“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வெள்ளி, 15 நவம்பர், 2013

கல்வி சாதனையாளர் விருது



காமராஜன் கிராமிய நல அறக்கட்டளை கல்வி சாதனையாளர் என்னும் விருதினை வழங்கியுள்ளது. இதனை என் வலைப்பூ உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதை விட வேறு என்ன மகிழ்வு? என் முன்னேற்றத்தில் மகிழும் உறவுகளுக்காக இதனை இங்கு பகிர்கிறேன்.

வெள்ளி, 1 நவம்பர், 2013

கதிரவன் கைதொழும் அனந்தபத்மனாபன்


“கெடும் இடராயவெல்லாம் கேசவா வென்னும்-நாளும்
கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார்
விடமுடையரவின் பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும்
தடமுடைவயல் அனந்தபுர நகர் புகுதும் இன்றே”
          என்று நம்மாழ்வாரால் பாடப்பட்ட ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு இந்துக்கள் வழிபடும் திருத்தலமாகும். திவ்யதேசம் என்று அழைக்கப் பெற்ற திருமாலின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று.
திவாகர முனி என்பவர் துளுநாட்டுச் சன்னியாசி. துளு என்பது கேரளாவின் ஒரு பகுதியே. இவர் சீராப்தி நாதனைக் (பாற்கடல் வண்ணனை) காணவேண்டுமென்று ஆதர்த்த தேசத்தில் கடுந்தவம் செய்து கொண்டிருந்தார். தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணு 2 வயது குழந்தையாக இவர்முன் தோன்றினார். இக்குழவியின் அழகில் பேராவல் கொண்ட திவாகர முனிவர் தன்னுடனேயே தங்கியிருக்குமாறு அக்குழந்தையை வேண்டினார். அதற்கு அக்குழந்தை தனக்கு எவ்விதத் துன்பமும் நேராமல் காத்து வந்தால்தான் உடன் இருப்பதாகவும் தனக்குச் சிறு துன்பம் நேர்ந்தாலும் விலகி விடுவதாகத் தெரிவிக்கவே குழந்தையின் கட்டளைக்கு முனிவரும் ஒப்புக் கொண்டார். அவ்விதமே அவருடன் வளர்ந்துவரும் ஒரு நாளில் முனிவர் பூஜையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் அங்கிருந்த சாளக்கிராமம் ஒன்றை அக்குழந்தை எடுத்துக் கடிக்கவே முனிவர் வெகுண்டு கண்டிக்க அக்குழந்தை ஓட அவரும் பின் தொடர என்னைக்காண வேண்டுமானால் அனந்தன் காட்டுக்கு வர வேண்டுமெனக் கூறி அக்குழந்தை மறைந்துவிட்டது. தன் தவறை உணர்ந்த முனிவர் அலைந்து திரிந்து அனந்தன் காட்டைக் தேடிக் கண்டு பிடித்தார்.
          அங்கு அனந்தன் என்னும் பாம்பின் மீது சயனத்தில் இருக்கும் பகவானைக் கண்டார். அப்போது அவர் உண்ணிக் கண்ணனாக (சின்னக் கண்ணனாக) இருக்கவில்லை. அவரது உருவம் மிகப்பெரியதாகக் காணப்பட்டது. அவர் அத்தனை பெரிய உருவம் எடுத்ததால், முனிவரால் விஷ்ணுவைச் சரியாக தரிசனம் செய்ய இயலவில்லை. அவரை வலம் வரவும் முடியவில்லை.  ஆகையால் இறைவனிடம் தமது கையில் இருக்கும் தண்டத்தின் மூன்று மடங்கு அளவில் சுருங்கி காட்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டார். இறைவனும், அவர் வேண்டிக்கொண்டது போலவே காட்சி அளித்தார்.
          பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்டி   பாம்பின் மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு. "பத்மநாப சுவாமி' என்ற திருநாமமும் சூட்டப்பட்டது.
          அனந்த சயனான பத்மநாபனை மூன்று வாயில்கள் வழியாகவே வழிபட வேண்டும். முதல் வாயிலில் பரம சிவனையும்  இரண்டாம் வாயிலில் திருமாலில் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மனையும் மூன்றாவது வாயிலில் விஷ்ணுவின் பாதங்களையும் கண்டு வணங்குமாறு இக்கோயில் அமைப்பு இருக்கிறது.
          சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது.
          1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு சரணாகதியடைந்தார் என்று வரலாறு கூறுகிறது.
          திருவாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவான மார்த்தாண்ட வர்மன் இந்தக் கோவிலை 1729 ல் கடைசியாக புதுப்பித்தாகவும் அச்சமயத்தில்தான் அதுவரை இருந்த இலுப்பை மரத்தாலான மூல மூர்த்தி, சாளக்கிராமத்தினாலும் "கடுசர்க்கரா" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது அனந்த சயன மூர்த்தியாக புதுப்பித்து பிரதிஷ்டை செய்யப் பட்டதாகவும் தல வரலாறு கூறுகின்றது.
          சென்ற ஆண்டு உச்ச நீதி மன்றம் வரை சென்றது இதன் 6 இரகசிய அறைகள் அவற்றினுள் பாதுகாக்கப் பட்ட விலையுயர்ந்த இரத்தினம், தங்கம் பற்றிய விவகாரங்கள். 300 தங்கக் குடங்கள், 2000 வைர நகைகள் இருக்கிறது என்றெல்லாம் ஊடகங்கள் காட்டிய காட்சிகள் இன்றும் கண்களில் விரிகின்றன.
          ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து அறுநூற்று ஐம்பத்தாறு தங்கத்தாலான ஆபரணங்கள் கணக்கெடுக்கப்பட்டன.  ஒவ்வொரு ஆபரணத்திலும் குறைந்தது 75 முதல் 300 வரையான வைர கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு தங்க சங்கிலியின் பதக்கத்தில் மட்டும் 997 வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தங்கச்சங்கிலிகளில் உள்ள டாலர்களில் 100-க்கும் மேற்பட்ட வைர கற்கள் உள்ளன.  19.50 லட்சம் தங்க நாணயங்கள் உள்ளன. இவற்றின் எடை 700 கிலோ. ஆஸ்திரேலியா இங்கிலாந்து ஆகிய நாடுகளின் நாணயங்களும் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்களும்  இக்கோயிலில் உள்ளன என்ற அறிக்கைகளெல்லாம் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டன.
கட்டடக் கலையில் சிறந்து விளங்கும் இக்கோயில் கோபுரம் 100 அடி உயரமும் ஏழு மாடங்களும் கொண்டதாகும். எண்பது அடி உயரமான கொடிக்கம்பம் காணப்படுகிறது.
இப்போது கண்டறியப் பட்டுள்ள இக்கோயில் கோபுரத்தின் சிறப்பானது, சூரியன் இக்கோபுரத்தின் நடு மாடத்தின் வழியாக  உதித்து வெளிவருவது போல அமைத்துள்ளது. இரவும் பகலும் சம நேரமுடைய பருவ காலத்தில் (equinox) இக்கோபுர வாயில்கள் வழியாக சூரியக் கதிர்கள் உட்புகுந்து வெளிவருவது போல் அமைந்துள்ள இத்தகு சிறப்பான கட்டடக் கலை வேறு எக்கோயிலிலும் காண இயலாத ஒன்று.
இரவும் பகலும் சம நேரமாக இருக்கும் பருவகாலம் ஆண்டிற்கு இரு முறை வரும். அதாவது வசந்த காலம், இலையுதிர் காலம் (spring and autumn) என்று அழைக்கப் பெறும் பருவ காலங்களில் இது வருகிறது. மார்ச் மாதத்தில் 20 அல்லது 21 ஆம் தேதியிலும் செப்டம்பர் மாதத்தில் 22 அல்லது 23 ஆம் தேதியிலும் இந்தச் சம நேர பருவ காலம் வரும்.
நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தில் செம்பாதியாகிய 12 மணி நேரம் பகலும் மற்ற பாதியாகிய 12 மணிநேரம் இரவுமாக இருக்கும் பருவ காலத்தை equinox என்று ஆங்கிலத்தில் கூறுவர். தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றும் பூமியின் சுழல் அச்சு சூரியனை நோக்கி சரிவாகச் சாயும் ஒரு புள்ளியில் இந்தக் கோயில் கோபுர மாடங்களின் வாயில்களில் சூரிய ஒளி பாய்ந்து வெளிவருவது போல அமைத்துள்ள இக்கோயில் கட்டிடக் கலை வியக்கத் தக்க பெருமையுடையது. இப்படி மாடங்களின் உட்புகுந்து வரும் சூரியன் சற்றும் வெளியில் சிதறாமல் அல்லது சாயாமல் மிகத் துல்லியமாகக் கோபுர வாயிலில் வருவது என்பதுதான் கட்டடக் கலைஞர்கள் எல்லோருக்கும் வியப்பாக உள்ளது.
“பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்
பாரத நாடு..
ஞானத்தி லேபர மோனத்திலே – உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே – உயர்
நோக்கத்திலே உயர் நாடு”

என்று பாரதி பெருமைப் பட்டது இதனாலன்றோ…!