“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

கண்களைப் போற்றுதும்! கண்களைப் போற்றுதும்!!

 


இன்று உலகெங்கும் இனிமையாகக் கேட்டுக்கொண்டு இருப்பது ஒரே மொழி. அனைவருக்கும் பொதுமொழி  இந்த ஒரே பொது மொழிக்குச் சாதி தேவையில்லை. மதம் தேவையில்லை, இனம் தேவையில்லை, மொழி தேவையில்லை, ஏன் இம்மொழியைப் பேச வாயே தேவையில்லை. கண்களே போதும். ஆம், அதுதான் காதல் மொழி. கண்கள் நடத்தும் காதல் உரையாடலில் வாய்மொழிக்கு இடமிருக்காது. திருவள்ளுவரும் பார்வை பேசும் காதல் பரிபாஷயின் போது செயல் இழந்து போகும் வாய் மொழயை,

கண்ணொடு கண்ணிணை நோக்குஒக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில
என்று கூறுவார்.

காதலை வரவேற்கும் அழகிய தோரண வாயில்கள் கண்கள். அழகாக அசைந்து மூடித்திறக்கும் இமைகள்தான் கதவுகள். ஆம் விழியின் வழியாக இதயம் நுழைந்து உயிரில் கலக்கும் உன்னதமானது காதல். இந்தக் காதல் நாடகத்தில் மன உணர்வுகளைக் காட்சிகளாக அமைப்பது கண்களே. காதல் குறிப்போடு பார்க்கும் முதல் பார்வையே காதல் பரிமாற்றத்திற்கு அரிச்சுவடி. தமிழரின் காதலுக்கு இலக்கணம் கூறிய தொல்காப்பியர் கண்கள் எழுதும் காதல் முன்னுரையை,

நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்
கூட்டி யுரைக்கும் குறிப்புரை

என்பார். நாட்டம் என்றால் கண் அல்லது பார்வை என்று பொருள்.

தமிழுக்கு கதி கம்பரும் திருவள்ளுவரும். திருவள்ளுவர் காமத்துப்பாலில் மட்டும் 52 குறட்பாக்களில் கண்கள் பேசும் காதலைப் பற்றிக் கூறுகிறார். கம்பரோ இராமனும் சீதையும் மெய் மறந்து நோக்கிய காதல் பார்வையை,

கண்ஒடு கண்இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்

என்று படம் பிடிப்பார். இதிலிருந்து கால காலமாகக் கண்கள் காதலுக்குச் செய்து வரும் உதவி நன்கு புரியும். அதிலும் இடக் கண்ணுக்கும் காதலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு. என் இடது கண்ணும் துடித்தது, உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள் என்பாள் காதலி.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்

என்றுரைத்து தன் கண்களின் கருமணியில் உள்ள பாவையை நீ போய்விடுஎன்கிறான் வள்ளுவத் தலைவன், தான் விரும்பும் பாவையாகிய தலைவிக்கு அங்கு இடம் இல்லாததால்.(குறள்-1123)
        வள்ளுவர் படைத்த தலைவியோ கண்களை இமைக்க மாட்டேன் என்கிறாள். (குறள்-1129) கண்களுக்கு மை எழுத மாட்டேன் என்கிறாள். (குறள்-1127) இமைத்தாலும் மை எழுதினாலும் தலைவன் கண்களைவிட்டு மறைந்து விடுவான் என்கிறாள். இதனால் பெரும்பாலும் காதலை வளர்ப்பது கண்களே எனலாம். இதுவும் வள்ளுவன் வாய்மொழியே. 
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது

காதலுக்கு மட்டுமா? கருணைக்குக் கண்களை விட யார் தாயாக இருக்க முடியும். அருகில் இருக்கும் பிற உறுப்புகள் படும் வேதனைக்குக் கண்ணீர் விட்டு அழுவது  கண்களே. இக்கண்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அழுவார் யார்?

எங்கோ ஒரு மூலையில யாருக்கோ துன்பம் என்றால் இங்கிருந்து கண் கலங்குகிறதே இதனைத் தான் கண்ணோட்டம் என்று திருவள்ளுவர் கூறுவார். கண்ணோட்டத்தினால் உலகியல் நடக்கிறது என்றுரைத்து       
    “கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்  
     புண்ணேன்று கருதப் படும்”
என்றும் கூறுவார்.
ஐம்புலன்களில் அறிவைப் பெற்றுத்தருவதில் கண்களே முதலிடம் பெறுகிறது. கற்றவரைக் கண்ணுடையார் என்றும் கல்லாதவரை முகத்தில் இரண்டு புண்ணுடயார் என்றும் கூறுவதால் கல்வியின் அடையாளம் கண்கள் என்பதை அறியலாம். இதனை அறிவுக்குறியீடு என்றும் கூறலாம்..

கண், ஒரு நோய் அறிவிப்பாளர் (indicator). உடலில் ஏற்பட்டுள்ள நோய்களை அறிவிப்பது கண்களே.. வண்ண ஜாலங்கள் காட்டி நோயைக் காட்டிக் கொடுத்து விடும். சூட்டு நோய் என்றால் செவ்வறி ஓடிய அழகிய கண்கள் ஒரேயடியாகச் சிவந்து பயமுறுத்தி விடும், கண்களில் சீழ் வடிந்து இமைகள் தானே மூடிக் கொள்ளும். காமாலை என்றால் மஞ்சள் நிறமாக மாறி விடும். இரத்தச் சோகை என்றால் கண்கள் வெளுத்து விடும். சோர்வு என்றால் சுமை தாங்காது இமைக் குதிரைகள் அடிக்கடி மூடிப் படுத்துவிடும். சுகம் என்றால் தண்ணீரைக் கண்ணோரம் காட்டும். சோகம் என்றால் வெந்நீரைக் கன்னத்தில் கொட்டும். காதல் என்றால் கண் விழி மேலே போய் சொருகிக் கொள்ளும். கண்ணம்மாவின் காதலை எண்ணிக் களித்த பாரதி,

நிலவூறித் ததும்பும் விழிகளும்

என்று கூறுவது இதற்குச் சாட்சி. (காதலும் ஒரு நோய் தானே) காதலியின் ஒரு பார்வை காதல் நோயை உண்டாக்கும். ஒரு பார்வை காதல் நோய்க்கு மருந்து போடுமாம் சொல்கிறார் திருவள்ளுவர்.

இருநோக்கு இவள்உண்கண் உள்ளது; ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

முகத்துக்கு அழகு சேர்ப்பதும் கண்தான். அட கொஞ்சும் போது என் கண்ணே, கண்மணியே என்றுதான் கொஞ்சுகிறோம். யாராவது மூக்கே, காதே என்று கொஞ்சியது உண்டா? எல்லாவற்றுக்கும் முந்திக் கொண்டு வந்து, மூக்கு அடிக்கடி உடைபடுவது போல இத்தனை தகுதிகள், பெருமைகள் பெற்றிருக்கின்ற கண் உடைபடுகிறதா பாருங்கள். கண்களுக்கு அணியும் கண்ணாடிக்கு பெயர் சூட்டிக் கொள்வது மூக்காம். இதுக்கு என்னங்க சொல்றீங்க. கண்கள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடக்கமாக முகத்தின் உள்ளே அமைந்து முகத்துக்கு அழகையும் அல்லவா தருகின்றன.

