“உயிரின் குறைந்தபட்ச கடமை வாழ்தல்; அதிகபட்சம் வாழ வைத்தல்; யாரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை” - கவிப்பேரரசு

திங்கள், 14 மார்ச், 2011

நீயா நானா?

            
             இந்த விருந்தாளிங்களோட  மூஞ்சியைப் பாருங்க. கையைக் கட்டிக்கிட்டு அவங்க உக்காந்து இருக்கற அழகப் பாருங்க. எவ்வளவு அப்பாவியா இருக்கறாங்க. .இவங்க யாரு தெரியுமா? இவங்கல்லாம் எங்க வீட்டின் மதிப்பிற்குரிய மழைக்கால விருந்தாளிங்க. எங்க வீட்ல ஏசி இல்லாததால இவர்களுக்கு வசதிப்படலையோ என்னவோ. எங்க வீட்டைப் பொறுத்த வரையில சம்மர்ல் இந்த விருந்தாளிங்கல்லாம் வரதே இல்லை. அப்ப விடுமுறைக்கு எங்கே போவார்களோ என்னவோ தெரியாது. மழை நாளான இவங்களோட ஒரே வாசஸ்தலம் எங்க வீடு தான். கோடைக்காலம் முடிஞ்சு குளிர்க்காலம் ஆரம்பிச்சவுடனே குளிருக்கு இதமா எங்க வீட்ல வந்து அடைக்கலம் புகுந்து இவங்க அடிக்கிற லூட்டிகளை ஒரு புத்தகமே எழுதலாம்.

                 மழைக்காலத்தில் ஒண்ட வந்த இவர்கள் ஒரு குட்டி சாம்ராஜ்ஜியத்தையே அமைத்திருப்பார்கள். இவங்கல்லாம் வருவதால் எங்க வீட்ட என்னவோ ஓட்டு வீடுன்னு நெனைச்சா அது தப்புக்கணக்கு. பிளாட்ல ஒரு அழகான ஒற்றைப் படுக்கையறை வீடு எங்களது. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில மனுசனக் கடிக்கறது மாதிரி சமச்சு வச்ச சாப்பாடு, காய்கறிகள், சாமி படத்துல போட்டிருக்கிற பூ, அரிசி, பருப்பு, பத்தாக்குறைக்கு அரிசி பருப்பு வச்சிருக்கற டப்பா என்று எல்லாத்தையும் கடிச்சுப் புளிச்சுப் போய் இப்ப கொஞ்சம் கண்ணை அசந்தா மனுசங்க காலைக் கடிக்கிற அளவுக்கு வளந்துட்டாங்க  எங்க வீட்டு எலி விருந்தாளிங்க.

              ஆரம்பத்தில ஒருத்தருதான் ஓடியாடிட்டு இருந்தாரு. இப்ப ஒரு குடும்பமா ஆயிட்டாங்க.. நம்ம குடும்பம் மாதிரி சின்ன குடும்பம் இல்ல. ஒரு ஏழெட்டுப் புள்ளகுட்டிகளோட அம்மா அப்பா சேர்ந்த பெரிய எலிக்குடும்பம். முதல்ல வந்த எலியார் பாட்டியாகவோ  தாத்தாவாகவோ கூட இருக்கலாம். எனக்கு இனம் கண்டுபிடிக்கத் தெரியல.

               வெள்ளை மாளிகையில எலித்தொல்லை அதிகமாக இருக்கிறதாம். எலிகளை வேட்டையாட லேரி என்ற ஒரு பூனையை அழைத்து வந்திருக்கிறார்களாம். அது பார்க்கவே பயங்கரமா இருக்குது அந்தப் பூனை. போல ஒரு பூனையை வளர்க்கலாம் என்றால், லேரியைவிட பெரிய லாரியெல்லாம் இங்கே இருக்கு. அதுங்க கத்தற கத்தலில் இராத்திரி ஓமன் படம் பார்த்த மாதிரி அடிக்கடி தூக்கிவாரி போட்டு எழுந்து நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார வேண்டியுள்ளது. அதனால் இந்தப் பூனை வளர்க்கிற எண்ணம் கைவிடப்பட்டது. 

