“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 31 ஆகஸ்ட், 2011

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்



http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcT7OnFQuuq-EGtyncZv_GmTElkNrrowD1TPfhhBSMqE1uyzJTuZ
        
                  'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது பழமொழி. 'அகத்தின் அழகு நகத்தில் தெரியும்' இது புதுமொழி. ஆம் ஒருவரின் குணம் அவரின் நகத்திலும் பளிச்செனத் தெரிந்துவிடும். எப்படி என்று கேட்கின்றீர்களா? 
http://nailartphoto.com/uploads/posts/2011-08/thumbs/1313414744_beautiful-nails-pictures.jpg
      சுத்தமாக இருப்பவர்களின் நகமும் சுத்தமாக இருக்கும். தூய்மையற்றவர்களின் நகமும் அவ்வப்போது வெட்டப்படாது அழுக்கு மண்டி காணப்படும். எப்போதும் அதிக கோபத்துடனும் கொந்தளிப்புடனும் கவலையுடனும் இருப்பவர்களின் விரல்களில் நகம் இருக்காது. நகத்திற்குப் பதிலாக சிவப்பேறிய சதையே காணப்பெறும். கோபத்தை மெல்லுவதைப் போல நகத்தைக் கடித்து மென்று துப்பி விடுவார்கள். அமைதியானவர்களின் விரல் நகங்கள் அளவோடு சீராக்கியதாக இருக்கும். அழகியல் உணர்வு உள்ளவர்களின் நகங்கள் நேர்த்தியாக திருத்தப்பெற்று அதில் இளம் வண்ணங்கள் பூசப்பெற்று இருக்கும். சற்று ஆடம்பரமானவர்களின் நகங்கள் பொருத்தமா பொருத்தமில்லையா என்ற கவலையில்லாது கண்களைக் கூசும் பளிச் வண்ணங்களில் மின்னும். 


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcS-X80pTkZ6ZjU-U4A02EtqWniyUeO6v1QaIODAOER-P5Rdt9dReA
கட்டுப்பாடற்ற மனம் கொண்டவர்களின் நகங்கள் இன்னும் ஒரு படி மேலே போய் பிறரை அச்சுறுத்தும் அளவு கூராக்கிய கத்தி போல நீண்டு, பல வண்ணங்களுடனும் பூ, காய், கனி, பறவை என்று பல படங்களுடனும் மின்னும். இப்போது கூறுங்கள். இந்த புது மொழி பொருத்தம் தானே?
 http://de.acidcow.com/pics/20091224/beautiful_nails_11.jpg
      நகங்களை வைத்தே ஒருவரின் உடல் ஆரோக்கியத்தைக் கணித்து விடலாம். சாம்பல் படிந்த வெள்ளைநிற புள்ளிகள் உளள நகங்கள் உலோகம் மற்றும் உப்புச்சத்து பற்றாக்குறையையும், வெளுத்துப்போன நகங்கள் ரத்த சோகையையும், கருத்த நகங்கள் கல்லீரல் மற்றும் நுரையீரல் பலஹீனத்தையும், நீல நிற நகங்கள் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவையும் ஆஸ்துமா, இதயநோய்களின் அறிகுறியையும் சிவந்து காணப்பட்டால் மாரடைப்பின் அறிகுறியையும். கீறல் அல்லது குழிகள் விழுந்து காணப்பட்டால் சரும நோய்களின் அறிகுறியையும். வைட்டமின் குறைபாட்டையும், சொத்தையான நகங்கள் ஒவ்வாமை மற்றும் தோல் நோய்களையும் உள்நோக்கி குழிந்திருந்தால் இரும்புச்சத்து, விட்டமின் பி-12 பற்றாக்குறையையும் காட்டுவதாக மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

http://cdn.theback-benchers.com/wp-content/uploads/tdomf/2108/Creative-Nail-Designs.jpg 
      . அதுமட்டுமல்ல. நகங்களால் ஒருவரின் பழக்க வழக்கங்களும் அம்பலத்திற்கு வந்து விடும். புகைப் பழக்கம் உள்ளவர்களின் நகம் பழுப்பாகவும் மதுப்பழக்கம் உள்ளவர்களின் நகம் கருப்பாகவும் தோன்றி அவர்களின் அப்பழக்கத்தைக் காட்டிக் கொடுத்து விடும் ஆரோக்கியமான நகங்கள் என்பது இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ3Sn8R4Bhq1ncdmDWbdLRytGVeGIJQ1W7kO_3XpY2raumFLXG1
      . நகத்தை வைத்து ஒருவரின் வயதைக் கண்டுபிடித்து விடலாம். நம் வயதைக் காட்டும் கண்ணாடியாகச் செயல்படும் நகத்தை அவ்வப்போது கவணித்தால் சற்று வயதைக் குறைத்துக் காட்டும். இல்லாவிட்டால் வயதைக் கூட்டிக் காட்டி நம்மை முதியோர் பட்டியலில் இணைத்து விடும். அதனால் நகத்தை அழகாக பராமரித்து வைத்துக்கொண்டால் வயதைக் குறைவாகக் காட்டிக்கொள்ளலாம்.
 http://de.acidcow.com/pics/20091224/beautiful_nails_06.jpg
      நகம் கடிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கின்றது. சிலர் எப்போதாவது மனக்கவலை ஏற்படும் போது நகம் கடிப்பர். சிலர் எப்போதும் நகத்தைத் தேடித் தேடி கடிப்பர். இவர்கள் கால் நகங்களைக்கூட விட்டு வைக்கமாட்டார்கள். அசந்தால் அடுத்த விடுக்காரர் நகத்தையும் கடிக்கப் புறப்பட்டுவிடுவார்கள். இவ்வாறு நகம் கடிக்கும் பழக்கம் இருப்பது கூட நரம்பு சம்பந்தமான பிரச்சினையாக இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். இதிலும் ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி ஒன்று தற்காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது தன்னம்பிக்கை அதிகம் இல்லாதவர்களே நகம் கடிப்பார்கள் என்ற பொதுவான கருத்து மாறி எப்படியேனும் கடுமையாக முயற்சி செய்து தாம் எடுக்கும் செயலை முடிக்கும் மன வலிமையும் உடல் வலிமையும் இருப்பவர்களே அதிகமாக நகங்களைக் கடிக்கிறார்கள் என்கின்றது தற்போதைய புதிய ஆய்வு. 
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQwZihkAokGLoVEhUFitWvQcqH2Y9_UpsqxqGc3mfjW_1yqMM3Iug
      விரல் நுனிகளில் ஏராளமான உணர் நரம்பு கூட்டங்கள் பின்னிப் பிணைந்துள்ளன. விரல் நுனிகளின் நரம்புக் கூட்டங்களைப் பாதுகாப்பதற்கு இறைவனால் வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவசம்தான் நகங்கள். நகங்களைப் பாதுகாப்பாக வைத்தால்தான் விரல்களையும் சக்தி குறையாமல் பாதுகாக்க முடியும்.
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQb1U4UMiDEUVb7rX7JhU9G32D4tXP5ibjfhLuML3CTbwZblXn9DQ
      நகம் கெரட்டின் என்றழைக்கப்பெறும் நகமியம் என்னும் புரதப் பொருளால் ஆன அழகிய பகுதி. சத்தமில்லாமல் நாளும் வளர்ந்து கொண்டிருக்கும் இதனை உகிர் என்றும் கூறுவர். நகங்கள் சுண்ணம்பு, பாஸ்பரஸ், புரதச் செல்களின் கலவையாகும். நாம் அதிகமாக உட்கொள்ளும் உலோகங்களும் நச்சுப் பொருள்களும்கூட உடலால் வெளியேற்றப்பட்டு, நகத்தால் சேமித்து வைக்கப் படுகின்றன. விரல் நுனிகளை வெப்பத்திலிருந்தும், குளிர்ச்சியிலிருந்தும் பாதுகாப்பவை இவையே. 
http://nailartphoto.com/uploads/posts/2011-08/thumbs/1313414772_beautiful-nails-pictures-1.jpg
      சிலருக்கு நகங்கள் அடிக்கடி உடைந்து போகும். இதற்குக் காரணம் அன்றாடம் பயன் பயன்படுத்தும் சோப்பாக இருக்கலாம். அல்லது போதிய நீர்ச்சத்து இன்மையாலும் நகம் உடைதல் ஏற்படலாம்.
http://nailartphoto.com/uploads/posts/2011-08/thumbs/1313414760_beautiful-nails-pictures-3.jpg
      நகச்சுத்து எனப்படும் நகச்சொத்தை ஏற்படக்காரணம் நகக்கண்களில் அழுக்கு சேர்வதால் என்றால் பொருந்தும். முக்கியமாக நகத்தின் உயிராக இருக்கக் கூடிய ஓரப்பகுதி நகங்களைக் கடித்து இரத்தக் களறி ஆக்குவதாலும் புண் ஏற்படும். நகப்படுகையில் கசியும் இரத்தம் நகத்தட்டுக்கு அடியில் அதாவது நகத்தின் உட்புறச் சதையில் தங்கி விடும். இது நாளடைவில் சீழ் பிடித்து நகச்சொத்தையாக மாறிவிடுகின்றது. 
http://nailartphoto.com/uploads/posts/2011-08/thumbs/1313414771_beautiful-nails-pictures-2.jpg
      மருதாணி இலைகளை நீர்க் விட்டு அரைத்து நகத்தைச் சுற்றி தினமும் தடவி வந்தால் நகச்சொத்தை மாறும். வேப்பிலையும் மஞ்சள்துண்டையும் சேர்த்து அரைத்துப் பூசி வந்தாலும் நகச்சுத்து குணமாகும்.
      நகச்சுத்து நீண்ட நாட்களாகத் தொடர் தொந்தரவு கொடுப்பது, திடீர் தொந்தரவு கொடுப்பது என்று இரண்டு வகை விருந்தாளிகளாகச் செயல் படுகிறது இந்த திடீர் நகச்சுத்து நகக்கண்களில் அழுக்கு சேர்தல், நகத்தை வேரோடு கடித்துத் துப்புதல், ஏதேனும் காயம் ஏற்படுவது ஆகிய, நாம் நகத்திற்குத் தரும் தொந்தரவினால் ஏற்படுகின்றது.. இதற்கு முதலில் கைவைத்தியமாக வெந்நீரில் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நகங்களை நன்றாகக் கழுவ வேண்டும். 
http://nailartphoto.com/uploads/posts/2011-08/thumbs/1313414784_beautiful-nails-pictures-6.jpg
      நாட்பட்ட நகச்சுற்று (Chronic paronychia) இது சிறிது சிறிதாகத் தோன்றி, நீண்ட நாட்களுக்கு நீடிக்கும் வகையாகும். பொதுவாக அடிக்கடி கையை நனைக்க வேண்டிய தேவையுள்ள பண்ணைத் தொழிலாளர்கள், மீனவர்கள், சமையல் வேலை செய்பவர்களில் இத்தகைய நாட்பட்ட நகச்சுற்று அதிகம் ஏற்படுகிறது. எக்ஸிமா, சொறியாசிஸ் நீரிழிவு போன்ற நோய் உள்ளவர்களிலும் இவ்வாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
http://nailartphoto.com/uploads/posts/2011-08/thumbs/1313414831_beautiful-nails-pictures-15.jpg
      ஒரு விரலின் நகத்தைச் சுற்றி மட்டுமின்றிப் பல நகங்களுக்கும் பரவக் கூடும். ஆயினும் திடீரேன ஏற்படும் நகச்சுற்று போல கடுமையான வேதனையைத் தருவதில்லை என்பதால் பலரும் அலட்சியம் செய்துவிடுகின்றனர்.. இடையிடையே சீழ் பிடித்து ஆறிவிடும். அவ்வாறு நீண்ட காலம் நீடிப்பதால் நகமானது கீழுள்ள நகப்படுக்கையில் பிளந்து விடுவதும் உண்டு. அத்துடன் நகத்தின் மேற்பகுதியில் தடிப்புகள் தோன்றி அது தன் இயல்பான வழுவழுப்பான அழகிய தோற்றத்தை இழந்துவிடும். நகத்தின் நிறமும் மஞ்சள் அல்லது சாம்பல் பூத்ததாக மாறிவிடும். அவ்வாறு ஏற்பட்டால் நகம் மீண்டும் வளர்ந்து தனது இயல்பான தோற்றத்தைப் பெற ஒரு வருடக்கணக்காகலாம். கவனிக்காமல் விட்டு விட்டால் இந்நகச்சுத்து சரியாகாமலே விரல்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
http://nailartphoto.com/uploads/posts/2011-08/thumbs/1313414726_beautiful-nails-pictures-9.jpg
      இதுக்குக் கை வைத்தியம் ஒன்று உள்ளது. அது சின்ன வெங்காயம் நானகைந்து, மஞ்சள் பொடி சிறிதளவு, கஸ்தூரி மஞ்சள் பொடி சிறிதளவு, வசம்புப் பொடி சிறிதளவு, சுக்குப்பொடி சிறிதளவு, முருங்கை இலை சிறிதளாவ எல்லாவற்றையும் ஒன்றாக வைத்து அரைத்து சிறிதளவு எலுமிச்சைச் சாற்றுடன் கலந்து நகச்சுத்தைச் சுத்திப் போட்டு வந்தால் ஒரு வாரம் அல்லது இரு வாரங்களில் குணமாகும்
http://nailartphoto.com/uploads/posts/2011-08/thumbs/1313414760_beautiful-nails-pictures-3.jpg
      இதற்கு முதற்கட்ட நடவடிக்கையாக் கைகளை அதிக நேரம் நீரில் ஊற வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அடுத்ததாக கையுறை அணிந்து கொண்டு வேலைகளைச் செய்வதால் விரலுக்கும் நலம். நகச்சுத்தினால் ஏற்பட்ட தொற்றுகள் பரவாமல் காக்கவும் உதவும். ஏனெனில் இவ்வகை நகச்சுத்து பரவும் இயல்புடையது.. 
http://thumbs.dreamstime.com/thumbsmall_507/127482970892h1uP.jpg
      இப்ப என்ன சொல்ல வரேன்னா.. அது இது எதுவாக இருந்தாலும் அதுதான்ங்க நகச்சுத்து எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியது நகத்தைச் சுற்றியுள்ள சருமத்தையும் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து நகம், விரல் நுனிகளில் சிறு காயம் கூட ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கூடிய வரை நீர் வேலையைத் தவிர்த்து கைகளை உலர்ந்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். முக்கியமா சுத்தப்படுத்தறேன் பேர்வழி என்று டெட்டால் போன்றவற்றைப் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.
http://fashion.nikadon.com/wp-content/uploads/2011/02/Long-Nail-Art-Design-Picture-in-2011.jpg
      மேலும் மேலும் நகம் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். வளர வளர அவற்றை வெட்டிக்கொண்டே தான் இருக்க வேண்டும். 

  மிக மிக முக்கியம் ஒருவர் பயன் படுத்திய நகவெட்டியை குறிப்பாக நகச்சுத்தி உள்ளவர்கள் பயன் படுத்திய நகவேட்டியைப் பிறர் பயன் படுத்துக்கூடாது. ஒருவரே பயன் படுத்தும் போதும் ஒவ்வொரு முறையும் நகவெட்டியை கொதிக்கும் வெந்நீரில் போட்டு கழுவியே பயன்படுத்த வேண்டும். 
http://fashion.nikadon.com/wp-content/uploads/2011/02/Nail-Photo-273x300.jpg
      நகப் பாதுகாப்புக்கு அழகு நிலையங்களில் மெனிக்யூர் செய்வது வழக்கம். இதற்கு அழகு நிலையம் செல்ல வேண்டுவதில்லை. வீட்டிலேயே அகலமான பாத்திரத்தில் சூடான தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் சிறிதளவு உப்புடன் ஒரு எழுமிச்சம் பழத்தைப் பிழிந்து அதில் இரு கைகளையும் ஊர வைக்க வேண்டும். மெனிக்யூர் கிட்டில் இருக்கும் Com blade அல்லது நெயில் கட்டரில் கொக்கி போல ஒரு பிளேடு இருக்கும். அதனால் நக கண்களில் படிந்துள்ள அழுக்கை நீக்க வேண்டும். பல் துலக்கும் பிரஷினால் மெதுவாக நக இடுக்குகளில் தேய்த்துக் கழுவினாலும் போதுமானது. எளிமையான மெனிக்யூர் முடிந்து விடும். பாலை மிதமாகச் சூடாக்கி அதில் பஞ்சை நனைத்து அதனால் நகங்களைச் சுத்தப் படுத்தினால் நகம் பால்போல வெண்மையாக மின்னும். .இப்போது கைவிரல்களை நன்றாகத் துடைத்துவிட்டு ஆலிவ் எண்ணெயைச் சிறிதளவு தடவி மென்மையாக மசாஜ் செய்து விடுங்கள். எல்லாம். முடிந்தது. 
http://fashion.nikadon.com/wp-content/uploads/2011/02/Nails-Design-For-Dhulan-150x150.jpg
      வழக்கம் போல் ஒரு சுவையான செய்தியும் உள்ளது. விளக்கு வைத்த பின் நகம் வெட்டுவது, வெட்டிய நகத்தைக் கீழே போடுவது, எல்லாம் தரித்திரம் என்று நம்மவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். நியுசிலாந்திலோ நகத்தை வெட்டி ஏலத்தில் விட்டு தம் தரித்தரத்தைப் போக்கி, செல்வம் சேர்க்கும் விந்தையும் நிகழ்ந்து கொண்டி -ருக்கின்றது. ஆமாம் நம்பினால் நம்புங்கள்.. இல்லா விட்டால்....விடுங்கள். ஒருவரின் நகம் 350 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளதாம். நகத்தை வாங்கி என்னதான் செய்தார்களோ அது தெரியாது. ஒரு வேளை ஊருகாய போட்டிருப்பார்களோ என்னவோ!!! அதுவும் உணவு வங்கிக்கு நிதி திரட்டியவர்கள் அதற்காக ஏலம் விட்ட உயர்தர பொருள் நகம்.. ஒரு வேளை நம்மவர்கள் சினிமா நடிகை நடிகர்கள் பயன்படுத்திய பொருட்கள் என்றால் என்ன விலை கொடுத்தேனும் அதனை வாங்குவது போல இருக்கலாம். 
      சரி குழந்தைகள் ஏன் நகம் கடிக்கின்றன? அடுத்த இதழில் பார்க்கலாமா?
                                                                                                          (நகம் வளரும்)

நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல். 

சனி, 27 ஆகஸ்ட், 2011

நகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல்.


நூல் மதிப்புரை
நூல் பெயர்: மருத்துவம் புதிது
ஆசிரியர்: டாக்டர் வஸந்த் செந்தில்
பக்கங்கள்: 112
விலை: ரூபாய் 40
பதிப்பகம்: குமரன் பதிப்பகம்
1, முத்து கிருஷ்ணன் தெரு
   தி நகர். சென்னை – 600ம் 017.

               
        ஆரம்பமே தற்சமயம் மருத்துவ உலகில் நடந்த புதிய விஷயங்களை, கடினமின்றி, சுலபமாகப் புரிய வைப்பதற்காக, மிக எளிய தமிழில் முயற்சி செய்திருக்கிறேன். படிக்கும்போது நீங்கள் இந்தப் பக்கங்களில் இருந்து தப்பி விடாமல் இருப்பறகாக கூடவே சில சில ஜிக் – ஜிக் வேலைகளும் அங்கங்கே இருக்கிறது என்று தொடங்கும் இந்நூலில் முப்பது மருத்துவ கட்டுரைகள் அமைந்துள்ளன..

                தலைப்புகள்: கசப்பு மாத்திரைகளைத் தேன் தடவித் தந்ததுடன், பார்வையைச் சுண்டி இழுக்கும் கலர் கலர் மிட்டாய்களாய் தலைப்பை மின்னச் செய்துள்ளமை கட்டுரைக்குள் நம்மை அழைத்துச் செல்லும் டாக்டர் வஸந்த் செந்திலின் பலே சாமர்த்தியம். சான்றுக்குச் சில தலைப்புகள்.. ஒரு உ போதும், உங்களிடம் எக்ஸ் இருக்கிறதா?, கண்டு கொல்வேன் கண்டு கொல்வேன், கொழுப்புக் குழப்பங்கள், காண்டம் கண்டம், ஆண் குழந்தை பிறக்க வேண்டுமா?, அலியின் எலி, நாய்கள் ஜாக்கிரதை (படித்துச் சிரித்ததில் மருத்துவச் செலவு.. வயிற்று வலிக்கு) நெய்தோசையும் நண்டுக்கல் பற்பமும். தலைப்பைப் பார்த்து வேறு என்ன கட்டுரைகளோ என்று எண்ண வேண்டாம். இவையெல்லாம் சத்தியமாக மருத்துவ கட்டுரைகளே..ஆம் இணையதளத்தில் (அம்பலம் இணையம்) டாக்டர் வஸந்த் செந்திலால் பதிக்கப் பட்டவை இவை.

                கட்டுரை செய்திகள்: ”நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்ற திருவள்ளுவரின் வாக்குக்குப் பொருத்தமாக ஒவ்வொரு கட்டுரைகளும் நோய், நோய்க்குக் காரணம், தீர்க்கும் மருத்துவம் என்ற நிலையில் தனித்தனி தலைப்பில் கூடுதல் ஜிக் ஜிக் வேலைகளுடன் சுவையாக அளித்துள்ள பாங்கே கட்டுரைகளை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது. இதற்கும் சான்று ஒன்று தருகிறேன்.. ”உங்களுக்கு ரேபிஸ் இருக்கிறதோ இல்லையோ நாய்களிடம் பின்பற்ற வேண்டிய குறுப்புகளைத் தருகிறேன். 1. இடுப்பு உயரத்திற்கு நாய்களை வளர்த்து கட்டி வைக்காமல் வீட்டில் உலா வரச் செய்யாதீர்கள். காரணம் போஸ்ட் மேன் முதல் புடலங்காய் விற்கிற பெண் வரை வாசலுக்குள் வரவேண்டிய கட்டாயம் சில அந்நியர்களுக்கு உண்டு. தந்தி என்று அவர் சொல்வதற்கு முன் கொந்தி விடும்  ”பிங்கி..கீப் கொய்ட்” என்று நீங்கள் சொல்வதற்குள் வேலை முடிந்திருக்கும். 2. டோனி... கோ.... காட்ச் என்று அதை சும்மா விரட்டாதிர்கள். அது எதையும் கைகளால் காட்ச் பிடிக்காது. வாயால் தான் காட்ச் பிடிக்கும். அதற்கு பெயர் காட்ச் அல்ல. கடி. என்று அறிவுரைகள் தொடரும். 
        மற்றொரு சிறப்பு கட்டுரைகளின் முடிவில் உங்களுக்கு ஒர் ஜோக் சொல்லுகிறேன் என்று கூறி ஒரு நகைச்சுவையோடு (ஜோக் சொல்லி) ஒவ்வொரு கட்டுரையையும் முடித்து இருக்கிறார் டாக்டர் வஸந்த். ஒரு கட்டுரையை மட்டும் இல்லைங்க, இந்த நூலை கையில் எடுத்தால் தப்பித்தவறிகூட மொத்த நூலையும் படித்து முடிக்காமல் புத்தகத்தைக் கீழே வைக்க முடியாது என்பது என் அனுபவம். (மன்னிக்கவும்...இயற்கை உபாதைகளைத் தவிர்க்க முடியாது). 
 
                வாதம் முதல் வலிப்பு வரை தூக்கம் முதல் துக்கம் வரை பல உடல் மன நோய்களை அலசுகிறது இப்புத்தகம். இது ஒரு நகைச்சுவை நூல் மாதிரி... ஆனால் மருத்துவ நூல். படிப்பீர்.  மருத்துவப் புரட்சிகளை அறிவீர். பயன் பெறுவீர்....

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

எட்டையபுரத்தின் நெட்டைக் கனவுகள்.....

http://tamilshots.com/albums/kavigarkal/bharathy/normal_mahakavi-bharathiar.jpg

முறுக்கு மீசையும் நறுக்குத் தெறித்தார்போல சிந்தனையும் கருப்புக்கோட்டும் கைத்தடியும் முண்டாசும் என்று தனக்கென ஒரு படிமத்தை உருவாக்கி தென்றல் காற்றில் உலவ விட்டு, தன் மூச்சுக்காற்றை முடித்துக்கொண்டவன் சுப்பிரமணிய பாரதி. முப்பொத்தொன்பது ஆண்டுகளே இம்மண்ணுலகில் வாழ்ந்து இன்று உலக மக்களின் மன உலகில் நிலையாக வாழ்ந்து கொண்டு இருக்கும் மகாகவி அவன்.

பொன்னும் பொருளும் புகழும் விரும்பாத ஆசையற்ற மனத்தை வேண்டி கண்ணம்மாவைச் சரணடைந்த அம் மாகவி வாழும் காலத்தில் பொன், பொருள் புகழ் என்று எதையும் காணாமலே போனதை விதி என்பதா? சமுதாய நீதியற்ற வீணர்களின் சதி என்பதா?

பொருளாதாரத்தில் சமத்துவமும் சாதி பேதமற்ற சமூக ஒற்றுமையும் கல்வியில் மேன்மையும் பெண்கள் முன்னேற்றமும் அரசியல் விடுதலையும் ஆன்மிக வலிமையும் உடைய புதியதோர் சமுதாயம் படைக்கப் விரும்பியவன் அம் மகான். மூடப்பழக்கத்தைச் சுட்டெரிக்க சுடர்விடும் விழிகளில் தீ, வீசும் விழிப் பார்வையில் தீ, விரல் சுடும் எழுத்தில் தீ, வீறு கொண்டு பேசும் உதட்டில் தீ, உண்மை உணர்வினில் தீ, உள்ளத்தில் தீ. என்று தானே தீக்குழம்பாய் மாறினான். ஆம் பாரதீயாய் கொழுந்து விட்டு எரிந்தான். அவன் மீன்குஞ்சுகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க வில்லை. தீக்குஞ்சுகளுக்குப் பாய்ச்சல் கற்றுக்கொடுத்தான் அவன் தமிழ்த்தாய் பெற்ற தன்னிகரில்லா வரம், அவன் தமிழகத்தின் தனிப் பெருமை. அவன் தமிழினத்தின் தவப்பயன்.

ஆடுவோம் பாடுவோம் என்று சுதந்திரம் வருமுன்னே துள்ளிக்குதித்த அவன் வெள்ளை உள்ளம் கண்ட நெட்டைக்கனவுகளின் நீளம் மட்டுமல்ல கல்வியில், சமத்துவத்தில் அறிவியலில், தொலைத் தொடர்பியலில் என்று அவன் கண்ட கனவுகளின் எண்ணிகையும் நீளமானதே.. அந்தக் கனவுகள் இன்று காட்சிகளாயினவா? என்று நின்று நிதானித்துச் சிந்தித்துப் பாப்பதும் சீர்தூக்க முயல்தும் ஒரு யுகக் கவிக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்.

குயில் பாட்டில் தான் கண்ட கனவில்
“குயிற்பேட்டை என்றும் பிரியாமல்
காதலித்துக் கூடிக் களியுடனே வாழாமோ”

என்று பெட்டையைப் பிரியாமல் வாழும் நல்வரம் கேட்கும் அவன் குயிலுக்காகவா இதைப் பாடியிருப்பான். இல்லை என்பதை அவனே,

வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தால் கூறீரே”

என்று கூறுவதால் அறியலாம். காதலிருவர் கருத்தொருமித்து,

“வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு
பாயு மொளி நீ எனக்குப் பார்க்கும் விழி நானுக்கு,
நல்ல உயிர் நீ யெனக்கு நாடியடி நான் உனக்கு,
வேதமடி நீ எனக்கு, வித்தையடி நான் உனக்கு”

என்று ஆதரவாக இணைந்து வாழும் போக்கு இன்று தமிழினத்தில், தமிழகத்தில் ஏன் இந்தியாவில் உள்ளதா என்று கேட்டால் இல்லை என்று கட்டியம் கூற இலட்சக்கணக்கான விவாகரத்து வழக்குகள் சான்றாக உள்ளன. மேலை மோகம் பாரதியின் அக்கனவை நினைவாக்கவில்லை என்று அறுதியிட்டுக் கூற வைக்கிறது.

மேலைநாட்டு நாகரிகம் நம்மவர்களிடம் புதியதாக நுழைத்துள்ள கலாச்சார சீரழிவு, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் (Living Together). இன்று பெருநகரங்களில் பெருவழக்காகியுள்ள நாகரிங்களில் முதலிடம் பிடிப்பது இது. பாரதி பெண் தவறுவதற்கு ஆணே காரனம் என்று ஆண்களைச் சாடினான். விதவை மறுமணத்தை ஆராதித்தான். ஆனால் அவன் இருந்திருந்தால் ஒருபோதும் இதுபோன்ற முறையற்ற வாழ்நெறியை ஆதரித்து இருக்க மாட்டான்.

“பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்”

என்று கூறிய பாரதி, பாருக்கெல்லாம் வாழ்நெறி கற்றுக்கொடுத்த நம் பாரதப் பெருமை பாழ்பட்டு சீர்கெட்டு கீழிட்டுப் போயுள்ளதைக் கண்டால் பொறுப்பானா? அவன் முறட்டு மீசைதான் துடிக்காமல் இருக்குமா?

பெண்டாட்டிகளுக்கும் பெண்களுக்கும் அழுத்தமாக வக்காளத்து வாங்கியவன் முண்டாசுக் கவிஞன்..
“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்” 
என்று ஆண் ஆதிக்கத்தை எதிர்த்து பெண்ணினத்தைத் தலைதூக்க வைத்த பெருமை அந்தப் புனிதக்கவிஞனையே சேரும். பெண்களை ஆண்களோடு போட்டிப் போடச் சொன்னான். பெண்களும் போட்டனர் போட்டி. நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும். பாரதி “ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை” என்று கூறியது பொய்த்துப் போகவில்லை. பட்டங்கள் ஆண்டனர், சட்டங்கள் செய்தனர் பாரினில் நம் பெண்கள். ஆனால் அவர் அழுத்தமாகக் கோடிட்டுக் காட்டிய ‘எட்டும் அறிவினில்’ என்ற சொல்லை மட்டும் கவணிக்காது எல்லாவற்றிலும் என்று எடுத்துக்கொண்டதால் இன்று கள்ளும் காமமும் களியாட்டங்களும் பொதுவுடைமையாகிப் போனது.

கல்வி நிலை முதல் கற்பு நிலை வரை ஆண்களும் பெண்களும் சமம் என்று கற்பு நிலையையும் சேர்த்து பாரதி கூறியதன் உள்நோக்கம் ஆண்களும் பெண்களைப் போல ஒருவனுக்கு ஒருத்தி என்ற உண்ணத வாழ்நெறியைக் கைக்கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக....

ஓதரும் சாத்திரம் கோடி – உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள்”

என்ற பாரதியின் கனவு காட்சியானதா? என்பது வினாவல்ல. இல்லை என்பதன் குறியீடே...

சொந்த மண்ணில் பிறர்க்கடிமைகளாய், அந்நியர்களை எதிர்க்க திரானியற்று, அவர்களால் வறுமையுற்று வதைப்பட்டுக் கிடந்த மக்களை மேலேற்ற சொல்லேணி படைத்த சுதந்திரக் கவி பாரதி. அந்நலம் இந்நலம் தன்னலம் என்று எந்நலமாயினும் ஓருபோதும் ஈயென இரத்தல் செய்யோம் என்பதை,

"இன்னல் வந்துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்".

என்று பாடினான். இன்று குழந்தையைத் தவிர எல்லாம் இலவசமாகத் தருகிறோம் என்ற கட்சி பேதமின்றி ஏகோபித்த வாக்குறுதிகள். சுதந்திர நாட்டிலேயே எங்கும் எதிலும் தலைவிரித்தாடும் இலவசங்களின் வசப்பட்டு இன்றும் கஞ்சி குடிப்பதற்கில்லாத தன் வறுமை நிலைக்கும் விலைவாசி ஏறி மலையுச்சியை அடைந்துள்ள இந்நிலைக்கும் காரணம் எது? அல்லது யார்? என்றறியும் பகுத்தறிவு விளையாது போனதேன்?

மண்வெட்டிக் கூலி தினலாச்சே! – எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே – இந்த
மேதியினில் கெட்ட பெயராச்சே!

என்று வெந்து புழுங்கும் நிலை ஏன் வந்தது? மூலைக்கொரு கட்சி சாதிக்கொரு தலைவர் என்று புற்றீசலாய்க் கிளம்பி விட்ட அரசியல் தலைவர்களின் மூளைச்சலவையில் அழுத்தமாக மடித்து மழுங்கி இந்நாட்டு மன்னர்கள் எல்லோரும் பொறியற்ற விலங்குகளாய் இலவசங்களுக்காக இரு கரம் விரித்து வாழும் இழிநிலையை எய்தியுள்ளனர். பாரதி கண்ட தொலைதூரக் கனவு இந்த அற்ப ஆசைகளால் நொறுங்கிப் போனதை அறிவார்களா இவர்கள்?

இந்தத் தேசத்தைச் செதுக்கிச் செப்பனிடக் கவிதை உளியுடன் கிளம்பிய சத்தியக் கவிஞனின் நித்திரைக் கனவுகளில் சித்திரமாக இடம் பிடித்தவை இன்றும் அமைக்கப்படாத நதிப்பகிர்வும் சமைக்கப்படாத சேது பாலமும். இன்று ஈ என்ற எழுத்துப் படிமம் உணர்த்தும் துனபச்சாயல் ஈழம்.

“வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிசையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்”

புனித கங்கையை பொது உடைமை மங்கையாக்கி பயிர் காக்க, பசியால் வாடுகின்ற மக்களின் உயிர் காக்க நதிநீர்ப் பங்கீட்டுத் திட்டத்திற்கு அன்றே வழி கோலினான் அந்தப் பாரதக்கவி. இன்றளவும் அவன் விட்ட இடத்தில் இருந்து ஒரு புள்ளியேனும் நகர்ந்துள்ளதா? அரசியல் கமண்டலத்தில் அடைப்பட்ட கங்கையும் காவிரியும் என்று விரியும்? என்று விரியும்? என்று காத்திருக்கும் கண்களில் கண்ணீர்தான் விரிந்திருக்கிறது.

தசையெல்லாம் வெந்தபின்னே குளிர்ந்திடும் விழிகள் ஏது? இதயமே இழந்தபின்தான் முகிழ்த்திடும் உணர்வு ஏது? பெடையதைப் பிரிந்தபின்னர் பறவைகள் பிழைப்பு ஏது? பாசப்பிணைப்புகள் பதறிச்சாகப் பார்த்திடும் இனங்கள் ஏது? இனத்தமிழ்ர்கள் குருவிகளாய் கொசுக்களாய் மடிய ஈழத்துத் தின்னைகளில் கேட்கும் மரண ஓலம் ஓய ஏதேனும் வழி நாம் கண்டதுண்டா?

“சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்”

என்று அவன் கண்ட கனவு விழித்திறையில் விழுந்த வீண்கனவு இல்லை. குருதிக் கொப்பளிக்கும் இருதயத்தின் உள்ளிருந்து கிளம்பிய இலட்சியக் கனவு. ஏழிசையை எழுப்பும் முன்னே அந்த நல்லதொரு வீணையை நாம் எறிந்து விட்டோம் எரிதழலில். அவன் விதைத்தவை நல் விளைச்சல்களே என்று அறிந்த பின்னும் வெற்று மொழி பேசி வாழ்ந்திடுதல் நலமாமோ?

நிறைவாக.....

நீண்டுகொண்டே போகும் அநீதிகளைக் கண்டு அவன் கனல் கக்கும் விழியின் கோப நெருப்பே சுட்டெரிக்கும் சூரியக் கதிர்கள். மலைகள் தோறும் கொட்டும் அருவிகள் நிறைவேறாத கன்வுகளுக்காக அவன் கண்கள் சிந்தும் கண்ணீர். இனியேனும் பாரதியை உச்சரிக்கும் ஒவ்வொரு மனமும் ஒவ்வொரு கனமும் எச்சரிக்கையாக அவன் கனவுகளை, அவற்றின் உண்ணத உட்பொருட்களை உணர்ந்து அவற்றை நிறைவேற்ற முயலுட்டும்.......

நன்றி பாரதியார் சங்கம்.

(இக்கட்டுரை கோலாலம்பூரில் 29.05.2011 அன்று நடைபெற்ற பாரதியார் விழாவில் வெளியிடப்பெற்ற “இன்றும் வாழ்கிறாய் இமய பாரதி!” என்னும் சிறப்பு மலரில் இடம்பெற்றது.)

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

ஏரோபிக்ஸ் செய்யலாம் வாங்க...




http://www.vastc.com/jumpclear3.jpg

தூங்காதே தம்பி தூங்காதேன்னு படிச்சுப் படிச்சு பாடம் கேட்ட காலம் போயி ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடன் (டீன் ஏஜ் தொடங்கி) தூக்கம் எங்கே தூக்கம் எங்கேன்னு அலையர காலம் வந்து விடுகிறது. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு காரணம் தூக்கம் வராததற்கு. அதனால்தான் நம் முன்னோர்கள் காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே... காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளேன்னு பாடி வைத்தார்கள். உயர்மட்ட பணக்காரர்களுக்கு இன்னும் கிரடிட் கார்டு எந்த வங்கியில் வாங்கவில்லை என்று. ம்ற்றவர்களுக்கு கிரடிட் கார்டுக்கு எப்படி பணம் கட்டுவது என்று. இன்று இளைஞர்களின் கண்களுக்குள் டாக்டர் எஞ்சினியர், அயல்நாடு என்று பல கனவுகள் புகுந்து கொண்டு உறக்கம் என்ற உண்மை நண்பனை விரட்டி விடுகின்றன. இன்னும் சிலர் அதாவது டீன்  பருவத்தைக் கடந்தவர்களைப் பணம், பகட்டு, புகழ் என்ற ஆசைப்பேய் அலைக்கழிப்பதால் தூக்கத்தை அறவே மறந்தவர்களாகின்றனர். இப்படிக் கூறினால் இன்னும் பொருத்தமாக இருக்கும். உறக்கத்தால் அடியோடு மறக்கப்பட்டவர்கள் ஆகின்றனர்.

குமரப்பருவத்தில் தடாலடியாகத் தொலைத்து விட்டு அல்லும் பகலும் தூக்கமின்றி அலைந்து திரிந்து தேடி எடுத்து பயன்படுத்தும் தூக்கம் மனிதனிடமிருந்து நடுத்தர வயதில் மீண்டும் இருள் வர மறையும் கதிர் போல கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைந்து போகிறது. எப்படியாகிலும் தூக்கத்தால் மறுதலிக்கப் பட்டவர்களின் இந்நிலைக்கு இன்சோம்னியா என்று பெயர் சூட்டியுள்ளது  மருத்துவ அறிவியல். இது ஒரு தூக்கக் குறைபாட்டு நோய்.

இந்த இன்சோம்னியா பற்றி ஆயவு செய்த அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் மெடிசின் அமைப்பு,  நாள் தோறும்  ஏரோபிக்ஸ்(Aerobic) பயிற்சி செய்தால் நல்ல உற்சாகமான மனநிலை வரும். அதன் காரணமாக அதனோடு தொடர்புடைய நல்ல சுறுசுறுப்பு வரும். நல்ல தூக்கமும் வரும் என்கின்றனர்.

தூக்கக் குறைபாடு உள்ள நோயாளிகள் ஐம்பது பேரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களுக்கு ஏரோபிக்ஸ் பயிற்சி கொடுத்து சோதித்துப் பார்த்தனர். பயிற்சியின் பின் மருந்து மாத்திரைகளால் உறங்கியதை விட அவர்கள் ஆழ்ந்தும் நீண்ட  நேரமும் உறங்கினர் என்கின்றார் இந்த ஆய்வை மேற்கொண்ட தூக்கக் குறைப்பாட்டு ஆய்வு மைய இயக்குநரான பைலீஸ் ஸீ. இவர் இந்நோயால் அல்லலுறும் நோயாளிகளில் பெரும்பாலானோருக்கு இது பொருந்தும் என்கிறார். மற்றொரு ஆய்வாளராக கேத்தரின் ரீட் என்பவரும் இக்கருத்தை வழிமொழிகிறார்.

உறக்கம் எப்படி வராமல் போகும்? உழைத்து களைத்தவனின் உரிமை ஓய்வு என்று அறிஞர் அண்ணா சொன்னது போல ஆடிக் களைத்தவனுக்கு உரிமை அல்லவா உறக்கம். உறக்கம் வராமல் போகுமா? வரத்தானே செய்யும். அதுவும் ஏரோபிக்ஸ் ஆடலுடன் பாடலும் நல்ல இசையும் இணைவதால் உற்சாகமான உறக்கம் வருவதில் என்ன சந்தேகம்.

அதெல்லாம் சரி ஏரோபிக்ஸ் என்றால் என்ன? அது என்ன மருத்துவம்? ஒன்றும் இல்லைங்க. இசையொன்றை போட்டுக்கொண்டு அதற்கேற்றாற் போல உடலை அசைத்து நடனமாடுவது. அதாவது உடற் பயிற்சி செய்வது.

இதனைக்கண்டு பிடித்தவர் டெக்சாஸ் நாட்டின் விமானப்படை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரான கென்னத் கூப்பர் (Kenneth H. Cooper).. இந்தப் பயிற்சி முதன் முதலில் வான் ஆராச்சியாளர்களிடம் பயன்படுத்தப் பட்டது. நாளடைவில் பொது மக்களுக்களிடம் பரவியது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளின் இறுதியில் தொடங்கிய இந்த ஏரோபிக்ஸ் பயிற்சி டான்ஸ் ஏரோபிகஸ், ஸ்டெப்ஸ் ஏரோபிகஸ், நீர் ஏரோபிக்ஸ், ஸ்போட்ஸ் (விளையாட்டு) ஏரோபிக்ஸ் என்று பலவகைப்படும்.

ஸ்டெப்ஸ் ஏரோபிக்ஸ்

 http://i347.photobucket.com/albums/p466/poopydoopy92/aerobics.jpg
ஸ்டெப்ஸ் ஏரோபிக்ஸ் பெருமளவு கலோரிகளை எரிக்கவும்,  நேர்த்தியான உடல் அமைப்பிற்கும் தசைகளை வலுவூட்டவும் உதவுகிறது. இசையுடன் காலடி வைத்து செய்யும் உடற்பயிற்சி. பயிற்சியாளரின் உடல் வாகு, வேகத்தின் அடிப்படையில் நிமிடத்திற்கு 125 முதல் 140 அடிகள் வைத்து பயிற்சி செய்யும் அளவில் இசையோடு தாளம் இணைக்கப் பட்டிருக்கும்.

டான்ஸ் ஏரோபிக்ஸ்
http://www.oocities.org/wexlerschoolofmusic/images/JR_Hip_Hop_Class.jpg
டான்ஸ் ஏரோபிக்ஸ் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் மேற்கொள்வதால் அழகிய உடல் தோற்றமும், முகவசீகரமும், மனமகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் ஒர் மகிழ்ச்சியான அனுபவத்தின் வழியாக  கிட்டுகின்றன. உரிய பயிற்றுநரிடம் இப்பயிற்சியை மேற்கொண்டாலும் குடும்ப மருத்துவர் பச்சைக் கொடி காட்டிய பின்னே இப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது.

நீர் ஏரோபிக்ஸ்
http://i.pbase.com/g1/06/296006/2/116911633.0cibd7eR.jpg

மார்பு வரையும் அல்லது கழுத்து வரையும் நீரில் நின்று கொண்டு செய்யும் நீர் ஏரோபிக்ஸ் குறைந்த அளவு கலோரிகளை எரித்தாலும் இதய நோயில் இருந்து இதயத்தைப் பாதுக்காக்கிறதாம். நீர் உடற்பயிற்சிகள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவி புரிகின்றன. இதனால் நாம் தினசரி வேலைகளைச் செய்யும்போது கூட உடல் உஷ்ணமடையாமல் பாதுகாக்கப்படுகிறது. குறிப்பாக நம் நாடு போன்ற உஷ்ணப் பிரதேசங்களில் நீர் உடற்பயிற்சி  இன்றியமையாதது என்கின்றனர். .

ஸ்போர்ட்ஸ் ஏரோபிக்ஸ்
http://www.dbb.org.au/schools/stleoscollege/SiteCollectionImages/aerobics.jpg
இந்த ஏரோபிக்ஸை ஏரோபிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் என்று கூறுவார்கள். இதுவும் இசையோடு கூடிய விளையாட்டுகள். இக்காலத்தின் உடல் ஊனமுற்றோருக்கும் பயன்படும் வகையில் ஏரோபிக்ஸ் பயிற்சி நிறு வந்துள்ளன. பள்ளிகளில் அநேகமாக விளையாட்டு விழாவில் முதலிடம் பிடிப்பது ஏரோபிக்ஸ்தான். ஒருவர் மீது ஒருவர் யானை, ஒட்டகம், தேர், கார் என்று பல வடிவங்களில் இசைக்கும் நேரத்தில் அமைத்து காண்போர் கண்களை ஆச்சரியத்தில் விரியச்செய்யும் கணகவர் காட்சியமைப்புகளுடன் ஏரோபிக்ஸ் விளையாட்டுப் பிரிவில் நுழைந்துள்ளது எனலாம்.

தூக்கம் வருவது இருக்கட்டும். ஏரோபிக்ஸ் செய்தால் எந்த வயதிலும் ஏர்ஹோஸ்டர்ஸ் மாதிரி சிக்குனு இருக்கலாம். முக்கியமாக இதய தசைகளை வலுவடையச் செய்கின்றன. இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. உடலின் சக்தி அதிகரிக்கிறது. மனச்சோர்வு குறைகிறது. சர்க்கரை நோயாளிகள் ஏரோபிக்ஸ் செய்வதால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்குமாம். அதுமட்டுமல்ல. தாம்பத்திய உறவையும் பலப் படுத்துகிறதாம்.

இதை எழுதிக்கொண்டு இருக்கும்போதே என் கால்கள் லேசாக அடியெடுத்து வைக்க ஆரம்பித்து விட்டது. நீங்களும் தயாரா.. ஏரோபிக்ஸ் செய்ய...உடல் உறுதியுடன் இருக்க...நன்றாக உறங்க......


நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்