிகள்.

துள்ளித் திரியும் பருவத்தில் அந்தப் பிஞ்சுகளைப் பயிற்சி பயிற்சி என்று இப்படி வதைத்தால் அந்தக் குழந்தைகளுக்குக் கழிந்து போன பிள்ளைப் பருவம், விளையாட்டுப் பருவம் மீண்டு வருமா? மீண்டும் வருமா? அது மட்டுமல்ல. குழந்தைகள் பிஞ்சிலே பழுத்துவிடாதா?

நம் முன்னோர்கள் குழந்தைகளின் முன்பு எதைப் பேசலாமோ அதை மட்டும் பேசினார்கள். பெரிய பெரிய செய்திகளை (விஷயங்களை) குழந்தைகளின் முன் பேச மாட்டார்கள். இப்போதோ சின்னச் சின்னக் குழந்தைகள் பெரியபெரிய விஷயங்களைப் பேசுகின்றன.

 “கிருஷ்ணனுக்குப் பெண்களை ரொம்பப் பிடிக்கும். பெண்கள் மேல் அவ்வளவு ப்ரீத்தி. ஒரு யாமத்தில் முப்பது பெண்களைப் பார்த்தான். சாமக்கோழியை இடுப்பில் கட்டிக்கொண்டான். ஒவ்வொரு பெண்ணைப் பார்த்ததும் இடுப்பில் இருந்த சாமக்கோழியை ஒரு கிள்ளு கிள்ளுவான். அது கூவியதும், விடிஞ்சுடுத்து, நாழியாயிடுத்து. நா வரேன்னு சொல்லிவிட்டு கிளம்பி விடுவான். இப்படியே இரண்டரை மணி நேரத்தில் முப்பது பெண்களைப் பார்த்து விட்டு வீடு திரும்பினான். வீடு திரும்பி முன்னால் எப்படி படுத்திருந்தானோ அப்படியே வந்து நல்ல பிள்ளை மாதிரி படுத்துக்கொண்டான்” என்று மழலை மாறாத சுமார் எட்டு வயது முதியவன் பேசுகிறான். இதனை எண்பது வயதுள்ள பாலகர்கள் ரசிக்கிறார்கள். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காண நேர்ந்தது இந்த விபரீதத்தை.

இப்படி உரையாற்றும் குழந்தையின் குணத்தில் எந்த மாறுபாடும் வராதா? அவன்  கிருஷ்ணனாக மாறி கோபிகா ஸ்திரிகளைத் தேட மாட்டான் என்று என்ன நிச்சயம்? வளரும் குழந்தைச் சமுதாயத்தைச் சீரழிக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் அவசியமா என்பதை பெற்றோர்கள் முதலில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இது ஒருபுறம் என்றால் போட்டிகளில் தேர்வு பெறாத குழந்தைகள் அத்தனை பேரின் முன்பு அழுவது காணச் சகிக்காத காட்சி. அதைவிடவும் கொடுமையான சகிக்க முடியாத காட்சி அக்குழந்தையுடன் சேர்ந்து பெற்றோரும் அழுவது.

நாற்பது ஐம்பதுகளுக்கு மேல் எல்லோருக்கும் பாலைவனச் சோலையாக இருப்பது, மனத்தைக் குளிரச் செய்வது, சோர்ந்த இதயத்திற்குச் சுறுசுறுப்பைக் கொடுப்பது இளமைப் பருவத்தில் தாம் செய்த மொறு மொறு குறும்புகளை அசை போடுவதுதான். இந்தக் குழந்தைகள் தங்கள் நாற்பது ஐம்பதுகளில் எவற்றை அசை போடுவார்கள். அசைபோட வெற்றுக் கஞ்சிகள் மட்டும்தான் இருக்கும். மொறு மொறுவென்று கிருஸ்ப்பாக ஒன்றும் இருக்காதே....?

தன் குழந்தை கன்னம்மா விளையாடிக் கொண்டு இருக்கின்றாள். அவளைக் காண்கிறான் பாரதி. அவனுக்குள்  அவளை அள்ளி அணைக்க ஆவல் எழுகிறது. தழுவலாம் என்று நினைக்கும் போது குழந்தை உளவியல் அவனைத் தடுக்கிறது. விளையாடிக் கொண்டிருக்கும் மகளைத் தொந்தரவு செய்யாமல், அவளின் விளையாட்டுக் கலையாமல் அவளைத் தொடாமல் தூர இருந்தே தழுவி மகிழ்கிறான்.

ஆடித் திரிதல் கண்டால் உன்னைப் போய் ஆவி தழுவுதடி” என்கிறான். ஆடித் திரியும் போது தழுவினால் அது கூட அந்தக் குழந்தையின் மகிழ்ச்சியைக் கெடுத்தது போல ஆகும் என்பதால் தள்ளி இருந்து தன்னுடைய ஆவி அக்குழந்தையைத் தழுவுகிறது என்பான். குழந்தைகளின் விளையாட்டுப் பருவம் அவ்வளவு மகிழ்ச்சியானது. முக்கியமானது. அதனால்தான் பாரதி ஓடி விளையாடுவதை, ஆடித்திரிவதை அதிகமாகப் பாடுகிறான்.

“ஆளும் வளரனும் அறிவும் வளரனும்
அதுதாண்டா வளர்ச்சி”
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு
அதுவே நீ தரும் மகிழ்ச்சி”

என்பார் குழந்தைகளுக்காகவே பாட்டுக் கோட்டைக் கட்டிய பட்டுகோட்டை.
இந்தப் பாடலைக் கேட்ட மக்கள் எப்படி சிந்தித்தார்கள் என்று தெரியவில்லை. பட்டுக்கோட்டை குழந்தைகளிடம் குறையாத அக்கறை கொண்டவன். குழந்தைகளின் உடலும் உள்ளமும் சீராக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதைச் சொல்லவே இப்பாடலைப் பாடினான். அப்படிப் பாடியவன் முதலில், ஆள் வளர வேண்டும் என்கிறான்.. சுவர் இருந்தால்தானே சித்திரம். பிறகு அதற்கேற்றாற் போல் அறிவு வளர வேண்டும் என்று சிந்தித்தவன் அவன்.

இரண்டில் ஒன்றை விட்டு ஒன்று வளர்ந்தால் அதனை வளர்ச்சி என்று கூற முடியாது. ஆள் மட்டும் வளர்ந்து அறிவு வளராது இருப்பின் அது ஆடிசம் (மனநோய்) என்னும் நோயின் அறிகுறி. அறிவு மட்டும் வளர்ந்து ஆள் வளராது இருப்பின் அது உடல் நோயின் அறிகுறி. சின்னக் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி மிகவும் முக்கியம் அதனால்தான் முதலில் ‘ஆள் வளரவேண்டும்’ என்று உடல் வளர்ச்சியைப் பற்றிப் பாடியிருக்கிறான் பட்டுக்கோட்டை.

ஆனால் சின்னத்திரைப் போட்டிகளில் பங்கு பெறும் குழந்தைகளின் அம்மாக்கள் தங்கள் குழந்தையின் உடல் வளர்ச்சியைப் பொருட்படுத்துகிறார்களா என்பது வினாவாக உள்ளது. அவர்களின் திறமை வளர்ச்சியையே பெரிதாக நினைக்கின்றனர் என்பது கண்கூடு. ஏதோ ஜல்லிக்கட்டுக்கு மாட்டைத் தயார்படுத்துவது போலவே தங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்துகிறார்கள் குழந்தைகளைப் பற்றி எப்படி எப்படியெல்லாமோ கனவு காண்கின்றனர். அதில் தவறு இல்லை. ஆனால் அதற்காக அணு அணுவாக அக்குழந்தைகளை வதைப்பது தவறு. ஒரு குழந்தையின் திறமை என்பது அக்குழந்தையின் விருப்பம் சார்ந்ததாக இருக்கவேண்டும். மாறாக மூளைச்ச் சலவை செய்து அதை அவர்களுக்குள் திணிக்கக் கூடாது. 

பெற்றோர்களின் கனவைத் தம் கண்களில் காணும் குழந்தைகளுக்குச் சொந்தக் கனவுகளும் இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது பெற்றோர்கள். அவற்றை என்ன என்று அறிந்து அதன்படியும் குழந்தைகளை வளர்க்க முற்படுவது அறிவுடைமை. அப்போதுதான் பிற்காலத்தில் குழந்தைகளுக்குப் பழைய நினைவுகள் சுடாத வண்ணம் இருக்கும். குழந்தை மனம் கெடாத வண்ணம் இருக்கும்.


(இக்கட்டுரை இம்மாத (ஜுலை) பெண்மணி மாத இதழில் இடம்பெற்ற என் கட்டுரை.)


ஞாயிறு, 19 மே, 2013

ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை!….


           
      

                        கோடை கொளுத்திக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு விடுமுறை. பெற்றோர்களுக்கு விடுமுறை இல்லை அலுவலகம். குழந்தைகளின் பெற்றோர்கள் ஆசிரியப் பணியில் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு மற்ற நேரத்தில் எப்படியோ, இந்த இரண்டு மாதங்கள் மட்டும் வரப்பிரசாதம். ஆசிரியப் பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு விடுமுறை இருக்கும்போது தமக்கும் விடுமுறையாக இருப்பதால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு விடுமுறையைக் கழிக்க கிளம்பி விடுவார்கள்.

            மற்ற அலுவலர்கள் நிலை பெரிய பிரச்சனைதான். வெளியூர் செல்வது இருக்கட்டும். முக்கியமாகக் குழந்தைகளைக் கண்காணிக்க முடியாது. யார் வீட்டில் குழந்தைகளை விட்டுவிட்டு அலுவலகம் செல்வது என்று அலையும் அல்லல் சொல்லில் வடிக்க முடியாது. நடுத்தர வர்க்கத்தினர்க்குக் கோடைக்கால வெய்யில் மட்டுமல்ல வறுமையும் சேர்ந்து உடலையும் மனத்தையும் எரிக்கவே செய்கிறது.
           முடி உள்ள சீமாட்டி முன்னும் முடிவாள், பின்னும் முடிவாள் என்பது போல வசதி படைத்தவர்களாக இருந்தால் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு ஊட்டி, கொடைக்கானல் என்று கிளம்பி விடுவார்கள். அது மட்டுமல்ல ஜனவரி பிப்ரவரி மாதங்களில் துண்டுப் பிரசுரங்களில் பல வண்ணங்களில் பூக்கத் தொடங்கும் கோடை விடுமுறை வகுப்புகள் செல்வக் குழந்தைகளின் விடுமுறையில் பாதி நாட்களை எடுத்துக் கொள்ளும்.. ஆட்டம், பாட்டம், நீச்சல், கையெழுத்து, மொழி, கணிதம் என்று குழந்தைகள் பணத்தையும் காலத்தையும் மகிழ்ச்சியாகச் செலவு செய்வார்கள். வசதி இருப்பவர்களுக்கு எக்காலத்திலும் வாழ்வு சுகமாகிவிடுகிறது.
           வசதி இல்லாதவ்ர்கள் என்ன செய்வார்கள். இரண்டு சினிமாவுடன் குழந்தைகளின் கோடை விடுமுறையை முடித்து விடுகின்றனர். மற்ற நாட்கள் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியைப் பார்க்கச் சொல்லிவிட்டு அலுவலகம் செல்கிறார்கள்.  ஆனால் தொலைக்காட்சியெல்லாம் குழந்தைகளுக்கு அலுத்துப் போய் பல நாட்கள் ஆயிற்று. எப்போது கணினி வந்ததோ அப்போதே குழந்தைகளுக்குத் தொலைக்காட்சி புளித்துப் போய்விட்டது. இப்போதெல்லாம் கணினியில் விளையாடுவது பெருகிவிட்டது.
         
அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், கார் ரேஸ், பைக் ரேஸ் முதலிய கணினி விளையாட்டுகள் குழந்தைகளின் கவனத்தை அவற்றின் பக்கம் திருப்பிக்  கொண்டுள்ளன. இவற்றைத் தவிர Stratcgic games என்று அழைக்கப் படும் ஹாரிபார்டர், பிரின்ஸ் ஆஃப் பர்சியா போன்றவை சி.டிக்களில் வலம் வந்து குழந்தைகளைக் கும்மாளமிட வைத்துள்ளன. இது மட்டுமன்று கூகுல், முகப்புத்தகம், டிவிட்டர் முதலிய வலைத்தளங்கள் எண்ணற்ற புத்தம் புதிய விளையாட்டுகளை நாள்தோறும் அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கின்றன. பபுல் சாகா, பபுல் எபிக், பபுல் வேல்ட், பபுல் ஸ்நேக் சாகா, பிரமிட் சாகா போன்ற நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் குழந்தைகளின் மனத்தைக் கொள்ளை கொண்டுள்ளன.

          ஏற்கனவே நுண்ணோக்கி கொண்டு தேடினாலும் கண்ணாடி அணியாத குழந்தையைக் காண்பது அரிதாகிப் போய்விட்டது. இந்த விளையாட்டுகள் எல்லாம் குழந்தைகளின் மூளையைத் தூண்டி சிந்தனையை வளர்க்கின்றன என்பதில் உண்மை இருக்கிறது. மூளையை வளர்த்தால் மகிழ்ச்சி. ஆனால் இவ்விளையாட்டுகள் மூளையை அதிகமாக வளர்த்து சிந்தனைத் திறன் அனைத்தையும் 

விளையாட்டிலேயே முடக்கி விடுகின்றன என்பதே இன்றைய அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. விளையாட்டுகளில் மூளை முடங்கி விடுவது கூட அவ்வளவு அபாயம் இல்லை. இவ்விளையாட்டுகளை விளையாடும் போது மட்டுமல்ல விளையாடி முடித்து உறங்கும் போதும் மூளை விளையாட்டிலேயே இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்விளையாட்டுகளிலேயே காலத்தைக் கழி(ளி)க்கும் குழகுழந்தைகளை விசாரித்த போது அவையும் இக்கருத்தை ஒப்புக் கொள்கின்றன. மூளையை ஒட்டுமொத்தமாக இவ்விளையாட்டுகள் ஆக்கரமிப்பு செய்கின்றன என்பதே உண்மை.
          நினைவு, நினைவிலி என்னும் இரு நிலையிலும் மூளை விளையாட்டிலேயே இருப்பதால் குழந்தைகளுக்கு வலிப்பு நோய் (Epilepsy) வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. மூளை நரம்பில் இருக்கும் அணுக்கள் ஒரு வினாடிக்கு சுமார் 80 முறை துடிக்கும். இவை முன்னும் பின்னும் துடிப்பதால் எண்ணங்கள், நினைவுகள், உணர்வுகள் ஆகியவை உருவாகின்றன. இம்மூளை நரம்பின் அணுக்கள் சில வேளைகளின் விபரீதமாக வினாடிக்கு 500 வரை துடிக்கும். அணுக்களின் இப்படிப் பட்ட அதிக பட்ச துடிப்பால் மூளை முழுவதும் அல்லது மூளையின் ஒரு பகுதி பாதிக்கப் படுகிறது. உணர்வு ரீதியாக குழந்தை பாதிக்கப் படும்போது இந்நோய் வருகிறது. இந்நோய் வரும்போதும் குழந்தைகள் உணர்வு ரீதியாகப் பாதிக்கப் படுகின்றன. கணினி விளையாட்டு இவ்விரண்டுக்கும் காரணமாகி விடுகிறது.
              ஃபிட்ஸ் எனப்படும் இந்நோய் குழந்தை பிறப்பின்போது ஆயுதம் பயன்படுத்துவதால், மூளையில் இரத்தக் கட்டிகள் இருப்பதால், குறைந்தும் மிகுந்தும் கேட்கப் படும் ஒலிகளால், குறைந்தும் அதிகரித்தும் பார்க்கப்படும் பளிச்சிடும் ஒளிகளால் அதாவது தொலைக்காட்சியை வெளிச்சமின்றி பார்ப்பதால், அதிகப் படியான மனக்கவலையால், கால வரைமுறை அற்ற உணவுப் பழக்கத்தால், பெண்குழந்தைகளுக்குப் பூப்புக்காலத்தில் ஏற்படும் சில உடல்நலப் பிரச்சனைகளால் என்று பல காரணங்களால் வருகிறது. கணினியும் மெல்ல மெல்ல இந்நோயைக் குழந்தைகளுக்குத் தந்து கொண்டு இருக்கின்றது. குழந்தைகளின் பொழுதைக் குடிக்கும் கணினி மெல்ல மெல்ல அவர்களின் உடல் நலத்தையும் குடிக்கிறது.
“ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா”

              என்று அன்றே அறிவுரை கூறினான் பாரதி. அவன் தேசியக் கவி, சுதந்திரக் கவி என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவன் ஒரு குழந்தை நல மருத்துவனும்.  குழந்தைகளின் உடல், மன நலத்திற்கு எது தேவையோ அதைப் பாடியுள்ளான். இது போன்ற இயந்தரங்களுடன் விளையாடும் விளையாட்டுகள் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்ப்பது போல வளர்த்து வாழ்விழக்கச் செய்து விடும் என்பதை அறிந்தவன் அவன்.
                கணினி விளையாட்டில் ஒரு குழந்தைதான் விளையாட முடியும். வேறு ஒருவருடன் விளையாட முடியாது. வேண்டுமானால் கணினியில் ஒவ்வொரு விளையாட்டிலும் உடன் விளையாடுபவர்களைப் போல ஒரு உயிரற்ற உருவம் விளையாடும். இப்படியே கணினியைத் தான் மட்டுமே பயன் படுத்தி விளையாடிப் பழகிய குழந்தைகள் இன்னொரு குழந்தை விளையாட வந்து விட்டால் பாண்டியன் நெடுஞ்செழியன் கன்னி யுத்தம் செய்தது போல் இந்தக் குழந்தைகள் கணினி யுத்தம் புரிய தொடங்கி விடுகின்றனர். கூடி விளையாடும் பண்பும் கணினியால் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.
                  ஓடி விளையாடுவது குழந்தைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்பது பெற்றோர்கள் அறிந்ததே. கூடி விளையாடுவதால் நட்பு, அன்பு, பகிர்வு, ஒற்றுமை முதலிய நற்பண்புகள் வளர்வதை எவராலும் மறுக்க முடியாது.
                       பெற்றோர்களே உங்களுக்கு விடுமுறை இல்லாவிட்டால் என்ன? வெள்ளைப்பணம் கைகளில் இல்லாவிட்டால்தான் என்ன? வெளியூருக்குத்தான் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டுமா? பணக்காரர்களுக்குப் பாதாம் பருப்பு என்றால்  ஏழைக்கு என்று ஒரு பட்டானிப் பருப்பு கூடவா கிடைக்காமல் போய் விடும். அவர்கள் ஊட்டி, கொடைக்கானல் சென்றால் நீங்கள் அருகில் இருக்கும் பூங்காவுக்கு, கடற்கரைக்கு,, அழைத்துச் செல்லுங்கள். அடி, கடி பட்டால் பதில் சொல்ல வேண்டிய தைரியம் உங்களுக்கு இருந்தால், உங்கள் குழந்தைகளுடன். பக்கத்து வீட்டு குழந்தைகளையும் சேர்த்து அழைத்துச் செல்லுங்கள். கூடி விளையாட அனுமதியுங்கள். நீங்களும் உங்கள் குழந்தைகளின் விளையாட்டை நாள் தோறும் இரண்டு மணிநேரம் கண்டு மகிழுங்கள். கோடையை கொஞ்சமாவது இன்பமாக கழித்த புத்துணர்வு குழந்தைகளுக்குக் கிடைக்கும். ஏன்? உங்களுக்கும் கிடைக்கும். சும்மாவா சொன்னார்கள் ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்று. அதிலும் சுவை இருக்கத்தானே செய்கிறது!

(இக்கட்டுரை பெண்மணி மாத இதழ் மற்றும் வல்லமை மின்னிதழில் இடம்பெற்ற என் கட்டுரை.) 