                 இந்த எலிகளை நினைத்தா ஒரு சமயம் கோபமா வரும். ஒரு சமயம் அழுகையா வரும். சில சமயம் கொலைவெறி வந்துரும். ஆனா வெத்துக் கையாலத்தனம்தான் மிஞ்சும். கோபம் கோபமா வந்தாலும் ஒரு சமயம் பார்த்தா அதுங்க செய்யறதை ரசிக்காமல் இருக்க முடியாது. 

               அன்னக்கி அப்படித்தான் குட்டி குட்டி சமோசா வாங்கிட்டு வந்து ஃபிரிஜ் மேல வச்சுட்டு ராத்திரி படுக்கும் முன்னாடி அதை எலிப்பொறி உள்ளே வக்கலாம்னு வந்தேன். வச்சப்பறம் கையைக் கழுவனுமேன்னு சோம்பேறித்தனம் அவ்வளவுதான். எல்லா வேலையும் முடிச்சுட்டு எலிப்பொறியை எடுத்துட்டு வந்து பார்த்தா ஃபிரிஜ் மேல வச்சிருந்த சமோசா சுவாஹா ஆகிவிட்டிருந்தது. அடக்கடவுளே என்ன இந்த எலி படுத்தற பாடுன்னு வருத்தப் பட்ட அதே சமயம், மனதுக்குள்ள இதுக்கு இவ்வளவு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும். இருடி உனக்கு நாளைக்கு வக்கிறேன் ஆப்பு..ன்னு சொல்லி பொலம்பிட்டு சரி நாளைக்கு வச்சுக்கலாம்னு வந்துட்டேன். 

                மறுநாள் சமோசா வாங்கிட்டு வர மறந்தாச்சு. அதனால என்ன? தோசைதான் ஊத்தப்போறோமே அதுல ஒரு பீசு வச்சுடலாம்னு பிளான் பண்ணி குட்டியா கெட்டியா ஒரு ஊத்தப்பம் அதுக்குன்னு ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் மூடியளவுக்குப் போட்டேன். அது ஆறினவுடனே வக்கலாம்னு வந்து கம்ப்யூட்டரை ஆன் பண்ணினேன். கம்பூட்டரில் வேலை பார்த்தாலும் நினைவு எல்லாம் தோசை, எலிப்பொறி, எலிகள்தான். பத்து நிமிடம் கூட வேலை செய்யலை, சரி ஆறி இருக்கும் போயி வச்சுட்டு வந்திடலாம்னு எழுந்து போய் பார்த்தா தோசைக்கல்லு சூடு ஆறலை. ஆனா லாவகமா அந்தக். குட்டி தோசையை எடுத்துட்டு விறு விறுன்னு மிக்ஸி ஒயர்ல தாவி டியூப் லைட் மேல ஏறி லாஃப்ட்டுக்கு ஓடிடுச்சு எத்தனுக்கு எத்தனான  எங்கவீட்டு எமன். எங்க எலியார். அது எல்லாத்தையும் கடிச்சு வக்கிறதை நெனைக்கும்போது கோபம் கோபமா வந்தாலும் அதனோட சாமர்த்தியத்தைப்பார்த்து மனசுக்குள்ள ரசிச்சிகிட்டே இப்ப நீ ஜெயிச்சுட்டே. ஆனா இன்னக்கு நீ மாட்டுனடீன்னு சொல்லிக்கிட்டே  இந்த நீயா நானா விளையாட்டுல இன்னைக்கு நான் ஜெயிச்சே ஆகனும்னு முடிவு பண்ணி மறுபடியும் கவணமா அதுக்குப் பிடிச்ச மாதிரி குட்டித் தோசை தயாரானது.

                   பக்கத்துல ”என்னம்மா மறுபடியும் தோசையா... இன்னக்கும் எலிகிட்ட ஏமாந்துட்டீங்களா? எனக்குக் குட்டி இட்லியும் சாம்பாரும் செஞ்சு கொடுங்கன்னா செய்து தர மாட்டேன்னீங்களே... அதுதான் எலிக்குட்டி உங்கள வேலை வாங்குது செய்ங்க.. செய்ய்ய்ங்க” ன்னு எங்க வீட்டுப் புலிக்குட்டியோட கமெண்ட் வேற. அதுதான் என்னோட சீமந்தப் புத்திரன்..  ஒரு ஹெல்ப் செய்ய முடியலை. இதச்சொல்ல வந்துட்டியாக்கும் . விட்டுட்டா தெரியும்  உன்னோட ஷூ கதைமாதிரி எல்லாம் கந்தலாகட்டும்னு. வேலையைப் பார்த்துட்டு போடான்னு அவனை  திட்டிகிட்டே தோசைக்கல்லு  முன்னாடியே அடமா பத்து நிமிஷம் நின்னு தோசை ஆறியும் ஆறாமலும் இருக்கும் போது பதமா எடுத்து எலிப்பொறியில் லாவகமா மாட்டிட்டு லைட்டை நிருத்திட்டு அப்பாடான்னு வந்து  ஒக்காந்தேன்.

                பெரும்பாலும் வச்ச ஒரு பத்து நிமிஷத்திலேயே எலியார் மாட்டிடுவாரு.  அப்படி மாட்டலன்னா எனக்குத் தூக்கமே வராதே. ஒரு சின்ன சத்தம் கேட்டாலும் போய்ப் பார்த்துப் பார்த்து வருவது ஒரு தொடர் வேலை. நீர்க்கடுப்பு வந்தாக்கூட அப்படி எழுந்து போக மாட்டேன். இதப் பார்க்கிற ஆவல் அப்படி. வச்சு அரை மணி நேரம் ஆச்சு ஒரு சத்தமும்  இல்லை. சரி என்னதான் ஆச்சுன்னு போய் பார்த்தா நீங்க லாவகமா தோசையை மாட்டி வச்சா உங்ககிட்ட வளர்ந்த நாங்க லாவகமா எடுத்து சாப்பிட மாட்டோமான்னு அது  சாமர்த்தியமா வந்து சாப்பிட்டுட்டு  ஒரு பெரிய ஏப்பம் விட்டுட்டுப் போயிருந்தது.   இந்த முறையும் ஏமாந்ததை எண்ணி சே ஒரு எலிக்கிட்ட இப்படி தோத்துட்டோமேன்னு கண்ணோரம் கொஞ்சம் வெந்நீர் வர ஆரம்பிச்சாலும்.... அதோட சாமர்த்தியம் எனக்குப் புதுப் பாடத்தைக் கற்றுக்கொடுத்ததாக உணர்ந்து உறக்கம் வராமல் உறங்கினேன்.

                  எலி மருந்து வச்சு கொல்லலாம்னா என்னோட அகிம்சை மனசு இடம் கொடுக்க மாட்டேங்குது। சரி எலிப்பொறியில ஒவ்வொன்னா பிடிச்சு அதைக் கொண்டு போய் வெளியில் எங்கேயாவது விட்டுட்டு வர.லாம்னு பிடிச்சு வச்சு ஒரு நாள் எங்க குப்பைக் காரருகிட்ட கொடுத்தா அவரு என் கண் முன்னாடியே அதைக் கழுத்தை சடக்குன்னு ஒடச்சத நெனச்சுப் பாத்தால் இப்பவும் என்னோட முதுகுத் தண்டு வடத்தில ஐஸ் கட்டிய வச்ச மாதிரி இருக்குது। அடுத்த முறையில் இருந்து எப்ப கொடுத்தாலும் அதைக் கொன்னுடாதீங்க। எங்கேயாவது கொண்டு போயி விட்டுட்டு வாங்கன்னு சொல்லிக் கொடுப்பது வழக்கமாகப் போனது। 

                    எங்க தெரு குப்பைக்காரருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது.. அவர் அடிக்கடி வேலைக்கு மட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.. அந்த நேரம் பார்த்து முதலில் வீரர்கள், படைத்தளபதி என்று எல்லாரையும் அனுப்பி விட்டு கடைசியில் போருக்குச் செல்லும் மன்னரைப்போல நான் விரித்த வலையில் கடைசியாக வந்து மாட்டிக்கொண்டவர் குடும்பத்தலைவர் மொறட்டு எலியார். ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் குப்பைக்காரர் வரவே இல்லை. நானும் எனக்கு லஞ்ச் பேக் செய்யும் போது அதற்கும் சிற்றுண்டி, லஞ்ச் எல்லாம் செய்து கொடுத்துக் காத்து வந்தேன்.

                    முதல் நாள் இரவு எலிப்பொறியில் இருந்து டொக் டொக் கம்பி சத்தம் அதிகமாகக் கேட்டது. அடுத்த நாள் குறைந்து போயிற்று.. அது பட்டினியில இருக்கே. எங்கேயாவது செத்துப் போயிடப்போகுதேன்னு தோசைத்துண்டு, கேரட் துண்டு இப்படி எல்லாம் போட்டுட்டுப் போனா அது கொஞ்சம் கூடத் தொட்டுப் பாககலே. சரி அதுக்குப் பிடிக்குமேன்னு கடையிலே இருந்து குட்டி சமோசா வாங்கிட்டு வந்து போட்டா அதையும் அது மோந்து கூட பாக்கல. அப்பரம்தான் புரிஞ்சது அது உண்ணா விரதம் தொடங்கிருக்குன்னு. 

                   எலியைப் பிடிச்சு அடச்சு வச்சுட்டு சாகாம இருக்கனும்னு அதுக்குத் தீனி போடறவ நீயாத்தான் இருப்பே” னு எனக்குத் திட்டு வேற குடும்பத்தலைவர்கிட்டே இருந்து.. அம்மா அதுக்குப் புத்திர சோகம்னு ஒரு கமெண்ட் என் புத்திரன்கிட்டே இருந்து.

                  இதை விடப் பெரிய கொடுமை என்னன்னா, ராத்திரியெல்லாம் ஒரே மொற மொறன்னு சத்தம். என்னன்னு எழுந்திருச்சுப் பார்த்தா ஒரு பெரிய பூனை எலிக்கூண்டையே இழுத்துட்டு போகுது. கம்பைக் காட்டி வெறட்டினாலும் அது போகலை. அதால கூண்டைத் திறக்க முடியலங்கற கோபத்தை என் மேல காட்டி அது மொறச்சதைப் பார்க்கனுமே., அசப்புல பசியோடத் திரியர ஒரு சிங்கக்குட்டி மாதிரியே இருந்தது.

               எப்பவும் கூண்டுக்குள்ள இருந்து கம்பியை டொக் டொக்குனு ஆட்டிகிட்டே தன் முயற்சியைக் கைவிடாது எப்போதும் சத்தம் செய்து கொண்டு இருக்கும் எலிக்கு அப்பொழுது சப்த நாடியும் ஒடுங்கி போய்விட்டது. ஆடிய ஆட்டமெல்லாம் ஓடிப்போய். எலிப்பொறியின் ஒரு மூலையில் ஒடுங்கிச் சுருங்கி இருந்தது. எனக்குச் சந்தேகம். அது மண்டையைப் போட்டுடுச்சோன்னு. பூனையை விரட்டிட்டு எலிப்பொறியை எடுத்து தலைகீழா பிடித்து இப்படியும் அப்படியும் ஆட்டிப் பார்த்தா அது கொஞ்சம் கூட அசையலை. ஐயோ செத்துப் போயிடுச்சேன்னு நெஞ்சு திக் திக்குன்னு அடிச்சிக்க ஆரம்பிக்க, அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். பூனை இல்லை நமக்கு தின்மும் சமோசா கொடுக்கறவங்கன்னு தெரிஞ்சு லேசா கண்ணை மட்டும் கொஞ்சமா முழிச்சு பார்த்ததது. அப்பா இது உயிரோடதான் இருக்குன்னு நிம்மதி வந்தது. அன்னக்கி வீட்டுக்கு வராத நித்ய விருந்தாளியான குப்பைக்காரரை அடுத்தத் தெருவுக்குப் போய் வெற்றிலைப் பாக்கு வைத்து அழைத்து வந்து இரண்டு நாளா அடைப்பட்டிருந்த இந்த விருந்தாளியை வழியனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றானது. இன்னொரு 

                 சுவையான இப்ப நினைத்தாலும் வயிற்றைக் கலக்கும் சம்பவம். துணியெல்லாம் ரொம்ப சேர்ந்து போயிற்று என்று வாஷிங் மெஷினைப் போட்டேன். வாஷிங் மெஷின் தன் வேலையை எப்போதும் போல விரைவாக ஒரு முக்கால் மணி நேரத்தில் செய்து முடித்தது. அடிக்காமல் துவைத்து, முறுக்கிப் பிழிந்து பாதி காயவைத்துத் துணியை தூசு துப்பின்றி கொடுத்துவிட்டு என் வேலையை முடித்து விட்டேன் என்று மூன்று முறை குரல் கொடுத்து அமைதியடைந்தது.

                இனி என் வேலைதான் மிச்சம். என்ன எடுத்து ஒரு தட்டு தட்டி கொடியில் உலர்த்த வேண்டியதுதான். அதற்கு நேரமின்மையால் அதைச் செய்ய ஒரு இரண்டு மணிநேரம் தாமதம் வேறு. இதற்கு தலைவர்கிட்ட வசவு வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் போதே அது இன்னும் வலுப்பதைக் குறைக்க மெஷினைத் திறந்து துணியை எடுக்க கையை உள்ளே விட்டால் கேபில் ஒயர் போன்ற ஒன்று என் கையில் மாட்டியது. என்ன என்று எடுத்துப் பார்த்தால் கையில் வால். வீல் என்ற அலறலுடன் கையை உதற “உனக்கு எத்தனை தடவை சொன்னாலும் தெரியாது. பிளக்கை எடுத்துவிட்டு துணியை எடு என்று சொன்னால் கேட்டால் தானே. ஒரு நாள் நான் இல்லாது இருக்கும்போது செத்துக் கிடக்கப்போறே” என்று ஆசிர்வாதத்துடன் அருகில் வந்தவர் என் கையைப் பிடித்தும் என் கைகளின் தந்தி அடிக்கும் வேலை நிற்கவில்லை.

                    என்ன ஆச்சு என்று கத்திக்கொண்டே வாஷிங் மெஷினுக்குள் எட்டிப் பார்த்தால் பெரிய எலி உள்ளே. மயக்கம் எனக்கும் எலிக்கும். இருவருக்கும் தண்ணீர் தெளித்ததில் எனக்குத் தெளிந்தது மயக்கம். அதற்கு தெளியவில்லை. பிழிஞ்சு போட்ட துணியாய்க் கிடந்தது அது. எடுத்துப் போடப் போன அவர் “ப்ளீஸ் கொஞ்ச நேரம் பாக்கலாம்பா” என்ற என் கெஞ்சலுக்குச் செவி சாய்த்து எலியை எடுத்து வராண்டாவில் போட்டார். அது லேசாக அசைவது போல இருந்தது. அதற்குள் எங்களுக்குள் பட்டிமண்டபம். தொடங்கி விட்டது.   அது செத்துப் போய்விட்டதா? இல்லையா? இல்லை என்று நான். செத்துப் போய் விட்டது என்று  அவர்.  இருவரும் அதையே பார்த்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமையைக் கழித்தோம் என்று சொல்லலாம். முடிவில் வழக்கம் போல நான் தான் வெற்றி பெற்றேன். நடுவராக எலியாரே வந்தது போல ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் அந்த எலி எழுந்து உடலை ஒரு முறை முறித்து விட்டு மெதுவாக நகர்ந்து நகர்ந்து பின் ஓடிப்போனது.

              அப்பாடா......எனக்கோ ஆச்சரியம்..... சந்தோஷம். மெஷின் துவைத்த துவையலில் அது எப்படி தப்பியது என்று. அதற்கு ஆயுள் கெட்டி. அதைவிட சந்தோஷம்... அது பிழைத்ததில் எனக்கு. அந்தத் துணிகளை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து பல முறை அலசி இடுப்பு ஒடிந்தது ஒருபுறம்.. இருக்கு...... 

                 சங்க காலத்துல ஒரு புலவருக்கு அணிலாடு முன்றிலார்னு பெயர். அவர் முற்றத்தில அணில்கள் விளையாடுவதைப் பற்றி பாடல் ஒன்று புனைந்ததால். அவரு இங்கே எலிகள் போடுற ஆட்டத்தைப் பார்த்திருந்தால் எலிகளைப் பற்றி பாடல் எழுதி எலியாடு முன்றிலார்னு பெயர் வாங்கியிருப்பாரு. ஒருவேளை எதிர்காலத்திலே எனக்கு எலியாடு முன்றிலார்னு பெயர் வருதோ என்னவோ? யார் கண்டது!!!!!!!!!! 



ஆதிரா..

25 கருத்துகள்:

  1. சூப்பர் நடை. தொய்வில்லாம அப்படியே வாசிச்சுக்கிட்டே போக முடியுது! இதுக்காகவே என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

    பூனைக்கு 9 வாழ்க்கைன்னா எலிக்கு 18:-)

    பதிலளிநீக்கு
  2. நல்லாயிருக்கு... பெரியதாக இருக்கா... படிக்க கஷ்டமா இருக்கு...

    பதிலளிநீக்கு
  3. படிக்க கஷ்டமா இருந்தாலும் , படிக்க படிக்க சுவாரஸ்யமா இருக்கு... பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  4. எலிகளால் தொல்லை அதிகரித்து விட்டதா, இல்லை எலிகளின் மஹாத்மியம் கூடி விட்டதா.? எலிகள் புராணம் இடுகைகளில் அதிகரித்து விட்டது. இருந்தாலும் சுவாரசியம் குறையவில்லை.

    பதிலளிநீக்கு
  5. வாங்க ரியாஸ். நலமா இருக்கீங்களா? ரொம்ப நாட்களா பார்க்க முடியலை.
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வாருங்கள் துளசி கோபால். தங்கள் முதல் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி. முதல் கருத்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    பூனைக்கு 9 வாழ்க்கைன்னா எலிக்கு 18:-) எனக்குப் புரியவில்லை. ப்ளீஸ் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள கருன்,
    ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா. மன்னிச்சுடுங்க இனிமேல் கொஞ்சம் சுருக்கமா எழுதுறேன். என்னதான் சுவாரஸ்யமா இருந்தாலும் நீளம் மலைப்பை ஏற்படுத்தும். இனி அதில் கவனம் கொள்கிறேன். அழகா கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி. இது போன்ற வெளிப்படையான கருத்துக்களை என்று எதிர்நோக்கி..அன்புடன் ஆதிரா.

    பதிலளிநீக்கு
  8. அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஜி.என்.பி. அவர்களே. அது எலியின் எச்சரிக்கை. இது எலியின் மஹாத்மியம். சுவாரசியமாகப் படித்தமைக்கு மிக்க நன்றி. தங்களின் கருத்துரையே தொடந்து எழுத, எழுச்சியாக எழ துணை புரிகிறது. மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. cat is believed to have nine lives

    எகிப்து நாட்டுலே பூனை ஒரு சாமி மம்மிஃபைடு பண்ண பூனைகள் ப்ரமிட்டுக்குள்ளே இருக்கு.
    அதனால் அதை சுலபமாக் கொல்ல முடியாது. ஒன்பது வாழ்க்கைன்னு சொல்வாங்க. ஆனா உங்க எலி 18 லைவ்ஸ் வச்சுருக்கே:-)))))))

    பதிலளிநீக்கு
  10. புதிய செய்தி தெரிந்து கொண்டேன். எங்க வீட்டு எலி சாமிகளுக்கு 18 தான். ஹா ஹா ஹா
    மீண்டும் வந்து கேள்விக்குப் பதில் சொன்ன அன்புக்கு நன்றி துளசி கோபால்.

    பதிலளிநீக்கு
  11. நல்லா இருக்கு பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  12. ரசிக்கும்படி எழுதியிருக்கீங்க. வாசிங் மெசின் நம்ப முடியலை. வளரும் பருவத்தில் எலியடிக்க நானும் என் நண்பன் சுரேசும் கையாண்ட முறையில் வேண்டாம் - சமோசோ தோசைத் துண்டு போட்டு வளக்குற மென்மையைப் படிச்சதுனால இங்கயே நிறுத்திடுறேன்.. இருந்தாலும் எங்க முறையில் ஒரு க்ரிகெட் பேட் உண்டு, சுவர் உண்டு என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்த்தோட்டம் யூஜின்.

    பதிலளிநீக்கு
  14. வாங்க அப்பாதுரை சார், நலமா? வாஷிங் மெஷின் உண்மையிலும் உண்மை. எங்களோடது டாப் லோடிங். அதனால் சும்மா சுத்திட்டே இருந்திருக்கும்னு நெனைக்கிறேன். அது பெரிய எலி வேற. உண்மையிலயும் நான் பயந்துட்டேன்.ஒரு மணி நேரமோ ஒன்றரை மணிநேரமோ அப்படியே கிடந்தது. பின்பு மெதுவாக நகர்ந்தது. சிறிது நேரம் கழித்துப் பார்த்த போது எலியைக் காணவில்லை.

    உங்க முறையெல்லாம் நமக்கு ஒத்து வராது. வன்முறைக்கு இங்கே வழியே இல்லை. .

    வெஷம் வெச்சு கொல்லாம என்ன மேடம் நீங்க அதோட போய் விளையாட்டிட்டு இருக்கீங்கன்னு எங்க மாடி ஃபிளாட் காரரும் சொல்வாரு.. மனசு கேக்கலையே.. அந்த அப்பாவி மூஞ்சிகளைப் பாருங்க சார்? பாவம்...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு
  15. சமீபத்துல சென்னை சென்று திரும்பி வந்த என் நண்பர் சொன்னது: "தூங்கிக்கிட்டிருந்த எங்கப்பா காலை எலி கடிச்சு பெரிய ரோதனையா போச்சு". பாத்தா உங்க பதிவு. சென்னை வர்ற திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது தான் போலிருக்கே?

    வாசிங்க் மெசின் விவகாரம் உண்மை தான் நம்புறேன்.. எலி பிழைச்சதை நம்ப முடியலேனு சொன்னேன். சரியா எழுதாததற்கு மன்னிக்கவும். எங்க அம்மா வீட்டில் எலிகள் வாசிங் மெசினில் தான் வாசமாம். சொல்வாங்க. அதுங்களுக்கு பயந்து வாசிங் மெசின் உபயோக்கிறதில்லையாம்!

    போன தடவை சென்னை வந்தப்ப டெனிஸ் ரேகெட் போல ஒரு கொசுகொல்லி பாத்தேனே? அதை வச்சுகிட்டு என்னவோ டெனிஸ் சேம்பியன் போல அவனவன் காத்துல வீசிட்டிருந்தாங்க.. அது போல எலி ரேகேட் ஒண்ணும் வரலியா?

    பதிலளிநீக்கு
  16. ஐயோ ஜயோ எலிக்கெல்லாம் பயந்துவங்களா நீங்க...அதுங்க கொஞ்சம் பாசம் வைத்து விட்டால் நம்ம வீட்டு புள்ளங்க மாதிரி நமக்குத் தெரிவாங்க.. முதல்ல கெளம்பி வாங்க.. சென்னைக்கு.. எலியோடு விளையாடி மல்லுக்கட்டலாம்..

    ஆமாம் கொசு பறக்கும். அந்த ராக்கெட்டால் அடிப்பாங்க. எலியை எப்படி? அப்பவும் அது செந்து போயிடுமே.. ஐயோ பாவம்..

    பதிலளிநீக்கு
  17. பயம்... பயம்... எதிலும் பயம் எங்கும் பயம்...

    பதிலளிநீக்கு
  18. வாங்க வாங்க மனோ.. முதல்லயே பயந்து நுழைந்தா எப்படி? முதல் வருகைக்கும் பயந்து பயந்து கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி மனோ.. மீள் வருகையை எதிர் நோக்கி.. என்றும் அன்புடன்..

    பதிலளிநீக்கு
  19. அருமையா எழுதியிருக்கிங்க... படிக்க கொஞ்சம் நேரம் அதிகமாச்சு.. ஆனா போரடிக்கல....


    எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!

    பதிலளிநீக்கு
  20. அன்புள்ள தமிழ்வாசி..
    முதல் முறையா வந்துள்ளீர்கள். இனிய வரவெற்புகள்.. முதல் முறை வரும்போதே பயபடுத்திடுச்சா நீளமான பதிவு. இந்தப் பதிவுதான் கொஞ்சம் நீளமா போயிடுச்சு. இதுல இன்னும் ஏகப்பட்ட கதைகள் எல்லாம் இருக்கு. இனிமே பதிவு நீளமா இருக்கது. பொறுமையா படிச்சு கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. தங்கள் வலைத்தளத்திற்கு விரைவில் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  21. ஆதிரா..

    நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பதிவிற்கு வந்தேன். எலி பற்றிய சுவையான பதிவு. அலுப்பூட்டாத பதிவு. எலியைப் பற்றிய விவரிப்பும் அதனை வெளியே உயிரோடு கொண்டுவிடுவதிலும் காட்டும் அக்கறையும் உண்மையான எழுத்தாகப் பதிவாகியிருக்கிறது. இத்தனை சுவையாக நீர்க்காமல்சொல்லியிருக்கிறீர்கள். நல்ல ஒரு இலக்கிய இதழில் வாசித்த கதையின் திருப்தியைக் கொடுத்தது. எலியைப் பற்றி பல கதைகள் படித்த அனுபவம் உண்டு. ஆனாலும் இதுவும் சற்று மாறுபட்ட விவரிப்புடன் அமைந்திருந்தது. எங்கள் வீட்டு எலிகளைப் பற்றியெழுத எண்ணம்வந்துவிட்டது. வாய்க்கும் சமயத்தில் எழுதுவேன். எலிகள் தொல்லைதான் ஆனாலும் அவற்றையும் ரசிக்க வைத்துவிட்டது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. வாருங்கள் ஹரனி ஐயா,
    தங்களைப் போன்றவர்களின் பொன்னெழுத்துக்களால் பாராட்டுப் பெற்றது மனநிறைவையும் மேலும் எழுதலாம் என்ற தைரியத்தையும் தருகிறது.

    எலிகளைப்போன்றே பதிவுகளால் நாங்கள் தரும் தொல்லைகளையும் ரசிக்கும் அந்த நல்ல மனத்திற்கு ந்ன்றி.

    விரைவில் தங்கள் வீட்டு எலிகளின் திருவிளையாடல்களை காணும் ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  23. எலி புடித்த கதை படிக்க நல்லாவே இருந்தது .
    எலிக்கு கட்டுரை தந்த தலைவிக்கு பாராட்டுக்கள்.
    இப்படிக்கு
    சுண்டலி அமைப்பு .

    கலைநிலா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவை இப்போதுதான் பார்க்கிறேன் கலைநிலா. பாராட்டிய சுண்டெலி அமைப்புத் தலைவர் கலைநிலா அவர்களுக்கு நன்றி

      நீக்கு