“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

வியாழன், 13 அக்டோபர், 2011

எங்க அப்பா ரொம்ப அழகு.....

              அப்பாவின் உடலை ஹாஸ்பிடல்ல இருந்து வீட்டுக்கு ஆம்புலன்ஸில் எடுத்து வந்த நேரம், அனைவருக்கும் ஃபோன் பண்ணி இறப்புச் செய்தியைச் சொன்ன நேரம் தொட்டுத் தொட்டு அழுதுட்டு இருந்த அம்மாவை விலக்கிட்டு அப்பாவைப் ப்ரீஸர் பாக்ஸில் படுக்க வைத்த நேரம், உறவுக்காரங்க எல்லாரும் ஒவ்வொருவரா வந்து பிலாக்கணம் பாடி அழுது கதறின நேரம், இப்படி எந்த நேரத்திலும் இல்லாத் ஒரு பரபரப்பு இப்போது. எல்லார் முகத்திலும் கவலை ரேகை கட்டை விரல் அகலத்தில் ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் அவரவர் குரல் வளத்தில் ஆனால் கம்மிய குரலில் சோகப் பாவனையில் ”கிடைக்கலப்பா” என்று வருத்தத்தோடு சொன்னார்கள்.. அங்கே கேட்டுப் பாரேன். இங்கே கேட்டுப் பாரேன் என்று அவரவர் அவரவருக்குத் தெரிந்த இடத்தைச் சொன்னார்கள்.

”இதுவே கிராமமா இருந்தா உடனே கிடைச்சுடும்” என்று ஒர்வர்.

“ஒரு வார்த்தைச் சொல்லி இருக்க கூடாதா? நான் பையில தூக்கிப் போட்டுட்டு வந்திருப்பேனே. எங்க வீட்ல எவ்வளவு கிடக்குது.” இது அப்பாவின் ஒத்தை ஆண் உடன் பிறப்பு. எங்க சித்தப்பா.

”மெட்ராஸ்ல எல்லாம் ஒருத்தரும் இருந்தாக் கூட குடுத்து உதவிக்கிட மாட்டாங்க” அப்பாவின் இறுதிச்சடங்குக்காக பூர்வீக கிராமத்தில் இருந்து வந்திருந்த அப்பாவோட ஆத்மார்த்த நண்பர். கிராமத்துக்காரர்.

”.எங்க ஊருல கோயில் கடையில கிடைக்காத பொருளே இல்ல” இது அப்பாவோட ஒன்னுவிட்ட ஸ்ரீரங்கத்துச். சகோதரி.

            ”நாங்கல்லாம் பணம் கொடுத்து வாங்க மாட்டோம். ஒரே ஓட்டமா காட்டுப்பக்கம் ஓடிப் போய் பொறுக்கிட்டு வந்துருவோம்” இது சேலத்துக்காரர்.. என்னோட ஓரகத்தி.

              ”கெடச்சா பாருடா.. இல்லாட்டா பரவாயில்லை, அப்பா இதுக்கெல்லாம் வருத்தப் படமாட்டார். இருக்கும் போது அவர நல்லா வச்சிருந்துட்டோம். அவர் திருப்தியா போயிருக்காரு. பரவால்லடா விடுடா.” இது அப்பாவைக் கண்ணும் கருத்துமா இத்தனை ஆண்டுகள் பராமரித்து வந்த, அப்பாவுக்குக் கொள்ளி வைக்கப் போகிற அந்த குடும்பத்தின் மூத்த மகன்.. எங்க அண்ணன்..

               எங்க வீட்ல இருக்கு நான் போயி கொண்டு வந்துரட்டா இது வர்ணனையாகப் பேசத்தெரியாத, வேலை மட்டுமே செய்யத் தெரிந்த என் தங்கச்சி..

            ”அதெல்லாம் வீட்டுல இருந்து எடுத்துட்டு வரக்கூடாதும்மா” இது கடிகாரத்தையே அடிக்கடி பார்த்தபடி சட்டு புட்டுனு சடங்கை நடத்திட்டு கிளம்பறதிலேயே குறியாக அடிக்கடி கருத்த அந்தக் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்த அப்பாவின் இறுதிச் சடங்கை நடத்தி வைக்க வந்திருந்த தொப்பைச் சாஸ்திரி.

                  இத்தனைக்கும் நடுவுல எல்லா வேலையும் சரியா நடக்கனும் ஆனா எனக்கொன்னும் தெரியாது. நான் வெளிநாட்டுக்காரன். என்ற தோரனையில் இதுகூடவா வாங்க முடியாது? இவ்வளவு பெரிய சிட்டீல” என்று எங்கள் வீட்டின் ஆறரை அடி உயரக் கடைக்குட்டி கடோத்கஜன்... என் தம்பி. குட்டி என்றவுடன் ஏதோ சின்னபையன் என்று எண்ணக்கூடாது. அவனுக்கு இரண்டு சின்னக் குட்டிங்க இருக்கு.....

                     அப்பா இப்ப ஃப்ரீஸர் பாக்ஸை ஒடச்சிட்டு எழுந்து வந்து ”நாகப்பா அதைப்போய் வாங்கிட்டு வாப்பா” என்று வாச்மேனை கூப்ட்டுச் சொல்லப்போறாரு. இல்லாட்டி அவரே எழுந்து போயி தேவர் கடைக்குப் ஃபோன் பண்ணி தேவர்! அதைக் கொஞ்சம் உடனடியா அனுப்புப்பான்னு சொல்லப் போறாரு” .இது சிரித்துக் கொண்டே அக்கா. அப்பாவின் ஒரே செல்ல மூத்த மகள். எப்போதும் காமெடியும் கையுமாகவே அலைபவள்.

                 “என்னடா இது கிலேசம்....கன்றாவி.....சாஸ்திரம் கீஸ்திரம்னு எதையாவது சொல்லிகிட்டே அலையரதே பொழப்பா போச்சுடா... யாருடா சொன்னாங்க உங்களுக்கு? திருந்தவே மாட்டீங்களாடா? சகிக்கலடா......நீங்க பன்றது...போங்கடா.... போங்கடா போயி வேலையைப் பாருங்கடா.... இருக்கும்போது ஒழுங்கா வச்சுக்கங்கடா அப்பா அம்மாவ...” அப்படின்னு எழுந்து வந்து மூக்கை வெடக்கப்போறாரு மாமா” இது அப்பாவின் அக்கா மகன். மூடப்பழக்கத்தை வெறுக்கும் அப்பாவை அவ்வப்போதுத் தூண்டி, எப்போதும் அப்பாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதில் சந்தோஷம் காண்பவன்.

                    அப்பா இறந்ததில் பெரிதாக ஒருவருக்கும் வருத்தம் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் அவர் பட்ட துன்பம் அவ்வளவு கடந்த ஐந்து ஆண்டுகளாக. அவர் இடத்தில் இன்னொருவர் இருந்திருந்தால் நினைத்துப் பார்க்கவே முடியாது. கேன்சர் மட்டும் இல்லை. கால் வீக்கம். உடம்பு எரிச்சல்..என்று பல...படாத பாடு. அவரை சீக்கிரம் அனுப்பி வைத்ததில் பெரும்பங்கு என்னுடையதே. எனலாம். கடைசி கடைசியாக அவரைத் கஞ்சி குடிப்பா, குடித்துதான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தி ஊற்றி, கஞ்சியெல்லாம் நெஞ்சில் அப்படியே சேர்ந்து, அதனைச் சிரஞ்சினால் உறிஞ்சி எடுத்து நினைக்கும் போதே கண்களைக் கரைக்கிறது அவர் இருந்த நிலை. அப்போதும் என்னப்பா செய்யுது? என்றால் ஒன்றும் இல்லை. என்று அவர் தலையாட்டியது, பார்த்துக்கொண்டிருக்கும் போதே மெல்ல மெல்ல உயிர் பிரிந்தது...

               அம்மாவுக்கு அப்படி இருக்குமா?. அறுபது வருடம் அவருடன் வாழ்ந்தவளாயிற்றே. அப்பா இறந்த துக்கத்துடன், நோயிலும் பாயிலும் இருந்தாலும் கடைசி வரையிலும் தன் அதிகாரத்தையும் சிம்மக் குரலையும் விடாது வாழ்ந்து விட்டு, இன்று நெடுஞ்சாண் கிடையாக சாய்ந்து இருக்கும் இந்த கம்பீரமான் கட்டைக்கு இறுதிச்சடங்குக்கு ஒரு இது கூடக் கிடைக்கலயா!! என்று தோன்றிய துக்கத்தையும் சேர்த்து மனத்தில் புதைத்துக் கொண்டு மெளனமாக அம்மா. . கணவனைப் பரிகொடுத்தவள் அதிகம் பேசக்கூடாதாமே!!! அதனால்.

                        எல்லார் முகத்திலும் எதோ இது இல்லாவிட்டால் இறுதிச்சடங்கே நடக்காது என்பது போன்ற சோகம். இத்தனையையும் கேட்டுக் கொண்டு நடுக்கூடத்தில் ஃப்ரீஸர் பொட்டியில் நீங்க்ல்லாம் திருந்தவே மாட்டீங்களா என்று கேட்பது போல ஒரு நம்ட்டுச் சிரிப்புடன் இதில் எல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாத என் தி க அப்பா.

                        எங்கள் ஊரில் ஒரு பெண்மனி. யாராவது கொஞ்சம் அழகாக அவர் முன்னால் சென்று விட்டால் போதும், அவருக்கு என்ன ஆகுமோ தெரியாது. “அழக மட்டும் என்ன சந்தனக்கட்டையப் போட்டா எரிக்கப் போறாங்க”.. என்று திட்டுவதை அடிக்கடி கேட்டு இருக்கிறேன். ஏன் இப்படித் திட்டுகிறார்கள் என்று நீண்ட நாள் எண்ணியதுண்டு. அவர்கள் அத்தனை அழகு!!! ம்ம்ம்... அப்பறம் எப்படி பொறுக்கும் மற்றவர்கள் அழகா இருந்தா??!!! அதனால்தான் என்று நினைத்துக் கொள்வேன்.. அவர் அப்படி அடிக்கடி சொன்னதின் உண்மை இப்போதுதான் புரிந்தது..

                            இந்தக் குழப்பததைத் தீர்ப்பது போல போன் மணி அலறியது. நான் தான் குறுக்கும் நெடுக்குமா அமர்ந்திருந்தவர்கள் மீது கால் பட்டுவிடாதபடி, கோடு போட்டு தாண்டித் தாண்டி சின்ன வயசுல கல்லாங்காய் விளையாடுவோமே, அது போல நொண்டி அடித்துச் சென்று ஃபோனை எடுத்தேன்.. எதிர்முனையில் ஏதோ சொல்லி மூச்சை வாங்கினார் என் நோஞ்சான் மாமா. ரிஸீவரில் வெறும் காற்றுதான் வந்தது. ஏற்கனவே அவர் பேசும் போது கிண்ற்றுக்குள் இருந்து வருவது போல இருக்கும் அவர் குரல்...

                        இப்போது இங்கு கூட்டம். அழுகை இல்லை. ஆனால் அங்கலாய்ப்பு. ஒப்பாரி இல்லை. ஆனால் ஒருவித மன உளைச்சல். 85 ஆண்டு சரித்திரம் ஒன்று படுத்து விட்டதே. ”என்ன, பேத்தி கல்யாணத்தைப் பார்த்துட்டுப் போயிருக்கலாம்” முன்னாடியே சொல்லி இருந்தா கடைசியா ரெண்டு வார்த்தைப் பேசி இருக்கலாம்” ”எப்படி கம்பீரமா இருந்த மனுஷ்ன் கடைசி கடைசியா ரொம்பக் கஷ்டப்பட்டுட்டாரு”. அவருக்குப் பேரன் ஹரீஷ் பூணலைப் பாத்துட்டுப் போகனும்னு ரொம்ப “ஆசை. வரவு செலவு, பிளாட்ஸ் மெயிண்டனென்ஸ் இதே நினைப்புதான் எப்போதும்” என்றெல்லாம் வார்த்தைகள் நீட்டி முழக்கியபடி கூடத்தில் பல குரல்கள் அங்கங்கு ஒரு நான்கு பேர் கூடியபடி ஐந்து கூட்டம். அப்பாவைச் சுற்றி.

                           இந்தக் குரலுக்குப் போட்டி போட்டுக்கொண்டு படுக்கை அறைகள் இரண்டிலும் மும்மூன்று கூட்டமாய் ஆறு கூட்டம். குஞ்சு குழுவான்கள் தாத்தாவைச் சுற்றி ஓடிப் பிடித்து விளையாட்டு. ஓடியதில் தம்பி மகள் மூத்தவள் வாலு மட்டும் இல்லாத ஒரு பெண் ---- குட்டி. குழந்தைகளை வேறு பெயர் வைத்து சொல்வது எனக்குச் சற்றும் பிடிக்காது. அதனால் நாகரிகமாக் இப்படிச்சொல்லலாம். கீழே விழுந்து ஃப்ரீஸர் பெட்டியின் மூலை நெற்றியில் பட்டு இரத்தம். என்ன அவளாக விழுந்ததால் அழுகாமல் அதற்குப் பதிலாகச் சிரித்துக் கொள்கிறாள். கண்களில் கண்ணீருடன். பத்தாததற்கு அவள் அம்மாவிடம் இரண்டு அடியும் போனஸாகப் பெற்றுக்கொண்டு.

                           ”அதே கீழ விழுந்து இருக்கு ஏண்டி இப்படி போட்டு அடிக்கிற” என்ற தன் அம்மாவின் திட்டைக் காதிலும் போட்டுக் கொள்ளாது குழந்தையின் தலையில் லேசாக வடியும் இரத்தத்தை கண்ணிலும் பார்க்காத தம்பி மனைவி.

                       ”இவ்வளவு சின்ன குழ்ந்தைகளுக்கு எவ்வளவு சாமர்த்தியம் பாரேன், கீழே விழுந்து இரத்தம் வந்தும் அழலையே. தன் த்ப்புன்னு தெரிஞ்சிகிட்டு சிரிக்கிறாளே” என்று ஊரிலிருந்து வந்திருந்த அப்பாவின் சித்தி..