திங்கள், 8 ஏப்ரல், 2013

பூந்தலைச் சிறு கோல்




“ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே; என்று தாய்க்கு உரிய கடமையையும் “சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே” என்று தந்தைக்கும் உரிய கடமையையும் தனித்தனியே உணர்த்தும் புறநானூற்றுப் பாடல். பெற்றோர் இக்கடன்களை நிறைவேற்றுகின்றனரா என்றால், கடனே என்று நிறைவேற்றுகின்றனரோ என்று ஐயமே எழுந்துள்ளது.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் அவனது செய்முறைத் தேர்வுக்கு முந்தைய தினம் மருத்துவ மனைக்கு வருகிறான். முகத்தில் அடிபட்டு இரத்தம் வடிகிறது. என்ன என்று கேட்டால், படி என்று சொன்னவுடன் புத்தகத்தைக் கையில் எடுக்காத குற்றத்திற்குக் கிடைத்த தண்டனை என்கிறான். கொடுத்தவர் அவனது தந்தை.
குழந்தைகளை அடிக்கக் கூடாது என்பது இக்காலத்தில் ஆசிரியர்களுக்கு மட்டுமே எழுதிய சட்டமாகிப் போனது. பெற்றோர்களுக்கு??? இப்போது அம்மாணவன் தந்தை என்றாலே வெறுக்கிறான். அவருக்காகவே “நான் நன்றாகத் தேர்வு எழுத மாட்டேன்” என்று வாய் திறந்து கூறுகிறான். அக்குழந்தையின் இந்தப் பிடிவாதக் குணத்திற்கு யார் பொறுப்பு? அன்பும் அரவணைப்பும் இல்லாத தாங்கள்தாம் என்பதைப் பெற்றோர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்?
இன்று பெருகி வரும் குழந்தைக் குற்றவாளிகளுக்குப்  பொறுப்பேற்க வேண்டியவர்கள் அவர்களின் பெற்றோர்களும் என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சின்னக் குழந்தைகள் வண்ண மலர்கள். ஆம் மலர்களைப் போலவே மென்மையானவர்கள். மலர்களின் பல வண்ணம் போலவே பல எண்ணம் கொண்டவர்கள். குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் இருக்கும். மலர்களின் மணத்தையோ குணத்தையோ மருந்தை அடிப்பதால் எப்படி மாற்ற முடியாதோ அப்படிதான் குழந்தைகளின் குணத்தை அடிப்பதால் மாற்ற முடியாது. அவர்களை அவர்களின் போக்கில் விடுத்து, அன்பு காட்டி அரவணைப்பதன் மூலம் மாற்ற முடியும்.
சற்றேறக் குறைய எட்டு மணி நேரம் விழிப்பில்; எட்டு மணி நேரம் உறக்கத்தில்; எட்டு மணி நேரம் பள்ளியில் என்று குழந்தைகளின் இருபத்து நான்கு மணி நேரம் பகிர்வு செய்யப்படுகிறது. ஆசிரியர்கள் குழந்தைகளின் இரண்டாம் தாய் என்றும் பெற்றோர் குழந்தைகளின் இரண்டாம் ஆசிரியர் என்றும் பொதுவாகக் கூறுவது வழக்கம். எட்டு மணி நேரம் ஒரு குழந்தையைப் பாதுகாத்துக் கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்குக் குழந்தைகளை அடிக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால் வீட்டில் அக்குழந்தையை எப்படி வேண்டுமானாலும் அடிக்க பெற்றோருக்கு உரிமை இருக்கிறது.
அதனால்தான், “அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்று கூறிக் கூறி அடிப்பது, அடித்து வளர்க்காத குழந்தையும், ஒடித்து வளர்க்காத முருங்கையும் நன்றாக வளராது”  என்று அடித்துக் கை கால்களை ஒடிப்பது, “அடியாத மாடு படியாது”  என்று மாட்டை அடிப்பது போல விளாசித் தள்ளுவது “அடிக்கிற கைதான் அணைக்கும்” என்று அன்பைக் காட்டும் சாக்கில் அடிப்பது “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்று முதுகை வளைத்து அடிப்பது “ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்” என்று கூறிப் பேயாக மாறிக் குழந்தைகளுக்குச் சூடு வைப்பது எல்லாம் ஒரு சாராரின் பழக்கமாகிப் போனது.
இவர்கள் குழந்தைகளை அடிப்பதற்கான காரணங்கள் என்று எடுத்துக் கொண்டால் ஒன்று மதிப்பெண், மற்றொன்று தன் குழந்தை சச்சினாக, சூப்பர் சிங்கராக, பில்கேட்சாக  ஆகவேண்டும் என்னும் இவர்களின் கனவு. இவை போன்ற பேராசை பெற்றோர் அவர்கள் விரும்பும் வகையில் குழந்தை, திறன் காட்டாது இருந்து விட்டால் பல வகையில் அவர்களுக்குத் துன்பம் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர். குழந்தைகளின் பண்பில் ஏற்படும் குறைபாடு பற்றி இவர்கள் கவலை கொள்வதே இல்லை.
மேற்கூறிய இவையெல்லாம் பழமொழிகளாக இருந்தாலும் நம் மூத்த தமிழ்க் குடிகள் குழந்தைகளை அடித்ததாகவோ, சிறார் குற்றவாளிகள் இருந்ததாகவோ, சிறார் சீர்திருத்தப் பள்ளிகள் (சிறார் சிறைச்சாலைகள்) இருந்ததாகவோ பதிவுகள் எதுவும் தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் குழந்தைகளை அடித்ததாகக் கூட பதிவுகள் இல்லை என்றே சொல்லலாம்.  குழந்தைகள் எவ்வளவு சேட்டைகள் செய்தாலும் அடித்ததாகவோ, சூடு போட்டதாகவோ, வீட்டை விட்டுத் துரத்தியதாகவோ, சாட்சியங்கள் நம் பண்டைய இலக்கியங்களில் இல்லை என்றே கூறலாம்.
இது எதனைக் காட்டுகிறது? அவர்கள் குழந்தை வளர்ப்பில் கை தேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். ஆடல், பாடல், கதை என்று அவர்களை மகிழ வைத்து அதனூடாகப் பண்பை ஊட்டி வளர்த்துள்ளனர்.
பால் மணம் மாறாப் பச்சிளம் பருவத்தில் பாலைப் புகட்டியது போலவே நற்பண்பைப் புகட்டுவதற்குத் தாலாட்டுப் பாடினர். தாலாட்டில் வீரத்தையும், உறவு முறைகளையும், பண்பாட்டையும், ஒழுக்கத்தையும் பாடல் வாயிலாகப் புகட்டியிருக்கின்றனர்.
அதே போல சற்று வளர்ந்த குழந்தைகளுக்குப் பெரியவர்கள் இரவில் கதைகளைக் கூறி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்திருக்கின்றனர். இன்னும் வளர்ந்து விட்டால் விளையாட்டுகளின் வழியாக நன்னெறியையும் கல்வியையும் கற்றுக்கொடுத்தனர்.
இன்று இது போலச் செய்கின்றார்களா? செய்வதற்கு நேரமிருக்கிறதா? நேரமிருந்தாலும் பெற்றோர்க்குத் தம் குழந்தைகளுக்குக் கதை சொல்ல மனம் இருக்கிறதா?  ஒரு வேளை நேரம், மனம் இரண்டும் இருந்தாலும் கதைகளுக்கு அவர்கள் எங்கு போவார்கள்? கதை சொல்ல வேண்டும் என்றால் தொலைக்காட்சித் தொடர்களைச் சொல்லும் நிலையில் அல்லவா அவர்கள் இருக்கின்றனர்.
காலையில் எழுந்தவுடன் கிரிக்கெட் விளையாட்டுக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்க்கு மாலை நேரம் அந்தச் சின்னஞ்சிறு பிஞ்சுகளுடன் அமர்ந்து மகிழ்வாகப் பேசி, நற்பண்புகளைக் கற்றுக்கொடுக்க முடிகிறதா? பொருளாதாரச் சிக்கல் ஒருபுறம். பேராசை மறுபுறம். போதுமென்ற மனமில்லாததால் பொருள் தேடி அல்லறும் நிலையில் பெரும்பாலும் இன்றைய பெற்றோர்கள் இருக்கின்றனர். அந்தப் பொருளாசைக்கும் கல்வி, கலை என்று குழந்தைகளையே காரணமாகக் காட்டுகின்றனர். அவர்களின் பொருள் தேடல், அதன் காரணமான வேலைச்சுமை, நேரமின்மை, அதனால் ஏற்படும் மனச்சோர்வு, கோபம் எல்லாவற்றுக்கும் குழந்தைகள் சுமைதாங்கிகளாகி விடுவது தவிர்க்க இயலாததாகிப் போய்விடுகிறது.
துள்ளித் திரியும் பருவத்தில் பெற்றோரது நேரமின்மையால் சிறைக்கைதிகள் போல தொலைக்காட்சி முன்போ அல்லது ஒரு தனிவகுப்பிலோ (டியூஷன்) அவர்கள் அடைக்கப் படுவதும் தவிர்க்க இயலாததாகிப் போகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் குழந்தைகள் அப்பா அம்மாவைக் கண்டதும் ஏதோ சாக்கு வைத்துக் கொண்டு அழுது அடம் பிடிப்பதை வாடிக்கையாகக் கொண்டு விடுகின்றன. குழந்தைகள் அடம் பிடித்தவுடன் பொறுக்க முடியாத பெற்றோர் அடித்து விடுகின்றனர். நாள் ஆக ஆக அடிப்பார்கள். அடித்து விட்டுப் போகட்டும். அடிதானே, நாம் கேட்டது கிடைத்தால் போதும் என்னும் எண்ணம் குழந்தைகளிடம் வந்துவிடுகின்றது. இப்படி காரணம் அறியாமல் தொடங்கும் அடம் பெரியவர்கள் ஆன போதும் தொடர்கிறது.
சிறு வயதில் தாய் (செவிலி) பொன்னால் ஆன கிண்ணத்தில் பால் சோற்றை ஏந்திக் கொண்டு குழந்தைக்கு ஊட்டுகிறாள். அந்தக் குழந்தை உண்ண மறுத்து கால் கொலுசு ஒலிக்க இங்குமங்கும் ஓடி ஒளிந்து கொள்கிறது.. மூச்சிறைக்கத் தோட்டத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அக்குழந்தைக்கே மூச்சிறைக்கும் போது அத்தாய்க்கு எப்படி இருக்கும். பொறுமையாக அத்தாய் அக்குழந்தையின் பின்னால் ஓடுகிறாள். அப்போதும் உண்ண மறுக்கும் குழந்தையை அவள் அடிக்கவில்லை. மாறாக அடிப்பதாக நடிக்கிறாள். அதுவும் எப்படி? பூவால் சுற்றப்பட்ட ஒரு கோலைக் கையால் ஓங்கிக் காட்டி. ஆம் ஒரு வேளை அக்கோல் அக்குழந்தையின் மேல் பட்டு விட்டால் வலித்து விடுமே என்பதால் அக்கோலைப் பூவால் சுற்றியிருந்தாளாம். இதைச் செய்தவள் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயல்ல. செவிலித்தாய். இக்கால வழக்கில் கூறவேண்டுமானால் வேலைக்காரப் பெண்மணி.
“புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்,
‘உண்’ என்று ஓக்குபு பிழைப்ப, தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,
அரி நரைக் கூந்தற் செம் முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய, பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி”
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அவள். சொல் பேச்சு கேளாத அவள் திருமணம் ஆகித் தன் கணவனது இல்லத்தில் ஒருவேளை உண்டு ஒரு வேளை பட்டினியாக இருக்க வேண்டிய அளவு வறுமையில் வாழ்கிறாள். இருந்த போதும் வழக்கிட்டு விவாகரத்து கோராமல் இல்லறத்துக்கு இனிமை சேர்க்கிறாள். பெற்றோர் கொடுத்த செல்வத்தைக் கூட வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள் என்கிறது இப்பாடல். இந்தப் பண்பு அடித்து வளர்த்தா வந்தது அப்பெண்ணுக்கு? மென்மையான அன்பில் விளைவது நற்பண்பு. அதை மட்டுமே குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்ப் பார்க்கின்றனர்.
வாழ்க்கையின் ஒவ்வொரு புரிதலையும்  குழந்தைகள்  பெற்றோரிடமிருந்து தான் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர்தான் இவர்களின் முதல் வழி காட்டியாய் இருக்கின்றனர்..
இது வளமாக வாழ்ந்த ஒரு குடும்பத்தில் குழந்தையை அடிக்காமல் வளர்த்த காட்சி. வறுமையில் வாடும் தாய் மட்டும் என்ன அடித்தா வளர்த்தாள்? பசியால் துடித்து அழுது அடம் பிடிக்கும் குழந்தையை மறப்புலி வரும் என்று சொல்லிப் பார்க்கிறாள். நிலவைக்காட்டுகிறாள்; உன் தந்தை முகம் எப்படி இருக்கும் என்று காட்டு என்கிறாள். மனம் நொந்த அவள் அவ்வருத்தத்தைக் குழந்தையிடம் காட்டாமல் இப்படியெல்லாம் விளையாட்டுக் காட்டுகிறாள்.
அடித்து வளர்த்தால் குழந்தைகள் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டு எதிர்காலத்தில் வன்முறையாளர்களாக மாற வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மன நல மருத்துவர்கள்.
பொதுவாக நன்மை தீமைகளைக் கூறி வளர்ப்பது மிகச் சிறந்த குழந்தை வளர்ப்பு முறை. குழந்தைகளைக் கண்டிப்பது வேறு தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது குழந்தைகள் தவறு செய்யும் முன்பே தவறைச் செய்தவர்களுக்கு இறைவனால் சமுதாயத்தால், சட்டத்தால் கிடைக்கும் தண்டனையைக் கூறி வளர்த்தல் நல்லது.
தவறு செய்யும் குழந்தையைக் கண்டியுங்கள். அது பெற்றோர்களின் கடமை. முதலில் குழந்தை அந்தத் தவறைத் தெரியாமல் செய்கிறதா? தெரிந்து செய்கிறதா? என்பதை அறிதல் மிக மிக அவசியம். அதன் தீய விளைவை எடுத்துக் கூறுதல் நல்லது. அப்போதும் குழந்தையை அச்சுறுத்துதல் நல்லதல்ல. அன்பாகக் கூறுதல் நல்லது. தெரிந்து செய்யும் தவறுக்குக் கண்டிப்பு அவசியம். எப்படி? வன்முறைகளற்ற கண்டிப்பு அவசியம். வன்முறை என்பதும் உடலளவில் மட்டுமல்ல. குழந்தைக்கு மன அளவிலும் வன்முறயற்ற கண்டிப்பு இக்காலத்தில் தேவை என்பதையும் பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். அடிக்கத் தொடங்கும் போது மனச்சிதைவு அடையும் குழந்தை பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களின் எண்ணத்திற்கு எதிர்மறையான குற்றங்களைச் செய்ய வேண்டும் என்னும் எண்ணத்தைக் கைகொள்ள வாய்ப்பாக அமைந்து விடும். எனவே பெற்றோர்களே அன்பும் அரவணைப்பும் உதவுவது போல அடி ஒருபோதும் உதவாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அன்பால் குழந்தை உள்ளத்தை நிறையுங்கள்! அறம் வழுவாத மக்கள் சமுதாயத்தை அமையுங்கள்!

இக்கட்டுரை வல்லமை மின்னிதழில் இடம்பெற்றது