“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

சனி, 28 டிசம்பர், 2013

தண்ணீர் கேட்டால் பெட்ரோலைக் கொடுத்த ஈழ இராணுவத்தை...




“குற்றமே காக்க பொருளாக; குற்றமே

அற்றம் தரூஉம் பகை”


தொடர்ந்து குற்றமே செய்து வாழும் தமிழினப் பகைவன் மகிந்த இராசபட்சேவின் குற்றப் பட்டியலில் நீண்டு கொண்டே போகிறது. மீனவர்கள் கைது; பத்திரிகையாளர் கொலை; சுற்றுலாப் பயணிகள் கைது என்று இலங்கை காவற்படையினரால் கைது செய்யப் படுவதும் கொலை செய்யப் படுவதும் முடிவில்லாத தொடராகப் போய்க் கொண்டிருக்கிறது. “இலங்கை செல்லும் தமிழர்களுக்கு உயிர் ஆபத்து உள்ளது” என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் வெளிப்படையாகக் கூரியதைப் போலவே அச்சமூட்டும் வகையில் நடந்தேறியுள்ளது தமிழகத்திலிருந்து இலங்கை சென்ற 22 வயதே ஆன இளம் ஊடகவியலாளர் தமிழ் மகா பிரபாகரனின் கைது சம்பவம்.
NEWS என்பதே நாலாபுறமும் சென்று சேகரித்துக் கொடுக்கப் படும் செய்திகள். செய்தியாளகள் ஈ நுழைய முடியாத இடத்திலும் நுழையும் திறனும் தகுதியும் பெற்றவர்கள் மட்டுமல்ல. உரிமையும் பெற்றவர்கள். அதுதான் செய்தியாளர்களுக்கு உரிய பெரிய வாய்ப்பு. ஆனால் இலங்கையைப் பொறுத்த வரை எந்த நீதியும் போர்க்குற்றவாளியான மகிந்திர இராச்பட்சேவுக்கு கிடையாது.
இலங்கை காவற்படையினர் ஐம்பது பேரால் சுற்றி வளைத்துக் கைது செய்யப் பட்ட ஊடகவியலாளர் தமிழ் மகா பிரபாகரன் இதற்கு முன்னரே இரத்த ஈழத்தில் இருபத்தைந்து நாட்கள் மனித வேட்டை நடந்த முள்ளி வாய்க்கால், வடக்கு மாநிலம் முதலிய பகுதிகளைச் சுற்றிப் பார்த்து வந்தவர். இரத்தம் சிந்தியவர்களின் உறவுகளிடம் பேசி அந்தக் கண்ணீர்க் கதைகளை ஜூனியர் விகடன் இதழில் ‘புலித்தடம் தேடி..’ என்னும் தலைப்பில் தொடராக  எழுதினார். நெஞ்சு கனக்க சுமந்து வந்த சுமைகளை இறக்கி வைத்த இத்தொடருக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவர் பத்திரிகையாளர் மற்றும் புகைப்படவியலாளர் என்னும் பரிசினையும் பெற்றவர்.
இப்பரிசினை இவர் பெற்றமைக்குக் காரணமே யுத்த பூமியை நேரில் கண்டு புகைப்படம் எடுத்து உண்மைக் காட்சியாக வழங்கினார் என்பதால். 
கிளிநொச்சி மாவட்டத்தின் மிக பின்தங்கியிருக்கும் வேரவில், கிராஞ்சி பகுதிக்கு புதன்கிழமையன்று (25.12.13) காலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் வட மாகாண சபையின் உறுப்பினர் பசுபதி பிள்ளை பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் ஆகியோருடன் சென்றுள்ளார். அங்கு இருக்கும் நிலைமையைப் பார்த்தவுடன் இவரது புகைப்படக் கருவி தன் கண்களை அகல விரித்துள்ளது. இராணுவ முகாம், காவல் நிலையங்கள் உட்பட பல இடங்களை படமாக்கியுள்ளார். சுற்றுலாப் பயணியாக வந்தவர்கள் இலங்கையில் இது போன்ற தடை செய்யப் பட்ட பகுதிகளுக்குச் சென்று புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி இல்லை. இந்த அடிப்படையில் விசா விதிமுறைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தி துப்பாக்கி முனையில் கைது செய்யப் பட்டுள்ளார். உடன் சென்றவர்களையும் கைது செய்த அரசு அன்று மாலை வரை காவலில் வைத்து விசாரனை நடத்திய பின் அவர்களை விடுதலை செய்துள்ளது. இலங்கை சென்ற மகா பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் இல்லத்தில் தங்கி இருந்துள்ளார். விசாரனையில் சிறிதரன், மகா பிரபாகரன் என் நண்பர்தான். ஆனால் அவர் ஒரு ஊடக வியலாளர் என்றே தமக்குத் தெரியாது என்று கூறி தப்பியுள்ளார்..
தமிழ் மகா பிரபாகரன் கொழும்பில் உள்ள தீவிரவாதக் குற்றத் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சித்திரவதைக்கும், சட்ட விரோதக் கொலைகளுக்கும் பெயர் பெற்ற தீவிர வாத குற்ற தடுப்பு மையத்தில் மகா பிரபாகரன் தீவிரவாத தடுப்புப் பிரிவினரின் விசாரனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார். நான்கு மாடி என்று அழைக்கப்படும் அந்த தீவிரவாதக் குற்றத் தடுப்பு மையம், கொலை வரை செல்லக் கூடிய  கொடிய பகுதி என்பதாலேயே நமக்கு அச்சம் கூடுகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்கள் மாய்ந்து மாய்ந்து செய்திகள் வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன. முகநூல் பயன்பாட்டாளர்கள் கூட்டுக் கூட்டாக வெளியுறவு செயலருக்கு விண்ணப்பங்கள் அனுப்பிக் கொண்டு இருக்கின்றனர். ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்துவதாக முடிவு செய்துள்ளனர். ஆனால் ஈழம், தமிழ் என்றெல்லாம் உடல் அதிர பேசும் தலைவர்கள் ஒருவரும் இதுவரை இந்த இளைஞனுக்காக வாய் திறக்க வில்லை. திரு. வை. கோ. மருத்துவர் இராமதாஸ் இருவரைத்தவிர அரசியல் தலைவர்கள் எவரும் இதற்குக் குரல் கொடுக்காத மர்மம் என்ன என்று புரியவே இல்லை.
இது ஒரு புறமிருக்க,. இந்திய அரசியல் வாதிகளுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல விகடன் குழுமத்தினர். விகடன் மின்னிதழ் ஒரு செய்தி என்னும் அளவில் இது குறித்து வெளியிட்டுள்ளது. விகடன் குழுமம் தமிழ் பிரபாகரன் அங்கு பணி புரியவில்லை என்ற காரணத்தைக் கூட கூறலாம். ஆனால் விகடனில் பயிற்சி பெற்று, தொடர்ந்து ஜூனியர் விகடனில் எழுதி வரும் தமிழ் மகா பிரபாகரனை விகடன் நிருபர் என்றுதான் கூற வேண்டும்? அதை விட்டுவிட்டுப் பார்த்தாலும் தம் பத்திரிகையின் நிருபர் என்ற அளவில் இல்லையென்றாலும் ஒரு தமிழ் இளைஞன் ஒரு கொலைப் பாதக நாட்டில் சிறைப் பட்டிருக்கிறார் என்னும் ஆதங்கத்தைக் கூட விகடன் நிறுவனத்தின் இணைய தளத்திலோ, அல்லது குழும சமூக வலைத்தள பக்கங்களிலோ இது வரை வெளியிடாத அந்தப் பத்திரிகையின் அரசியல்தான் புரியாத புதிராக உள்ளது.
“நம்பிய போதெல்லாம் 
ஏமாளி, 
கோமாளியானேன்... 
வெம்பிய நாழிகை யாவும் 
தன்னந்தனிமையில் 
கண்ணீரானேன்...”
என்று மகா பிரபாகரன் கண்ணீர்க் கவிதை வடித்தது விகடன் குழுமத்தை நினைத்துதானோ என்று தோன்றுகிறது!! 
இலங்கையின் கொடுங்கோல் ஆட்சிக்கு அந்நிய நாடுகள் துணை போகலாம். ஆனால் அவை கூட பல போது நீதியுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்கின்றன. இந்திய ஆளும் கட்சியின் நிலையில்தான் எப்போதும் மாற்றமே வருவதில்லை.. தன் குடிமக்களைப் பிறர் துன்புறுத்தாமல் காப்பதே ஆட்சியாளர்களின் நல்லாட்சியாக இருக்கக் கூடும். குடிமக்களைக் காக்காத அரசு தானே அழியும் என்பதை மனத்தில் இறுத்தி அழிவில் இருந்து குடிகளைக் காப்பாற்றி தன் அரசையும் காத்துக் கொள்வது ஆளும் அரசின் கடமை.  
            தன் கொடூர அரசாட்சியின் உண்மைகள் வெளி வந்து விடும் என்னும் அச்சத்தில் ஊடக தர்மத்தை மீறி கைது செய்துள்ள இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. இளமையின் வேகமும் தன் இனத்தின் மீது உள்ள பாசமும் அந்த இளைஞனைத் தூண்ட கைப்பொருளைச் செலவழித்து இலங்கை சென்றுள்ள அந்த இளைஞன் ஈழ மக்களுக்காகவும் இந்திய மக்களுக்காகவும் ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. ஆகவே அவரை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது இந்திய அரசின் கடமை என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டிய இந்தியக் குடி மக்களின் துர்ப்பாக்கிய நிலையை என்னென்பது?  தமிழ் மாநில மக்களை எப்போதும் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது இந்திய அரசு. சிறை பிடித்து மூன்று நாட்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்திய அரசிடம் வேண்டுவதெல்லாம் ஒன்றே. தமிழ் பிரபாகரனின் விடுதலைக்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுவதே.
 தமிழகத் தானைத் தலைவியையும் தாய்மையோடு அணுகி கொடுஞ் சிறையில் அகப்பட்டுள்ள அந்த இளைஞனைக் காக்க ஆவன செய்ய வேண்டும் .



( அலை ஓசை  மாத இதழில்) 

நலமுடன் தமிழகம் திரும்பிய தம்பி பிரபாகரனின் மனம் இந்நிகழ்வை மறந்து அமைதி பெற வேண்டுவோம்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக