“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

ஞாயிறு, 21 நவம்பர், 2010

மணக்கும் சந்தனம் இனிக்கும் செய்திகள்..

சந்தனக் கடத்தல் வீரப்பனைத் தெரியும்!!! சந்தனத்தை??


காசி என்பது புண்ணிய தலம் என்று கேட்டு இருக்கிறோம். படித்து இருக்கிறோம்.அதற்கு மற்றுமொரு வரலாற்றுப் பதிவும் உண்டு. பாரதியைப் பற்றி எழுதும் அனைத்து இலக்கியவரலாறு படைத்த எழுத்தாளர்களும் எழுதுவது பாரதி காசியில் இருக்கும்போது மீசை வைத்துக்கொண்டார். மீசை வைத்துக்கொள்வத்ற்காகவா பாரதி காசி சென்றிருப்பார்.புலம் பெயர்ந்த சோகம். அங்கும் போலிகளின் பொய் புரட்டு இவை பாரதியை மீசை வைத்துக்கொண்டுஎவருக்கும் அடங்காத காளையாகத் திரிய வைத்திருக்கும். பிற்காலத்தில் இது ஒரு வரலாறாகப்பதிவாகியது.

காசி பலரைத் தோற்றத்தில் மாற்றிய இடமாகும். துறவு பூண்டு வடதிசைச் சென்றஈரோட்டுப் பெரியாரின் தாடி வளரவும் காசியே போதிமரமாக இருந்ததுள்ளது. ஏனென்றால் இந்தமீசையும் தாடியும் வரலாற்றுப் பதிவு ஆகியுள்ளதே. இவற்றைப் பற்றி எண்ணும் போது திருவள்ளுவர்கூறிய,
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்
என்ற குறள் நினைவுக்கு வராவிடின் நாம் தமிழராக இருக்க முடியாது.

தமிழகத்தைப் பொர்றுத்தமட்டில் மீசை எனறால் இருவருக்கு மட்டுமே என்றுநினைக்கும் நிலை. ஒன்று திருடனுக்கு. மற்றொன்று காவலருக்கு. இவர்களின் மீசை வரலாறுபடைத்து உள்ளது என்றால் அது மிகையாகாது. சரி மீசையைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை என்றுநினைத்துவிடாதீர்கள். மீசை என்றவுடன் நம் கண்களில் பளிச்சிடும் ஒரு நபர் வீரப்பன்.வீரப்பன் என்றவுடன் நம் நாசிகளில் வீசிடும் ஒரு மணம் சந்தனம். அதைப்பற்றி எழுதுவே இத்தனைசுற்றி வளைப்பு.. ஆமாம் பக்திமான் என்று தன்னை அடயாளப்படுத்திக்கொள்ளபலர் போடும் வேஷங்களின் முக்கிய இடம்பிடிப்பது சந்தனம். உடல் முழுவதும் சந்தனம் பூசிக்கொள்வதுஉடலுக்கும் நல்லது. பிறரிடம் நன் மதிப்பையும் பெற முடியுமே. சிலர் தன்னை சந்தனப்பொட்டுக்........என்று சொல்லிக்கொள்வது... திரையினால் நாம் அறிந்ததே. பொதுவாகக் கேரள நாட்டிளம் பெண்கள்மிகவும் அழகாக இருப்பர். காரணம் அவர்களின் முகத்தில் சந்தனம் நின்று நிலவுவதாலோ என்றும்எண்ணத்தோன்றும். விழாக்களில் நம்மை மணத்தோடு வரவேற்கும் சந்தனத்தை இந்த பதிவில் நாம்வரவேற்போமா?

இது விலை உயர்ந்தது என்பது நாம் அறிந்தது. ஆனால் எந்த அளவு பயன்உடையது, மருத்துவ குணம் உடையது என்பது நம்மில் பலரும் அறியாதது. இந்தியாவில்காணப்படும் மரங்களில் மிகவும் விலை உயர்ந்தது சந்தனமரம். இதன் தாயகம் இந்தியாதான்.இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. நன்கு வளர்ச்சியடைந்தசந்தன மரமே வாசனை நிரம்பியது.
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQzeZa4gdPQh3hZp6i9BeUDdU9ezR95Kr1kghVt1OFEdOvUnSmYFA
சந்தன மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து கொண்டது.இதில் இருந்து எடுக்கப்படும் அகர் என்னும் எண்ணெய் மருத்துவ குணம் கொண்டது. சருமத்திற்குகுளிர்ச்சி தரக்கூடியது. சிவப்பு, மஞ்சள், வெண்மை என்று மூன்று நிறத்தின் அடிப்படையில் சந்தன மரக்கட்டைகள் தரம்பிரிக்கப்படுகின்றன. நிறம் இவ்வாறு வேறுபட்டு இருந்தாலும் மருத்துவக் குணம் ஒன்று தான்.எனினும், செஞ்சந்தனம் சில சிறப்பு குணங்களைக் கொண்டு காணப்படுகிறது.

