“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 8 அக்டோபர், 2012

நரையே நரையே போ! போ!




 
     தசரத மகா மன்னன் கண்ணாடி முன்பு நின்று அலங்காரம் செய்து கொண்டிருந்தாராம். காதோரம் ஒரு வெள்ளி மயிர் இருப்பதைக் கண்டாராம். தனக்கு வயதாகிவிட்டது. இன்னும் ஒரு வாரிசு வரவில்லையே என்று அசுவமேத யாகம் செய்தார் என்பர். காதோர நரை நாற்பதைக் காட்டும் என்பார்கள். ஆனால் இன்று நகர வாசிகளிடம் தலையிலும் சரி விழியிலும் சரி எழுபது ஆனாலும் வெள்ளித்திரை விழுவதில்லை. அப்படிச் சொல்ல முடியாது. வெள்ளித் திரையை கருப்புத்திரை போட்டு மறைத்து விடுகின்றனர். ஆனால் இதற்கு ஆகும் செலவு சொல்லி முடியாது. பட்ஜட்டில் முதலிடம் ஹேர்டை எனப்படும் சாயத்திற்கே கொடுக்கக் கூடிய நாகரிக உலகமாக இன்று உள்ளது. என்ன செய்ய

ஆனால் இயற்கையிலேயே நரை,திரை, மூப்பு இன்றி இருந்தால் எப்படி இருக்கும்?கண்ணாடியைப் பார்த்து நாம் முகம் பார்க்கும் கண்ணாடியில் நரைமுடிகளை பார்த்தவுடனேயே வயதாகிவிட்ட உணர்வும்,சோர்வும் தோன்றிவிடுவதுண்டு.

முடிக்குச் சாயம் பூசத் துவங்கி விடுகிறோம். அமோனியா,காரியம் கலந்த சாயங்கள் பல கெடுதல்களை ஏற்படுத்துகின்றன. நரைமுடியை வேருடன் பிடுங்குவதால்,மெலனின் இல்லாத செல்கள்,அருகிலுள்ள முடிகளின் வேர்க்கால்களில் சிதறி,அங்கு பெருகி, மீண்டும் நரைமுடியை அதிகப்படுத்துகின்றன. இதனால் மேலும் மனச்சோர்வும் கவலையும் ஏற்படுகிறது. இவை மேலும் நரைமுடியை அதிகரிக்கவே செய்கிறது.

நரை ஏன் ஏற்படுகிறது மனித ரோமத்திலுள்ள மெலனின் என்னும் கரிய நிறப் பொருளானது ரோமத்திற்கு கறுப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இந்த மெலனின்,முடியின் வேர்க் கால்களில் குறையத் துவங்குவதால், கறுப்பு நிறமற்ற முடி முளைக்கத் துவங்குகிறது

மெலனினை உற்பத்தி செய்யும் செல்கள்,முடியின் அடியிலும், தோலிலும்,கறுப்பு நிறமிகளை சேமித்து வைக்கின்றன. இந்த செல்களின் உற்பத்தி குறைந்து, மெலனின் அற்ற செல்கள் வளர்வதால்,நரைமுடி தோன்ற ஆரம்பிக்கிறது.

யாருக்கு நரை வருகிறது. தைராய்டு குறைபாடு,பி12 வைட்டமின் குறைபாடு,வெண்படை போன்ற தோல் நோய்கள்,ஊட்டச்சத்து குறைபாடு, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் புகைப்பழக்கம்,புரதச்சத்து குறைபாடு, பரம்பரை ஆகியவை, நரை ஏற்படக் காரணங்களாக அமைகின்றன

தலையில் பொடுகு அதிகம் தோன்றினால், அவை வேர்க்கால்களை அடைத்து,மெலனின் உற்பத்தியை குறைத்து,நரையை அதிகப்படுத்துகின்றன என்றும் கூறப்படுகின்றன.

மேலும் தலையை அலசி குளிப்பதற்காக பயன்படுத்தும், சில வேதிப்பொருள் கலந்த வீரியமிக்க ஷாம்புகள் மற்றும் முடி அலசிகளிலுள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு,வேர்க் கால்களை சேதமடையச் செய்து,கறுப்பு நிறமிகளை அழித்து, நரைமுடிகளை அதிகப்படுத்துகின்றன. புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து குறைவினால், முடியின் கறுமை நிறம் மங்கி,செம்பட்டை நிறம் தோன்றுகிறது. நாளடைவில் இதுவே,நரைமுடிக்கு காரணமாக அமைகிறது. நரைமுடி அதிகரிப்பதற்கு,பி.சி.எல்.,என்ற ஜீன்கள் காரணமாக இருப்பதாக,அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன

மேலதிக தகவலாகக் சிவப்பழகர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது. அச்சப்படவும் கூடாது. கரிய நிறமுடையவர்களை விட சிவந்த மற்றும் மாநிறமுடையவர்களுக்கு,வெள்ளை நிற முடி,விரைவில் ஏற்படுகிறது.

இந்தியர்களுக்கு,30 வயதுக்கு மேல்,நரைக்கத் துவங்குவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது,20 வயதிற்கு முன்பாகவே, சிலருக்கு நரை துவங்கி விடுகிறது. இது இளநரை என்று அழைக்கப்படுகிறது. இது பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டியதில்லை. காலப்போக்கில் சரியாகிவிடும். பொதுவாகப் பெண்களை விட ஆண்களுக்கே, முடி மிக கறுப்பாக காணப்படுகிறது. இதிலிருந்து பெண்களின் வெள்ளை மனம் போலவே வெள்ளை முடியும் விரைவாக வருகிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.


நரைக்குக் காரணமான மெலனின் அழிவை தடுத்து,நரைமுடிகளை நெருங்க விடாமல் தடுக்கும் அற்புத மூலிகை கரும்பூலா. மயிர்க் கால்களில் தோன்றும் மெலனின் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தி கருமுடியைக் காப்பாற்றுகிறது.
.

இந்தச் செடியின் இலைகள் மற்றும் பழங்களில் உள்ள குளோஜிடோனால்,பிட்டுலின் மற்றும் பிரிடெலின் வேதிப்பொருட்கள், நரைமுடிகளுக்கு காரணமான மெலனின் அழிவை தடுத்து,கறுப்பு நிறத்தைக் கூட்டி,இளநரை ஏற்படாமல் தடுக்கின்றன.

கரும்பூலா பழம் மற்றும் இலைகள், நெல்லிக்காய்,மருதோன்றி இலைகள்,கறிவேப்பிலை இலைகள்,அவுரி இலைகள் ஆகியவற்றை இடித்து, சாறெடுத்துக் கொள்ள வேண்டும். கடுக்காய் தோலை, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். 500 மி.லி., தேங்காய் எண்ணெயுடன் சாறு மற்றும் கடுக்காய் தோல் பொடியைக் கலந்து, கொதிக்க வைக்க வேண்டும். சாறு வற்றியதும் வடிகட்டி, சூடு ஆறியபின், மூடிய பாத்திரத்தில் எடுத்து வைத்து தலையில் தேய்த்து வர நரை காணாமல் போய்விடும் என்கின்றனர். அவ்வப்போது வடிகட்டி தலையில் தேய்க்க வெண்டும். விரைவில் நரைமுடி வராமல் தடுக்கும் மற்றும் இளநரை மாறும். முயற்சி செய்து பார்க்கலாமே. நரையைப் போக்கி இளமையாகத் தோன்றி மகிழ்வாக இருக்கலாமே.


நன்றி குமுதம் ஹெல்த்





2 கருத்துகள்: