“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 23 அக்டோபர், 2010

அரசனும்... அரசியும்...


கோவிலுக்குப் போலாங்களே.......நோயின்றி வாழ......


http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcRtwNalsN3KAp2tBW5rtlY78iytfWWfmye5BUBrQ7d6Wnkw4e-K
     ஊருக்கு அரசன் அரசி எவ்வாறு முக்கியமோ, அதே போல கருவூருக்கு இந்த அரசன் அரசி என்றழைக்கப்படும் அரசமரமும் வேப்ப மரமும் முக்கியம் என்று சென்ற இதழில் கண்டோம்.. இதில் வேமபு தமிழர்களின் பண்பாட்டோடவும் வழிபாட்டோடவும் வாழ்வியலோடும், உடல் ஓம்பு முறையோடவும் தொடர்புடைய்து. வழிபாட்டோடு தொடர்புடையது என்பது அம்மன் வழிபாட்டை அறிந்த அனைவரும் அறிவர்.
        பக்தி செய்யும் வகையைக் கூற வந்த வள்ளலார் வேம்பையே  உவமையாகக் கூறுகிறார். 
வேமபுரு புழுவை வாங்கிமென் கரும்பிடை விட்டாலும் வேம்பையே நோக்கிப் பின்னும் வியப்புறுமாறு
 
என்று கூறி வேம்பு ஆலயம் செல்வது இரண்டும் கசந்தாலும், பக்தி பிறவி என்ற பிணியைப் போக்கி இன்பம் பயப்பது. வேம்பு உடல் பிணியைப் போக்கி நலமாக வாழ் வைப்பது.. ஆகவே உடல் ஓம்புவதற்கு முதன்மையான மருந்தாக வேம்பு பயனளிக்கிறது. 
      தமிழர்களின் அகத்தும் புறத்தும் வேம்பு தொடர்ந்தே வந்துள்ளது. தமிழர்களின் அக வாழ்வில்,
கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்னை இன்றியும் கழிவது கொல்லோ (குறுந்தொகை 24)
    என்று பிரிந்து சென்ற காதல் தலைவனின் வருகைக்காகக் காத்திருக்கும் தலைவி, வேம்பின் மலரைப் பார்த்து ஏங்க, தலைவன் வரும் காலம் காட்டும் கடிகாரமாகப் பயன் பட்டது வேம்பு. புற வாழ்விலோ போரில் அடையாள மாலையாகப் பயன்பட்டுப் பண்பாட்டோடு தொடர்புடைய பெருமையைப் பெற்றுள்ளது. இதனைச் சுட்டும் பின்வரும் புறநானூற்றுப் பாடல்.

குடுமி களைந்தநுதல் வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து  


   இது மட்டுமல்ல வேம்பு வானியலுடன் தொடர்புடையது என்பதற்கு சான்றுகள் பல காணப்படுகின்றன. நம்புவதும் நம்பாததும் அவரவர் கையில் என்ற போதும் உள்ளவற்றைப் பதிவது நம் கடமையுமாகிறது.
நவகோள்களில் கேதுவின் பிரியமான மூலிகை வேம்பு என்கின்றது வானியல் நூல். ஜாதகத்தில் கேதுவின் தச புத்திகள் கேடு தர விளைவிக்கும் தருணங்களில் வேப்பமரத்திற்கு மஞ்சள் குங்குமம் இட்டு ஒன்பது நாட்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வர, கெடுபலன் குறையும் என்பர். அதுமட்டுமல்ல மரத்தின் எல்லா பாகங்களையும் சமமாக எடுத்து தூள் செய்து, தேனில் குழைத்து நெற்றியில் பூசி வர மிருகங்களைக் கூட வசியப்படுத்தலாமாம். 

         அகில உலகத்தையும் இயக்கும் பெரும் சக்தியே ஆதி பராசக்தி. எங்கும் நிறைந்த  ஆதி சக்தியை மூலைகையிலும் கண்டனர் நம் முன்னோர்கள். வேம்பை நம் சித்தர்கள் ஆதிசக்தி மூலிகை, பராசக்தி மூலிகை என்று பெயரிட்டு அழைத்தனர். அகத்தியரின் பரிபூரணம் 400 உம் இந்தக் குறிப்புகளைக் காணலாம். 

         கோடையில் இளைப்பாற்றிக் கொள்ள நம் முன்னோர்கள் கண்ட வழி அம்மன் கோயில் திருவிழாக்கள். பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அம்மன் கோவில் திருவிழாக்களில் வேப்பிலை ஆடை அணிந்து கோவிலைச் சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வேப்பிலை ஒரு கிருமி நாசினி. உடலில் வெப்பத்தை உள்வாங்கும் தன்மை கொண்டவை. இதனால் பழங்காலத்தில் வெப்ப நோயின் தாக்குதலிருந்து விடுபட்டனர்.. 

          என்ன ஒன்று அவர்கள் உரிமை வாங்க வேண்டும் என்பதை மட்டும் அறியாது விட்டு விட்டார்கள். அதன் பலன் இன்று நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து நம் உரிமையை நாம் பெறவேண்டியுள்ளது.. அமெரிக்காவிடம் இருந்து போராடிப் பெற்ற காப்புரிமையைத்தான் (பேடண்ட்) சொல்கிறேன். போந்தை, வேம்பே ஆர் என வரூஉம்
மாபெருந் தாணையர் மலைந்த பூவும்என்று கூறி தொல்காப்பியர் காலம் தொடர்ந்து நாம் பயன் படுத்தி வரும் வேப்பிலையை பறிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் வரி கட்டும் அபாயத்தில் இருந்து நல்ல வேளையாகத் தப்பித்தோம் என்றே கூற வேண்டும்.

       சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது. காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் ஆற்றலும். அத்துடன் காற்றில் கலந்துள்ள Anthro cyanine என்னும் நச்சு வாயுவை ஈர்த்துக்கொள்ளும் (கொல்லும்) ஆற்றலும் வேம்புக்கு உள்ளது. வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்ற வேதிப்பொருள் மனிதனைத் தாக்கும் நோய்க்கிருமிகளை முற்றிலும் இயங்க விடாமல் அழித்து விடும் தன்மையது. வேம்பின் மருத்துவ குணங்களைப் பற்றிக் கூற ஆரம்பித்தால் முடிவில்லாது தொடரும். 

காய சித்தியாகும்  கடிய சிலேஷ்ம மாறும்
தூய விந்து நாதமிவை சுத்தியுமாம் தூயவருக்
கெத்திக்கும் கிட்டு, இலையருந்தில் வாயெல்லாம்
தித்திக்கும் வேம்பதற்குத் தேர்” 

 அகத்தியம் காயசித்திக்கு மருந்தாகும் என்று வேம்பின் தேர் என்று கூறுகிறது. ஆத்தா மகமாயி ஒருபுறம், வேம்பு ஒரு புறம் என்று பக்தர்களின் உள்ள உடல் நோயைத் தீர்க்க அடமாக அமர்ந்து இருக்கும் இடம் கோயில். இக்கோயில்களுக்குப் போகமாட்டேன் என்று அடமாக இருப்பது அழகா? அறிவுடைமையா?
சென்ற இதழில் அரச மரம் பற்றி குறிப்பு கூறி விடுத்தேன். அதன் தொடர்ச்சியாக, 
            வேப்ப மரத்தை மரங்களின் அரசி என்று கூறுவதன் காரணங்கள் அறிந்தோம். அதே போல அரச மரத்தை வ்மரங்களின் அரசன் என்று கூறுவதற்கு முக்கியமான காரணம் அறியவேண்டாமா? அது பெரியதாக வளர்வதாலா? உதிய மரம் கூட பெருத்து பெரிய மரமாக இருக்குமாமே. பழமொழி சொல்லுகிறதே.. உதியம் பெருத்து உத்திரத்திற்கு ஆகுமா? என்று. அப்போது அது அல்ல காரணம். வேறு எதுவாக இருக்கும்.

          கம்பரின் கைவண்ணத்தில் கூறவேண்டுமாயின் அரச மரத்தை உயிர் காற்றெலாம் உரைவதோர் உட்ம்புமானது என்று கூறலாம். உயிரெலாம் உரைவதோர் உடம்பு மாயினான் என்று மன்னன் தசரதனைக் காட்டுவார். கம்பர். மன்னன் என்பவன் தன் நாட்டு மக்களைக் உயிர் போல எண்ணி காக்க வேண்டிய கடமையுடையவன் என்பாதால். அக்கடமையை ஒரு மரம் செய்கிறது எனும்போது அதனை 'அரசன்' என்று முடிசூட்டாமல் எப்படி அழைப்பதாம்? எப்படி என்று கேட்கிறீர்களா? 

                மரங்களில் அபூர்வமான மரம் அரச மரம். அனைத்து தாவரங்களும் 12 மணி நேரம் ஆக்ஸிஜனும், 12 மணிநேரம் கார்பன்-டை-ஆக்சைடும் வெளியேற்றும். ஆனால் அரச மரம் மட்டும் நமக்காக நாம் உயிர் வாழ, நல்ல காற்றைச் சுவாசிக்க உயிர்க்காற்றை (ஆக்சிஜனை) 24 மணிநேரமும் வெளியேற்றும்  அற்புதமான தனமையைத் தன்னகத்தே கொண்டது.. 

               அதனால்தான் கோயில்கள் தோறும் அரசும் வேம்பு கோலோச்சுகிறது. இவ் அறிவியலை உணர்ந்த நம் முன்னோர்கள், கோயில்கள் தோறும், சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பராமரிக்க அரச மரங்களை நட்டு பராமரித்தார்கள். பொது இடங்களிலும் கிராமங்களில் அரச மரத்தை நட்டார்கள். இந்த இடத்தில் நம் முன்னோர்களின் உயிரியல் அறிவையும் பாராட்டியே ஆகவேண்டும். 

                கிரகங்களில் வியாழன் (Jupiter) கிரகம் சக்தி வாய்ந்தது. இது குழந்தைப் பாக்கியம், திருமணம், பணம், வரவு போன்ற காரியங்களுக்கு உதவுவதாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.  இந்துக்கள் அரச மரத்iதை வலம் வந்து குரு' என்று அழைப்பார்கள். வியாழக்கிழமை உருவானதும் இதை அடியொற்றியே.

        வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுக்கள் நன்மைகள் தரும். கெட்ட கதிர்வீச்சுக்கள் தீங்கு விளைவிக்கும். அரச மரத்திற்கும், வியாழன் (Jupiter) கிரகத்திற்கும் நேரடி தொடர்புகள் இருக்கின்றன என்று வானநூல் அறிவியல் கூறுகின்றன.. இந்த மரம் வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் அடைத்துக் கொண்டு தன்னையும் பாதுகாத்துக் கொண்டு நம்மையும் வாழ வைக்கும் இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் மருந்தாக மாறுகிறது.

         
"ரெய்கி' மருத்துவத்தில் மரத்தைக் கட்டிப்பிடிக்கும் சிகிச்சை பிரபலமானது. மரத்தை கட்டிப்பிடிக்கும் போது அதன் நல்ல குணங்கள் நம் உடலில் மாற்றலாகி பல வகையான நோய்களைக் குணப்படுத்துவதுடன், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உண்டாக்குகிறது. கிரக தோஷங்களையும் நீக்குகிறது. இம்மரத்தை தினசரி அரை மணி நேரம் கட்டிப்பிடிப்பதால் மேற்கண்ட பலன் கிடைப்பதுடன் நல்ல உடல் நலனும் கிடைக்கிறது. (ஆரச மரத்தைக் கட்டிப் பிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு ரெய்கி மருத்துவர்கள்தான் பதிலளிக்க வேண்டும்)  

          இவற்றின் காரணமாகவே அரச மரத்தைக் தொட்டு கும்பிட்டு வலம் வருவது இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகின்றது.
பெட்ரோல் புகையில் கலந்து ஐக்கியமான உயிர்க்காற்றைச் சுவாசிக்க முடியாது தவிக்கும் இன்றைய சூழலில்,


அவசரமாகச் சுவாசிக்க வேண்டும்
காரோட்டி ஊருக்கு வெளியே போ” 

என்றும்,
பிராண வாயு பிரித்தெடுக்க 
நாசிக்குச் சக்தி இல்லை 

சுற்றியுள்ளது காற்றல்ல 
இது
பெற்றோல் டீசலின் 
வளிவடிவம்

இதைச் சுவாசிப்பதெனில் 
எந்திர மூக்கு வேண்டும்”

என்றும் கூறிய வைரமுத்துவின் கவிதை வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது. சிறிது நேரமாவது தூய உயிர்க் காற்றைச் சுவாசிக்க விரும்பினால் .கோயிலுக்குப் போகலாமே.. இன்னும் வரும் ஆலய உலா...


நன்றி குமுதம் ஹெல்த்.

10 கருத்துகள்:

  1. அரசனும் அரசியும் .. அற்புதமான தலைப்பு.. முதல்ல பாராட்டை பிடிங்க....
    ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
    மருவூர் அரசி!...
    தமிழ் வருடப் பிறப்பிற்கு எங்கள் வீடுகள் வேப்பம்பூ பச்சடி செய்வார்கள்.
    அம்மை போட்டிருந்தால் வேப்பிலை படுக்கை போடுவதும் இதே காரணத்தால்தான்.
    வேப்பிலை காரியின் மகத்துவங்கள் ஏராளம். இருந்தாலும் அவளை வெள்ளைக்காரன் சொந்தம் (பேடன்ட்) கொண்டாடியதுதான் உச்சபட்ச கேலிக்கூத்து.
    நல்லா இருக்கு ஆதிரா.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள RVS,
    வாருங்கள். தலைப்புக்கான அன்பான தங்கள் பாராட்டைப் பெற்றுக்கொண்டேன். நன்றி. அதற்கு குரு காணிக்கை தங்களுக்கே தர வேண்டும்.

    ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி பயப்பது போல தங்களின் வாழ்த்தும் குறையும் என் எழுத்துக்கு உறுதி பயக்கும். த்ங்களின் பாராட்டும் குட்டும் எனக்கு என்றும் தேவை.

    நாம் இளிச்சவாயர்களாக இருக்கும் வரை எல்லா உரிமையையும் அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். நம் முன்னோர்கள் எந்த அறிவியலைச் சொல்லவில்லை. எல்லாவற்றையும் ஆன்மீகச்சாயம் பூசி மறைத்து விட்டு எல்லா பெருமையையும் இழந்து நிற்கிறோம். ஏதொ இது ஒன்றில் தப்பித்துக் கொண்டோம்.

    தங்களின் தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி RVS.

    பதிலளிநீக்கு
  3. ஆலிலும் ,வேம்பிலும் இவ்வளவு செய்திகளா.. அதுவும் தமிழ்த்தேன் தடவி..பாராட்டுகள்..வாழ்த்துக்கள்..நன்றிகள்..

    உங்கள் முதல் வரிக்கேற்ப மனயாளுடன் கோவில் பயணங்கள் சிறப்பாக நடந்து வருகிறது.

    பதிலளிநீக்கு
  4. ஆதிரா! மரங்கள் என்றுமே நேசிக்கப் பட வேண்டியவை.. எனக்கு நிறைய மர நண்பர்கள் உண்டு.. அவை பற்றி பிறிதொரு சமயம் பார்க்கலாம்.
    Joyce Kilmer எனும் கவிஞன் மரம் என்றொரு கவிதை எழுதினான். சட்டென நினைவுக்கு வந்த சில வரிகளைக் கீழே தமிழாக்கி தந்துள்ளேன்

    மரம் போன்றே
    அரும் கவிதை
    காண்பேன் இல்லை.

    இறையோடும் துதி பாடியே நாளும்
    இலையாடும் கரமோ வானிற் நீளும்

    கவிதை புனைய என்போல் மூடன்போதும்.
    கடவுள் மட்டுமே மரத்தை படைக்கவியலும்

    பதிலளிநீக்கு
  5. அரச மரம் 24 மணி நேரம் ஆக்சிஜன் வெளிவிடுமா? தகவலுக்கு நன்றி. நீருக்குள் ஒரு தாவரமும் இப்படி 24 மணி நேரமும் அக்சிஜன் வெளிவிடுவதாகச் சமீபத்தில் படித்தேன்.

    "அவசரமாய் சுவாசிக்க வேண்டும்..." வைரமுத்து வரிகளா? ஆச்சரியமாக இருக்கிறதே! ரசித்தேன்.

    வேப்பங்கன்று மட்டுமல்ல அரிசிக்கும் பேடன்ட் போட்டு சுரண்டப்பார்த்தார்கள். நலல் வேளை.

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள பத்மநாபன்,
    சுவையான தமிழ்த்தேன் தடவி பாராட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி..
    கோயில் பயணங்கள் நாள்தோறும் நடக்கின்றனவா பந்தமநாபன்? எனக்கு மிக்க மகிழ்ச்சி.. தங்களின் உடல் உளம் இரண்டின் ஆரோக்கியம் பாதுக்காக்கப் படுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள ஜி,
    உங்களுக்கு நிறைய மர நண்பர்கள் உண்டு. எங்களுக்கு நிறைய மற நண்பர்கள் உண்டு.
    ஜாய்ஸ் கிரிமரின் கவிதை அழகாக் இருக்கிறது.

    //கவிதை புனைய என்போல் மூடன்போதும்.
    கடவுள் மட்டுமே மரத்தை படைக்கவியலும் //

    எவ்வளவு நிதர்சனமான வரிகள். உணர்ந்தேன்.ரசித்தேன்.
    தங்களின் உடனடி மொழிபெயர்ப்பு சுவை..அழகு.. நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
  8. அன்பு அப்பாதுரை,

    நாம் இளிச்சவாயர்களாய் இருக்கும் வரை அரிசி என்ன அரிசி உணவை எற்றுக்கொள்ளும் நம் வயிற்றுக்கும் உரிமம் அவர்களிடம் என்று கூறி விட்டாலும் ஆச்சரியப்பட முடியாது.

    பதிலளிநீக்கு