தென் இந்தியாவில்இலையுதிர் காடுகளில் அதிகம் காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில், தானே வளரக்கூடியது.. தமிழகத்தில் தனிப் பெரும் மரமாகும். மாற்றடுக்கில் அமைந்த இலைகளையுடைய மரம். இலைகளின்மேற்பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப் பகுதி வெளிறியும் காணப்படும். கணுப்பகுதியிலும்நுனிப் பகுதியிலும் மலர்கள் காணப்படும். உலர்ந்த நடுக் கட்டைதான் நறுமணம் உடையது. மருத்துவப்பயனுடையது. இதை காடில்லாத மற்ற இடங்களில் வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்டவேண்டும். இதன் விலை மிகவும் அதிகம். இது நன்கு வளர்வதற்கு பக்கத்தில் ஒரு மரம் துணையாகஇருக்க வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம் விட ஆரம்பிக்கும். இந்தப்பழத்தைப் பறவைகள் உட்கொண்டு அதன் எச்சம் விழும் இடத்தில் விதை மூலம் நாற்றுக்கள் பரவும்.விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுப்பலன் கிடைக்கும்.

லேசான துவர்ப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும்கொண்டவை சந்தனக்கட்டைகள். உடலை தேற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வியர்வையை உண்டாக்குதல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. சந்தனத்தைத்தொடர்ந்து உபயோகித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். உடல் பலம் பெறும். ஆண்மைத்தன்மை அதிகரிக்கும். அறிவும், மன மகிழ்ச்சியும், உடல் அழகும் அதிகமாகும்.


மருத்துவ பயன்கள்:
சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் உரைத்து, பசையாக செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிவந்தால் படர்தாமரை, வெண்குஷ்டம், முகப்பரு ஆகியவை குணமாகும். முகத்தில் இதை பயன்படுத்துவதால் அதில் வசீகரமும், அழகும் உண்டாகும். பன்னெடுங்காலமாக நம் நாட்டில் மைசூர் சாண்டில் சோப்புபயன்பாட்டில் உள்ளது இதனால் தானே.

ஒரு தேக்கரண்டி சந்தனத்தூளை அரை லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சிகுடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

சந்தனத்தை பசும்பாலில் உரைத்து, சுண்டைக்காய் அளவுகாலை, மாலை வேளைகளில் தொடர்ந்து 10 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடுதணியும்.

2 தேக்கரண்டி சந்தனத்தூளை அரை லிட்டர் குடிநீரில் இட்டு காய்ச்சி குடித்துவந்தால் காய்ச்சல் குணமாகும்.

அதிகமாக சைட் அடிக்கும் ஆசாமிகளுக்கு கண்களில் கட்டி வருவது உண்டு.இந்த ஆசாமிகள் சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் நன்கு அரைத்து பசை போல் செய்து, கண் கட்டிகள் மீது பற்று போட வேண்டும். இரவில் படுக்கைக்கு செல்வதற்குமுன்னர் இவ்வாறு செய்து காலையில் கழுவிவிட வேண்டும். 5 நாட்கள் தொடர்ச்சியாக இப்படிசெய்து வந்தால் கண் கட்டி குணமாகும். மீண்டும் விட்ட பணியைத் தொடரலாம்.

இன்னொரு பிரிவினர் எப்போதும் மதுவில் மோகம் கொண்டு ஃபுல்லில் தள்ளாடிக்கொண்டே இருப்பர். இவர்களுக்கு போதை இல்லை என்றால் வாழ்க்கையே இல்லாதது போல. இவர்களைஇப்பழக்கத்தில் இருந்து மாற்ற, நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லிஎடுத்துக்கொண்டு, அதில் சுண்டைக்காய் அளவு சந்தனவிழுதை கலந்து 40 நாட்கள் குடித்து வந்தால் மது மோகம் தீரும்.
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTXiE_w_i2xsrnAC510kVRl22xaec5hk_ifbnrC4SS8GW44n_ly
சந்தனத்தூள் 20 கிராம் எடுத்துக்கொண்டு, அதை 300 மில்லிலிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி 150 மில்லி லிட்டராகவடிகட்டி, 3 வேளையாக 50 மில்லி வீதம் குடித்து வர நீர்க்கோவை, காய்ச்சல், சீரற்ற மார்புத் துடிப்பு, மந்தம், இதய வலி ஆகியவை தீரும். இதயம் வலிவுறும்..

பலரைச் சங்கடப்படுத்தி வரும் பொது நோய் நீரிழிவு. இதற்கும் சந்தனம்தீர்வு தருகிறதாம்.. நெல்லிக்காய்ச்சாறு, அல்லது கசாயம் 50 மி.லி. யுடன் அரைத்த சந்தனம் 5-10 கிராம் கலந்து 48 நாள் காலை, மாலை குடிக்க நீரிழிவு குணமாகும்.
பசும் பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வரவெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும்

பசும்பாலில் சந்தனக்கட்டையை உரைத்து புளியங்கொட்டை அளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டை சூடு, மேக அனல், சிறுநீர் பாதையில் உள்ள ரணம், அழற்சி குணமாகும்.

உடல், மன ஆரோக்கியத்திற்கான பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் சந்தனத்தில்இருந்து தயாரிக்கப்படுகின்றன. கூந்தல் தைலங்கள், சோப்புகள், நறுமணப் பொருட்கள் தயாரிப்பில் சந்தனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

சரும பாதுகாப்புக்கு ஒன் அண்ட் ஒன்லி மருந்து சந்தனம் என்பது நாம் எல்லோரும்அறிந்ததே. உடலில் வரும் சிறிய வேர்க்குரு தொடர்ங்கி பெரிய கட்டிகள் வரை சந்தனத்தைக்கண்டால் அஞ்சி ஓடிடும். சந்தனக்கட்டையை பழச்சாற்றில் உரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் வியாதிகளுக்குபூசலாம். சந்தனத்தை உடலில் பூசி வந்தால் சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைதவிர்க்கலாம். தோலைக் குளிர வைத்து நோயை ஓட வைக்கும் காரணிகளில் சந்தனத்திற்கு நிகர்அதுவே.
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRlNIwtLTxkD4nSllIjVwMGbswFG_o2dhcNH36nGlqJJeFFsXyPsA
சந்தனாதித் தைலத்தை தேய்த்து தலை முழுகி வந்தால் உடல் சூடு தணியும்.சந்தன எண்ணெய்-தைலம் -எசன்ஸ்’ 2-3 துளி பாலில் கலந்து குடிக்கஉடல் குளிர்ச்சி பெறும்

சந்தன விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய்க்கு சிறந்தமருந்தாக பயன்படுகிறது.

சந்தனத்தை தலையில் அரைத்துபூசி வந்தால் சுரத் தலைவலி, கோடைக்கட்டிகள், அதன் தழும்புகள் குணமாகும். மூளைக்கும், இதயத்துக்கும் உள்ள பலவீனம் சரியாகும். மொட்டைத்தலைக்கும் சந்தனத்திற்கும்உள்ள தொடர்பு நாம் அறிந்ததே.

இது ரொம்ப ரொம்ப முக்கியமானது. சந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் கொள்ள பால் வினை நோய், தந்திபேகம், பிரமேகம், கனோரியா, பெண் நோய் என்று பலபெயர் பெறும் இவை யாவும் குணமாகி உடல் தேறி, நோய் தீரும்.
ஏதோ சந்தனம் நோய்க்கு மட்டும் மருந்து என்று நினைக்கக் கூடாது.பொதுவாக, நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும்சந்தனத்தை உடலில் பூசி, அது நன்கு உலர்ந்த பின் குளித்துவரலாம். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் உடலில் பார்ப்பவர்களின் நெஞ்சினிக்கும் வசீகரமும், மினுமினுப்பும் வரும். மேலும், உடல் குளிர்ச்சி தன்மையைப்பெறும்

இன்னொரு ஜீம்பூம்பாவும் இதில் உள்ளது என்கிறார்கள். மருதாணி விதை, சந்தனத்தூள் கலந்துசாம்பிராணிப் புகைபோல் போட பேய் பிசாசு விலகும். இது கேக்கவே அதிசயமாக உள்ளதா? அது விலகுதோ இலையோ நல்ல கிருமி நாசினி. அதனால்தான் பத்தி, சாம்பிராணி இவையெல்லாம் அதிகம் சந்தன மணம் இருப்பவை விற்பனை ஆகிறது

இதையும் சொல்லவேண்டியது என் கடமை. இப்போது பெரும்பானமையான கடைகளில்கிடைக்கும் சந்தனப் பவுடரில் உலர்ந்த பட்டாணியை அரைத்துக் கலக்கிறார்களாம்.. அது உடலுக்குமேலும் அறிப்பு போன்ற ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதாம். (நன்றி திரு இராமகிருஷ்ணர்ன்)
ஒரு சுவையான தகவலைக்கூறி இக்கட்டுரையை முடிக்கிறேன்.
பழைய காலத்தில் அதாவது சங்க காலத்தில் சந்தன மரத்தால் ஆன உரலில்தான் தானியங்களைக் குத்துவராம்.. அப்போது முத்துடைய யானைக் கொம்புகளை உலக்கையாகப் பயன் படுத்துவராம். இதை நான் கூறவில்லை. கபிலர் கூறுகின்றார். ஒத்துக்கொள்ள மாட்டீர்களா? பாடல் இதோ,
”முகைவளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்

வகை சால் உலக்கை வயின்வயின் ஒச்சி “ (- கலி 40)

. இது கொசுறு.. ஒரு காலத்தில் சந்தனத்தைஅரைக்கும் கல்லை வடநாட்டில் இருந்து கொண்டு வந்து சந்தனத்தை அரைத்துப் பயன்படுத்தினர்என்று சங்கப்பாடல் நெடுநல் வாடை கூறுகிறது.
‘’வடவர் தந்த வான்கேழ்வட்டம்
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்ப’’
எனவே திரு இராமகிருஷ்ணனின்தகவலையும் மனத்தில் கொண்டு சந்தனத்தைக் கடையில் வாங்கிப் பயன் படுத்தாமல் வீட்டில்சந்தனக் கட்டையை வாங்கி வைத்துக் கொண்டு, கல்லில் அரைத்துப் பயன் படுத்தவும். பிறப்பு முதல் இறப்பு வரைஇந்தச் சந்தனம் நம் வாழ்வில் இடம் பெறுகின்றது. செல்வந்தர்களைச் சந்தனக்கட்டையில் எரிக்கும்வ்ழக்கம் இருந்து வந்துள்ளது என்றால் சந்தனத்தின் உயர்வைச் சொல்லவும் வேண்டுமோ....

நன்றி குமுதம் ஹெல்த்.

9 கருத்துகள்:

  1. சந்தனம் பற்றிய செய்திகள் பல அளித்த உங்களுக்கு வந்தனம்...

    மருத்துவத்தில், ஆன்மிகத்தில் , அழகில் சந்தனத்தின் புகழ் சந்தனமாக மணக்கிறது....

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வாழ்த்துரையில் என் மனம் பறக்கிறது பத்மநாபன். மிக்க நன்றியுடன்..என் மனமார்ந்த வந்தனம்.

    பதிலளிநீக்கு
  3. ஆதிரா! நலம் தானே? சந்தனம் பற்றி சரமாரியாய்த் தகவல்கள்! அருமை!
    வடமொழியில் அழகான பாடல் ஒன்று உண்டு.
    கீழ்க் காணும் கருத்தில்.
    "எல்லா மலைகளிலும் கிடைக்காது மாணிக்கம்.
    எல்லா யானைத் தந்தங்களிலும் தோன்றாது நல்முத்து.
    எல்லா காடுகளிலும் கிடைப்பதில்லை சந்தனம்.
    எல்லா இடங்களிலும் நல்லோரைக் காண்பது அரிது".

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. எங்கிருந்தோ சந்தனத்தின் வாசம் உங்கள் எழுத்துகளின் வழியே எங்களை சுற்றி மணக்கிறது...

    மிக்க மகிழ்ச்சி தங்களின் இந்த பயனுள்ள கட்டுரைக்கும்....

    இன்னும் உங்களிடமிருந்து நிறைய கருத்துகளை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு

    // திருவள்ளுவர் கூறிய,
    ”மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
    பழித்தது ஒழித்து விடின்”
    என்ற குறள் நினைவுக்கு வராவிடின் நாம் தமிழராக இருக்க முடியாது. //

    என் போன்ற தமிழ் மீது ஆர்வம் உடையவர்களுக்கு விளக்கத்தையும் தாங்கள் இங்கே அளித்திருக்கலாம். இன்னும் கூடுதலாய் மகிழ்ந்திருப்போம்...

    பதிலளிநீக்கு
  6. நான் இணையத்தின் வழியே படித்த சில தகவல்களும்

    சங்க இலக்கியங்களில் சந்தன மரத்தை “ஆரம்” எனவும் “சாந்தம்” எனவும் ‘சந்தனம்’ எனவும் குறிப்பிடுகின்றனர். சங்க இலக்கியப் பெயராக ‘ஆரம்’ எனவும் வழங்கப்படுகின்றது.

    இம்மரம் உயரமாக வளர்வது, குடமலை, பொதியில் மலைகளில் வளர்கிறது என்றும், மலையிடைப் பிறந்தும் சந்தனம் மலைக்குப் பயன்படாது. பிறருக்கே பயன்படுவது போல, மகளிரும் பருவத்தே பெற்றோருக்கு பயன்படாது விரும்பினர்பால் சென்று பயன்படுவர் என்று கூறும் தமிழிலக்கியம்.

    “ஆரம் காழ்வை கடியிரும் புன்னை” (குறிஞ்சி) எனக் கபிலர், ஆரம் எனப்படும் சந்தன மலரையும் பிற மலர்களோடு குறிப்பிடுகின்றனர். ஆயினும், ஆரத்தின் மலரில் வாசனையில்லை, சந்தனம் பரப்பும் நறுமணம் அதன் மரத்தில்தான் உள்ளது.

    “குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்” (பட்டினப்பாலை)

    இம்மரத்தில் மிளகுக்கொடி ஏறிப் படரும் என்றும், இம்மரத்தால் செய்யப்பட்ட உலக்கையால் ஐவன நெல்லைப் பாறை உரலிலிட்டுக் குத்துவர் என்றும் புலவர்கள் கூறுவர்.

    அகில் மணமும், சந்தன மணமும் கொடிச்சியின் கூந்தலில் நாறுமென்று வயிற்றியனார் கூறுகின்றார்.

    சந்தன மரத்தின் மலர் வெண்மையானது. இதில் தேனை உண்ணுவதற்கு வண்டுகள் வந்து மொய்க்கும். இவ்வியல்பினையும் புலவர்கள் கண்டு பாடியுள்ளனர்.

    பட்டினப்பாக்கம், குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு சிறுபாணாற்றுப்படை, மலைபடு கடாம் ஆகிய நூல்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
  7. மற்றொரு விசயத்தை சொல்ல மறந்துவிட்டேன்.... எனக்கும் சந்தனம் இட்டும்கொள்ளும் பழக்கம் உண்டு... ஆனால் பக்திமானாக, புலியாக காட்டவதற்கு இல்லை... அழகு குழந்தைகளின் முகத்தில் மையால் திருஷ்டி பொட்டு வைப்பதுப்போல்.... என் அழகற்ற முகம் ஏதோ ஒன்றால் மற்றவர்கள் கண்ணை கவர்ந்திழுக்க வேண்டும் என்ற எண்ணத்தால் இட்டுக்கொள்வது...

    சந்தனம் இட்டுக்கொள்வதால் நாள் முழுவதும் முகத்தில் மகிழ்ச்சியும் சாந்தமும் நிலவுகிறதோ இல்லையோ... ஆனால் அதனை இட்டுக்கொள்ளும் அந்த நேரத்தில் கண்டிப்பாக என்னுள் பரவும்... கண்மூடி திறக்கும் நேரம் என்றாலும் கவலைகளை மறக்கும் சில நிமிடங்கள் மனத்திற்கு ஆனந்தமாய் நித்தம் என் வாழ்வில்...

    பதிலளிநீக்கு
  8. நான் நலமாக இருக்கிறேன் ஜி. தாங்கள் நலமா? நீண்ட நாட்களாக சந்திக்க முடியவில்லை (எழுத்தில் தான் கூறுகிறேன்) தங்கள் வலைப்பூவிலும் புது மலர் பூக்கவில்லை. இந்தச் சோலையிலும் மலரவில்லை. அத்தி பூ ஒன்று நீண்ட நாட்கள் கழித்து இரு இடத்திலும் மலர்ந்துள்ளது.

    வாழ்த்து சொன்னமைக்கு நன்றி..
    வடமொழிப் பாடல் அருமை.. மிக்க நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
  9. மும்முறை வலம் வந்து முத்தான கருத்துக்களைச் சொன்ன இளவல் வாசனுக்கு என் மனமார்ந்த நன்றி.
    இலக்கியச் செய்திகள் அருமை. அறிந்தேன்.

    அந்தத் திருக்குறளின் பொருள் அனைவரும் அறிந்திருப்பர் என்று எண்ணி எழுதாமல் விட்டு விட்டேன். ம்ன்னிக்கவும்.

    அத்துடன் தாங்களின் முக வசீகரம் (கவர்ந்து இழுக்கும்) ரகசியத்தை உணர்ந்தேன். மகிழ்ந்தேன். அந்தத் தருணம் என்றும் உங்கள் வாழ்வில் இன்பமாக இனிக்க வாழ்த்துக்களுடன்
    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு