“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 24 நவம்பர், 2012

அழகைக் குறைக்கும் சீரியல் அழுகை!



                பெண்கள் தாங்கள் நினைத்ததைச் சாதித்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரே ஆயுதம் இதுதான். உப்பு கரிக்கும் என்றாலும் பெண்கள் இந்த அஸ்திரத்தைப் பயன் படுத்தி விட்டார்கள் என்றால் எப்பேர்ப் பட்ட கொம்பனாக இருந்தாலும் தப்பிக்கவே முடியாது. கணவன் தும்மலில்  தொடங்கி வாங்கும் கம்மல் வரை அழுது அழுது சாதிக்கும் அருங்குணம் அவள் குணம். ஆம்

                உண்ணும் வேளையில் கணவன் தும்முகிறான். மனைவி தலையில் தட்டி வாழ்த்திய அதே வேகத்தில் அழத்தொடங்கி விடுகிறாள். “உம்மை நினைக்க வேண்டிய நான் இங்கிருக்க யார் உம்மை நினைக்கிறார்கள், தும்மல் வருகிறதே?”. என்று அழத்தொடங்கி விடுகிறாள். மறுநாள் அதே உண்ணும் வேளையில் மீண்டும் வந்து விடுகிறது அதே தும்மல் அவனுக்கு. நேற்றைய நிலை வந்த் விட்டால் என்ன செய்வது என்று அவனுக்கு அச்சம். அதனால் அவன் தும்மலை அடக்கிக் கொள்கிறான். அன்றும் அழத்தொடங்கிவிடுகிறாள் தலைவி. இன்று ஏன் அழுகிறாய் என்று அவன் கேட்க, “நிச்சயமாக உங்களுக்கு யாரோ ஒருத்தி உள்ளாள். அது எனக்குத் தெரியக் கூடாது என்றுதான் வந்த தும்மலை அடக்கிக் கொண்டீர்கள்” என்று கூறி அழுகிறாள். அது மட்டுமா? மறுநாள் தனக்குத் தும்மல் வருவது போல வந்து வராது நின்று விடுகிறது. அன்றும் அழுகை. ஏன் என்றால் அவன் தன்னை நினைப்பது போல நினைத்து நினைக்காது விட்டானோ” என்று அழுகையாம். திருவள்ளுவரின் தலைவி இப்படிப்பட்டவள். இப்போது அவள் ஏன் அழுதால்? எப்படி அழுதால் என்பதில்லை ஆய்வு. இப்படி தும்மலுக்கும் இருமலுக்கும் அழுகும் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்குமா? என்பதே இன்றைய ஆய்வு.

                கண்டிப்பா பிடிக்காதுங்க.. இது நமக்குத் தெரிந்ததுதானே. ஆனாலும் ஆய்வு செய்து சொன்னாத்தானே நாம் நம்புவோம். அடக்கருமமே.... இதையும் ஆய்வு செய்து சொல்லி இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருக்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காதாம். மேலும் அழுபவர்களின் அழகும் குறையுமாம். இது  சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ள முடிவு.

                பெண்கள் எப்பொழுதுமே அதிகளவு உணர்ச்சி வசப்படுவார்கள், ஏதாவது ஒரு சின்ன கஷ்டம் என்ற உடனே அழுது விடுவார்கள். தமது துயரம் மட்டுமல்லாமல் மற்றவர்களின் துன்பங்களை கேட்டாலும் அழுதுவிடுவர்.

                இந்நிலையில் இஸ்ரேலை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டனர். இதில் ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். அவர்களில் பெண்களை மட்டும் தனிக்குழுவாகப் பிரித்து பரிசோதனை செய்தனர். அந்த குழுவின் மொத்தம் 60 பெண்கள் இருந்தனர்.

                பெண்கள் அமர்ந்திருந்த தனி அறையில் மிகவும் மோசமான அழுகை காட்சிகள் கொண்ட திரைப்படம் திரையிடப்பட்டது. சுமார் அரைமணிநேரம் படம் ஓடியது. இதனால் பெண்களுக்கு கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது. அப்போது அறைக்குள் நுழைந்த ஆராய்ச்சியாளர்கள் படம்பார்த்து கண்ணீர் வடித்த பெண்களின் கண்ணீரை சோதனைக் குழாய்களில் சேகரித்தனர். கண்ணீர் வராத பெண்களுக்காக மற்றொரு சோதனைக் குழாயில் உப்பு கலந்த நீரை தயார் செய்தனர்.

                பின்னர் கண்ணீர் வடிந்த பெண்களின் முகத்தில் உண்மையான கண்ணீரையும், கண்ணீர் வராத பெண்களின் முகத்தில் உப்புநீரையும் பேசியல் செய்வது போல் பூசினர். இப்போது யாருக்கு உண்மையான கண்ணீர், யாருக்கு பொய்யான கண்ணீர் என்பது ஆய்வாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு தெரியவில்லை.

                இந்நிலையில் வெளியே இருந்த ஆண்கள் சிலரை உள்ளே அழைத்து அந்த பெண்களின் அருகில் சென்று பேசச் செய்தார்கள். அப்போது ஆண்களின் முகத்தில் ஏற்படும் மாறுதல்களை துல்லியமாகப் பதிவு செய்தனர்.
                அதே வேளையில் ஆண்களுக்கு காதல் உணர்வைத் தோற்றுவிக்கும் டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் அவர்களது உடலில் எந்தளவு சுரக்கிறது என்பதையும் ஆய்வு செய்தனர்.

                ஆய்வின் முடிவில் கண்ணீர் வடிக்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது என்று முடிவுக்கு வந்துள்ளனர். அதைவிட முக்கியமானது அழுவதால் பெண்களின் அழகு குறையும் என்றும் தெரியவந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

                ஸ்ருதி ஹாசனின் அழகான அழுகை திரையுலகில் மிகப் பிரபலமாக உள்ளதாமே... அப்படின்னா வர இருக்கும் அவரது கணவருக்கு அவரைப் பிடிக்க வேண்டுமே...நாயகன் அழுகையை ரசித்த மக்கள் இந்த நாயகி அழுகையை ரசிக்க விரும்பவில்லையோ...

                ஐயோடா சாமி... அழுதால் அழகும் குறையுமாமே....இந்த சீரியல் நடிகைகளின் கதி என்னாவது?
                “பொண்ணு சிரிச்ச முகமா அழகா இருக்கா” என்று பெயர் வாங்குவது எப்படி? “அவ சரியான அழுமூஞ்சி” என்று பெயர் வாங்குவது எப்படி? அழுதால் கணவனுக்குப் பிடிக்காது, அழுவதால் அழகு குறையும் இவற்றையெல்லாம் தாண்டி சிந்தித்தோமானால், பெண்களின் கண்ணீரே அவர்களுக்கு எதிரி. எவரிடம் தன்னம்பிக்கை இல்லையோ அவரே கண்ணிரை நம்புவார். 'அவர்கள்' திரைப்படத்தில் வரும் கதாநாயகி போல எந்தச் சூழலிலும் அழ மாட்டேன் என்று சபதம் எடுத்துக்கொள்வது தன்னம்பிக்கையை மட்டுமல்ல நம் மீதே நமக்கு ஒரு நல்லெண்ணம் வளரத் துணையாக இருக்கும். எப்போதும் அழுது எந்தக் காரியத்தையும் சாதிக்க எண்ணக் கூடாது.. அது நம்மிடம் உள்ள அச்சத்தையே காட்டும். பெண்களே கண்ணீர் சிந்துவது கண்களுக்கு நல்லது. ஆனால் அது ஆனந்தக் கண்ணீராக இருக்கட்டும். அழுகை கண்ணீராக இருக்க வேண்டாம். .இனியொரு விதி செய்வோம். எந்த நாளிலும் அழுவதை விடுப்போம்......


(இது மே 1-15, 2012 குமுதம் ஹெல்த் இதழில் இடம்பெற்ற என் கட்டுரை. நன்றி குமுதம் ஹெல்த்)

3 கருத்துகள்:

  1. அழுது காரியம் சாதிக்கும் பெண் எனும் அவப்பெயரை துடைக்க வேண்டும். நமக்கென்று ஒரு சுய மரியாதை தேவை என்றால் அழுகையை ஆயுதமாக்குவதை கைவிட அழகு குறைந்துவிடும் எனும் காரணத்தையாவது கையிலெடுப்போமே.பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் தோழி. பெண் என்றால் அழுவாள் என்பதை மாற்ற வேண்டும். கருத்துக்கு நன்றி தோழி

      நீக்கு
  2. How to choose one of the most famous games - The King of Dealer
    The King of Dealer. The meaning 우리카지노 of this game is : the king of the games - you play the classic game of slots, jackpot slots, blackjack

    பதிலளிநீக்கு