“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 12 நவம்பர், 2012

கலர் பார்க்கும் பெண்கள்

                             
                                       
                            
கலர் கலர் என்ன கலர்?” என்ற விளையாட்டு பெரும்பாலும் பெண்களால்தான் விளையாடப்படும் விளையாட்டு. கலர் பார்ப்பதில் பேதைப் பருவம் (குழந்தைப் பருவம்) முதல் பேரிளம் பெண் பருவம் வரை இல்லை இல்லை முதுமைப் பருவம் கலர் விஷயத்தில் ஆண்களை விட பெண்களே துள்ளியமான திறமை உடையவர்களாக உள்ளனர் என்கிறது ஆய்வறிக்கைகள். தவறாக நினைக்காதீர்கள். நான் சொல்வது அந்தக் கலர் விஷயம் இல்லை. இது ஆடைகள் தேர்ந்தெடுக்கும் கலர் விஷயம்.
"எனக்கு மயிலிறகு பச்சை கலரில் தான் சுடிதார் வேண்டும்"

"உனக்கு கொஞ்சம் கூட கலர் சென்ஸே இல்லை.
இது Baby Pink.. இது Onion pink. எப்படி ரெண்டுக்கும் மேட்ச் ஆகும்?"

"நல்லா தான் இருக்கு.. ஆனா, இதுவே கொஞ்சம் கொஞ்சம்
டார்க் மஞ்சளா இருந்தா நல்லா இருந்திருக்கும்"

என்று கணவன் வாங்கி வந்த ஆடைகளைப் பற்றி அடிக்கும் கமெண்டில் ஆயுசுக்கும் இவளுக்குப் புடவையே வாங்கித்தரக்கூடாது என்று முடிவெடுக்கும் கணவன்மார்கள் ஒருபுறம், பாவப்பட்டவர்கள் புடவைக்கடையில் வேலை பார்க்கும் ஆண்கள். ஹேங்கர் முழுவதும் சேலைகள் நிரப்பிரிகைகள் காட்டிக்கொண்டு தொங்கும். அவற்றை ஒவ்வொன்றாக ஒரு மூன்றரை மணி நேரம் நோட்டம் விட்ட பின்பு புடவைகள் அடுக்கியிருக்கும் அலமாரி பிரிவுக்கு வருவார்கள். அப்போதே கிளி ஆரம்பித்து விடும் அந்த பிரிவு பொறுப்பு விற்பனையாளருக்கு. அவர்தான் இந்தம்மாவை மூன்றரை மணி நேரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாரே. ஒரு மணிநேரம் தேடி சளைத்தபின் இவங்க கருத்துகள் ஆரம்பமாகும்.

இந்தப் புடவையில் இருக்கிற இந்த லைட் ஆரஞ்ச் கலர் பார்டர்
அந்தப் புடைவையில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
அதுமாதிரி ஆர்டர் பண்ணி தர முடியுமா

இந்த லைட் கிரீன் பேக்ரவுண்ட்ல அந்த கருப்பு பூக்கள்
வந்திருந்தால் எப்படி இருக்கும்?
அடுத்த முறை வந்தால் அப்படிக் கிடைக்குமா

என்று கருத்து கூறிக் கேட்கும் பெண்களால் வேலையை விட்டு ஓடிடலாமா என்று விற்பனையாளர்களும் முடிவெடுக்கிற அளவுக்குப் போய்விடுகிறது இந்தக் கலர் காம்பினேஷன் விஷயம்.

ஆனால் ஆண்களுக்கு இந்தப் பிரச்சனையே எழுவதில்லை. ஆம் மனைவிமார்களோ அம்மாவோ காதலியோ எதை வாங்கிக் கொடுத்தாலும் மாட்டிக்கொண்டு கிளம்பி விடுகின்றனர் தெருவில் கலர் பார்க்க. வண்ணங்கள் தொடர்புடைய துறைகளில் (ஜவுளி, ஓவியம்) வேலை செய்யும் ஆண்களைத் தவிர பெரும்பாலான ஆண்களுக்கு வண்ணங்களின் பட்டியல் மிக குறைவு தான் என்கிறது ஆய்வறிக்கை. ஆண்கள் கலர் ரசனையே இல்லாதவர்களாக இருப்பதற்கும் இதுவே காரணமாம். இதனாலேயே, பலர் தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் துணி எடுக்கும் போது அல்லல்படுகிறார்கள்!

வண்ணங்களைப் பற்றி ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள திறனைப் பற்றி ஆய்வு செய்த நிபுணர்கள் வண்ணங்களை ஆண்களும், பெண்களும் எப்படி பார்க்கிறார்கள் என்று ஒரு படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.



   ஆண்கள் அதிகபட்சமாக ஏழு வண்ணங்களை மட்டுமே பயன்படுத்து கின்றனர். பெண்களோ சற்றேறக்குறைய முப்பது வண்ணங்களைப் பயன்படுத்து கின்றனராம்.

சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களை மட்டுமே கண்களால் காண முடிகிறது. அவற்றின் கலவையே பிற நிறங்களாக மனிதர்களுக்குத் தெரிகிறன. அனைத்து நிறங்களும் சேர்ந்த நிறம் வெள்ளையாகும், எதுவும் இல்லாதது கருப்பாகவும் இருக்கும். ஆனால், நிறங்களைப் பிரித்தறிவதில் பெண்களுக்கு மட்டும் எப்படி இத்தனை திறன் இருக்கிறது? இதற்குக் காரணம் மரபுணுக்களின் வேலையே என்றும் கூறுகின்றனர்.

மனிதர்களைப் பாலின் அடிப்படியில் வேறுபடுத்திக் காட்டுவது நமது செல்களில் உள்ள மரபணுக்கள் (chromosome). பெண்களுக்கு இரண்டு வகை மரபுத்திரிகளும், ஆண்களுக்கு 1 வகையும், 1 Yவகை மரபுத்திரியும் இருக்கும். நிறங்களைப் பிரித்தறிய உதவும் மரபணு வகை மரபுத்திரியில் இருக்கிறது.

பெண்களுக்கு இரண்டு மரபுத்திரிகள் இருப்பதால் தான், அவர்களால் மிகவும் நுணுக்கமாக நிறங்களைப் பிரித்தறிய முடிகிறது என்கிறது ஆய்வறிக்கை. 

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவிப்பெணி வளர்த்திடும் ஈசன்
என்று பாரதி கூறுவது போல
பெண்ணுக்கு வண்ணத்தைக் கண்டறியும் திறனையும் வைத்தான்

இறைவன். பெண்களுக்கு ஆண்டவன் கொடுத்துள்ள நுட்பங்களில் இந்த நுட்பம் விந்தையானது. ஆனால் கணவன்மார்களை நினைத்துப் பார்க்கையில் சற்று ஆபத்தானது என்று தோன்றுகிறது.  அது கிடக்கட்டும். இன்னொரு சுவாரசியமான தகவல். கலர்பிளைண்டு (COLOR BLIND) எனப்படும் நிறக்குருடு நோய் பெண்களிடம் அதிகம் காணப்படாத்தற்குக் காரணமும் இதனால்தானாம். பாதிக்கப்பட்ட Xமரபுத்திரியினை உடைய ஆண்கள் நிறக்குருடு நோய்க்கு ஆட்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட மரபுத்திரியினை உடைய பெண்களோ, மற்றொரு மரபுத்திரியினைக் கொண்டு சமாளித்துக் கொள்கிறார்கள். இரண்டு மரபுத்திரிகளும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு.

என்னதான் கலர் பார்ப்பது ஆண்களுக்கே உரிய தனித்திறன் என்று நாம் பதிவு செய்து கொடுத்திருந்தாலும் (அது வேறு கலர்), கலர் பார்ப்பதில் தனித்திறன் பெண்களின் கண்களூக்கே! பெண்களே ஜமாய்ங்க!




(இக்கட்டுரை குமுதம் ஹெல்த் இதழில் இடம்பெற்ற என் கட்டுரை. நன்றி குமுதம் குழுமம்.)




3 கருத்துகள்:

  1. அறியாத புதுத் தகவல் அறிந்து கொண்டேன் நன்றி

    பதிலளிநீக்கு
  2. கலர் மேட்ச்சிங் குறித்து கவலைப்படாதே சாலையில் செல்லும் பெண்களை சைட் அடி அவர்கள் உடையின் கலரை பார் உனக்கு கலர் குறித்த ஞானம் வரும் உண்மையாகவே வண்ணங்கள் எப்படி பயன்படுத்துவது என கேட்டபொழுது என் ஆசிரியர் சொன்ன பதில்

    பதிலளிநீக்கு