“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 15 மே, 2010

"கறுப்பு நிலா" வில் நெருப்புப் பொறிகள்.

“கவிஞன் தன்னை இருபது வயதுக்குள் அடயாளம் காட்டா விட்டால், அவன் கவிஞனே ஆக முடியாது” என்று பெரெஞ்சுக் கவிஞர் பாடிலெர் கூறுவார். வைரமுத்து பதெனேழு வயதில் எழுதிப் பத்தொன்பது வயதில் வெளியிட்ட நூல் ‘வைகறை மேகங்கள்’. மழலைப் புறப்பாட்டின் ’கன்னி முத்திரை’ என்று இந்நூலைச் சொல்லவேண்டும் என்பார் இந்திரா பார்த்தசாரதி.

சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற ஒரு மரபை, பல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கோட்பாட்டை மாற்றுவது என்பாது கடுமுயற்சியும், அஞ்சா நெஞ்சமும் கொண்ட ஒருவரால் மட்டுமே இயல்வது. அம்மாற்றத்தை எடுத்து மொழியவும் எதிர்ப்புகளையும், விளைவுகளையும் எதிர் கொள்ளவும் வைரம் பாய்ந்த நெஞ்சம் வேண்டும். அத்தகு எதிர்ப்புகளைச் சந்தித்த கவிதையே கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘கருப்பு நிலா’ .

திறனாய்வுத் திறன் என்பது படைக்கும் திறன், சுவைக்கும் திறன்
இவ்விரண்டிலும் வேறுபட்டது என்பார் தா. ஏ. ஞானமூர்த்தி. இம்மூன்றும் ஒருங்கே பெற்றவர் கவிஞர் வைரமுத்து என்பதை இத்திறனாய்வுக் கவிதை புலப்படுத்தும். ‘உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்’ என்ற அறத்தை நிலைநாட்ட எழுந்த தமிழரின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். ‘நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும் பேணிய கற்பும் பெருந்துணையாகக் கொண்ட கற்பு நிலா கண்ணகியைத் திறனாய்வு என்ற தணலில் சுட்டெரிக்க வந்தது இந்தக் கறுப்பு நிலா! பத்தினித் தெய்வமாம் கண்ணகியின் பாத்திரப் படைப்பையும் கவிஞர் வைரமுத்துவின் திறனாய்வுப் பார்வயையும் பொருத்திப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கம்.

இலக்கியம் என்பது மனிதப் பெருமானங்களை (Human Values) மிகுந்த வன்மையுடன் கற்பிக்கிறது. இந்தப் பெருமானங்கள் அந்தப் பாத்திரங்களின் ஊடாட்டங்களின் மூலமும் அவற்றின் கூற்றுகள், செயல்கள் மூலமும் தெரிய வருகிறது என்பார் (கா. சிவத்தம்பி)
”தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால், தெய்வமாய்
மண்ணக மாந்தர்க்கு அணியாய கண்ணகி
விண்ணக மாந்தர்க்கு விருந்து”
என்றும்

“தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்” என்றும்
”மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள்”
என்றும்

“கற்புக்கடம் பூண்ட இத்தெய்வமல்லது பொற்புடைத்தெயவம்
யாம் கண்டிலமால்”
என்றும்

”ஒரு மாமணியாய் உலகிற்கு ஓங்கிய திருமாமணி
என்றும்

போற்றுவதுடன், பத்தினித் தெய்வமாக, பதிகம் (5, 36), வஞ்சின மாலை (50), அழற்படுகாதை (155), கட்டுரைக் காதை (14, 177), குன்றக்குறவை (19 - 70), காட்சிக்காதை (74, 129), நீர்ப்படைக்காதை (15, 128), நடுகல் காதை (210) ஆகிய இடங்களில் புகழ்ந்து ஏத்துவார் இளங்கோவடிகள். இத்தகு சிறப்பு வாய்ந்த கவிஞர் வைரமுத்து பத்தினியாய நீயிருந்தும் பயனில்லை என்று கூறுவதுடன் செல்லுபடியாகாத சிறுகாசு (12), கல்லாகிப் போனவளே (23), பேதைத் தலைமகளே (50), பாவி, படுபாவி (58), பித்தம் பிடித்தவள், பேதைப் பெரும் பேதை (81), தேராதாள் (90) என்றெல்லாம் நெஞ்சு நோக ஏசுகிறார். இத்துணிவு இக்கவிஞரிடம் பிறக்கக் காரணம் கண்ணகி சினம் கொள்ள வேண்டிய காலத்தில் அமைதி காத்தவளாகவும், அமைதியாக ஆராய்ந்து நோக்க வேண்டிய காலத்தில் சினம் கொண்டவளாகவும்
முரண்பாடுகள் நிறைந்தவளாகக் காணப்படுவதே ஆகும்.
” கற்பு வழிப்பட்டவர் பரத்தையை ஏத்தலும் உள்ளத்து ஊடல் உண்டென மொழிப”
என்று கலவியும், புலவியும்மாக கொண்டானுடன் கூடிவாழ்தலையே கற்புடைமை என்று வகுக்கும் தொல்காப்பியம்.
“ஊடுதல் காமத்திற்கு இன்பம்” என்று திருவள்ளுவமும் இதனைச் சுட்டும். கணவனின் மனநிலையை அறிய உதவுவது ஊடல்.
அதனால்தான் பிற பெண்களைப்பற்றிப் பேசுவதும், பரத்தையைப் பற்றிப் பேசுவதும் தலைவனின் மனவறி கருவியாம் என்பார் தொல்காப்பியர். வடு நீங்கு சிறப்பான மனையறத்தை மறந்து மாதவியிடம் விடுதலறியா விருப்பினனாகக் காம வாழ்வு
வாழ்கிறான் கோவலன். இந்நிலையில் பெற்றோர், உற்றார், உறவினர் என எவரையும் கோவலனிடம் அனுப்பித் தன் நிலையை உரைக்கச் செய்ய வில்லை கண்ணகி. பரத்தமை மேற்கொண்ட கண்ணகியிடம் தோழியை தூது அனுப்புவது சங்க காலம் தொட்டே இருந்து வரும் மரபு. கண்ணகியின் உயிர்த்தோழி தேவந்தி கண்ணிகியைப் போன்றே தலைவனைப் பிரிந்து, சோமகுண்டம், சூரிய குண்டம் ஆகிய பொய்கையில் மூழ்கி மீண்டும்
கணவனிடம் கூடப் பெற்றவள். அவளிடம் கூடத் தன் நிலையைக் கூற மறுக்கிறாள் கண்ணகி.

இவ்வாறு கணவனைக் காக்கத்தக்க பருவத்தில் காவாமல் விட்டுவிட்டு கதை முடிந்த பின்பு கதறுவதைக் கண்டு
“அளவுக்குமேல் பொறுமை அன்னமே நீ காட்டியதால்
களவுக்குப்போனதம்மா காத்துவைத்த உன் சொத்து”
என்று பாடுகிறார்.

மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு பொன்னே, கரும்பே, தேனே என்றெல்லாம் பாராட்டும் தலைவனின் காதலை எண்ணிப் பூரித்த கண்ணகி அவையெல்லாம் மோகத்தால்
கூறிய வெற்று மொழிகள் என்பதைக்கூட அறிய முடியாத மடமகளாக இருக்கிறாள். இதனை,

“பட்டுத்துகில் விரித்த பவளம்பூம் பஞ்சனையில்
தொட்டுப் பிடித்துச் சுவையிதழில் விரல் தடவிப்
பதமான சுகங்கண்டு பாவிமகன் உனைப் பற்றி
முதலிரவில் சொன்னதெல்லாம் மோகமொழி தானென்றே
அறியாமல் போனாயே: அதுவுன்றன் பிழையலவா?”


என்று அவள் மீது எல்லையில்லா கரிசனையைக் கொட்டுகிறார்.
“பிரிக்காத ஏடுன்னை பிரிந்தெங்கோ போனானே” என்றும் கூறுகிறார். இந்த அடியில் ‘கோரிக்கையற்று கிடக்குது இங்கு வேரிற் பழுத்த பலா’ என்ற பாரதிதாசனின் ஆதங்கம் வெளிப்படுவதைக் காணலாம்.

புறத்தொழுக்கம் கொண்டு மீண்டு,அதாவது மாதவியின் இல்லம் விடுத்து மீண்டும் கண்ணகியிடம் தஞ்சம் புகுகிறான். அப்போதும் அவனது இல்லாமையைக் கண்டு இரங்கி சிலம்பு உள்ளது கொள்க என்று உதவுபவளாகவே அதுவும் நகைமுகம் காட்டி உதவுகிறாள். இளங்கோவின் கூற்று இதோ.
“நலங்கேழ் முறுவல் நகை முகம் காட்டி
சிலம்புல கொண்ம”
இந்த நகை முகமே சமுதாய அக்கறை கொண்ட வைரமுத்து என்ற இளங்கவியின் கடுஞ்சினத்திற்குக் காரணமாகிறது.. (இக்கவிதையைப் படைக்கும் போது கவிஞர் வைரமுத்து இளநிலை முதலாமாண்டு மாணவர்) பாவி, பேதை, பித்தம் பிடித்தவள் என்று ஏசவும் செய்கிறது.

”மோகக் கதையதனை முடித்துவிட்டே உன்கணவன்
வேகமாய் உனைநாடி வீடுதேடி வந்தவுடன்
சிரித்துக் களித்துச் செவியெல்லாம் தேன்பாய
உரித்த சுளைபோலும் உன்னிதழை நீ திறந்து
சிந்தைநிலாக் காவலரே சிலம்பிதனை நாடித்தான்
வந்தீரோ? என்று வாய் நிறையத் தேன்வழியச்
சொன்னாயே பாவி”

என்று அடிவயிற்றில் இருந்து சொற்கள் வெடித்துச் சிதறுகிறது. உன்மத்தனுக்கும் காமாந்தகனுக்கும் தலைமை தந்து பணிந்து நிற்கும் பெண்ணடிமைத் தனத்தைக் களைந்து எறியும் வண்மை ”அநியாயக் காரனுக்கு ஆரத்தி எடுத்தவள் நீ” என்ற அடியில் வீறு கொண்டு எழுகிறது.
பாண்டியன் ஆராயது தீர்ப்பு வழங்கியதை ’தேரா மன்னா’ என்று பழித்துரைக்கும் கண்ணகியின் நிலையும் அவனைப் போன்றதே.
“பட்டாங்கில் யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையையும்”என்று வஞ்சினம் கூறி மதுரை மக்களை அழித்தது ஒரு சிறிதும் பொருத்தமற்ற செயல். பொறுமை பெண்களின் குணம் என்பதை கண்ணகி எள்ளளவும் இந்த இடத்தில் போற்றாதது, பாண்டியனை வெஞ்சினத்தோடு அழித்தது, பின்பு அவளே ‘தென்னவன் தீதிலன்’ என்று செங்குட்டுவனிடம் கூறுவது இப்படி பொங்கி எழ வேண்டிய காலத்தில் அதிக பொறுமையும் , சினத்தை அடக்கி ஆள வேண்டிய கால்த்தில் ஆறா சினமும் கொண்ட கண்ணகியின் குணம்,

“அறம்பாடி மதுரை அரசன் புகழ்சாடித்
திறம்பாடும் பூநகரைத் தீயால் எரித்தாயே
அத்திறத்தைச் சோணாட்டில் அணுவளவு காட்டிநின்றால்
சத்தியமாய் வாழ்வில் தளிர்த்துச் செழித்திருப்பாய்”
என்று கவிஞரைக் கூற வைக்கிறது. அத்துடன்

“மன்னன் அல்லன் தேராதான்
மலர்க்கொடியே நீயேதான்”என்று தார்மீகக் கோபமாக வெடிக்கிறது கவிமனம.இறுதியாக
”குலத்து மாந்தர்க்கு கற்புஇயல் பாகுமாம்
கொடுமை செய்தும் அறிவை யழித்தும் அந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”

என்பார் பாரதியார். ஆனால் இன்றளவும் பெண் என்றால் கண்ணகியாய் வாழ்வதைத்தான் எழுதி வைத்த மறையாகத் தமிழ்ச் சமுதாயம் கொண்டுள்ளது. ‘பத்தினி’ என்ற சொல்லே சிலப்பதிகாரக் காலத்தில் இருந்துதான் வழக்கில் வந்தது என்பர். இன்றும் ‘கண்ணகி’ என்பது பத்தினி தன்மை என்பதன் குறியீடாகத் தமிழ் மண்ணில் பேச்ப்பட்டு வருகிறது. ஆண் வர்க்கத்தின் கொடுமைகளை எதிர்த்துக் கேட்கும் திராணியற்றவர்களாக, எதிர்த்துக் கேட்கக் கூடாதவர்களாக, கண்ணீரை மட்டுமே சிந்திக் கொண்டு இருப்பதே கற்பின் வரையறை என்றால் அக்கற்பு இவ்வுலகத்தில் இல்லாது ஒழியட்டும் என்று கற்பு என்ற
விலங்கில் தன்னைத் தானே பூட்டிக் கொண்ட பெண்களுக்காக அழுத்தமாகக் குரல் கொடுக்கிறார் வைரமுத்து. இளமைக் குருதியின் வேக ஓட்டம் கவிதை ஓட்டத்தைச் சூடேற்றுகிறது.

”இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா?
இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனி மலைகளா?
இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்?
இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்?
என்று கலைஞர் இமைவிரிப்பது சரிதானே....

வெள்ளி, 7 மே, 2010

கண் கெட்ட பிறகும் பார்வைப் ப்ரசாதம்...


வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!


பற்களும் நாக்கும் சந்திக்கும் போது நலம் விசாரித்துக்கொண்டு பேசுவது வழகமாம்.. ஒரு நாள் நாக்கு பல்லைப் பார்த்தவுடன் பல்தம்பி பல்தம்பி நலமா? என்றதாம். நாக்குதான் அண்ணா. பல்தான் தம்பி.. ஏனென்றால் நாக்கு இந்த உலகத்துக்கு மும்பே வந்துவிடுகிறது. பல் பின்னாலேதான் வருகிறது.. உடனே பல் கூறியதாம் நீங்க நலமாய் இருந்தா நாங்க உங்க புண்ணியத்துல நலமாய் இருப்போம் என்றதாம்.. ஆம் ஏதாவது சொல்லி வம்பை விலைக்கு வாங்குவது இந்த நாக்கின் வேலை..... அதனால் உடைபட்டு உருவிழந்து போவது பல்தானே....பாவம் பல்..

"உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது என்று கேட்டு ’நாக்குதான்’ என்று சிறு சொற்களால் இந்த உலகத்தையே அழிக்க வல்ல இந்த நாக்கை நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷணன் கூறுவார்..

சுவையாகச் சாப்பிடுபவரை நாக்கு மட்டும் ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் என்று கிண்டலாகக் கூறுவது உண்டு. இந்த நாக்குக்கு இந்த ஆறு சுவைகளின் ருசி போதாதாம்.. அறுசுவைகளை ருசிப்பது மட்டும் இல்லாமல் இப்போது எலும்பு இல்லாத இந்த நாக்கு தன்னுடைய நரம்புகளின் உதவியுடன் ஏழாவது சுவையையும் ருசிக்கிறது. சுவை மிக்க ருசியான உணவு கிடைக்காத போது நாக்கு செத்தே போயிடுச்சு என்றும் கூறுவதைக் கேட்டிருப்போம். இந்த நாக்கு செத்துப்போன கண்களுக்கு உயிர் கொடுக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். இதனால் தான் திருவள்ளுவர் “ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்” என்று கூறினார் போலும். இந்த அதிசயத்தை நம்பாதவர்கள் இதைப்படிங்க முதல்ல...

நாக்கு தன்னுடைய சுவையறி நரம்புகளால் காட்சிகளை அறிந்து, மூளை வழியாகக் கண்களுக்குத் தெரிவிக்கும் மற்றொரு அருமையான பணியைச் செய்கிறது. இதற்கு ஒரு புதிய மின்சாரக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனா, ஆஸ்திரேலியாவின் மெல்போன் நக்ரின் மருத்துவ விஞ்ஞானிகள். இந்த அசாதாரணத் தொழில் நுட்பக் க்ருவியின் பெயர் ப்ரைன் போர்ட் விஷன் டிவைஸ் (Brain port vision device).

இதன் அமைப்பு:
இது சுவையறி நரம்புகளின் உதவியால் (Sensory substitution) மின்னதிவுகள் மூலமாக் (Electrotactile stimulation) காண்பவற்றை மூளைக்கு அறிவித்து, அங்கு காட்சியாக மாற்றும் ஒரு கருவி. இது கைக்குள் அடங்கும் மிகச்சிறிய வடிவில் அமைந்துள்ளது. இதில் ஒரு கட்டுப்பாட்டுக் கோலும் (control unit), ஒரு கறுப்புக் கண்ணாடியும் (Sun Glass), அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பும், அதன் முடிவில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் லாலி பாப் (Lolli pop) வடிவிலான பிளாஸ்டிக்
கைப்பிடியும் அமைந்துள்ளன. கறுப்புக் கண்ணாடியின் நடுவில் 25 செ.மீ. விட்டமுள்ள சிறிய டிஜிட்டல் கேமரா (Digital wdeo camera) பொருத்தப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு கைப்பேசி அளவுதான் இருக்கும்.

செயல் படும் முறை:
இதனைஅணியும் போது காட்சிகள் கேமராவில் படமாக்கப்பட்டு கையினால் இயக்கப்படும் கண்ட்ரோல் கோலுக்கு அனுப்பப் படுகிறது. இங்கு பதிவான காட்சிகள், மின்னதிவுகளாக மாற்றப்பட்டு நாவின் மீது வைக்கப்படும் லாலி பாப்பின் மூலம் நாக்கு நரம்புகளால் உணரப்படுகிறது. இந்த மெல்லிய உணர்வுகள் நரமபுக்ளின் வழியாக மூளைக்குச் சென்றடையும் போது காட்சிகளாகக் காண முடிகிறது. கையில் உள்ள கண்ட்ரோல் கோலின் உதவியால் காட்சிகளைத் தேவைக்கேற்பப் பெரிதாக்கிக் கொள்ளவும் (Zoom) முடியும்.

இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் இக்கண்டுபிடிப்பு பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறியவும், பிறர் உதவியின்றி எங்கும் செல்லவும் பயன்படும் என்கின்றனர். மற்றொரு முக்கியமான பயன் இதன் உதவியால் துள்ளியமாகப் பார்க்கவும் முடியுமாம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இக்கருவையைச் சோதித்த போது இதைப் பயன் படுத்திய பார்வையற்ற ஒருவர் சுழன்று வந்த டென்னிஸ் பந்தை மிக எளிதாகப் பிடித்தாராம். அப்போது அவர் கணப்பொழுதில் நாக்கால் காட்சியை எளிதாக உணர்ந்ததாகக் கூறி வியந்தாராம்.

முதன் முதலில் இக்கருவியை வாங்கிப் பயன்படுத்திய பார்வையற்ற ஒருவர் எழுத்துக்களைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். ஆனால் இக்கருவியைப் பயன் படுத்திப் புத்தகம் படிப்பது அவ்வளவு நல்லது இல்லை என்கின்றனர்.

இந்தக் கருவியைப் பயன்படுத்தும் முறையை ஒருவர் கற்றுக்கொள்ள சுமார் இருபது மணி நேரம்தான் ஆகுமாம். கண் பார்வை இல்லாதவர்களுக்குக் கண் கண்ட இல்லை இல்லை நாக்கு கண்ட தெய்வம் இந்தக் கருவி. வாழ்க இதைக் கண்டறிந்த் விஞ்ஞானிகள்!!!.




துஷ்ட கோள்களும் சுற்றும் விழிகளும்!!!!!


"சுட்டும் விழிச் சுடர்தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ?"





என்றுகண்களின் ஒளியைப் பாடிப் பரவசப்பட்டான் பாரதி. அவனுக்குத் தெரிந்து இருக்கும் இவர்கள் (இந்தக் கோள்கள்) தான் கண் தொடர்பான எல்லாவற்றிக்கும்
காரணம் என்று. அவன் தீர்க்கத்தரசி அல்லவா? கண்களுக்கு ஒளியைத் தருவது மட்டுமன்றி இருளைத் தருவதும் இவர்களால் முடிந்த உபகாரம் என்பதை அறிந்தவன்.

http://www.pradeepastrosolution.com/images/planets.gif

கண பார்வைக்குச் சுக்கிரன்தான் முதன்மை அதிகாரி.
ஆனால் சூரியன் வலக் கண்ணையும், சந்திரன் இடக் கண்ணையும் தங்கள அதிகாரத்திற்குள் கொண்டு வந்து விட்டார்கள். பாவம் சுக்கிரன். என்ன செய்வது இவர்களுடன் மோத வலுவில்லாததால் கூட்டணிக்கு சம்மதித்து கண் தொடர்பான நோயைப் பரப்பி வருகிறார். ஆம் கண்கள் தொடர்பான நோய்களுக்கு இம்மூவரும் இரண்டு, பனிரெண்டாம் இடங்களுமே காரணம்.


வலக் கண் இன்சார்ஜ்:
சூரியன் எட்டாவது அல்லது பத்தாவது தொகுதிக்கு வந்தால் வலக் கண்ணைச் சோதிப்பார்.
இடக் கண் இன்சார்ஜ்:
சந்திரன் பனிரெண்டில் இருந்தால் இடக் கண்ணைச் பாதிப்பார்.

மாலைக்கண்:
சூரியன் சந்திரன் இருவரும் இரண்டாம் தொகுதிக்கு வந்தால் மாலைக்கண் பரிசை வழங்குவார்கள் தன் தொகுதி மக்களுக்கு. சில சமயங்களில் சுக்கிரனும் சந்திரனும் 6 , 8 , 12 ஆம் தொகுதிகளில் சேர்ந்து வந்து மக்களுக்கு மாலைக்கண் அன்பளிப்பை அகமகிழ்ந்து வழங்குவார்களாம்.

மாறுகண்:
சுக்கிரனும் சந்திரனும் பனிரெண்டாம் தொகுதியில் இருந்தால் இடக்கண்ணின் பாதியைப் பறித்துக் கொள்வார்களாம். அவர்கள் ஒன்றரை(1-1/2) கண்ணாலதான் இவர்களைப் பார்க்க வேண்டும். தொகுதிச் சீரமைப்புக்கான வசூலோ இது?

கண் அறுவைச் சிகிச்சை:
5 , 6 க்கான கிரகங்கள் சுக்கிரனுடன் 12 ஆம் தொகுதியில் மீட்டிங் போட்டு அறுவைச் சிகிச்சைக்கு வழி வகுத்து விடுவார்களாம். இது நல்ல இருக்கே. இது என்ன டாக்டர்ஸ் மீட்டிங்கா?


மொத்தமா குருடு:
இந்த மூவரால் மட்டும் மொத்தமாகக் குருடாக்க முடியாதாம். அதனால் சனி பகவானுக்கும் கூட்டனிக்கு அழைப்பு விடுவார்களாம். இவரும் உடனே சம்மதித்து விடுவாராம். சனிக்குத்தான் ஆத்திரம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் அவர்தானே கண்களைக் கட்டிக்கொண்டு அல்லல் படுகிறார். தனக்கு ஒரு கண் போனாலே இரு கண்களைப் பறிக்க எண்ணுவர். இவர்க்கோ இரு கண்களும் இருந்தும் இல்லாதவை!!!. நல்ல வேளையாக மனிதருக்கு இரண்டே இரண்டு கண்கள். செவ்வாய் இரண்டில், சந்திரன் ஆறில், சூரியன் எட்டில், சனி பனிரெண்டில் இருந்து வியுகம் அமைத்து மொத்தமாக குருடு ஆக்கிவிடுவார்களாம். நல்ல எண்ணம்!! ரொம்ப சந்தோஷம்!!
அடுத்த கட்டுரையில் கோள்களின் அட்டூழியம் தொடரு
ம்...


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieAc1EQvXg3AGyuhkdKNR6GNnpCRmymXdRaPHIBUv-x9lxzsLZyW_o2Gc0rqBAAmiFVlyeY-CiiCT3sCmaUkELik6Lst6h3xMwVUKFPvhLYcWlY_sQS-25dUICM0gWxj1k2f9NOw8HAIw/s400/DSC05614.jpg




நெக்லெக்ட் சிண்ட்ரோம் (NEGLECT SYNDROME)






இவரைப் பார்த்து விட்டு எண்ண நினைக்கத்தோன்றுகிறது. இவர் தன் உடலின் ஒரு பக்கத்தை மறந்தவர். (பொய் பொய் என்று ஒரு குரல் கேட்கிறது.....) உன்னக் கண்ட துண்டமா வெட்டிப்போட்டாத்தான் என் மனம் ஆறும் என்று யாரோ கூறுவது என் காதில் விழுகிறது. இல்லை இல்லை கூறக் கேட்டிருப்போம். அது போல அவனை மாறு கால் மாறு கை வாங்கனும் என்று ஆத்திரத்துடன் சொல்வதையும் கேட்டிருப்போம். புரட்சித் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரன் என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவதும் இந்த மாறுகால் மாறுகை வாங்கும் தண்டனைதான்.

பண்டைய காலத்தில் ச்சிரச்சேதம், மாறுகால், மாறு கை வாங்குதல் போன்ற தண்டனைகள் கொடுக்கப்பட்டு வந்தன என்பது எல்லோரும் அறிந்ததே..ஒருவரை முழுமையாகக் கொல்ல வேண்டுமென்றால் சிரச்சேதம் செய்வது வழக்கமாம். உயிரை மட்டும் விட்டு உடலைச் செயல இழக்கச் செய்யக்கருதினால்

மாறுகால் மாறு கை வாங்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. நம்
முன்னோர்கள் எத்துனை நுட்பமான உடலியல் அறிவு பெற்றிருந்தனர் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஏனெனில் வல்லப்புற மூளை நம் உடலின் இடப்பாகத்தையும், இடப்புற மூளை உடலின் வலப்பாகத்தையும் இயக்குகிறது என்பது
அறிவியல் முன்னேற்றம் அடைந்த இன்றைய காலத்தில் நன்கு அறிந்ததே. மூளை பலமாக அடிபட்ட ஒருவருக்கு மூளையின் வலப்பக்கம் அடிபட்டால் உடலின் இடப்ப்உறம் என்று ஒன்று இருப்பதே நினைவில் இல்லாமல் போய்விடுமாம்.

மூளையின் இடப்புறம் அடிபடும் ஒருவருக்கு உடலின் வலப்புறம் இருப்பதே மறந்து போய்விடுமாம். இவர்கள் தலை சீவும் போது ஒரு பக்கமே சீவுவதும், முகச்சவரம் செய்யும் போது ஒரு பக்கம் மட்டுமே செய்வது (உதாரணத்திற்கு) மற்றொரு பக்கத்தைக் கவணிக்காமலே உதாசீனம் (நெக்லெக்ட்) செய்வார்களாம். தம்மை அறியாமல்தான். இது தான் நெக்லெக்ட் சிண்ட்ரோம் (Neglect syndrome) என்பது. நண்பர்களே உங்கள் நண்பர், உறவினர்களில் யாராவது இவ்வாறு செயல் புரிவதைக் கண்டால் உடனடியாக
நரம்பியல் மருத்துவரை அணுகச்சொல்லவும்... செய்வீர்களா....



ஆதிரா..