இவ்வளவு முக்கியமான உறுப்பு கண். அதை நாம் சரியாகப் பார்த்துக் கொள்கிறோமா என்றால் அது தான் இல்லை. நம் முன்னோர்களில் எத்தனை பேர் கண்ணாடி அணிந்து இருந்தனர். எத்தனை பேர் காட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இப்போது கண்ணாடி இல்லாமல் யாரையும் பார்க்க முடிவதில்லை. முக்கியமாக இளைஞர்களை. அப்படி தப்பித்தவறி சிலரைப் பார்க்க நேர்ந்தால் அவர்கள் கண்களுக்குள் லென்ஸ் பொருத்திக் கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள். பொன்னாங்காணியை (பொன்னாங்கண்ணி) உணவில் பயன்படுத்தினர். சர்ஜரியில் இருந்து கண்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள். கண்களைப் பொன் போல
காப்பதனால் இந்தக் கீரைக்குப் பொன்னாங்காணி என்று பெயர் வந்திருக்கலாம்.

மேல நோய்களின் அறிகுறியைக் கண்கள் காட்டும் என்று பார்த்தோம். நோய்களின் அறிகுறியே அன்றி, கண்களுக்கே வரும் நோய்கள் பொதுவாக கண் எரிச்சல், கண்களில் கண்ணீர் வடிதல், (கண்களில் கண்ணீர்தான் வடியும். கங்கை நீரா வடியும் என்று நினைப்பது புரிகிறது), கண் வறண்டு போதல் (dry eye Sintrom), கண்வலி (மெட்ராஸ் ஐ) போன்றவை.

கண் எரிச்சல் தூக்கமின்மை காரணமாகவும், அதிக சூட்டின் காரணமாகவும் வருகிறது. தலையில் நீர் கோத்துக்கொண்டால் கண்ணில் நீர் வடிகிறது. கண் வறண்டு போவது என்பது கண்ணில் இருக்கும் ஈரப்பதம் உலர்ந்து போவது. இமைகளை கொட்டாமல் உற்று உற்று பார்த்து வேலை செய்பவர்களுக்கு இந்நோய் வருகிறது. முக்கியமாக குளிரூட்டப் பட்ட அறையில் அமர்ந்து கணிப்பொறியே கதி என்று இருப்பவர்களுக்கு இந்நோய் வருவதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது. (கண் கொட்டாமல் உற்று உற்று பார்க்கும் காதலர்களுக்கும், கோபத்துடன் முறைத்து முறைத்துப் பார்க்கும் கணவன் மனைவிக்கும் கூட இந்நோய் வர வாய்ப்பு உள்ளது)
இக்கண் நோய்களுக்கு எல்லாம் மருந்து எள்ளு, கடுக்காய், ஆமணக்கு, வில்வ வேர் ஆகிய நான்கையும் நன்கு இடித்து மெல்லிய துணியில் சிறு ச்¢று பொட்டனமாக மடித்துக் கொண்டு, செக்கில் ஆட்டிய நல்ல எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி இளம்சூட்டில் கண்ணின்மீது ஒற்றடம் கொடுக்க, வெள்ளம் போல வந்த படைகள் சிங்க மன்னனைக் கண்டு, ஓடியது போல, கண் நோய் ஓடி விடுமாம். சிங்க மன்னன் என்பது நரசிங்கப் பெருமாள். பாடல் இதோ,

எள்ளு கடுக்காயா மணக்கு வில்வவேர் முத்து வெடித்துப் பின்னே
மெள்ளநறுக்கிப் பொட்டனமாய் மிகுந்த யெண்ணெய் காயவைத்து
மெள்ள கண்ணி லொத்திடவே விதனந்தீரும் வேந்தர்சிங்கம்
வெள்ளப் படையை வென்றான் காண்போலே வியாதி வெளியாமே

இதைவிடவும் எளிய மருந்து மற்றொன்றும் பழம்பாடலில் இருக்கிறது. நன்கு உருக்கிய நல்ல நெய்யில் கொஞ்சம் தவிட்டைப் பிரட்டி நன்கு உருட்டிக் கொண்டு, கண்களின் மீது ஒற்றடம் கொடுக்க வேண்டும். பிறகு புளித்தக் காடியில் (பழைய சோற்றுத் தண்ணீர்)கண்களை நன்கு கழுவ வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த சந்தனத்தை அரைத்துப் பூச வேண்டும். இப்படி செய்தால் கண்களில் வரும் நோய்கள் எதுவாக இருந்தாலும் இலங்கை மன்னன் இராவணனைக் கண்ட எதிரிப் படைகள் போல பறந்து ஓடுமாம். பாடலைப் பார்ப்போமா.

நீர் விழுந்து கண்புகைந்து நிரய முகத்தில் அனலாகில்
சேரும் சகத்தின்று நெய்யைச் சேர்ந்தே தவிடுதனில் உருட்டி
வாராங் காடியாற கழுவி வளர்ச் சந்தனத்தை தான்அப்பி
பாரும் இலங்கை சிங்கத்தைக் கண்ட படைபோற் பறந்திடுமே

முதல் கூறிய மருந்தில் எள்ளு, கடுக்காய், ஆமணக்கு, வில்வவேர் ஆகிய நான்கும் மிக எளிதாகக் கிடைப்பது. செய்முறையும் மிக எளிது. இரண்டாவது மருந்து தவிடு, நெய், சந்தனம், காடி இதுவும் வீட்டில் இருப்பதுதானே. முயற்சி செய்து பார்க்கலாமே? மூக்குக் கண்ணாடியைக் கொஞ்ச வயது ஆன பின்பு பயன்படுத்தலாமே.

மாரல்:
கம்ப்யூட்டராக இருந்தாலும் காதலராக இருந்தாலும் உற்று உற்றுப் பார்ப்பது, முறைத்து முறைத்துப் பார்ப்பது எல்லாம் நோய் நோக்கு.
 
அவ்வப்போது கண்களை இமைப்பது, கண்களுக்கு ஓய்வு கொடுப்பது, கண்களுக்கு மென்மையாக மசாஜ் செய்வது, தலைக்கு நல்ல எண்ணெய் வைத்து குளிப்பது, நோய் கண்ட போது மேலே சொன்ன மருத்துவத்தைச் செய்வது போன்றவை அந்நோய்க்கு மருந்து.                               காதல் செய்வதற்காகவாவது க்ண்களைப் போற்றுங்கள்.. வரட்டா.... அடுத்த பதிவில் பார்க்கலாம்...



நன்றி குமுதம் ஹெல்த் ஸ்பெஷல்.








24 கருத்துகள்:

  1. கண்கள் போன்ற அழகான பதிவும் தகவல்களும். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கண்களை காக்கிறேன் என்று கண்களை தண்ணீரில் கழுவும் பழக்கம் பலருக்கு உண்டு, அது கண்வழி நோய் வர வழிவகுக்கும்... ஆகையால் முடிந்த வரை கண்ணை நன்றாக மூடிக் கொண்டு முகத்தை கழுவினால் நல்லது..

    பதிலளிநீக்கு
  3. உங்களுடைய பதிவுகளை சரியாகப் படிக்க முடியாமலும், பின்னூட்டமிட முடியாமலும், எழுதிய பின்னூட்டத்தை உடனடியாக போஸ்ட் செய்ய முடியாமலும் அந்த நீல கலர் கழிகள் போன்ற ஏதோ ஒரு படம் குறுக்கே வந்து நின்று படுத்துகிறது. முடிந்தால் அதை எடுத்து விடுங்களேன், ப்ளீஸ். vgk

    பதிலளிநீக்கு
  4. அன்பு vgk,
    ஏன் ஐயா ப்ளீஸ் எல்லாம். ஆனால் எனக்கு எதை எடுக்க வேண்டும் என்று புரியவில்லை. நீல கலரில் இருப்பது மணிக்காட்டி. அதைத்தான் சொல்கிறீர்களா vgk? ஆம் என்றால் எடுத்து விடுகின்றேன்.தகவலுக்கு நன்றி vgk.

    பதிலளிநீக்கு
  5. மணிக்காட்டி இல்லை மேடம். கீழே 6 ஸ்டெம்புகள் போல நீலக்கலரில் சிலிண்டர் வடிவத்தில் உள்ளன. அதன் மேல் சூரிய/சந்திர ஒளிகள் போலத் தெரிகின்றனவே, அதைத்தான் இடைஞ்சலாக இருப்பதாகச் சொல்கிறேன். நீக்க முடிந்தால் நீக்குங்கள்; இல்லாவிட்டால் இருந்துவிட்டுப் போகட்டும். vgk

    பதிலளிநீக்கு
  6. எந்த ஒரு பொருளை பாதுகாக்க வேண்டும் என நாம் கூற நினைக்கையில்
    கண் போல பாதுகாக்கவேண்டும் என்ற சொல் வழக்கில் இருக்கிறது. கண் நம் மெய்யில் எவ்வளவு பிரதானம் என்பது இதனால் விளங்கும்.
    கண்ணின் பெருமை பற்றியும் அதனை காக்கும் முறைகள் பற்றியும்
    இலக்கியப் பாடல்கள் மூலம் விவரித்திருப்பது அருமை.

    பதிலளிநீக்கு
  7. தலைப்பே அருமை...ஞாயிறுக்கு நிகராக நம் கண்கள்..ஆம் உடலின் சூரியன்கள்.. நமக்கு கண்ணில்லை என்றாலே சூரியன் எங்கே... போற்றி பாதுகாக்க அத்துணை வழிகளையும் சொன்னதோடு..வள்ளுவப்பெருந்தகை கம்பரும் கண்ணோடு கண் நோக்கிய கதைகளையும் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள் ..வாழ்த்துகள் ஆதிரா...

    ஒரு பொருள் கிடைத்தால் வைத்த கண் வாங்காமல் எழுதி முடித்துவிடுகிறீர்கள்.....

    பதிலளிநீக்கு
  8. vgk சார்,
    நீங்க சொல்வது டெம்ப்ளேட் என்று நினைக்கிறேன். இணைய வேகம் குறைந்தாலும் இது போல தடை ஏற்படும். எதற்கும் கால அவகாசம் கிடைத்தால் வேறு டெம்ப்ளேட் மாற்ற் முயற்சி செய்கிறேன். மீண்டும் வந்து சொன்னதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அன்பு சூர்யா ஜீவா,
    ஆம் அதுவும் கவனிக்கது. நம் ஆட்கள் வருகை சுத்தமில்லாத நீரில் கண்களைக் கழுவி விட்டு நோய் நோய் என்று பரிதவிப்பார்கள். அதற்கு குளு உள்ளது, அதனைப் பயன் படுத்த ரூ வேண்டுமே.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சூர்யா.

    பதிலளிநீக்கு
  10. அன்பு மகேந்திரன்,
    கண் போல வந்து கருத்திட்டுச் சென்றுள்ளீர்கள். தங்கள் வருகை, கருத்து இரண்டையும் எண் கண் மணிகள் போல நினைக்கிறேன். இரு கண்களிலும் பார்வை தந்தமைக்கு நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  11. அன்பு பத்மநாபன்,

    //ஞாயிறுக்கு நிகராக நம் கண்கள்..ஆம் உடலின் சூரியன்கள்.. நமக்கு கண்ணில்லை என்றாலே சூரியன் எங்கே... போற்றி பாதுகாக்க//

    ஆம், சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ!!! யாரோ சொன்ன மாதிரி இல்ல? ஹா ஹா

    //வள்ளுவப்பெருந்தகை கம்பரும் கண்ணோடு கண் நோக்கிய கதைகளையும் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்//

    கண்களில் ஒளி இருந்தால்தானே காட்சிகளைக் காண இயலும். கண் படுத்தும் பாடு என்று காதலைப் பற்றித்தான் எழுத நினைத்தேன். இந்த குமுதத்திற்கு கட்டுரை எழுதாமல் விட்டுவிட்டதால் ஒரு கூட்டாக ஒப்பேற்றி விட்டேன்.

    //ஒரு பொருள் கிடைத்தால் வைத்த கண் வாங்காமல் எழுதி முடித்துவிடுகிறீர்கள்...//

    அது என்னவோ உண்மைதான் பத்மநாபன். பார்த்துப் பார்த்துக் கண்கள் சோர்ந்த கண்கள் அடிக்கடி என்னிடம் கெஞ்சும். கொஞ்சம் ஓய்வு உனக்காக இல்லையென்றாலும் எங்களுக்காக எடுக்கக் கூடாதா என்று. பாவம் அவை..

    ஒப்பேற்றும் ஒரு கட்டுரைக்கும் உங்கள் வாழ்த்து கிடைப்பதில் என் பொறுப்பு அதிகரிப்பதாக உணர்கிறேன் பத்மநாபன். மனம் சொல்கிறது இனிய நன்றியை.

    பதிலளிநீக்கு
  12. ஆதிரா,

    கண்களே சிறந்தது என வைரமுத்து சொல்கிறார். காரணத்தை கேளுங்களே,
    //கண்ணே உன்னை காட்டியதால்
    என் கண்ணே சிறந்ததடி
    உன் கண்களை கண்டதும்
    இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி//
    (படம்:பார்த்தேன் ரசித்தேன், இசை:பரத்வாஜ்)

    பதிலளிநீக்கு
  13. //கண்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அழுவார் யார்?//

    அழுவார் யார்? என்பதை விடுத்து வருவார் யார் என்று கேட்டால், இங்க போய் பாருங்க http://manavili.blogspot.com/2009/07/blog-post_1440.html

    பதிலளிநீக்கு
  14. // (கண் கொட்டாமல் உற்று உற்று பார்க்கும் காதலர்களுக்கும், கோபத்துடன் முறைத்து முறைத்துப் பார்க்கும் கணவன் மனைவிக்கும் கூட இந்நோய் வர வாய்ப்பு உள்ளது)//

    ஐ அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர்.

    அதென்ன காதலர்கள்-ன்னா உத்த்த்த்த்து பாப்பாங்க? கணவன் மனைவி-ன்னா மொறைச்சி பாப்பாங்க?

    கணவனும்,மனைவியும் - காதலர்களாக இருந்தால்!

    பதிலளிநீக்கு
  15. ஆதிரா,

    கிராமங்களில் குழந்தைகளின் கண்களுக்கு ஆமணக்கு பஞ்சினில் தொட்டு வைப்பார்கள். சிறிது நேரம் கழித்து குளிப்பாட்டுவார்கள்.

    சித்திரை மாதங்களில் மதியவேளைகளில் வீட்டில் ஓய்வில் இருக்கும் போது கண்களுக்கு (பெரியவர்களுக்கும்) ஆமணக்கு எண்ணை விட்டுக்கொண்டு குட்டி தூக்கம் ஒன்று முடித்து குளிப்பார்கள்.

    ஆமணக்கு எண்ணையை வீட்டிலேயே தயாரிப்பார்கள். அந்த தயாரிப்பு முறையை ஒரு கட்டுரையாகவே எழுதலாம். அது மிக சுவாரஸ்யமான ஒரு தயாரிப்பு.

    நாசமாப்போன தொலைகாட்சி பெட்டி வந்தது. அத்தனையும் போச்சு.

    உங்களின் இப்பதிவு, சிறுபிராயத்து நினைவுகளில் நீந்த வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  16. மாரல்:
    கம்ப்யூட்டராக இருந்தாலும் காதலராக இருந்தாலும் உற்று உற்றுப் பார்ப்பது, முறைத்து முறைத்துப் பார்ப்பது எல்லாம் நோய் நோக்கு.


    கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்ய சூரியனைத் தேடாமல் வருமுன் காப்போம்.

    பதிலளிநீக்கு
  17. நேர்வழி நடப்பவர் கண்நோக்கிப் பேசுவர். கண்கள் உள்ளத்தைக் காட்டிவிடும். நல்ல பதிவு .வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. அன்பு சத்ரியன்,

    கண்களே சிறந்தது என வைரமுத்து சொல்கிறார். காரணத்தை கேளுங்களே,
    //கண்ணே உன்னை காட்டியதால்
    என் கண்ணே சிறந்ததடி
    உன் கண்களை கண்டதும்
    இன்னொரு கிரகம் கண்முன் பிறந்ததடி//

    ஓஒ அப்படியா.. இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை. ஆமா.. ஆனா..இதை நான் சொல்லவில்லை. வைரமுத்துவின் அப்பா கண்ணதாசன் கூறுகிறார்.

    //கண் போன போக்கிலே கால் போகலாமா//


    அழகிய பாடலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சத்ரியன். இதெல்லாம் காதல் மன்னன்..தப்பு தப்பு..காதல் கவிதை மன்னன் சதிரியனுக்குத் தானே நன்கு தெரியும். ஹா ஹா

    பதிலளிநீக்கு
  19. //கண்களுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் அழுவார் யார்?//

    அழுவார் யார்? என்பதை விடுத்து வருவார் யார் என்று கேட்டால், இங்க போய் பாருங்க http://manavili.blogspot.com/2009/07/blog-post_1440.html
    சத்ரியன்,

    இனி தூசு விழுந்தாலும் என்ன பிரச்சனைன்னாலும் மனவிழிக்கு அனுப்பி வைச்சிடுவோம்ல..

    பதிலளிநீக்கு
  20. //ஐ அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர்.

    அதென்ன காதலர்கள்-ன்னா உத்த்த்த்த்து பாப்பாங்க? கணவன் மனைவி-ன்னா மொறைச்சி பாப்பாங்க?

    கணவனும்,மனைவியும் - காதலர்களாக இருந்தால்!//

    சத்ரியன் கணவனும்,மனைவியும் - காதலர்களாக இருந்தால் இதையே கொஞ்சம் மாத்தி யோசிப்பாங்க...(செய்வாங்க)
    எங்கேயோ இடிக்கற மாதிரி இருக்கே....

    பதிலளிநீக்கு
  21. //சித்திரை மாதங்களில் மதியவேளைகளில் வீட்டில் ஓய்வில் இருக்கும் போது கண்களுக்கு (பெரியவர்களுக்கும்) ஆமணக்கு எண்ணை விட்டுக்கொண்டு குட்டி தூக்கம் ஒன்று முடித்து குளிப்பார்கள்.//

    எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் சத்ரியன்.

    சத்ரியன் ஆமணக்கு எண்ணெய் என்பது விளக்கெண்ணெயா?

    தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்குத்தான் இது போன்ற பிரச்சனைகள் அதிகம்.

    அடுத்து சத்ரியனின் வெளக்கெண்ணெய் பதிவுக்குக் (விளக்கெண்ணெய் பற்றிய பதிவுக்குக்) காத்திருக்கிறோம். சொல்லுங்க சத்ரியன்.

    பலமுறை வந்து பல அரிய கருத்துகளைக் கூறியதற்கு நன்றி சதிரியன்.

    பதிலளிநீக்கு
  22. அன்பு இராஜேஸ்வரி,
    கண்டிப்பாக நம் போன்று கணினியே கதி என்று கிடப்போரும் கண்களைச் சற்று கவணிக்க வேண்டும். அழகான கருத்துக்கு நன்றி இராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் ஜி.என்.பி.ஐயா,
    ஆம் அதனால்தான் நிமிர்ந்த நடை நேர் கொண்ட பார்வை வையத்தில் எவர்க்கு அஞ்சாத தன்மை வேண்டும் என்று பாரதியும் கூறுகிறார்.

    வாழ்த்துக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  24. கண்மொழி...இதுதான் காதல்மொழி... பகிர்வு நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு