“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வியாழன், 23 டிசம்பர், 2010

சாவின் சுவை....

தலைப்பை பார்த்து பயந்துட்டீங்களா? சாவுக்கு ஒரு சுவையா என்று? எல்லாவற்றிலும் ஒரு சுவை, ஒரு திரில் இருக்குதுங்க। அதை நாம ரசிக்க கற்றுக்கொண்டால் சாவும் சுவைக்கும் தானே।
என்ன பொழப்புடா இது செத்த பொழப்பு என்று அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார்கள் சிலர். இன்னும் சிலர் இப்படி வாழ்றத விட செத்து ஒழியலாம் என்று அலுத்துக் கொள்வர். இப்படியெல்லாம் சொன்னாலும் சாவை மட்டும் ஒருவரும் விரும்புவதே இல்லை. அதை விட ஒரு சிலர் என்ன சொல்லி திட்டினாலும் பொறுத்துக்கொள்வார்கள். செத்துத் தொலைய வேண்டியதுதானே என்று ஒரு வார்த்தையைக் கேட்டால் மட்டும் போதும்; சொன்னவரைச் சாகடிக்காமல் விட மாட்டார்கள். ஆனா நான் என்ன சொல்ல வர்றேன்னா “ஏம்மா சாவுகிராக்கி; வூட்ல சொல்லிட்டு வந்துட்டியா”ன்னு யாராவது நம்பள திட்டினாலும் சுவாரசியமா எடுத்துட்டு சிரிக்கக் கத்துக்கிடனும்। அவ்வளவு சுவையானது சாவு.
சாதலும் புதுவதன்று என்று நம் பாட்டன், அவர்தான் கணியன் பூங்குன்றன் சொன்னது போல பிறக்கும் போதே இறப்பு உண்டு என்பது தெரிந்திருந்தாலும் சாவு என்று சொல்லும் போதே நம் குலை நடுங்குகிறது. நாம் ஒவ்வொருவரும் வரும்போதே திரும்பிப் போகப் பயணச்சீட்டோடு வந்திருக்கிறோம்.. நாள் மட்டுமே குறிக்கப் படாத பயணச்சீட்டுடன் (Return Journey) வந்துள்ளோம் என்பது கண்டிப்பாக நாம் அறிந்ததே. குத்து மதிப்பாகச் சொல்லப் போனால் (RAC) என்று கூறிக்கொள்ளலாம். புறப்பட்ட இடத்துக்குப் போய்த்தானே ஆக வேண்டும் என்பதும் தெரியும். ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழியை, வாய் நிறைய அடிக்கடி கூறிக் கொண்டிருந்தாலும் உள்ளூற பயம். அப்படி என்ன பயம் இந்தச் சாவில்.
இதைவிட சாவு நிகழ்ந்த வீட்டில் அழுகை வந்தாலும் வராவிட்டாலும் அழுதாக வேண்டும் என்று அழுபவர்களைப் பார்த்தால், பட்டினத்தார் பாடும் பாடலடிகள்தான் எனக்கு நினைவுக்கு வரும்.
செத்துகிடக்கும் பிணத்தருகே இனிசாம் பிணங்கள்
கத்தும் கணக்கென்ன? காண்கயிலாயபுரி காளத்தியே!
என்று கிண்டல் செய்வதைப் பார்த்தால் இந்த ஆசாமிகள் மாதிரி நாம் இருக்க முடியுமா என்று தோன்றும். ஆனால் பட்டினத்தாரும் தன் தாயின் சாவுக்கு இரங்கி
நொந்து சுமந்து பெற்று நோவாமல்
ஏந்தி முலைதந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டுவேன்!
என்று அழுத பாடல்கள் இன்றளவும் தாய்மையின் சிறப்பைக் கூறி நிற்கிறது.
இந்தச் சாவு பாருங்க எல்லோருக்கும் ஒரே மாதிரி வருவது இல்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாக வருகிறது. தூங்கிக்கொண்டு இருக்கும் போதே சிலர் மரணத்தை அடைந்து விடுகின்றனர். மரணமும் ஒரு தூக்கம் தானே. அதனால்தான் சாவைச் சொல்லும்போது உறக்கத்தோடு ஒப்பிடுவார் வள்ளுவர்.
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
என்பார். தூங்கி விழிப்பது போல பிறப்பும் இறப்பும் என்று கூறுவார்.