                     வாசலில் பக்கத்து வீட்டில் இருந்து அப்போதுதான் காபி கொண்டு வந்து கொடுத்து விட்டு..”சூடா இருக்கு. கப்புல ஊற்றும் போது ஜாக்கரதை.. இது போதலன்னா கேளுங்க” என்று பக்கத்து வீட்டு அம்மா..

                   போதும் போதும். இதுவே ஜாஸ்தி. உங்களுக்குத்தான் ரொம்ப சிரமம். இது அந்த கிருஹத்தின் மூத்த மருமகள். அண்ணனின் சகதர்மினி . என் அண்ணி...
“அப்பாவுக்கு இது கூட செய்யாம என்ன?” என்று அப்பாவிடம் உண்மையிலேயே பாசம் கொண்ட, கண்களில் நீர் தளும்ப தளதள குரலில் அந்த அம்மா.

                      .”அப்பாடா நல்ல வேளை காபி வந்துடுச்சு. ரொம்ப தலைவலிக்குது.. கொஞ்சம் எனக்குச் சூடா முதலில் கொடுத்துடு” இது அப்பாவின் அக்கா மகன். அந்த வீட்டின் இரண்டாவது மாப்பிள்ளை. என் அன்புக் கணவர்.

                     ஒரு காதை மூடிக்கொண்டு ஒரு காதில் ரிசீவரை வைத்துக்கொண்டு எல்லோரையும் சற்று அமைதிப் படுத்தி விட்டு ’மாமா கொஞ்சம் சத்தமா சொல்லுங்க.. காதுல விழுகல்’ என்றேன். என்ன சொன்னாரோ புரியவில்லை. கடைசி வார்த்தை மட்டும் லேசாகப் புரிந்தது. ‘கெடச்சிடுச்சு’ என்று மெலிதாகக் கேட்டது. மீண்டும் அவரை என்ன கெடச்சிடுச்சு? என்று கேட்டேன். அவரால் கத்த முடியவில்லையோ இல்லை எனக்குத்தான் காது மந்தமோ தெரியவில்லை. ஒன்றும் பலிக்காமல் போக நானும் அண்ணனிடம் ’கெடச்சிடுச்சாம்’ என்றேன். அண்ணனும் பெரிய குரலில் கெடச்சிடுச்சாம் என்றார்.. கெடச்சிடுச்சாம் என்று நானும் அண்ணனும் கூறியவுடன் கெடச்சிடுச்சாம்... கெடச்சிடுச்சாம்.... என்னும் எதிரொலிகள் நாலா பக்கமும் கேட்டன. அனைவரது முகத்திலும் ஒரு வித நிம்மதி....

                        பத்தே நிமிடத்தில் மாமா வந்தார் கையில் ஒரு சுள்ளியைப் பிடித்துக் கொண்டு.. அன்று ஞாயிற்றுக்கிழமை. கடைகள் எல்லாம் விடுமுறை. அலைந்து திரிந்து எங்கும் கிடைக்க வில்லை. இறுதியாக மூடியிருந்த ஒரு கடையைத் திறக்கச்சொல்லி ஒரு ஜான் அளவே உள்ள அந்தச் சுள்ளியை ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்து வாங்கி வந்திருந்தார் மாமா. அப்போதைக்கு அந்த வீட்டின் வீரப்பன் அவர்தான். மகிழ்ச்சி. அவருக்கு அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தான். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் போதே..

                           ஆகட்டும்... ஆகட்டும்.... அப்பரம் குளிகை வந்துடும் என்று சாஸ்திரி கொஞ்சம் சுதியோடு அவசரப்படுத்தினார். ஃப்ரீஸரில் உரைந்து போயிருந்த அப்பா வீதிக்கு வந்து விட்டார்.. வீட்டில் போட்ட சாப்பாடு போதவில்லை என்று அனைவரும் வாசலில் சென்று வாயில் அரிசியை நிரப்பினர்.

                   நீ கஞ்சி ஊத்தினதாலதான் நான் சீக்கிரம் கிளம்பிட்டேன். இன்னும் அரிசி வேற  போட வந்திருக்கியா என்று அப்பா என்னை ஏக்கமாகப் பார்ப்பது போல இருந்தது. இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பாரோ... நாம்தான் கஞ்சியை ஊற்றி அனுப்பி வைத்து விட்டோமோ என்று எனக்குள் ஒரு குற்ற உணர்வு. அந்த அரிசியைப் போடவும் மனமில்லாமல் போடாமல் இருக்கவும் முடியாமல் கை நடுங்க போட்டு வந்தேன். அப்பாவை ஊர்தியில் ஏற்றினர். வீதி வரை சென்று அப்பாவை வழியனுப்பி வைத்தோம், கைகளால் டாடா மட்டும் காண்பிக்காமல் கண்களில் நீரைக் காண்பித்து.

                       .இரண்டே மணி நேரம் ஒரு சிறு சட்டியில் சாம்பலுடன் அண்ணன், தம்பி இருவரும் உறவுகள் புடை சூழ வந்தனர். “அதுக்குள்ளயா முடிஞ்சுடுச்சு?” என்று வியப்புடன் வீட்டில் இருந்த பெண்கள் அனைவர் குரலும்.....

                      ”அப்பாவோட நெஞ்சுல கொஞ்சம் நாங்க சட்டியில் கொண்டு போன நெருப்பு, அப்பறம் அந்த சந்தனக்கட்ட இரண்டையும் வைச்சு மிஷினுக்குள் விட்டாங்க.. ஐஞ்சே நிமிஷத்துல அப்பா சாம்பலா வெளியில வந்துட்டாரு என்றான் அண்ணன் ஆச்சரியத்துடனும் வருத்தத்துடனும் ஒரு நீண்ட பெருமூச்சுடனும்....  அப்பாவைச் சந்தனக்கட்டையில் எரிச்சிருக்கோம்..... எங்க அப்பா ரொம்ப அழகு....... 
 அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை 

ஆதிரா.

35 கருத்துகள்:

  1. மன்னிக்கவும், மனம் கதையில் ஒட்டவில்லை... ஆனால் இது சாவு வீட்டில் நடக்கும் நிதர்சனம்.. இதை பார்க்க விரும்பாததால் தான் நான் எந்த சாவு வீட்டுக்கும் போவதில்லை...

    பதிலளிநீக்கு
  2. பல குடும்பங்களில் இப்படி சடங்குகளிலேயே குறியாக இருப்பார்கள்... சில நேரங்களில் பார்த்தால் சோகத்தை மறக்கவே பலவற்றை இழுத்து போட்டு செய்வார்கள்...

    என்ன இருந்தாலும் எவ்வளவு நாளானாலும் தந்தையின் இடம் தனி இடம்...அதை கதையின் பல இடங்களில் காட்டினீர்கள்....

    பதிலளிநீக்கு
  3. மனதிற்கு நெருங்கியவர்கள்
    மரணித்துப் போகையில்
    மனம் மீறும்
    மாண்புகளை அழகாய்
    சொல்லியிருகீங்க சகோதரி.
    நேரில் கண்டது போல இருந்தது.

    பதிலளிநீக்கு
  4. எவ்வளவு ஒரு துக்ககரமான சம்பவத்தை, அப்படியே, நேர்முக வர்ணனை போல நகைச்சுவையாக
    “என் அப்பா ரொம்ப அழகு” ன்னு தலைப்பிட்டு எழுதிவிட்டீர்கள்!

    அப்பாவை அந்த சந்தனக்கட்டையுடன் தான் “மின்சார தகனம்” செய்திருப்பார்கள் என்று நாமும் நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை.

    அப்பா ஆன்மா சாந்தியடையட்டும்.

    கஷ்டப்படும் சிலர் இருப்பதைவிட போய்விடுவதே நல்லது என்று தோன்றிவிடுகிறது. இது தான் வாழ்க்கையின் நியதி என்பதை அந்த நேரத்தில் தான் நாமும் உணர முடிகிறது. இந்த குறுகிய வாழ்க்கை முடியும் முன்பு, பலவித கோப தாபங்கள். சண்டை சச்சரவுகள். அன்பைத்தவிர அனைத்தும் ஏற்பட்டு விடுகிறது. ஏதோ நீண்டநாட்கள் சாஸ்வதமாக வாழப்போவது போல பல திட்டங்கள் தீட்டுகிறோம். நினைத்தால் மிகவும் வேடிக்கையாகத் தான் உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள். vgk

    பதிலளிநீக்கு
  5. இறந்த பிறகு சடங்குகளுக்கு முக்கியம் கொடுக்கும் மாந்தரை நினைத்துவிட்டால் நெஞ்சுபொறுக்குதில்லையே.இறந்தவருக்குத் தெரியவாபோகிறது இவர்கள் காட்டும் அக்கரை.இருக்கும்போது கூடியவரை மனம் கோணாமல் நடந்து கொள்வதே நலம்.

    பதிலளிநீக்கு
  6. அன்பு சூர்யா ஜீவா,
    இது அனுபவம். எனக்கும் ஒட்டாத அனுபவம். என்ன செய்ய? இதில் என்ன சிறப்பு என்றால் என் தந்தையார் இந்த மூட நம்பிக்கைகள் ச்ற்றும் இல்லாதவர்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சூர்யா.

    பதிலளிநீக்கு
  7. அன்பு பத்மநாபன்,
    வழக்கம் போல் இடுகை இட்டவுடன் தங்கள் வருகை, கருத்து இரண்டும் கிடைக்கப்பெற்று மகிழ்வில். நான் தான் சோம்பேறி. உடனே மறுமொழி கூட இடுவது இல்லை. மன்னிக்கவும் பத்மநாபன். மனமார்ந்த ந்ன்றியுடன்...

    பதிலளிநீக்கு
  8. அன்பு ஜெய்லானி,
    எப்படி உள்ளீர்கள்? நீண்ட நாட்களுக்குப் பின் தங்களின் வருகை மகிழ்விக்கிறது. வருகைக்கு நன்றி ஜெய்லானி.

    பதிலளிநீக்கு
  9. இருக்கு வரை மனிதன்.
    இறந்தால் பிணம் .
    அப்போது தான் நமது எண்ணங்கள்
    பினோக்கி போகும் ,நடந்தவைகளை
    அலசி ஆராய்ந்து ,அழுகிற போது
    வார்த்தைகள் வெளிய வரும் .

    பதிலளிநீக்கு
  10. அன்பு மகேந்திரன்,
    என் தந்தையார் இறந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றது. என்றோ எழுதிய பதிவு. மனதிலும்... பதிவாகி இன்னும் வருத்துவது..உங்களையெல்லாம் கனக்கச் செய்து விட்டேனோ? வருகைக்கு மிக்க நன்றி மகேந்திரன்.

    பதிலளிநீக்கு
  11. அன்பு vgk ,
    //கஷ்டப்படும் சிலர் இருப்பதைவிட போய்விடுவதே நல்லது என்று தோன்றிவிடுகிறது. இது தான் வாழ்க்கையின் நியதி என்பதை அந்த நேரத்தில் தான் நாமும் உணர முடிகிறது. இந்த குறுகிய வாழ்க்கை முடியும் முன்பு, பலவித கோப தாபங்கள். சண்டை சச்சரவுகள். அன்பைத்தவிர அனைத்தும் ஏற்பட்டு விடுகிறது. ஏதோ நீண்டநாட்கள் சாஸ்வதமாக வாழப்போவது போல பல திட்டங்கள் தீட்டுகிறோம். நினைத்தால் மிகவும் வேடிக்கையாகத் தான் உள்ளது.//

    அப்படியே உண்மை வாக்கு. அவர் இறந்த அன்று இரு வகையான உணர்வு. ஒன்று அவரை இழந்த வருத்தம். மற்றொன்று அப்பாடா அவர் கஷ்டத்தில் இருந்து விடுபட்டாரே.. என்ற நிம்மதி பெருமூச்சு. அழுகை கூட எஙகளிடம் இருந்து விடைபெற்றிருந்தது அன்று என்பதே உண்மை.

    //அப்பா ஆன்மா சாந்தியடையட்டும். //

    மிக்க நன்றி. சந்தனக்கட்டையால் அல்ல. இது போன்ற அன்பு வேண்டுதல்களால்தான் அது நடைபெறும். நன்றி.

    /அப்பாவை அந்த சந்தனக்கட்டையுடன் தான் “மின்சார தகனம்” செய்திருப்பார்கள் என்று நாமும் நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை.//

    நம் கண் முன்னேதான் தகனம் செய்கிறார்களாம்.

    //எவ்வளவு ஒரு துக்ககரமான சம்பவத்தை, அப்படியே, நேர்முக வர்ணனை போல நகைச்சுவையாக
    “என் அப்பா ரொம்ப அழகு” ன்னு தலைப்பிட்டு எழுதிவிட்டீர்கள்!//

    புண் பட்ட மனதை நகையாடிதானே ஆற்றிக்கொள்ள வேண்டும். வருகைக்கு, அன்பான தங்கள் கருத்துக்கு, என் தந்தையின் ஆன்மா சாந்தியடைய வேண்டியமைக்கு.. மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  12. அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜி.என்.பி ஐயா,

    நெஞ்சு பொறுப்பதில்லை. ஆனால் அதை வெளிக்காட்டக்கூட இயலாத கையாலாகத்தனம் அப்போது வந்து விடுகிறது. நம்மால் அதை மாற்ற இயல்வதும் இல்லை. காலத்தின் கோலம்.. மாறும்.. என்ற நம்பிக்கையில் காலத்தை ஓட்ட வேண்டியுள்ளது.
    கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  13. அன்பு கலைநிலா/வசீர் அலி
    //இருக்கு வரை மனிதன்.
    இறந்தால் பிணம்//

    ஆடும்வரை ஆட்டம்.. ஆயிரத்தில் நாட்டம்
    கூடும் வரை கூட்டம் கொள்ளி வரை வருமோ!!
    வேறு என்ன சொல்ல?
    நினைவுகளைப் பின்னோக்கி செலுத்திய போது எழுந்த நினைவலைகளே இவை. தங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி க். நிலா.

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. ஒரு துக்கம் நடந்த வீட்டின் சூழலை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். தந்தையின் மரணம் ஏற்படும் பாதிப்பு கொஞ்சநஞ்சமல்ல. ஏதோ நம்மில் ஒரு பகுதியே கழன்று போனதுபோல்....

    பதிலளிநீக்கு
  16. உண்மை ஜி. அப்படித்தான் இருந்தது. இது நம்மால் தவிர்க்க முடியாதது. தடுக்கவும் முடியாதது.

    மிக்க நன்றி ஜி.

    பதிலளிநீக்கு
  17. கருத்திலும் எழுத்திலும் நல்ல முதிர்ச்சி. ஒரு சிறிய தகவலைச் சுற்றி பெரும் சோகத்தையே சொல்லியிருக்கிறீர்களே? எண்பது வருட சரித்திரம் சுமையாகாமல் கரைந்ததை.. இயல்பாகச் சொல்லியிருந்தாலும் நெஞ்சில் லேசாய்க் கீறல்.

    பதிலளிநீக்கு
  18. ஒரு சோகமான சரியான வர்ணனை . நன்றி

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள அப்பாதுரை,

    எங்கே நீண்ட நாட்களாக ஆளையே காணோம்? நலமா? உங்களைப்போல எழுத முடியாது. இருந்தாலும் ஒரு முயற்சிதான். மிக்க நன்றி அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  20. அன்புள்ள சேகர்,
    முதல் முதல் வந்துள்ளீர்கள். ஒரு சோகத்தைப் படிக்க நேர்ந்தது. வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.. தங்கள் கருத்துக்கும் நன்றி சேகர்.

    பதிலளிநீக்கு
  21. அன்புள்ள மாய உலகம்,

    என்னுள்ளும் ஒரு மாதிரியான சோகம்தான். சோகம் என்றும் சொல்ல இயலவில்லை. இல்லை என்றும் சொல்ல இயலவில்லை.

    தங்கள் வருகையில் மகிழ்ச்சி. மிக்க நன்றி மாய உலகம்.

    பதிலளிநீக்கு
  22. அப்பாவின் இடத்தை வேறு யாரால் நிரப்ப முடியும். நினைவுகளை கிளறி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  23. அன்பு சிவா,
    நலமா? நீண்ட நாட்கள் கழித்து தங்களின் தடம் கண்டு மகிழ்ந்தேன். தங்களின் வலைப்பூவிலும் நீண்ட நாட்களாகத் தங்களைக் காணாது கலக்கத்தில் இருந்தேன். இன்று அங்கும் ஒர் பூ பூத்திருந்தது கண்டு மகிழ்ச்சி.

    நானும் நினைவலையில் மூழ்கியதால் கண்டெடுத்த முத்துதான் இது. வருகை கருத்து இரண்டும் இனிமையாக.

    பதிலளிநீக்கு
  24. அன்புச்சகோதரிக்கு
    இந்த உலகில் நாம் கேட்டு தெரிவு செய்து நமக்கென்று பெறமுடியாத உறவுகளில் பெற்றோர் தான் முதன்மையானவர்கள்...
    இறைவன் தான் நம்மை யாருக்குப் பிள்ளையாக அனுப்புவது என்று தீர்மானிக்கிறான்..

    இந்தப் பெற்றோரின் மாண்பும் மதிப்பும் அவர்கள் நமக்காய்ப் பட்ட பாடும் நாம் பெறோராக ஆவது வரையும் அவர்கள் நம்மை விட்டு மறையும் வரையிலும் நாம் அறிய முடிவதில்லை...

    அவர்களின் பண்புகள் நம்மில் நம் அசைவுகளில் நமது பண்புகளில் கை கால் விரல்வளைவுகளில் தும்மும் நளினத்தில் நடையின் அசைவுகளில் சட்டெனச் சினமுறும் சின்ன நொடிகளில்...
    அவர்கள் புதைக்கப் பட்டாலும் எரிக்கப் பட்டாலும் மாயமாக மறைந்து தான் போனாலும் நம்முடன் நம் உடலாக அசைவுகளாக உடலுறுப்புகளின் சில நுணுக்கமான வரைவுகளாக, கொண்ட நல்ல பல பண்புகளாக நம்முடனே உள்ளார்கள்...

    ஒரு விசயத்தைப் பற்றி நினைக்கையில் அதில் மனம் அப்படியே தங்கி விடுகிறது...இம்மாதிரி செய்திகளும் அப்படித்தான் இன்று என் உள்ளம உள்வாங்கிய இந்த செய்தியால் இன்று நாள் முழுவதும் நான் சோகபிம்பம் தான்.

    பதிலளிநீக்கு
  25. இறுகிய மனதைக்கூட உடைத்தெறிகிறது
    உங்கள் பதிவு !

    பதிலளிநீக்கு
  26. இது தான் வாழ்க்கையின் நியதி என்பதை அந்த நேரத்தில் தான் நாமும் உணர முடிகிற பதிவு !

    பதிலளிநீக்கு
  27. அன்பு அப்துல்லாஹ்,
    மிகச்சரியாகக் கூறினீர்கள். இவ்வேளையில் எனக்கு முனைவர். வ.சே.கு. அவர்களின் ஒரு கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

    ”குழவியாய் இளைஞ னாய்ப்பின்
    குமரனாய் முதுமை யுற்ற
    கிழவனாய் நின்ற தோற்றம்
    கேட்டபின் வந்த துண்டோ?
    உழலுவேன், மகிழ்வேன் கோடி
    உணர்ச்சியில் மனம் விரும்பி
    பழகுவான் வேண்டி யானாய்ப்
    படைத்தவை அவற்றுள் உண்டோ?

    “பிறந்தது விருப்பா லில்லை
    பிறந்த பின் வாழ்வு முற்றும்
    கரந்தனில் கிடைத்த தில்லை
    கழியுநாள் கழிய என்றோ
    இறந்திடல் தவிர்ப்ப தில்லை
    இயற்கையின் விளையாட் டிற்கு
    சிறந்ததோர் பொம்மை யாநான்”


    //நம்முடன் நம் உடலாக அசைவுகளாக உடலுறுப்புகளின் சில நுணுக்கமான வரைவுகளாக, கொண்ட நல்ல பல பண்புகளாக நம்முடனே உள்ளார்கள்...//
    ஆம் அப்துல்லாஹ்.

    //ஒரு விசயத்தைப் பற்றி நினைக்கையில் அதில் மனம் அப்படியே தங்கி விடுகிறது...இம்மாதிரி செய்திகளும் அப்படித்தான் இன்று என் உள்ளம உள்வாங்கிய இந்த செய்தியால் இன்று நாள் முழுவதும் நான் சோகபிம்பம் தான். //

    என்னை மன்னிக்கவும் அப்துல்லாஹ். என் இந்தப் பதிவு பலரின் நினைவலைகளைப் பின்னோக்கிச் செலுத்தியதும் அல்லாமல் கண்ணீர் சிந்த வத்துள்ளது.(ஈகரையிலும்) பகிர்ந்துகொள்ள எண்ணினேன். பலரைச் சோகத்தில் ஆழ்த்தும் என்று நான் சிறிதும் எண்ணவில்லை. என்றாலும்.....

    என் சோகத்தில் பங்கெடுத்துக்கொண்ட நல்ல உள்ளங்களுக்கு என்றும் என் நன்றியும் அன்பும் உரியது. நன்றி அப்துல்லா.

    இப்போது சரியாகி விட்டீர்களா? இந்த பதிவு கிட்டத்தட்ட இரு நாட்கள் கழித்து இடுகிறேன். அதனால் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. அன்புள்ள ஹேமா,

    உங்களையெல்லாம் வருந்தச்செய்தமைக்கு வருந்துகிறேன். எல்லாம் அவன் செயல்.
    வருகைக்கு நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  29. அன்பு இராஜேஸ்வரி,
    மிகச்சரியாகக் கூறுகிறீர்கள். அப்போதுதான் வருகிறது ஞானம். ஆனால் மீண்டும் வேதாளம்.... கேட்டால் நானும் சராசரி மனிதன் தானே என்னும் பிலாக்கணம் வேறு நம்மவர்களிடம்.

    சோகத்தை படித்து பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி இராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  30. என் சிந்தனைகள் முழுவதும் அரசியல் பிரச்சினைகளே ஆக்கிரமித்திருப்பதால் சொல் விளையாட்டு தடை படுகிறது... அது வரை எனக்கு சிறந்ததாக படும் என் பழைய படைப்புகளை இங்கு கோர்த்துக் கொண்டிருக்கிறேன்...மறுபடியும் இதே போல் என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை... முயற்ச்சிக்கிறேன் என்று மட்டும் கூறிக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  31. அன்பு சூர்யா,
    அங்கும் இங்கும் என் வினாவுக்கு மறுமொழி கூறிய தங்கள் பொறுப்பை எண்ணி வியக்கிறேன். த்ங்கள் மறுமொழியை இன்றுதான் கண்டேன். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். தங்கள் மனம் அரசியலை விட்டு வரும்போது எழும் அழகான கவிதைகளுக்காகக் காத்திருக்கிறோம். அதுவரை தங்கள் கவிதைச்சுரங்கத்தில் புதைந்த பழைய கவிதைகளை ரசிக்கிறோம். நன்றி

    பதிலளிநீக்கு
  32. என் அப்பாவின் மரணம் நிகழ்ந்தபோது நான் கலங்கவில்லை ஆதிராம்மா. பின்வந்த பலப்பல தருணங்கள் அபபாவின் இழப்பை முகத்திலறைந்து உணர்த்தின. உங்களின் ஈரமான வார்த்தைகளில் இயல்பான விவரிப்பில் மனம் எங்கோ கொஞ்சம் சிதறித்தான் போனது.

    பதிலளிநீக்கு
  33. கணேஷ் வாங்க. உங்க கருத்து மேலும் கண்ணீரை வரவழைக்குது.

    பதிலளிநீக்கு