“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

புதன், 23 பிப்ரவரி, 2011

மழையின் நண்பேண்டா...

இந்த மழை விட்ட மாதிரி இருந்தது. ஆனா மறுபடியும் பெய்யத் தொடங்கி விட்டது. மழை வந்தா உடனே கூட வர்ற நண்பர்கள் கொசுத்தொல்லை. அடுத்தது கொசுவால ஏற்படர வைரஸ் காய்ச்சல். சென்னை மாதிரி மாநகராட்சிகளில் தண்ணிர் போக சுரங்கச் சாக்கடை உள்ளது. ஆனால் தண்ணீர் போனால்தானே! சாதாரணமாகவே அடைத்துக் கொண்டு குளமாகத் தண்ணீர் தேங்கி இருக்கும். இந்தக் குளத்தில் கால்களைக் கழுவிக் கொண்டு வந்தாலே மக்களுக்கு மோட்சம். நகரத்துல வாழ்கின்ற நம்மை எதெல்லாம் பயப்படுத்துதுன்னு பாருங்க..

இப்போ புதுசா இது வேற. லெப்டோஸ்பைரோசிஸ் (Saprophytic). இதுவும் ஒரு புது விதமான் தொற்று நோய். லெப்டோஸ்பைரா அல்லது ஸ்பைரோகீட் எனும் கிருமியால் (பாக்டீரியா) இந்நோய் ஏற்படுகிறதாம். பன்றிகள், கோழிகள் எல்லாம் கொடுத்த ட்ரீட் போதாதுன்னு இப்ப கிளம்பிடுச்சுங்க, எலிங்களும், பெருச்சாளிங்களும். எலி, பெருச்சாளி, பன்றி போன்ற கழிவு நீர் தேக்கங்களில் வாழும் பிராணிகள் கழிக்கும் சிறுநீரில் இருந்து இந்தக் கிருமி வெளியேறி, கழிவு நீரில் கலக்கிறதாம். மழைக்காலத்தில், குறிப்பாக நகரங்களில் ஆங்காங்கு தேங்கும் மழை நீருடன், கழிவு நீர், சாக்கடை நீர் கலக்கும்போது, அதில் இந்த பாக்டீரியாவும் கலந்துவிடுகிறதாம்.

மெல்லிய மிருதுவான தோலுள்ள பகுதிகளான மூக்கு, வாய் மற்றும் கண்கள். நீரில் ஊறிய மிருதுவான தோல் பகுதிகள் கால் மற்றும் கைகளில் விரல் இடுக்குகள். முக்கியமாக தேங்கிய நீரில் நாம் நடக்கும்போது, நமது காலில் உள்ள தோல் வெடிப்புகள் அல்லது சிறு காயங்கள் மூலமாக நமது இரத்த நாளங்களிலும் இந்த பாக்டீரியா நுழைகிறது. இந்த பாக்டீரியா இரத்தத்தில் கலந்து பெருகி, ஒரு வாரம் முதல் 10 நாட்கள் கடந்த பிறகு நமக்கு காய்ச்சல் ஏற்படும். அதனை வெறும் காய்ச்சல்தானே என்று அதற்காக ஒரு மாத்திரை வாங்கி போட்டுக்கொண்டு அல்லது ஒரு ஊசியைப் போட்டுக்கொண்டு மறந்துவிட்டோமானால் அதுவே விபரீதமாகிவிடும் என்று அச்சுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

சரி இதற்கு அறிகுறி என்ன என்று கேட்கிறீர்களா? ஆரம்பத்தில் சாதாரண காய்ச்சலாக இருந்து நிலை மாறி, தலை வலி, கண் பாதிப்பு (கண்கள் இரத்தத்தால் தோய்ந்ததுபோல் சிவந்துவிடும்), உடம்பு வலி, களைப்பு, வாந்தி வருவது போன்ற உணர்வு, 102 டிகிரியைத் தாண்டும் காய்ச்சல் என்று ஏற்பட்டால், அது லெப்டோஸ்பைரோசிஸ் ஆக இருக்கலாம் என்று நீங்கள் முடிவு செய்ய மருத்துவரை அணுக வேண்டும்.

அதுமட்டுமில்லங்க. பல இணைய தளங்கள் கடுமையான எச்சரிக்கை இதற்கு விடுத்துள்ளன. கடுமையான மூச்சடைப்பு, சிறுநீரக செயலிழப்பு, காமாலை ஆகியன ஏற்படும் என்றும், இந்த நோய் தாக்கிய சில நாளில் வாய், மூக்கின் வழியாக இரத்தம் வெளியேறுதல், இதய இயக்கம் பாதிப்பு, உள் இரத்தக் கசிவு ஆகியன ஏற்படும் அபாயம் உள்ளதென லெப்டோஸ்பைரோசிஸ் நோய் தொடர்பான விழுப்புணர்வை ஏற்படுத்தும் மருத்துவ இணையத் தளம் எச்சரிக்கிறது

எச்சரிக்கை விடுத்தா போதுமா? என்னதான் செய்யச்சொல்றீங்கன்னு கேக்கறீங்களா? அப்படி கேளுங்க.. முடிஞ்சவரைக்கும் மழைக்காலத்தில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நடக்கறதைத் தவிர்த்திடுங்க. கால்களில் காயமோ, ஆறாத புண் இருந்தா, காயத்தை மருந்து போட்டு நல்ல மூடிய பின்னே வெளியே இறங்குங்க. வீட்டிற்குத் திரும்பிய உடனே வெந்நீரால் கால்களை நல்ல சுத்தமா கழுவிடுங்க. மழைக்காலத்தில் கண்டிப்பா நல்ல சூடான வெந்நீரில் குளிங்க.. நீங்க இருக்கற இடத்துல எலி, பெருச்சாளிங்களுக்கு NO ENTRY போர்டை மாட்டிடுங்க.

எல்லாத்துக்கும் சுவையான தகவல் கொடுத்தாத்தானே நீங்க விரும்புவீங்க.. டேன்ஞ்சரசான இந்த நோய்க்கு வெளிநாட்டுல என்ன பேரு தெரியுமா? நகர்ப்புற நோயாம். அதாவது சிட்டி டிசீஸாம். வேறு ஒரு அவசரத் தகவலோட மறுபடியும் உங்கள சந்திக்கட்டா... அதுவரைக்கும் டாடா...... ஜூட்............

திங்கள், 14 பிப்ரவரி, 2011

காதல் செய்ய காலம் எது??


http://www.funnydb.com/img/glitter-graphics/love/014.gif

ஏபரல் முதல்தேதிக்கும் பிப்ரவரி 14 ஆம் தேதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கண்டுபிடிங்க பார்க்கலாம். நீங்க காதலர்க்களாக இருந்தால் கண்டிப்பாக இதைக் கண்டுபிடிக்க முடியாது. இல்லாவிட்டால் கண்டுபிடித்து இருப்பீர்களே.. ஆமாம்... அதேதான்.. அதேதான். இரண்டும் முட்டாள்கள் தினம்தான்.

காதலர் தினத்துக்கு எனக்கு ரிங் கொடுப்பீங்களா என்று காதலி கேட்டவுடன், ம் கண்டிப்பா கொடுக்கறேன். லேண்ட் லைன்ல இருந்தா மொபைல்ல இருந்தா? ன்னு காதலன் கேட்கத் தொடங்கிய அன்றிலிருந்தே ஏமாற்றத் தொடங்கி விடும் காதலனும், கிரீன் கலர் சூரிதார் போட்டு காதலுக்குக் கிரீன் சிகனல் காட்டலாமா இல்லை இன்னும் கொஞ்சம் நாட்கள் ஏதோ மாதிரி தெரு தெருவா அலைய விடலாமா? என்று திட்டமெல்லாம் போட ஆரம்பித்து விடும் காதலியும் கொண்டாடும் காமத்திருநாள் காதல் திருநாள். காதல் மோகம் தீர்ந்து புளித்துப் போனவுடனேதான் புரிகிறது அது ஒரு மாயவலை என்று.

காதலர் தினம் பிப்ரவரி 14, குழந்தைகள் தினம் நவம்பர் 14. இது என்னடா சாமி. ஏபரல் சொன்னீங்க, பிப். 14 சொன்னீங்க. இப்ப நவம்பர் 14 சொல்றீங்க. இதுவும் முட்டாள்கள் தினமா என்றால் இல்லை. இல்லவே இல்லை. பத்து மாதங்கள் கழித்து காதலர்களின் குவா குவா கொண்டாடும் நாள் இது. ஆனால் அந்தக் குவா குவா இந்நாளை கொண்டாடுமா? அல்லது கொண்டாடும் முறையில் காதல் அமைகிறதா? என்பதுதான் இன்று நம் முன் இருக்கும் வினாக்கள்.

காய்ச்சல் வந்தவரின் அருகில் சென்றால் காய்ச்சல் தொற்றிக்கொள்வது போல காதல் அயல் நாட்டில் இருந்து நம்நாட்டுக்குத் தொற்றிக்கொண்டு விட்டது. இது ஒரு தொற்று நோய் போல பரவியுள்ளது

விழி
இருந்தும்
வழி இல்லாமல்
மன்னன் பழி
தாங்கிப் போகிறேன்.
விழி இழந்து
பார்க்க வழி இழந்து, நின் மன
வலி தாங்காது கதறும்
ஒலி கேட்டும், உனை மீட்க
வழி தெரியாமல்
மக்களுக்காக
பலியாடாகப்
போகிறேன் - நீ
ஒளியாய் வாழு!
பிறருக்கு
வழியாய் இரு!!
சந்தோஷ
ஒளி உன் கண்களில்
மின்னும்!!

-உன்னுடைய வலண்டைனிடமிருந்து!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiN_-ri9L6-EHB3874fUAqz9fBp9QY42fvfY6eYDjIYjRLO9kjSAEAY343JmLqR4wIpoGNgY85tgLbxvPUPuypugKrX9eUuUZXdRpMQQK7S0Mt_5-DbEp0whdCfwwwEfS1bPdQVv7RZOqjY/s1600/st-valentine.jpg

நன்றாக இருக்கிறதா? இந்த காதல் கவிதையே இன்றைய நம் கலாச்சார சீரழிவுக்குப் பாதை வகுத்துக் கொடுத்த கவிதை. ஆம் பாதிரியார் வாலண்டைன் எழுதிய காதல் கவிதை. காதலை எதிர்த்த ஒரு மன்னனுக்கு எதிராக காதலர்களை வாழவைத்த ஒரு பாதிரியாரின் நினைவு நாளைக் காதலர் தினமாக இன்று உலகமே கொண்டாடுகிறது.

கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடியின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை
விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவத்தில் சேர மறுத்து விட்டார்கள். அவனது மந்திரி
பரிவாரங்களும் வீரர்களைச் சேர்ப்பதற்கான ஆக்கபூர்வமான ஆலோசனைகள் எதையும் அவனுக்குக் கொடுக்கவில்லை. இதனால் எரிச்சல் உற்றான் கிளாடி. துனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக இருந்த நள்ளிரவொன்றில் எரிச்சல் உற்ற மறை கழன்ற ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி-2 இன் மனதில் - திருமணமானவர்கள் தமது அன்பு மனைவியை விட்டு வர மனமில்லாமலும், திருமணமாகாதவர்கள் தமது காதலியை விட்டு வர மனமில்லாமலும் இருப்பதாலேயே இராணுவத்தில் சேரத் தயங்குகிறார்கள். இவர்களுக்கு எல்லாம் குடும்ப வாழ்க்கை என்ற ஒன்று இல்லாத பட்சத்தில் இவர்கள் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள். போரிலும் மூர்க்கத் தனமாய் போரிடுவார்கள். வெற்றி எளிதில் கிட்டும். என்றதொரு முட்டாள் தனமான எண்ணம் தோன்றியது. உடனேயே நள்ளிரவு என்றும் பாராமல் தன் அந்தரங்க அமைச்சரை அழைத்து "ரோமாபுரி நாட்டில் இனி யாருமே திருமணம் செய்யக்
கூடாது. ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துச் செய்யப் படவேண்டும். இவ்வரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைது
செய்யப் பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் படுவார்கள். பின்னர் அறிவிக்கப் படும் ஒரு நாளில் பொது இடத்தில் வைத்து கல்லால் அடித்து தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் படுவார்கள்." என்ற அறிவிப்பை மக்களுக்குச்ம் சொல்லும் படி பணித்தான். அரசனை மீற வழி தெரியாத அமைச்சர் அதை அறிவித்தார்.

இந்த அறிவிப்பைக் கேட்டு மக்கள் அதிர்ந்தார்கள்। இருமனங்கள் இணைவதை அரசன் அறுத்தெறியத் துணிந்த போது திருமணங்கள் கனவாகிப் போன சோகத்தில் ரோமாபுரி சோகக் கண்ணீரில் மிதந்தது. அரசனின் இந்த முடிவு

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIE3_HE_gHs9YjsRcB0NhSkg0_cQEEYbykMVkOevrz_etRJwvzX0HJur4XwwRHaHuI6wdynzXeJ1YVOip5sLCHhm7Vg5TsEomHmCLri52bLI5DlL4rpYGJiAXiVemAiQ7rkLfZnzi7Ckc/s1600/St-Valentine-Kneeling-In-Supplication.jpg

அநியாயம் என்று சொல்லிக் கொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியார் வலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியத் திருமணங்களைச் செய்து வைத்தார். இந்தச் செய்தி அரசனுக்கு எட்டி விட வாலண்டைன் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப் பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டார். அவர் சிறை வைக்கப் பட்டிருந்த காலத்தில் சிறைக்காவல்
தலைவனின் கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியார் வாலண்டைனுக்கும் இடையில் காதல் என்னும் அன்பு பூத்தது.அஸ்டோரியஸ் பாதிரியாரை சிறையிலிருந்து மீட்க முயன்றாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியசை வீட்டுச்சிறையில் வைத்தான். கண்கள் கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸ் கனவுகள் சிதைந்ததில் கலங்கினாள். ஆனால் வலண்டைனுக்கான மரணதண்டனையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.ன்அஸ்டோரியசுக்கு ஒரு காகித அட்டையை வரைந்து விட்டு தண்டனையை ஏற்க அவன் தயாரானான். வலண்டைன் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரவதை செய்யப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட அந்தநேரத்தில் அந்தனை கட்டுக் காவல்களையும் மீறி வலண்டைனிடமிருந்து
வந்த அந்த அட்டையின் வரிகளை தோழி வாசிக்க அஸ்டோரியசின்
கண்களிலிருந்து கண்ணீர்ப் பூக்கள் சொரிந்தன. அந்தக் அட்டையிலிருந்த கவிதை வரிகள்தான் இவை.

ஆனால் தமிழர்கள் எந்தக் காலத்திலும் காதலை எதிர்த்ததில்லை ஆண்டாண்டு காலமாய்க் காதலுக்கு மரியாதை தந்த இனம் தமிழினம்। கடைக்கண் பார்வை வீசிப்பிடிக்கும் காதலுக்கு இலக்கணம் வகுத்த இனம் தமிழினம்। காதலர்கள் ஒரே காதலில் நின்று அடுத்தக் கட்டமானகற்பு என்ற திருமணத்தில் இணையப் போதிய வழிகளையும் சொல்லித் தந்த இனம் நம்மினம்। காட்சி, ஐயம், குறிப்பறிதல், ஊடல், கூடல், என்று தொடங்கி, காதலனுடன் ஓடிப்போவதற்குக் கூட ‘உடன் போக்கு’ என்று அழகான இலக்கணத்தைச் சொல்லவில்லையா நம் தொல்காப்பியர்। அந்த இனம் இன்று இந்த அந்நிய சடங்கினை ஏற்று நம் பெருமையைக் குலைத்து வருகிறது। இன்று பிரச்சனை வந்த பிறகு காதலை வாழ வைத்த வாலைண்டைனைத் தெரிந்த அளவு, காதலர்களுக்கு தொல்காப்பியரைத் தெரியல்லை.
“பாலொடு தேன்கலந்தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்”
முத்தச்சுவையை இதைவிட அழகாக யாரால் சொல்ல முடியும். இனிய சொற்களைப் பேசுகின்ற என் காதலியாகிய இவளின் வாயில் இருந்து ஊறிய நீர் பாலும் தேனும் கலந்த சுவை என்று கூறவில்லையா திருவள்ளுவர்?
இனிக்க இனிக்கக் காதலுக்கு அழகிய இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர்கள் தொல்காப்பியரும் திருவள்ளுவரும் என்பதும் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கிறது.
இளசுகளின் இன்ப நாளான காதலர் தினத்தை ஏன் இப்படி குறை கூறுகிறீர்கள்
என்று பலர் கேட்பது புரிகிறது. இன்றைய காதலர்கள் என்ன அம்பிகாபதி-அமராவதி, லைலா மஜ்னு போல அமரத்துவமாக, ஆழமாக காதல் செய்கின்றனரா? காதல் என்பது ஒரு ஃபாஷன் ஆகிவிட்டது. கேட்டால் காதல்
என்பது காய்ச்சல்போல... வரும், பிறகு போய்விடும் ஆண்டுக்கொருமுறை வரும் ஆனால் ஆறு மாதத்தில் போய்விடும் என்கின்றனர் இன்றைய தலைமுறையினர். இந்த ஜுரம் வரவில்லைஎன்றால் அவன் ஹியூமனே இல்லை என்ற எண்ணமும் வந்து விட்டது. ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் முதல் (வாசகர்கள் சந்தேகமிருந்தால் ஆசிரியர்களைக் கேட்டு உறுதிப் படுத்திக்கொள்ளலாம்) அவனுக்கு ஒரு டாவு இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அது அவனுக்குப் பெருத்த அவமானம். அவனைச் சக மாணவர்கள் மதிப்பதில்லை.

இப்படிப்பட்ட சீறழிவுகளுக்கெல்லாம் யார் ரோடு போட்டுக் கொடுக்கிறார்கள்? வேறு யார்.. வியாபாரிகள். இதெல்லாம் வியாபார நுணுக்கம்.. ஆம் ரோஜாப்பூக்களில் தொடங்கி, கிஃப்ட் ஆர்ட்டிக்கள் என்று நீண்டு இன்று நட்சத்திர விடுதிகள் வரை காதலர் தின ஸ்பெஷல் என்று எதையாவது அறிவித்து லாபத்தைக் கொழித்துக்கொண்டு இருக்கின்றன.
http://preview.canstockphoto.com/canstock0837780.png

வாழ்த்து அட்டைகள் வியாபாரம் அமோக வியாபாரம் அன்று. ஹால்மார்க்
நிறுவனம் மட்டுமே சுமார் 200 மில்லியன் வாழ்த்து அட்டைகளைத் தயாரிக்கின்றனவாம். நம் குழந்தைகள், இன்றைய பெரும்பான்மையான காதலர்கள் குழந்தைகள்தான். கால்ப்பகுதியில் கிழிந்து போன பேண்டைப் போட்டுக்கொண்டு அதை டான் செய்ய இருபது ரூபாய் செலவு செய்ய முடியாத குழந்தைகள் (காதலர்கள்) வாழ்த்து அட்டைகளை 50 ரூபாய் 100 ரூபாய் கொடுத்து வாங்கி தன் காதலியான மாணவிக்கு கொடுக்கின்றனர்.

அன்றைய தினம் கொடிகட்டிப் பறக்கும் வியாபாரம் ரோஜாப்பூக்களின் வியாபாரம். இதைக் கொடுப்பதில் ஏழை பணக்காரர்கள் என்ற வேறுபாடு இல்லை.
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcS5G3i-WalgRGCdPO5KcJfLXnRsF2XveGLNJrZ58wiMEDA9c0cJ&t=1
இவை தவிர பரிசுப்பொருள்கள் வியாபாரம். கண்ணாடியால் ஆன இதயம், இதயத்தைக் குத்திக்கிழித்துக்கொண்டு போகும் அம்பு, என்று எல்லாம் இதயத்தையே குறிவைக்கும். காதல் தோல்வி ஏற்பட்டு உடையப்போவது உங்கள் இதயம் என்பதை சிம்பாளிக்காகச் சொல்லும் உத்தியுடன் ஆக்கப்பட்ட
பரிசுப்பொருள்களின் அணிவகுப்பு. வாழ்த்து அட்டையில் இதயம், கேக்கில் இதயம் என்று தொடங்கி இன்று காதலர் தினத்தன்று ஹோட்டலில் இட்லியிலும் தோசையிலும்கூட இடம்பிடித்து விட்டது இதயம்.

பிப்ரவரி மாதத்தில் ரெஸ்டாரண்ட்கள் நிரம்பி வழிகின்றன. அலுவலக வேலை, பிற வேலைகள் என்று அவசரமாக எந்த ஊர் சென்றாலும் காதலர்கள் அல்லாதவர்கள் பிளாட்பாமில்தான் தங்க வேண்டும்.

அன்று போலிஸ் காரர்களுக்கும் மஜாய்தான். சில்லரை வாங்கும போலிஸ்காரர்களுக்கு அந்த மஜாய். வாங்காத போலீஸ்காரர்களுக்கு, சாதனை செய்ததாய் ஒரு நான்கு ஜோடிகளை அத்து மீறி பொது இடத்தில் நடந்து கொண்டனர் என்று உள்ளே தூக்கிப் போடும் மஜாய்.

பூங்காக்கள், சினிமா அரங்கங்கள், கடற்கரை தோறும் முகத்தோடு முகம் வைத்து, ரஜினி பாணியிலும் கமல் பாணியிலும் முத்தம் கொடுப்பவர்கள், முகம் காட்டி, முகம்காட்டாமல் முதுகு மட்டும் காட்டி, வெட்கியும், வெட்கமற்றும் காதலர்களின் போஸ் கொடுக்கும், சூடான வண்ணப்படங்கள் நிரம்பிய நாளிதழ்கள். வியாபார தந்திரத்தில் அவைகள் மட்டும் என்ன குறைந்தா போய்விடும்.

காட்சி ஊடகமான தொலைக்காட்சியின் அரிய சேவை கேட்கவே வேண்டாம்.,
காதலர்கள் தினம் தேவையா? தேவையில்லையா? என்று நிகழ்ச்சி தயாரித்து விடும். கோபிநாத்தும் நடுவில் நின்று உசுப்பேற்றி உசுப்பேற்றிக் காதலர்களையும் காதல் எதிர்ப்பாளிகளையும் மோத வைத்து, ரணகளப்படுத்தி மரணப்படுக்கையில் தள்ளியேவிடுவார்.

கேட்கிறார்களோ கேட்கவில்லையோ நாங்கள் ஊதும் சங்கை ஊதியே
தீருவோம் என்று சில அமைப்புகளின் எதிர்ப்புக் குரல்கள் இத்தனையும் மீறி காதல் தேவைதானா என்றால் தேவைதான்। ஆனால்அது எப்போது। நம் வயிற்றுப் பாடு நிறைவேறி வளமான வாழ்வுக்கு அடித்தளமிட்ட பின்பு அது தேவைதான்। அப்படின்னா எப்ப காதலிக்கலாம்। பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம் முடித்து ஒரு அலுவலில் அமர்ந்து காதலிக்கு உங்கள் சொந்தப் பணத்தில் ஒரு பரிசுப்பொருள் வாங்கித்தரும் அளவில் உங்கள் வாழ்க்கைத்தரம் உயர்ந்தபின்பு காதலித்தால் உங்கள் காதல் வெற்றிபெறும்। அதை விடுத்து “ஏய் மச்சி ஏப்படியாவது ஒரு 200 ரூபாய் ஏற்பாடு பண்ணித்தாடா। காதலர் தினத்துக்கு என் ஆளுக்கு ஏதாவது வாங்கித் தரனும்டா“ன்னு கேக்கர நிலைமையில் காதல் தேவையா என்று சிந்திக்க வேண்டியது இன்றைய காதல் செய்யும் இளைய தலைமுறையின் முறையான, முக்கியமான, முதன்மையான கடமை। சிந்தியுங்கள் காதலர்களே!!








நன்றி குமுதம் ஹெல்த்