ஒரு சாவில் பிறந்ததே ஒரு பெரும் சமயம் என்றால் அந்தச் சாவு குறித்தத் தெளிவு நமக்கு வேண்டுமல்லவா? இறப்புக் கொடுமையைப் பார்த்துப் பயந்ததால் ஒரு சமயமே உருவாகியது என்றால் இறப்பு எத்தனை கொடுமையானது. ஒரு முடிவின் (சாவின்) ஆரம்பமே, சித்தார்த்தரைப் புத்தராக ஆக்கியது, புத்த சமயத்தைத் தோற்றுவித்தது எனலாம்.
சமீபத்தில் இணையத்தில் ஒரு மருத்துவக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.. நல்ல நம்பிக்கையூட்டும் கட்டுரை. மருத்துவக் கட்டுரை. படித்தவுடன் அக்கட்டுரைப்படி நடந்தால்....எப்படி இருக்கும்? என்ற கற்பனைச் சிறகுகள் விரிந்து கொண்டே சென்றன.
இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்கிறது அம்மருத்துவ கட்டுரை. பிறகென்ன.... அப்படியென்றால் இறப்புத் துக்கமே காசு உள்ள செல்வந்தர் இல்லங்களில் இனிமேல் இருக்காது. மனித வாழ்வு நிலையற்றதாக இருக்கும் போதே இத்தனை ஆட்டம் போடும் பணக்கார வர்க்கம். பணத்தால் உயிரை வாங்க முடியும் என்றால் பிடித்த உயிர்களை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்து, வைத்துக் கொண்டு கும்மாளம் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அரசியல் வாதிகள் கேட்கவே வேண்டாம். தங்கள் அபிமான ரவுடிகள், கள்ள ஓட்டுப் போடும் ஆசாமிகள் என்று எல்லோரையும் எத்தனை கோடி கொடுத்தேனும் காப்பாற்றி விடுவார்கள். தலைவனுக்காகத் தீக்குளிக்கும் தொண்டர்கள் கூட்டம் பெருகும்.
மனைவிமார்கள் எல்லாம் அதான் பணமும் தர்றேன்; உயிரையும் காப்பாத்தித் தரேங்கறாரே; போய்யா போய்த் தீக்குளிய்யா என்று தங்கள் கணவன்மார்களைத் நச்சறிக்க ஆரம்பித்து விடுவார்கள்...
தன் குடும்பத்துக்கு ஏதோ சிறிதளவு பணம் கிடைக்கிறது என்னும் போதே உயிர்த்தியாகம் செய்ய எண்ணும் தொண்டர்ப் படை, தன் உயிரே திரும்ப கிடைக்கும் என்றால் என்ன செய்யத் துணியமாட்டார்கள். என் தலைவனுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் உயிர் விடுவேன் உயிர் தலைவனுக்கு உடல் மண்ணுக்குபோன்ற மேடைகளில் எப்போதும் ஒலிக்கும் வீர வசனங்களுக்கு உயிர் வந்து விடும்.
இது கெடக்குது. சந்திரன் இந்திரன் எங்கு வீடு கட்டிக் குடியேறினாலும் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். இப்போது அவசர அவசரமாக கட்டப்படும் அடுக்கு மாடி வீடுகளும் கிடைக்காமல் போகும். ஒவ்வொரு அலமாரியிலும் ஒவ்வொரு குடும்பம் உட்கார்ந்தே தூங்க வேண்டியிருக்கும். அப்ப்பபா.... நினைக்கவே அச்சமாக இருக்கிறது.!!!
இப்படி வரிசை வரிசையாகக் கற்பனை எழுந்தாலும் ஒரு முன்னேற்றம் ஏற்படுகிறது என்றால் குறைகளைக் களைந்து அதனை ஏற்றுக்கொள்ளுவதே அறிவுடைமை.
ஆனால் இந்தச் சாவு என்பது என்ன? செத்தாரைக் காப்பாற்றுவது என்பது குறித்து மருத்துவ அறிவியல் என்ன கூறுகிறது என்று பார்க்கும் முன் நடந்த சம்பவம் ஒன்றைப் பார்க்கலாம்.
ஒருவர் திடீரென்று இதயத்தைப் பிடித்துக் கொண்டு மார்பு வலி என்கிறார். ஐந்தே நிமிடத்தில் படுத்து விடுகிறார். அவரது உறுப்புகள் யாவும் இருந்தது இருந்தபடியே எத்தகைய சேதமுமின்றி அப்படியே இருக்கின்றன முதலுதவி பலனின்றி இறந்து விடுகிறார். என்ன நடந்தது இருக்கும்? இரத்தம் இல்லை. கத்தல் இல்லை. ஆனால் இருதயமும் துடிக்கவில்லை, சுவாசப் பையும் இயங்கவில்லை. மூளை பிராண வாயுவைச் சேமிப்பதற்கான் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது. அவ்வளவுதான். மருத்துவ ரீதியாக இறந்து விட்டதாக கூறி விடுகிறார்கள். இதனை மூளைச்சாவு என்கின்றனர்.
முழுமையான கோமா நிலை, வலியை உணர முடியாத நிலை, சுவாசக் கருவியின் உதவியுடன் சுவாசித்தல், சுயநினைவு திரும்பாதிருத்தல், மூளைக்கு ரத்தம் செல்லாமல் இருக்கும் நிலை ஆகியவற்றையே மூளைச்சாவு என்கிறார்கள்.
இறப்பு என்பது என்ன? இரத்த அணுக்களின் அல்லது கலங்களின் (Cell) இறப்புத்தான், ஒருவனின் இறப்பு என்று கூறப்படுகிறது. அதாவது அந்த மனிதனின் இருதயத் துடிப்பு நின்றாலும், சுவாசம் நின்றாலும் மனிதன் உடனடியாக இறப்பதில்லை. இவை இரண்டும் செயற்படுவது நின்று நான்கு முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பின்னரே அவனது செல்கள் இறக்கத் தொடங்குகின்றன. அவர் இறந்ததற்குக் காரணம் குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் அவரது கலங்களுக்குப் ஆக்சிஜன் கிடைக்காததால் அவரது மூளையினது கலங்கள் செயற்பட முடியாதவாறு பாதிக்கப் பட்டதேயாகும். அதாவது அக் குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவரது இருதயத்தையும், சுவாசப் பையையும் மூளைச் செல்களையும் இயங்க வைக்க முடிந்திருந்தால் அவர் பிழைத்திருப்பார்.
இறப்புப் பற்றிய இக் கருத்துத்தான் இது வரை மருத்துவ உலகினால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக இருந்தது. ஆனால் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஒரு கண்டுபிடிப்புக் காரணமாக மேற் கூறிய கருத்து கேள்விக்கு உரியதாகியுள்ளது. University of Pennsuylvanவைச் சார்ந்த Dr. Lance Becker ஒரு பிரேதப் பரிசோதனை செய்து கொண்டிருந்த போதுதான் அந்த ஆச்சரியம் ஊட்டும் உண்மை வெளிப்பட்டது. இறந்து ஒரு மணி நேரம் ஆகியும் அந்த மனிதனது (அல்லது பிணத்தினது) கலங்கள் உயிரோடு இருந்தனவாம். வியப்படைந்த அவர் தனது பரிசோதனையைத் தொடர்நதார்..
இறந்து சில மணி நேரங்கள் செல்கள் உயிரோடு இருந்த போதும் மருத்துவர்களால் ஏன் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் முதல் ஐந்து நிமிடங்கள் பிராண வாயு இல்லாதிருந்ததால், பின்பு அக்கலங்களுக்குப் ஆக்சிஜன் கிடைத்த போதும் அதை ஏற்றுக்கொள்ளும் வலு செல்களுக்கு இல்லாது போய் விட்டது.
இருதயம் நின்று விட்ட ஒருவரை மருத்துவ மனைக்குக் கொண்டு வந்து சேர்க்க குறைந்தது பதினைந்து நிமிடமாவது ஆகிவிடுகிறது. இது மிகவும் குறைவு. உடனே இருதயத்தைத் துடிக்க வைக்க ஆக்சிஜன் பம்ப் செய்யப் படுகிறது. இரத்த ஓட்டம் இல்லாததால் பட்டினி கிடந்த செல்களை ஆக்சிஜனில் மூழ்கடிக்கிறார்கள். இது அவற்றின் மரணத்திற்கு ஏதுவாகிறது..
மாற்று சிகிச்சை முறையில், அதாவது இரத்தக் குழாய்களை இரத்தத்தால் நிறப்பாமல் அப்படியே விட்டுவிட்டு உடலுக்கான இரத்த ஓட்டத்தைச் செயற்கையாகக் heart-lung bypass machine மூலம் கொடுத்துக் கொண்டு இதயத்தைத் துடிக்க வைத்தால். 80 சதவிகித இதய நோயாளிகளைக் காப்பாற்ற முடியும் என்கிறது ஆய்வு.
அத்துடன் இரத்தத்தின் வெப்பத்தை 37 இலிருந்து 33 டிகிரி செல்சியஸ்க்கு குறைப்பதன் மூலம், ஆக்சிஜனால் வாயுவால் மூழ்கடிக்கும் போது கலங்களில் ஏற்படும் இரசாயன மாற்றங்களைக் குறைக்க முடியும் என்றும் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதை வெளியிடங்களிலும் செயற்படுத்தக் கூடியதாக உப்பும் ஐசும் சேர்ந்த ஒரு வித கலவையை ஊசி மூலம் ஏற்றும் முறையையும் கண்டு பிடித்திருக்கிறார்கள். (நன்றி மருத்துவர் எம்.கே.முருகானந்தன்)
மூளைச்சாவு ஏற்பட்ட நிலைகளில் உள்ள நோயாளிகளைக் குணப்படுத்துவது கடினம். மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்குப் பொருத்தினால், உறுப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளவர்கள் மறுவாழ்வு பெறமுடியும். நுரையீரல்,சிறுநீரகம்">சிறுநீரகம், போன்ற உறுப்புகளையும், திசுக்களையும் தானம் செய்யலாம் இவையெல்லாம் நாம் அறிந்தவையே. ஆனால் இந்த மூளைச் சாவு பற்றி நம் முன்னோர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பது நாம் அறியாதவை..
நான் என்ன கூறப்போகிறேன்.. வழக்கமாகக் கூறுவதைப்போல வியக்க வைக்கும் நம் முன்னோர்களின் அறிவுத்திறனை எடுத்துக்கூறப் போகிறேன்.. அவ்வளவுதான். எப்போதும் போல் நம்மவர்கள் அடக்கமாகவே இருந்து அமரர்களானவர்கள். அதிலும் சித்தர்கள் எதையும் மூடி மறைத்து அடங்கித் தம் திறமையை வெளியுலகுக்குக் காட்டாமலே பித்தர்களைப் போலத் திரிந்தவர்கள். ஆனால் இவர்களிடம், இந்த நுன்னறிவு எங்கிருந்து வந்தது என்பதுதான் நம்மால் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இன்றுவரை இருக்கிறது.
சாவாமையை வேண்டி மருத்துவர் இடைக்காட்டுச் சித்தர் எப்படி நுட்பமாக வரம் கேட்கிறார் என்பதைப் பாருங்கள். இது வெறும் பால் கறக்கும் பாடல்தான். பால் மனிதனின் பிறப்பிலும் இறப்பிலும் சம்பந்தப் படும் பொருள் ஆயிற்றே. சாவாமல் இருக்க வேண்டுமென்றால் மூளை செல்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதைப் புலப்படுத்திய இதய நோய் வல்லுநராக என் கண்களுக்குக் காட்சி அளிக்கிறார் இவர் நீங்களும் பாருங்கள் பாடலை.
சாவாது இருந்திட பால்கற - சிரம் தன்னில் இருந்திடும் பால்கற வேவாது இருந்திட பால்கற - வெறு வெட்ட வெளிக்குள்ளே பால்கற.
என்று அன்றே இறவாமை வேண்டி பாடியுள்ளார் இடைக்காட்டுச் சித்தர். அப்போது நம்ம இராமராஜனும் இது போல தத்துவங்கள் ஏதேனும் கூறியிருப்பாரோ என்று எண்ணுவது புரிகிறது. இவர் பாடலையும் ஆராய்ந்துவிட வேண்டியதுதான். இந்தப் பால் குறித்து சித்தர்கள் பலரும் பல்வாறு கூறியுள்ளனர். நான் சாவாமல் இருந்தால் இன்னும் சாவின் சுவை அடுத்த பதிவிலும் கூடும்..
நன்றி குமுதம் ஹெல்த்.

17 கருத்துகள்:

  1. எவ்வளவு விஷயங்கள், இயல்பாகவும் அழகாகவும் சொல்லியிருக்கீங்க. அருமையான அனுபவம்.

    பதிலளிநீக்கு
  2. சித்தர் சொன்ன பாலைக் கறப்பது அத்துணை எளிதா என்ன|?அதுவும் ’வெறு வெட்ட வெளிக்குள்ளே பால் கற’ என்று வேறு சொல்லி விட்டார்!ராமராஜன் மாதிரி பசுவிடம் பால் கறக்கவே தெரியாதே!
    மிக நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  3. கடினமான விஷயங்களையும் மிக எளிதாக அழகாக சொல்கிறீர்கள்..

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துத் தருகைக்கும் மிக்க நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.

    பதிலளிநீக்கு
  5. ருசித்துச் சுவைத்தமைக்கு மிக்க நன்றி வாசன்.

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள சென்னை பித்தன்,
    //சித்தர் சொன்ன பாலைக் கறப்பது அத்துணை எளிதா என்ன|?அதுவும் ’வெறு வெட்ட வெளிக்குள்ளே பால் கற’ என்று வேறு சொல்லி விட்டார்!//

    சித்தர்களின் பரிபாஷை வேறாக இருக்கலாம். ஒரு வேளை இவர் குறிப்பட்டுள்ளது பிட்யூட்டரி சுரப்பியையாகக் கூட இருக்கலாம். திருமூலர் சொன்ன ”நெற்றியிலே ஒளிரும் நீல மணி விளக்கு”
    என்பது போல.. இருக்கலாமோ என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. எண்ணற்ற சிந்தனைகள் இதில் தோன்றுகிறது. இதே கருத்தை வலியுறுத்துவதே “மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி?” என்பதும். எல்லாம் வலியுறுத்துவது சாவா மருந்தாகிய அமுத்ம் என்பது. இதையெல்லாம் அடுத்த கட்டுரையில் தொடர்கிறேன் நண்பரே...
    //ராமராஜன் மாதிரி பசுவிடம் பால் கறக்கவே தெரியாதே!//
    அது சும்மா..
    //மிக நல்ல பதிவு. //
    மிக்க நன்றி சென்னை பித்தன்.

    பதிலளிநீக்கு
  7. அறிவியல், உடலியல், விண்ணியல் என்று எல்லாவற்றையும் போகிற போக்கில் சும்மா சொல்லி வைத்து விட்டு சென்றுள்ளனர் நம் முன்னோர்கள். நாம் அதைப் படிக்காமல் மேலை நாட்டினர் கூறுவதே வேதம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம் என்ற ஆதங்கம் நிறையவே இருக்கிறது ரிஷபன்.

    கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. சாவின் சுவை... அற்புதமான டைட்டில்...

    சாவுகிராக்கி.. என்று ஆட்டோ அன்பர்கள் திட்டினால் கோபித்துக்கொள்ளக் கூடாதுன்னு சொல்றீங்க.. ;-)
    அருமை..அருமை...
    செத்த பிணத்தை பார்த்து சாகும் பிணங்கள்.. பட்டினத்தடிகளின் 'அடி'கள்.
    மனதைப் பற்றி பட்டினத்தார் சொல்லும் போது... அங்காடி நாய் என்று சொல்லுவார். பட்டினத்தார்... கரும்பை கையில் எடுத்து வாழ்க்கையை கரும்பாக இனிக்க பாடியது ஏராளம்..
    நாக்கு செத்து போய்... அடக்கம் பண்ணாம.... இடைக்காடரின் இந்தப் பாடல் ... நன்றாக இருந்தது... ;-)

    பதிலளிநீக்கு
  9. அன்புள்ள RVS,
    பட்டினத்தடிகள் பாட்டையெல்லாம் தாங்களும் ரசித்துப் படித்துள்ளீர்கள். அதையெல்லாம் படித்தால் இம்மண்ணுலகில் ஒருவருக்கு மண், பெண், பொன்னாசையெல்லாம் இல்லை சமுதாயச் சிந்தனையைத் தவிர வேறு ஆசையே வராது இல்லையா?

    அங்காடி நாய் போல் அலைந்து திரிந்தேன் என்ற் தொடர் அப்பர், திருமூலர், பட்டினத்தார். வள்ளலார் போன்ற அருளாளர்களால் கையாளாப்பட்டுள்ளது. வீட்டு நாய்க்கும் அங்காடி நாய்க்கும் உள்ள வேறு பாடு குறித்து சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் அரங்க இராமலிங்கம் நல்ல விளக்கம் தந்தார் ஒருமுறை.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி RVS. அதைச் சொல்ல மறந்துட்டேன். நெரய விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் போது மனதுக்கு நிறைவா இருக்கு. இன்னும் இலக்கியங்களை உங்கள் மூவருடனும் பகிர்ந்து கொள்ள ஆசையுடன்.. தொடர்வோம்..

    பதிலளிநீக்கு
  11. ஆதிரா...கொஞ்சம் தாமதாகி விட்டது... சாவில் சுவையா அது சாத்தியமா...சாவுபயம் தான் வாழ்க்கையே எனும் கோட்பாடு அனைத்து உயிர்க்கும் உள்ளும் இருக்கிறது...அதனால் தான் பிழைத்தல் எனும் பெயரே வாழ்க்கைக்கு கிடைத்துள்ளது.
    //
    நொந்து சுமந்து பெற்று நோவாமல்

    ஏந்தி // தாய்மை பாட்டு உருக வைத்தது..

    //வெட்ட வெளிக்குள் பால் கற // இடைக்காட்டு சித்தரின் இறையுணர்வு தத்துவ கவியை பொருத்தமாக எடுத்து போட்டுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  12. அது பொருத்தமா என்று தெரியவில்லை. ஆனால் சித்தர்கள் எல்லாரும் பால் பற்றி பேசியிருக்கிறார்கள். அது பற்றி கொஞ்சம் படிக்க வேண்டும். தாமதமான வருகையெல்லாம் இல்லை. தகுந்த நேரத்தில் வருகை தந்து கருத்தும் சொல்லும் நலம் விரும்பி தாங்கள். உங்கள் கருத்தே எங்களுக்கு ஊட்ட்ச்சத்து. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    அது எப்படி? நான் தங்கள் வலைப்பூ வந்தது உங்களுக்குத் தெரிந்ததா?

    இன்று நான் தங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டு அதிர்ந்து வந்தேன். அத்தனை உரையாடல்கள் போயிருக்கின்ற்னவே. கண்டிப்பாக அனைத்தையும் படிக்க வேண்டும். மாலை வரலாம் என்று எண்ணி வந்தேன்.

    பதிலளிநீக்கு
  13. சித்தர்களை அதிகமாகப் புரிந்து கொள்ளவில்லை நாமென்று நினைக்கிறேன். ஒவ்வொரு சொல்லும் பரிமொழி என்பார்கள். மருத்துவத்திலும் உடலறிவிலும் அத்தனை நுட்பம் தெரிந்து வைத்தவர்கள் என்று நினைக்கும் பொழுது வியப்பு ஓயவில்லை. என் பள்ளித்தோழியின் தாய் சித்த மருத்துவர். அவரைக் கிண்டல் செய்வார்கள். தன் வீட்டில் இருந்தபடியே பக்கத்து வீட்டுக்காரர் வயிற்று நோயைக் குணப்படுத்தியதாகச் சொல்வார்கள். கொஞ்சம் பயம் தான்.
    என்னைக் கேட்டால் சித்தர்களின் தமிழே அருமருந்து தான், அதற்குப் பின் தேங்காய்பால் ஏதுக்கடி என்று தான் தோன்றும்.
    சாவில் சுவை உண்டோ இல்லையோ கவர்ச்சி உண்டு. கவர்ச்சியைப் பொறுத்த வரை காதலுக்கு அடுத்த இடம் சாதலுக்குத் தானே?
    abstract விவரத்தை அழகான தமிழோடு எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள்.. நன்றி.

    பதிலளிநீக்கு
  14. If u afraid to die, then die now itself.
    bcoz, u can not die again, once u r dead.
    (i dono who said this)

    பதிலளிநீக்கு
  15. அன்பு அப்பாதுரை,
    ஆம. சித்தர்களின் பரிபாஷை இன்னும் விளங்காதாதாலே அவர்கள் கூறிச்சென்ற மருத்துவம் நமக்கு இன்னும் புதிராக உள்ளன.

    சாவாமை குறித்துப் பொதுவாக எல்லா சித்தர்களும் பேசியிருக்கிறார்கள். அவர்கள் எதை சாவு என்று கூறுகிறார்கள் என்பது தெரியவில்லை.

    அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்ற் அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  16. அன்பு நாகசுப்ரமணியம்,
    எனக்குத் தெரியும் யார் சொன்னது என்று.. சொல்லவா? சொல்லிடவா?
    அது நீங்கதான்..

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாகசுப்ரமணியம்.

    பதிலளிநீக்கு